மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06


01-07-09
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06
 
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06

ஸ்ஸாமில் உள்ள பெல்டோலா என்ற இடத்தில் பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் நண்பனின் அழைப்பை ஏற்று ஒருமுறை சென்றிருந்தேன். நண்பன் தங்குவதற்குப் பள்ளியே வீடு தந்திருந்தது. தலைமை ஆசிரியர் ஒரு அஸ்ஸாமி. அவரது வீடு அருகில் இருந்தது. பெரிய கூட்டுக் குடும்பம்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் தேநீர் விருந்துக்கு என்னைத் தலைமை ஆசிரியர் அழைத்தார். நானும் நண்பனும் சென்றிருந்தோம். தலைமை ஆசிரியர் வீட்டில் அவரது மூன்று மகன்கள், மூத்த மகள், மருமகள், பேரன், பேத்தி, அம்மா என எல்லோரும் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ வீட்டு விசேஷம் நடக்கிறதோ எனும்படியாக இருந்தது. எங்களைப் பார்த்தவுடன் தலைமை ஆசிரியர் சந்தோஷத்துடன் "நீங்களும் சேர்ந்து உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள். இன்றைக்குக் குடும்ப சபை கூடியிருக்கிறது" என்றார்.

இதில் வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது என்று புரியாமல், நான் அவர் களையே பார்த்துக்கொண்டு இருந்தேன். தலைமை ஆசிரியரின் மூத்த மகள் பெரிய உண்டியல் போல் இருந்த ஒரு மரப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து, அந்த சபையின் நடுவில் வைத்தாள். தலைமை ஆசிரியர் யார் முதலில் எடுக்கப் போவது என்று அங்கு இருந்தவர்களைக் கேட்டார். அன்று அந்த வீட்டின் சின்ன மருமகள் முதலில் எடுக்கட்டும் என்று யாவரும் முடிவு செய்து, அந்தப் பெட்டியை அவள் முன்பாகக் காட்டினார்கள்.

அவள் கையை விட்டு உள்ளிருந்து ஒரு காகிதச் சுருள் ஒன்றை எடுத்தாள். 'படிம்மா' என்று தலைமை ஆசிரியர் சொன்னார். அது அஸ்ஸாமில் எழுதப்பட்டு இருந்தது. அந்தப் பெண் நிறுத்தி நிறுத்திப் படித்தாள். படிக்கப் படிக்க அவளது முகம் மாறிக்கொண்டு இருந்தது. நான் நண்பனிடம் என்ன அது என்று கேட்டேன். அவனும் புரியவில்லை என்றான்.

தலைமை ஆசிரியரோ, "இது எங்கள் வீட்டின் புகார்ப் பெட்டி. ஒருவர் மீது மற்றவருக்கு உள்ள கோபத்தை, தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்காக வைத்திருக்கிறோம். மாதம் கடைசி ஞாயிறு மாலை நாங்கள் ஒன்று கூடி இந்தப் பெட்டியைத் திறப்போம்.

இதில் யார் யாரையும் பற்றி மனதில் உள்ள குறைகளை, கோபத்தை எழுதிப் போடலாம். அது புகாராகவோ, பாராட்டாகவோ எதுவாகவும் இருக்கலாம். எழுதுபவர் தனது பெயரோடு எழுதிப் போட வேண்டும். அப்படி எழுதியது வாசிக்கப்படும். சம்பந்தப்பட்டவர் அதற்குத் தகுந்த பதில் தர வேண்டும். தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கமாக இருந்தால், மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்.

நல்ல நடைமுறையாக இருக்கிறதே என்று உற்சாகத்துடன் அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அந்த மருமகள் எடுத்து வாசித்த புகார் அவளைப் பற்றித் தலைமை ஆசிரியர் எழுதியிருந்தது. அதனால்தான் அவள் முகம் மாறி இருந்தது.

அவள் இரண்டு நாட்களுக்கு முன்பு, தன் பிள்ளைகளில் ஒன்றைக் கோபத்தில் அடித்துவிட்டு, மோசமான வசையால் திட்டியிருக்கிறாள். 'அவளது குழந்தைதான் என்றாலும், அடித்தது தவறு. அதைவிடவும் மோசமான சொல்லால் பிள்ளைகளைத் திட்டுவது மன்னிக்க முடியாதது' என்று தலைமை ஆசிரியர் புகார் எழுதி இருக்கிறார். அந்தப் பெண், 'கோபத்தில் ஏற்பட்ட தவறு என்றும் இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டேன்' என்றும் மன்னிப்புக் கேட் டாள்.

இப்படி வீட்டில் உள்ளவர்களின் நிறைகுறைகளை ஒவ்வொருவரும் ஒன்றை எடுத்துப் படிப்பதாக இரண்டு மணி நேரம் படிக்கப்பட்டன. இதில் தலைமை ஆசிரியரின் தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. அவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சபை முடியும்போது யார் மீது யாருக்கும் எவ்விதமான உள்ளார்ந்த கோபங்களும் இல்லாமல் தீர்ந்துபோனது போலிருந்தது. யாவரும் ஒன்றாக அமர்ந்து, தேநீர் அருந்தினார்கள். முடிவில் ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக்கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றார்கள்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06

என்னால் நம்ப முடியவில்லை. 'எப்படி இப்படி ஓர் எளிய வழியைக் கண்டுபிடித்தீர்கள்?' என்று கேட்டேன். அவர் சிரித்தபடியே, "நாங்கள் கிராமவாசிகள். மனதில் எதையும் ஒளித்துவைக்கத் தெரியாது. அதே நேரம் ஒவ்வொரு நாளும் அடுத்தவரைப் பற்றிய புகார்களைச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் எரிச்சல் வந்துவிடும். எனது தாத்தா காலத்தில் இருந்து இப்படியான நடை முறை வீட்டில் இருந்து வருகிறது. இந்தப் புகார் பெட்டிக்குப் பெயர் 'மனக்குடுவை'. மனதில் உள்ளதைப் போட்டுவைக்கும் உண்டியல்.

இந்த நடைமுறையால் ஒருவர் மீது மற்றவர் புரணி பேசுவது, கோள் சொல்வது தவிர்க்கப்படுகிறது. அது போலத் தவறுகள் உடனடியாகத் திருத்திக்கொள்ளப்படு கின்றன. ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றி வீட்டில் உள்ள மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. ஆகவே, இதைத் தவறாமல் செய்துவருகிறோம். நாங்கள் 21 பேர் ஒரே வீட்டில் ஒன்றாகச் சச்சரவுகள் இன்றிச் சந்தோஷமாக வாழ முடிவதற்கு இதுதான் முக்கியக் காரணம்" என்றார்.

புத்தகங்கள் கற்றுத் தரும் நீதிபோதனைகளைவிட எளிய மனிதர்களின் நடைமுறைச் சாத்தியங்கள் வாழ்வினை மேம்படுத்த உதவுகின்றன என்பதையே இது காட்டுகிறது. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படியானஒரு மனக்குடுவை தேவையாக இருக்கிறது.

தபால் நிலையம், மின்சார அலுவலகம், ரயில்வே என்று பல பொது இடங்களில் புகார்ப் பெட்டிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறைகூட இந்தப் பெட்டியில் என்ன புகார்கள் எழுதப்பட்டு இருந்தன, அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று எங்கேயும் குறிப்பிட்டோ, அறிவிப்பு வெளியிட்டோ நான் பார்த்ததே இல்லை.

நமது புகார்ப் பெட்டிகளில் பெரும்பான்மை வெறும் கண்துடைப்பு. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் புகார்களை எழுதிப் போடலாம். ஆனால், பதிலை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பல புகார்ப் பெட்டிகள் செயல்படவே இல்லை என்ற புகாரைக்கூட இன்னொரு பெட்டியில்தான் போட வேண்டியிருக்கிறது என்பதுதான் நமது துரதிருஷ்டம்.

புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் பெரும்பாலும் வேலை செய்வது இல்லை. வேலை செய்தால், பதில் சொல்ல ஆள் இல்லை. ஒருவேளை புகார் பதிவு செய்யப்பட்டாலும், குறைகளைச் சரிசெய்ய நீங்கள் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. சிறுவணிகத்தில் துவங்கி பெரிய அரசு நிறுவனம் வரை யாவும் பயனாளர் களை ஏமாந்த முட்டாள்களாகவே நடத்துகின்றன. அதற்கான எதிர்ப்பு, விழிப்பு உணர்வு நம்மிடம் அறவே இல்லை.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ், புத்திரசோகம் என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ஐயனோவ் என்ற குதிரை வண்டிக்காரனைப் பற்றியது கதை. ஒரு நாள் குதிரை வண்டிக்காரனின் மகன், கடுமையான காய்ச்சலின் காரணமாக இறந்துபோய்விடுகிறான்.

தன் மகன் இறந்த துக்கத்தில் உள்ள ஐயனோவ் அதைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவனது குதிரை வண்டியில் ஒரு வியாபாரி ஏறுகிறான். அவனிடம் ஐயனோவ், "ஐயா, இன்று என் மகன் இறந்துவிட்டான்" என்று துக்கத்தோடு சொல்லத் துவங்குகிறான். அந்த வியாபாரி எரிச்சலுடன், "உன் கதை எனக்கு எதற்கு? பாதையைப் பார்த்து ஓட்டு" என்று வாயை அடைத்துவிடுகிறான். புத்திர சோகத்துடன் அவன் வண்டி ஓட்டுகிறான்.

அடுத்து, ஒரு ராணுவ வீரன் அவனது வண்டியில் ஏறுகிறான். அவனி டமும் 'ஐயா, என் மகன் இறந்துவிட்டான்' என்று சொல்லி ஐயனோவ் விம்ம ஆரம்பித்தவுடன், ராணுவ வீரன் 'அதனால் என்ன..?' என்றபடியே நகரில் எங்கே நாட்டியம் நடக்கிறது, எங்கே அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று தன் விருப்பங்களைப் பேச ஆரம்பித்துவிடுகிறான். அவனிட மும் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இப்படி நாள் முழுவ தும் தன் வண்டியில் ஏறுகிற ஒவ்வொ ருவரிடமும், நோயால் தன் மகன் இறந்துபோனதைப் பற்றிச் சொல்ல விரும்புகிறான். ஒரு ஆள்கூட அவனது சோகத்தைக் கேட்கத் தயாராக இல்லை.

முடிவில், இரவில் அவன் வீடு திரும்பி, தன் மனவேதனைகளை யாரிடம் கொட்டுவது என்று தெரியாமல் தன் குதிரையைக் கட்டி அணைத்துக்கொண்டு, "கண்ணே, இன்று என் மகன் இறந்து போய்விட்டான். அவனை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. நோயில் விழுந்து அவதிப்பட்டு இறந்துபோய்விட்டான்" என்று கதறிக் கதறி அழுதபடியே, தன் சோகத்தை குதிரையிடம் சொல்கிறான்.

குதிரை அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பதுபோல வாயை அசைத்து அசை போடுகிறது. தலையை ஆட்டிக்கொள்கிறது. அடுத்தவர் துயரத்தைக் கேட்க யாரும் இல்லை என்ற அவலத்தைத் தாள முடியாமல், அவன் குதிரையிடம் தன் வலியைச் சொல்லி அழுகிறான் என்று கதை முடிகிறது.

இந்தக் கதை என்றோ நூற்றாண்டின் முன்பு ரஷ்யா வில் நடந்த நிகழ்ச்சி இல்லை. ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி நடப்பதும் இதுதானே! நான் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும்; ஆனால், எவர் பேசுவதையும் நாம் காது கொடுத்துக் கேட்கவே மாட்டோம் என்பதுதான் பொது இயல்பாக மாறி இருக்கிறது. ஏனோ இன்று பேச்சு ஒருவழிப் பாதை ஆகிவிட்டு இருக்கிறது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06

1961-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Judgement at Nuremberg என்ற படம் மனித மனச்சாட்சியை உலுக்கிக் கேள்வி கேட்கும் உயர்ந்த திரைப்படங்களில் ஒன்று. ஸ்டான்லி கிராமர் இயக்கி ஸ்பென்சர் ட்ரேசி நடித்தது. இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லர் லட்சக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான். யுத்த முடிவில் ஹிட்லர் இறந்து போகிறான். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது, யாரைக் குற்ற வாளி என்று விசாரணை செய்வது என்று கேள்வி எழுந்தது. எந்த அதிகாரிகள், மந்திரிகள், நீதிபதிகள் ஹிட்லரின் உத்தரவுகளைச் செயல்படுத்தினார்களோ, அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்து, அவர்கள் மீது நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டு, ஜெர்மனியில் உள்ள நூரெம்பெர்க் என்ற இடத்தில் பொது விசாரணை நடந்தது.

அந்தச் சம்பவமே நூரெம்பெர்க் விசாரணை என்ற படத்தின் மையம். நீதிமன்ற விசாரணையை மையமாகக்கொண்ட படங்களில், 3 திரைப்படங்கள் மிகச் சிறப்பானவை. ஒன்று, Judgement at Nuremberg; இரண்டு, புலிட்சர் பரிசு பெற்ற நாவலின் திரைவடிவமான To Kill a Mockingbird; மூன்றாவது, 12 Angry Men.

அமெரிக்க நீதித் துறையின் சார்பில் நூரெம்பெர்க் விசாரணைக்குத் தலைமை ஏற்கிறார் நீதியரசர் டான் ஹோவர்ட். இவர் விசாரிக்கப் போகும் குற்ற வாளிகள், யூதப் படு கொலை சம்பவங்களுக்கு உத்தரவு தந்த அவரைப் போன்ற நீதிபதிகள். அதில் ஒருவர் சட்ட நூல்களை எழுதி உலகப் புகழ்பெற்ற எர்னெஸ்ட் ஜேனிங். இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். இந்த விசாரணையை ஹோவர்ட் எப்படி நடத்துகிறார் என்பதைத் துப்பறியும் படங்களைப் போல நாற்காலியின் நுனியில் படம் பார்ப்பவரை உட்காரச் செய்வதே இப்படத்தின் தனிச் சிறப்பு.

நீதி விசாரணையின் முடிவில், நாஜி படுகொலைக்கு ஹிட்லர் மட்டுமே குற்றவாளி இல்லை. அவரைக் கொண்டாடிய பொதுமக்களும், அவரால் ஆதாயம் பெற்ற அதிகாரிகளும், அவரைப் பற்றிய உயர்வான பிம்பத்தை உருவாக்கிய ஊடகங்களும், ஹிட் லரை ஆதர்ச புருஷனாக வழிபட்ட தேசங் களும், ஹிட்லருக்குப் பொருள் உதவி செய்த தொழிலதிபர்களும்கூடக் குற்ற வாளிகளே! அதிகாரிகள், நீதிபதிகள் உயிர் பயத்தில் அப்படி நடந்துகொண்டாலும் தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டது தவறே என்று தீர்ப்பளிக்கிறார்.

படம் முழுவதும் அரசின் குற்றங்களுக்கு அதிகாரிகள் விசாரிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டுமா, அரசின் குற்றங்கள் எப்படி மறைக்கப்படுகின்றன என்று ஆழமாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய படம் இது.

குடும்பம் என்பது சேர்ந்து சாப்பிடுவது, சேர்ந்து உறங்குவதற்கான இடம் மட்டுமே இல்லை. சேர்ந்து வாழ்வதற்கான வெளி அது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு, புரிந்துகொள்ளும் மனதும் தன்னைத் திருத்திக்கொள்ளும் அக்கறையும், பரஸ்பர அன்பும், திறந்த உரையாடல்களும் அவசியம். அது தவறிப்போவதே இன்றைய குடும்ப விரிசலின் ஆதாரக் காரணம் என்பேன்!

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06
பார்வை வெளிச்சம்

துரையில் பார்வையற்றவர்கள் படிப்பதற்கான சிறப்பு நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. விஸ்வநாதபுரத் தில் அமைந்துள்ள இதன் பெயர் ஹெலன் கெல்லர் பேசும் புத்தகங்களுக்கான நூலகம். பாரதியார் பல் கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் அவர்களால் 2003-ம் ஆண்டு ரோட்டரி நிதி உதவியுடன் துவக்கப்பட்ட திட்டம் இது.

பார்வையற்றவர்களுக்கான இந்த நூலகம் இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சி. இங்கே புத்தகங்கள் முறையாக வாசிக்கப்பட்டு ஒலிப் புத்தகங்களாக உரு மாற்றம் பெற்று, துறைவாரியாக ஆடியோ கேசட்டுகள் மற்றும் சி.டி-க்களாக வைக்கப்பட்டுள்ளன. பொது அறிவு, இலக்கியம், சமூகம், பாடப் புத்தகங்கள், அரசு பணிகளுக்கான தேர்வுப் புத்தகங்கள், ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் புத்தகங்கள், சுயநம்பிக்கை, நாட்டுநடப்பு, வரலாறு எனப் பல்வேறு தலைப்புகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஒலிப் புத்தகங்கள் உள்ளன. இவை இசையோடு தரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டவை.

அந்த ஒலிப் புத்தகங்களைக் கேட்க விரும்புபவர்கள் அங்கேயே வந்து கேட்டுச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இந்த ஒலிப் புத்தகங்களைத் தபாலில் பெற விரும்பினால், தங்கள் முகவரியைப் பதிவு செய்தால் போதும்; இலவசமாக ஆடியோ புத்தகங்கள் தபாலில் வந்து சேர்ந்துவிடும். படித்துவிட்டு மீண்டும் இலவசத் தபாலில் திருப்பி அனுப்பிவிடலாம். பல ஆயிரம் பார்வையற்றவர்கள், இந்த நூலகத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.

ஒலிப்பதிவு செய்வதற்கு புத்தகங்களை வாசிப்பதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக முன்வந்து உதவி செய்கிறார்கள். மதுரையில் துவங்கிய இந்தப் பேசும் நூலகம் இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் விரிவு பெற்று வருகிறது.

இன்று கல்வி, வேலை, தனித்திறன், விளையாட்டு என்று சகல துறைகளிலும் பார்வையற்றவர்கள் அரிய சாதனைகள் செய்து வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தவும் நம்பிக்கை அளித்துத் துணை நிற்கவும் இது போன்ற நூலகங்கள் மிக அவசியமானவை. பாராட்டுக்கும் உரியவை!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06
- இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 06