மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07


08-07-09
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07
 
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07

மெரிக்காவில் இருச்ந்து வந்திருந்த ஒரு நண்பரைக் காண்பதற்காக புரசை வாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று இருந்தேன். அடுக்கு மாடிக் குடியிருப்பு. அவரது எதிர் வீட்டில் ஆறு வயதுச் சிறுவனுக்கும் அவன் அம்மாவுக்கும் நடந்த உரையாடல் இது. பையன் பால்கனியில் உள்ள தொட்டிச் செடி ஒன்றைப் பார்த்தபடியே நின்றுகொண்டு இருந்தான்.

"சீனு, என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?''

"யோசிச்சிட்டு இருக்கேன்.''

"என்ன யோசிக்கிறே?''

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07

"அந்த இலையைப் பத்தி...''

"அதைப்பத்தி என்னடா யோசிக்கிறே?''

"அது ஏன் நம்ம வீட்டுச் செடியில இருக்குன்னு.''

"அதுல யோசிக்கிறதுக்கு என்னடா இருக்கு?''

"ஏம்மா யோசிக்கக் கூடாது?''

"செடியில் இலை இருக்கு... அவ்வளவுதானே?''

"அப்படி இல்லை.''

"அப்போ வேற எப்படி?''

"அதைத்தான் யோசிக்கிறேன்.''

"உனக்கு டியூஷன் இருக்கு கிளம்பு... டோன்ட் வேஸ்ட் டைம்!''

"இந்தச் செடிக்கு யாரும்மா பையன்?''

"பைத்தியம் மாதிரி பேசாதே. செடிக்கு பையன், பொண்ணு எல்லாம் கிடையாது.''

"ஏம்மா கிடையாது?''

"கிடையாதுன்னா கிடையாது. அவ்வ ளவுதான்.''

"இந்த இலை செத்துப் போகுமா?''

"செத்துப் போகாது. ஆனா, உதிர்ந்து போகும்.''

"ஏன் உதிர்ந்து போகும்?''

"வயசானா உதிர்ந்து போயிடும்.''

"எவ்வளவு வயசானதும் உதிர்ந்து போகும்?''

"அது நிறைய வயசானதும் உதிரும்.''

"இப்போ இந்தச் செடிக்கு எவ்வளவு வயசு?''

"ஒரு வயசு.''

"அப்போ இது குழந்தையா?''

"முட்டாள் மாதிரி கேட்காதே. செடியில என்ன குழந்தை, கிழடுன்னு...''

"ஏம்மா பெரிய ஆளு மாதிரியே பேசுறே?''

"நான் பெரிய ஆளு. அப்படித்தான் பேசுவேன்.''

"எதுக்குப் பெரிய ஆட்கள் இப்படிப் பேசுறாங்கம்மா?''

"எப்படி?''

"எது கேட்டாலும் பதிலே தெரியலை. யோசிக்கவே மாட்டாங்களா?''

"எல்லாம் யோசிச்சுதான் வந்திருக்கோம். யோசிச்சது எல்லாம் போதும்.''

"இந்த இலையைப் பத்தி நீ யோசிச்சு இருக்கியாம்மா?''

"உளறாதே... எனக்கு அடுப்பிலே வேலை இருக்கு. நீ டியூஷன் நோட்டை எடுத்துட்டுக் கிளம்பு.''

"இந்த இலை ஏம்மா நம்ம வீட்டுச் செடியில் இருக்கு?''

"எவ்வளவு தடவை சொல்றது... முட்டாள் மாதிரி பேசாதேன்னு.''

"ஒரு செடியில் மொத்தம் எத்தனை இலைகள் இருக்கும்?''

"நீ டியூஷன் போயிட்டு வா. எண்ணி வைக்கிறேன். போதுமா?''

"ஏம்மா கோவிச்சிக்கிறே?''

"சனியனே... ஏன்டா என்னைப் படுத்துறே?''

"நான் டியூஷன் போகலை.''

"கொன்னுடுவேன். கிளம்பு.''

"நான் போக மாட்டேன்.''

"எனக்குன்னு வந்து பொறந்து... ஏன்டா உயிரை வாங்குறே. கிளம்பித் தொலைடா. உன்னோட கத்திக் கத்தி எனக்கு பிரஷர் ஏறிப் போச்சு. எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்... பைத்தியமாட்டம் உளறாதேன்னு. ஏன்டா என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறே. முதல்ல இந்தச் செடியைத் தூக்கி வெளியே எறியணும். 'இயற்கையை ரசிக்கிறேன்'னு உங்கப்பா செடியை வாங்கிவெச்சு என் உயிரை எடுக்கிறார். ஒருநாள், ஒருபொழுது இந்தச் செடிக்குத் தண்ணிவிட்டது இல்லை. பூ எப்படி இருக்கும்னு பார்த்தது இல்லை. எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு!''- என்றபடி அந்தச் சின்னப் பையன் முதுகில் அறைந்து தரதரவென இழுத்துக்கொண்டு போனாள் சிறுவனின் அம்மா. சிறுவனின் அழுகைக் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

இது யாரோ ஒருவரின் வீட்டில் அபூர்வமாக நடை பெற்ற நிகழ்வு அல்ல. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இது போன்ற முடிவற்ற உரையாடல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பதிலற்ற கேள்விகளின் முன் நாம் கோபம் அடைகிறோம். சிறுவர்களை அடிக்கிறோம். பைத்தியம், முட்டாள், உதவாக்கரை என்று திட்டுகிறோம்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07

அவர்களுக்குள் துளிர்விடும் அறிவு அப்படியே வாடிப்போய் உதிரத் துவங்கிவிடுகிறது. சிறுவர்கள் எப்போதும் கேள்விகளால் சூழப்பட்டே இருக்கிறார்கள். உலகின் ஒவ்வொரு சிறு செயலும் ஏன் நடக்கிறது என்ற கேள்வி அவர்களுக்குள் இயல்பாக எழுகிறது. புரிந்துகொள்ளவும், ரசிக்கவும், யோசிக்கவும் விரும்புகிறார்கள். நமக்கு அதற்கான நேரம் இல்லை. விருப்பம் இல்லை. அப்படிக் குழந்தைகள் வளர வேண்டும் என்ற தேவை இல்லை என்ற மனப்பாங்கு நமக்குள் ஆழமாக வேர்விட்டு இருக் கிறது.

பள்ளியில் படிக்கவைப்பது மட்டுமே தங்களது ஒரே வேலை எனப் பெரும்பான்மையான பெற்றோர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மாணவனுக்குக் கல்வியை மட்டுமே பள்ளி அறிமுகம் செய்யும். வீடுதான் நிஜமான கல்விக்கூடம். மனித உறவுகளையும், பழக்க வழக்கங்களையும், ருசியையும், விருப்பத்தையும், ரசனையையும், தனித் திறன்களையும் வீடுதான் அறிமுகப்படுத்துகிறது. கற்றுத் தருகிறது. இன்று உள்ள பிரதான பிரச்னை, கல்வி நிலையங்கள் எல்லாம் பெரிதும் வணிக மயமாகிவிட்டன என்பது மட்டுமல்ல; வீடுகளும் எதையும் சிறுவர்களுக்குக் கற்றுத் தருவது இல்லை என்பதுதான்.

பெரியோர்களின் செயல்களைச் சற்றுத் தள்ளி நின்று பார்க்கும்போது, நாம் எவ்வளவு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் நடந்துகொள்கிறோம் என்பது புரிகிறது. உண்மையில் பெரியவர்கள் எதற்காகக் கோபப்படு கிறார்கள், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை எந்த விஞ்ஞானமும் இன்றுவரை முழுமையாக விளக்கவே இல்லை.

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரான விலாஸ் சாரங்கின் 'கரப்பான்பூச்சியும் ஒரு கடிகாரமும்' என்ற சிறுகதை, பெற்றோர்களின் அபத்தமான மனநிலையை மிக அழகாக விவரிக்கிறது. கதையின் முக்கியக் கதா பாத்திரம் ஓர் உயர் அதிகாரி. அவரது குடும்பம் பெரிய அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கிறது. அவர் தினசரி தன்னுடைய கடிகாரத்துக்கு அலாரம் வைத்துவிட்டு உறங்குவது வழக்கம்.

ஒரு நாள் இரவு, பாதி தூக்கத்தில் கண் விழித்து மணி என்ன என்று பார்க்க முயற்சிக்கிறார். கடிகாரத்தினுள் ஒரு கரப்பான்பூச்சி இருப்பது தெரிகிறது. கரப்பான்பூச்சி எப்படி கடிகாரத்துக்குள் போனது என்று புரியாமல், அதை வெளியே துரத்துவதற்காக மேலும் கீழுமாகக் கடிகாரத்தைக் குலுக்குகிறார். கரப்பான்பூச்சி நகரவே இல்லை.

உடனே அவர் கடிகார முள்ளைத் திருகி, அந்தப் பூச்சியைத் துரத்த முயற்சிக்கிறார். முள்ளை நகர்த்தியதும் கரப்பான்பூச்சி கடிகாரத்தின் உள்ளே போய்விடுகிறது. அவர் நிறுத்தியதும் வெளியே வந்துவிடுகிறது.

இதை எப்படியாவது அடிக்காமல் உறங்கக் கூடாது என்று முடிவு செய்து, விளக்கைப் போடுகிறார். அவரது மனைவி எழுந்து, 'என்ன வேணும்' என்று கேட்கிறார். 'ஊசி எங்கே இருக்கிறது' என்று கேட்கிறார். அவள், 'மணி ரெண்டு ஆகுது. இப்ப எதுக்கு ஊசி' என்று கேட்க... ஆத்திரமாகி, 'ஊசி எடுத்துக்கொண்டு வா' என்று கத்துகிறார்.

அவள் தேடிப் பார்த்துவிட்டு, 'காணவில்லை' என்கிறாள். அது அவரை இன்னும் அதிகமாகக் கோபப்படுத்துகிறது. 'எங்கே வெச்சுத் தொலைச்சே' என்று கூப்பாடு போடுகிறார். 'மகளிடம் கேட்க வேண்டும்' என்று மனைவி சொல்லவே... தான் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும்போது அவர்கள் நிம்மதியாக உறங்குவதா என்று, 'உடனே அவர்களை எழுப்பு' என்கிறார்.

அடுத்த அறையில் உறங்கிக்கொண்டு இருந்த இரண்டு மகளையும் எழுப்பி, அப்பாவிடம் அழைத்து வருகிறாள் மனைவி. அதற்குள் அவர் கரப்பான்பூச்சியைக் கொல்வதற்கான முயற்சியில் களைத்துப் போயிருக்கிறார். அதைக் கண்ட மூத்த மகள், 'கடிகாரத்தின் பின்பக்கத்தைக் கழற்றினால் பூச்சி வந்துவிடும்' என்று யோசனை சொல்கிறாள்.

அதைக் கேட்டதும், 'உன் வேலையைப் பார்த்துட்டுப் போ. நான் அதுகூடத் தெரியாத முட்டாள் இல்லை. கடிகாரத்தின் பின்பக்கம் திறக்க முடியாத படி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது' என்கிறார். மனைவி, மகள் என யாவரும் செய்வது அறியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மாறி மாறி அவர் கரப்பான்பூச்சியைக் கடிகார முள்ளால் துரத்துகிறார். முடிவு இல்லாத விளையாட்டு போல் இருக்கிறது. அவரால் கரப்பான்பூச்சியைக் கொல்லவே முடியவில்லை.

தான் எவ்வளவு பெரிய அதிகாரி. எவ்வளவு வசதியானவர். படித்தவர். தன்னால் ஒரு கரப்பான் பூச்சியைக் கொல்ல முடியவில்லையே என்று ஆத்திரமும் கோபமும் பொங்குகிறது. இந்தப் போராட்டத்தில் அதிகாலையாகிறது. மனைவி, மகள் யாரையும் அங்கிருந்து வெளியே போகக் கூடாது என்று தடுத்து நிறுத்துகிறார். முடிவாக, கரப்பான்பூச்சியை அவர் அடித்துக் கொன்றபோது காலை மணி ஏழரை. இனிமேல் அலுவலகம் கிளம்பிப் போக நேரம் இருக்காது என்று முடிவு செய்து, அன்றைக்கு தான் விடுமுறை எடுக்கப் போவதாகச் சொல்லியபடியே, தான் எவ்வளவு பெரிய ஆள் என்று நிரூபித்த சந்தோஷத்தில் உறங்கச் செல்கிறார் அந்த உயர் அதிகாரி என்று கதை முடிகிறது. இதுதான் நவீன வாழ்வின் அபத்தம்.

நமது தவறுகள் நம் குழந்தைகளின் செயலில் எதிரொ லிக்கின்றன. நமது குழந்தைகள் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதே அதிகாரம் செலுத்துவதற்கான முதல் காரணமாகிறது.

'ஐ ஆம் சாம்' (I AM SAM) என்ற ஹாலிவுட் படம் 2001-ல் வெளியானது. மனவளர்ச்சி குன்றிய சாம் தனது ஏழு வயதுக் குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வளவு பிரச்னைகளைச் சந்திக்கிறான் என்பதே படத்தின் மையக் கதை. மிக அற்புதமான படம். ஜெசி நில்சன் இயக்கிய இப்படத்தில் சாம் டௌசனாக நடித்திருப்பவர் சீன்பென்.

ஏழு வயதுச் சிறுவனின் மனவளர்ச்சி மட்டுமே கொண்டு இருந்த சாம் டௌசன், ஸ்டார்பக்ஸ் என்ற காபி கடையில் வேலை செய்கிறான். அவனது மனைவி, குழந்தையைப் பெற்று அவனிடம் ஒப்படைத்துவிட்டு சாமை விட்டு விலகிப் போய்விடுகிறாள். சாம் தன் மகள் லூசியை மிக கவனமாக வளர்க்கிறான். லூசிக்கு இப்போது ஏழு வயது நடக்கிறது.

லூசியை எப்படி வளர்ப்பது என்று சாமுக்குத் தெரியவில்லை. அவள் மீது மிகுந்த அன்புகொண்டு இருக்கிறான். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். லூசி விரும்பும் இடங்களுக்கு அழைத்துப் போகிறான். அண்டை வீட்டாரின் ஆலோசனைகள், உதவியோடு அவளை வளர்க் கிறான்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07

ஆனால், ஒருநாள் அவன் வீட்டுக்கு வருகை தரும் சமூகநல ஊழியர், சாம் மனவளர்ச்சி குன்றியவன்; அவனால், மகளை வளர்க்க முடியாது என்று லூசியை அவனிடம் இருந்து பிரித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறார். சிறுவர்களுக்கான காப்பகத்தில் சேர்க்கப்படுகிறாள் லூசி.

மன வளர்ச்சி குன்றியவன் என்ற காரணத்தால் தன்னால் குழந்தையை வளர்க்க முடியாது என்பது தவறு என வழக்கு தொடுக்கிறான் சாம். அவனுக்காக ரீடா என்ற பெண் வழக்கறிஞர் ஆஜராகிறாள். மகளின் பிரிவை சாமினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் உடைந்து போகிறான். வேலை போய்விடுகிறது. குழந்தையை ரகசியமாகச் சந்திக்க முயற்சிக்கிறான். லூசியும் அப்பாவைக் காணத் தப்பி ஓடி வர முயற்சிக்கிறாள். இதற்குள் லூசியைத் தத்து எடுத்துக்கொள்ள ஒரு குடும்பம் முயற்சிக்கிறது. தான் குழந்தையைப் பறிகொடுக்கப் போகிறோம் என்று உணர்ந்த சாம், இறுதி வரை போராடுகிறான். அவனது அன்பும் துயரமும் படம் முழுவதும் பீறிடுகிறது. முடிவில் லூசியைத் தத்து எடுக்க விரும்பிய குடும்பம், அவளை சாமே வளர்க்கட்டும் என்று அனுப்பி வைக்கிறது. சாம் மகளோடு சந்தோஷமாகப் புது வாழ்வைத் துவக்குகிறான்.

குழந்தை வளர்ப்பதற்கு உனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று கேட்கும் நீதிமன்றத்துக்கு சாம் சொல்லும் பதில்:

'All you need is love. Nothing more!'

எல்லா பெற்றோர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரே பதிலும் இதுவே!

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07
பார்வை வெளிச்சம்

சென்ற ஆண்டு ஒரு நாளிதழில் நாகர்கோவி லைச் சேர்ந்த 14 வயதான மாஷா நஸிம் என்ற மாணவியின் கண்டுபிடிப்பு பற்றிய செய்தியைப் படித் தேன். உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய நல்ல திட்டம் என்று தோன்றியது. இன்று வரை அந்தத் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

ரயிலில் உள்ள கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் தண்டவாளம் எங்கும் விழுவதால் நோய்க் கிருமிகள் அதிகம் பரவுகின்றன. இதை மாற்றுவதற்கான புதிய கழிப்பறை ஒன்றினை மாஷா வடிவமைத்திருக்கிறாள். இவளது அப்பா காஜா நஜ்முதீன் ஓர் அரசு ஊழியர்.

மாஷா உருவாக்கிய கழிப்பறை மிக எளிதானது. கழிப்பறை யில் சேரும் கழிவுகள் ஒரு தொட்டியில் சேகரிக்கப்படும். அவை ஒவ்வொரு ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும் ஒரு பொத்தானை அழுத்தினால் மொத்தமாக நடமாடும் கழிவு சேகரத் தொட்டி ஒன்றின் வழியே வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுவிடும்.

இந்தத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரவேற்று, உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார். ரயில்வே உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்வதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால், இன்று வரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை.

இந்தியாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சுகாதாரமான பொதுக் கழிப்பறைகள். பெரிய நகரங்கள், கிராமங்கள் என்று பேதம் இல்லாமல் கழிப்பறைகள் கால்வைக்க முடியாத அசிங் கமான நிலையில் உள்ளன. சாலைப் பயணங்களில் சுகாதார மான கழிப்பறை வசதிகள் எங்குமே கிடையாது.

உலகெங்கும் சுகாதாரமான கழிப்பறைகள் உருவாக்குவதற்காக முழு நேரமாக இயங்கி வருகிறது World Toilet Organization. இந்த நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக World Toilet College ஒன்றினை சிங்கப்பூரில் ஆரம்பித்து இருக்கிறது. இங்கு கல்வி நிறுவனங்களுக்கான கழிப்பறைகள் மற்றும் சுகாதாரப் பயிற்சி, பொதுக் கழிப்பறை நிர்வாகம் போன்ற பல்வேறு படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் கருத்தரங்கில் மாஷாவின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு விருது பெற்று இருக்கிறது.

விண்வெளி விஞ்ஞானத்தையும் செயற்கை அறிவுத் துறை பற்றிய கண்டுபிடிப்புகளை நோக்கி இளைய தலைமுறை நகர்ந்துகொண்டு இருக்கும்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் ரயில்வே கழிப்பறை மீது அக்கறைகொண்டு அதை நவீனப் படுத்தும் மாற்று வடிவத்தை உருவாக்கிய மாஷாவின் ஈடுபாடு மிகுந்த பாராட்டுக்கு உரியது!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 07