மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13
எஸ்.ராமகிருஷ்ணன்,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13
உலகின் முதல் ரகசியம் எது?
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

புத்த மடாலயம் ஒன்றைக் காண்பதற்காக லடாக் பகுதியில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். டேமிஸ்காங் என்ற ஊரின் அருகே உள்ள பௌத்த ஆலயம் ஒன்றில் விழா. உற்சாகமாக மக்கள் வழிபட்டுக்கொண்டு இருந்தார்கள். நானும் அந்த ஆலயத்தினுள் சென்றேன். அந்தப் புராதன கோயிலின் இடிந்து போயிருந்த சுவரில் ஒரு துவாரம் இருந்தது. ஒவ்வொருவரும் அந்தத் துவாரத்தில் உதட்டை வைத்து ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

என்ன அது என்று கேட்டேன். அது ரகசியத் துவாரம். யாரிடமும் சொல்லாமல் நமக்குள் மறைத்துவைக்கப்பட்டு உள்ள ரகசியங்களை இந்தத் துவாரத்தில் சொல்லிவிட்டால், ஒருபோதும் அடுத்த மனிதர்களால் அறிய முடியாதபடி அது பூமியின் உள்ளே போய்விடும் என்றார்கள்.

அந்த நிமிஷம் அப்படி என்ன ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று யோசித்தேன். எதுவும் இல்லை. சட்டென ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு நண்பன் என்னிடம் பாதுகாத்து வைத்துக்கொள்ளச் சொன்ன ஒரு ரகசியம் நினைவுக்கு வந்தது. ஒரு நாள் பள்ளிவிட்டுத் திரும்பும்போது எனக்கு மிக நெருக்கமான நண்பனாக இருந்த பாண்டி, ஒரு ரகசியத்தை என்னிடம் சொல்லி, 'யார்கிட்டேயும் சொல்லிடாதே' என்று சத்தியம் வாங்கினான். நிச்சயம் சொல்ல மாட்டேன் என்று வலது கையில் சத்தியம் செய்தேன். அப்படியும் நம்ப முடியாமல் வீரப்பெருமாள் கோயில் படியில் சத்தியம் செய்யச் சொன்னான்.

அடுத்த சில வருஷங்களில் அவன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போய்விட்டான். நான் ஊர் மாறி வந்து அவனை மறந்து போனேன். 30 வருஷங்களாக அந்த ரகசியம் எனக்குள்ளாகவே குளத்தில் வீசி எறிந்த நாணயம் போலக் கிடந்தது. ஆனால், அந்த ரகசியத் துவாரத்தின் முன் நின்றபோது திடீரென அவன் நினைவு வந்தது. மறு நிமிஷம் அந்த ரகசியம் உயிர் பெற்றுவிட்டது.

பல வருஷமாக அதை ஏன் சுமந்துகொண்டு இருக்கிறேன். இன்று அந்த ரகசியத்துக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பால்ய வயதின் ரகசியங்களை இன்று நினைக்கையில் அர்த்தம் அற்றவையாகத்தானே இருக்கின்றன. என்ன செய்வது அந்த ரகசியத்தை என்ற யோசனைகள் என்னைப் பற்றிக்கொள்ளத் துவங்கின.

அப்போதுதான் புரிந்தது. அவனுடைய ரகசியம் மட்டும் இல்லை. எவர்எவர் ரகசியங்களோ மனதில் புதையுண்டு இருக்கின்றன. ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வதில்தான் நட்பின் ஆழம் இருக்கிறது என்று நம்பிய நாட்கள் அவை. பள்ளி வயதில் இருந்து சுமந்துகொண்டு இருந்த அந்த ரகசியத்தை இனி உனக்கு உலகில் வேலை இல்லை என்று பூமியின் அடியில் சேகரமாகும்படி நழுவவிட்டேன். ஊர் திரும்பும் வரை அந்த நண்பனின் நினைவு ததும்பிக் கொண்டே இருந்தது.

ரகசியம் என்ற சொல் இன்று விளையாட்டாகவே பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால், அந்தச் சொல் அப்படி இருக்கவில்லை. அது வலிமையானதாக, புரிந்துகொள்ளப்பட முடியாத திகைப்பாக, மர்மமானதாகவே இருந்தது. ஓர் உதட்டில் இருந்து மறு இதயத்துக்குக் கடத்தப்படுவது போல மெல்லிய முணுமுணுப்பில் ரகசியம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

ரகசியம் ஒரு திரை. அதன் பின்னே இருப்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்குமே ஆசை இருக்கிறது. ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட டைரிகள், கடிதங்கள், நிகழ்ச்சிகள், பணப் பரிமாற்றங்கள், உறவின் கசப்பு உணர்வுகள் என்று ஒவ்வொரு குடும்பமும் ரகசியத்தின் சொந்தச் சரித்திரம் ஒன்றுடன் இருக்கிறது.

வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றினை எனக்குத் தெரியும். அவர்கள் அடுத்தவரிடம் கடன் கேட்கக் கூச்சப்படுவார்கள். ஆனால், குடும்ப நெருக்கடி அவர்களை மூச்சு முட்டச் செய்தது. அந்த வீட்டின் பெரியவர் ஒரு மஞ்சள் பையில் தனக்குத் தேவையான தொகையை ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு இருட்டியதும் வீதியில் அங்கும் இங்குமாக நடப்பார். யாராவது அறிந்த மனிதர்கள் வந்தால் மிகுந்த தயக்கத்துடன் அந்த மஞ்சள் பையை நீட்டுவார். அவர்கள் அந்தப் பையினுள் கைவிட்டு, அதில் உள்ள காகிதத்தில் குறிக்கப்பட்டதைக் கண்டு உதவி செய்ய விருப்பம் இருந்தால், பணத்தை அதே பையில் போட்டு விடுவார்கள். கடன் வாங்கிய மறு நிமிஷம் வயதானவர் அவசர அவசரமாகத் தன் வீட்டுக்குள் ஓடி கதவைச் சாத்திக்கொண்டு விடுவார். கடன் வாங்குவது ரகசியமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால், அந்த ரகசியம் ஊர் அறியத்தான் நடந்தேறியது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

பின்னொரு நாள், அவர்களுக்குக் கடன் கொடுத்த ஒருவன் விளக்கு வைக்கும் நேரத்தில் அந்த வீட்டின் கதவைத் தட்டி வாங்கிய பணத்தைத் தராமல் ஏமாற்றுகிறார்கள் என்று உரக்கக் கத்தியபோது, வயதானவர் கவிழ்ந்த தலையுடன் உள்ளே வந்து பேசலாமே என்று மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

''இதுல என்ன ரகசியம் இருக்கு. நாலு பேருக்கு உங்க வண்டவாளம் தெரியட்டும்!'' என்று வீம்பாகச் சொல்லியபடியே கடன்காரன் கத்தினான். அவன் வாயை எப்படி மூடுவது என்று வயதானவருக்குத் தெரியவில்லை. கையெடுத்துக் கும்பிட்டபடியே நின்றார். அவன் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் அவமானங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு இருந்தான்.

அது வரை வீட்டின் சமையல் அறையில் நின்று சண்டையைக் கவனித்துக்கொண்டு இருந்த வயதானவரின் மனைவி விடுவிடுவென வெளியே வந்து வீதியில் நின்ற கடன்காரன் காலில் விழுந்து, ''எங்களுக்கு வேற வழி இல்லப்பா'' என்று கதறும் குரலில் சொல்லி கண்ணீர் விட்டபோது, கடன்காரன் குரல் தானே அடங்கிப்போனது.

அன்று இரவோடு அந்த வீட்டு மனிதர்கள் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் ஒரு சமையல் பாத்திரத்தைக்கூடத் தங்களோடு கொண்டு செல்லவில்லை. வீட்டின் கதவைக்கூடப் பூட்டவில்லை. தங்கள் வீட்டில் எந்த ரகசியமும் இல்லை என்று உலகுக்குச் சொல்வது போல ஊரை விலக்கிப் போயிருந்தார்கள். வீடெங்கும் அவர்கள் துயரம் உதிர்ந்துகிடந்தது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறது. ஒளித்துவைக்கிறது. ஆனால், இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. பல ரகசியங்கள் மனிதர்களின் இறப்புடன் சேர்ந்து புதைந்துவிடுகின்றன. அல்லது புதைக்கப்பட்டுவிடுகின்றன. காலம் இதில் சிலவற்றை மிக தாமதமாகக் கண்டுபிடிக்கிறது. அடையாளம் காட்டுகிறது. ரகசியம் மீட்டெடுக்கப்படும்போது அதன் பின்புறம் இருந்த வலி உணரப்படுவதே இல்லை.

'Lone Japanese Man' என்ற ஒரு டாகுமென்ட்டரி படம் பார்த்தேன். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து உயிர் பிழைத்த மசாபுமி ஹோசனா என்பவரைப் பற்றியது. டைட்டானிக்கில் பயணம் செய்த ஒரே ஜப்பானியப் பயணி அவர். 1910-ம் ஆண்டு ஜப்பானியப் போக்குவரத்துத் துறை, மசாபுமி ஹோசனாவை நவீன ரயில்வே போக்குவரத்து முறைகளைக் கற்றுவருவதற்காக ரஷ்யா அனுப்பிவைத்தது. அதைக் கற்று முடித்துவிட்டு நாடு திரும்பும் வழியில் லண்டனுக்கு வந்தார் மசாபுமி. அங்கிருந்து டைட்டானிக் கப்பலில் மீண்டும் பயணமானார்.

கப்பல் பனிப் பாறையில் சிக்கி முழ்குவதைப் பற்றி அறியாமல், நல்ல உறக்கத்தில் இருந்தார். அபாய மணிச் சத்தமும் தொடர்ந்த கூக்குரலும் எழுப்பவே பயத்தில் என்ன செய்வது என்று தடுமாறி வெளியே வந்தபோது பயணிகளில் பெண் களும் குழந்தைகளும் மீட்புப் படகுகளில் ஏற்றப்படுவதைக் கண்டார். கப்பல் மூழ்கப் போகிறது என்று அப்போது அவர் நம்பவில்லை. விபத்து காரணமாக மாற்று ஏற்பாடு நடக்கிறது என்றே உணர்ந்தார்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

ஆனால், அங்கே நடைபெற்ற தள்ளுமுள்ளுகள், உயிரைக் காத்துக்கொள்ளும் முயற்சிகளைக் கண்டபோது, தானும் எப்படியாவது தப்பிப் போய்விட வேண்டும் என்று ஆசை உண்டானது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே முன்னுரிமை என்பதால், ஆண்களை மீட்புப் படகுகள் ஏற்றிக்கொள்ளவில்லை.

ஆனால், ஒரு மீட்புப் படகில் இரண்டு பேருக்கு இடம் இருக்கிறது என்று சத்தம் கேட்டதும் மசாபுமியின் அருகில் இருந்த ஒருவன் தாவி அதில் குதித்தான். இதுதான் உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி என்று மசாபுமியும் தாவி அந்த மீட்புப் படகில் குதித்து உயிர் தப்பினார். அடுத்த சில மணி நேரங்களில் டைட்டானிக் அவர்கள் கண் முன்னாடியே மூழ்கிக் கடலில் மறைந்தது.

உயிர் தப்பி வந்த அவரை அமெரிக்கப் பத்திரிகைகள் அதிர்ஷ்டக்காரர் என்று கொண்டாடின. ஆனால், ஜப்பானிய மக்களும் நாடும் அவர் டைட்டானிக் கப்பலில் மூழ்கி சாகாமல் தப்பி வந்தது கோழைத்தனம் என்று கடுமையாக விமர்சித்து அவரை அவமானப்படுத்தின. நாளிதழ்கள், பள்ளிப் பாடங்களில் அவர் தேசத்தை அவமானப்படுத்திய கோழை என்று புகைப்படத்துடன் அடையாளப்படுத்தப்பட்டார். இந்த அவமானத்தைவிட அவர் பகிரங்கமாகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று சில அமைப்புகள் அவரை நிர்ப்பந்தப்படுத்தின.

உயிர் தப்பியது தனது குற்றமே என்று ஒப்புக்கொண்ட மசாபுமி, யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. குற்ற உணர்ச்சியும் அவமானமுமாக ஏன் உயிரோடு இருக்கிறோம் என்ற கசப்பு உணர்வில் 1939 வரை வாழ்ந்து இறந்து போனார்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

டைட்டானிக் கப்பலின் கடைசி நிமிஷங்கள் என்னவாகின. அவர் என்ன காட்சிகளைக் கண்டார். உயிர் தப்பிய போராட்டம் எப்படி இருந்தது என்ற ரகசியங்கள் அவரோடு புதைந்து போனது. ஆனால், 58 வருஷங்களுக்குப் பின்னால் மசாபுமி ஹோசனா எழுதிய நாட்குறிப்பும், அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதமும் பல வருடமாகப் பூட்டப்பட்டுக் கிடந்த ஒரு மேஜை டிராயரில் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அவை மசாபுமி கண்ட காட்சிகளின் சில துளிகள் மட்டுமே. மற்ற உண்மைகள், கடைசி நிமிஷப் போராட்டங்கள் அவருக்குள்ளாகவே ரகசியமாக மூழ்கிய டைட்டானிக் போலவே மீட்க முடியாத ஆழத்துக்குச் சென்று சேகரமாகிவிட்டன.

ஒரு மனிதன் உயிர் பிழைத்ததற்காக அவமதிக்கப்பட்டது, சகமனிதனால் வெறுக்கப்பட்டு வெறுமையும் தனிமையுமாக வாழந்ததும் எவ்வளவு விசித்திரம் என்பதை இந்த ஆவணப்படம் சிறப்பாக விவரிக்கிறது.

ரகசியங்கள் வெறும் சொற்கள் அல்ல. அவை விதைகள். நம் மனதின் காப்பறையில் ஒளித்துவைக்கப்படுகின்றன. காப்பாற்றப்படுகின்றன. உலகின் முதல் ரகசியம் எது? ரகசியத்தைக் கண்டுபிடித்தவர் யார்? தெரியவில்லை.

ரகசியங்களை ஒளித்துவைக்க ஒவ்வொருவரும் ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். நான் கண்டுபிடித்துள்ள வழி எழுதுவது. என் ரகசியங்கள் என் எழுத்தினுள் புதைந்து கிடக்கின்றன. அவை ரகசியம் என்று அடையாளம் காண முடியாதபடி புனைவால் சுற்றப் பட்டு இருக்கின்றன. ரகசியங்களைப் புனைவாக்குவது மட்டுமே எளிய, நம்பகமான வழி என்றே தோன்றுகிறது. உண்மையில் எல்லா எழுத்தும் ரகசியங்களின் விளைநிலம்தானே!

பார்வை வெளிச்சம்!

ல்விபுலம் சார்ந்த மேம்பாட்டுக்கும் சமூகக் கலாசார வளர்ச்சிக்கும் உதவும்படியான எஃப்.எம். ரேடியோக்கள் ஒன்றிரண்டு மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் உள்ள மேடக் மாவட்டத்தில் ஒலிபரப் பாகும், சங்கம் என்ற எஃப்.எம். ரேடியோ, தலித் மக்களின் மேம்பாட்டுக்கான சிறப்புப் பண்பலை. இன்னொரு சிறப்பு... இதை நிர்வகிப்பது பெண்களே!

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13

30 கிராமங்கள் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்தப் பண்பலை ரேடியோ கிராமப்புற தலித் மக்களின் பிரச்னைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை சார்ந்த அக்கறைகளுக்கான ஊடகமாக உள்ளது. இதில் தலித் மக்களின் பாடல்கள், கதைகள், சுய வரலாறுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றன.

யுனெஸ்கோவின் ஆதரவு பெற்றுள்ள இந்தப் பண்பலையின் வருகையால் கிராமப்புற மக்கள் தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள முடிகிறது என்கிறார்கள். தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் இது போன்ற பண்பலைகளின் தேவை மிக அதிகமாகவே இருக்கிறது!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13
- இன்னும் பரவும்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 13