வீடு மாறிப் போவது என்பது வெளிக்காட்டிக் கொள்ள முடியாத ஊமை வலி. அதிலும் சொந்த வீட்டில் குடியிருந்துவிட்டு, பொருளாதாரக் காரணங்களுக்காக வாடகை வீட்டுக்குப் போவது மனமறிந்த வேதனை. அந்தப் பிரிவு துண்டிக்கப்பட்ட பல்லியின் வால் போல நமக்குள்ளாகவே துடித்துக்கொண்டு இருக்கக் கூடியது.
வாடகை வீடோ, சொந்த வீடோ எதுவாயினும் நாம் வசிக்கத் துவங்கியதும் நம் ஆசைகளும் ஏமாற்றங்களும் படிந்த நமது அந்தரங்க வடிவமாகிவிடுகிறது வீடு. வீட்டின் சுவர் களுக்கு மட்டும் பேசத் தெரிந்தால், எவ்வளவு கதைகளைச் சொல்லியிருக்கும் தெரியுமா? சுவர்கள் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன என்ற பிரக்ஞை நமக்கு இருப்பது இல்லை. மாறாக, ஒரு போர்வை போல நமது அந்தரங்கத்தை மூடிப் பாதுகாக்கின்றன சுவர்கள். நமது அழுகையை வெளித் தெரியாமல் தன் அகன்ற கைகளால் சுவர்கள் மறைத்துக்கொள்கின்றன. சுவரில் இருந்து உதிரும் காரைகளைப் போலவே நம் இயலாமைகள் வீடெங்கும் உதிர்ந்துகிடக்கின்றன.
வீட்டின் கதவுகள் ஒரே நேரத்தில் வெளியில் இருந்து எதுவும் உள்ளே நுழைந்துவிடாமலும் உள்ளிருந்து ரகசியங்கள் வெளியே போய்விடாமலும் தடுத்துக்கொண்டு இருக்கிறது. வீடு நம் நிர்வாணம் அறிந்த கண்ணாடி.
வீடு மாறிப் போகின்றவர்களின் பேச்சில் எப்போதாவது வசித்த வீடுகள் பீறிடுகின்றன. அந்த வீட்டில் ஒரு கிணறு இருந்தது. அந்த வீட்டின் பின்புறம் நிலா வெளிச்சம் படிக்கட்டில் அடிக்கும். அந்த வீட்டில் மழை பெய்யும்போது கேட்கும் சத்தம் வேறுவிதமாக இருக்கும். அந்த வீட்டின் தரை குளிர்ச்சியானது என்று எதையோ சொல்லி வீட்டின் நினைவுகள் அதிகம் பீறிட்டுவிடாமல் அடக்கிக்கொள்கிறோம்.
சிறுவர்கள், வசித்த வீடுகளை உடனே மறந்து விடுவது இல்லை. அதைக் கடந்து செல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அது நம் வீடுதானே என்று அடையாளம் காட்டுகிறார்கள். அந்த வீட்டினை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறார்கள். நமக்கும் அப்படிப் பார்க்க வேண்டும் என்று உள்ளூற ஆசை இருக்கக்கூடும். நாம் தயங்கி நிற்கிறோம். பல நேரம் சமூகக் கூச்சங்களுக்காக அதை விலக்கிப் போய்விடுகிறோம்.
ஆனால், நாம் வசித்த வீடுகள் நம் நினைவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. அப்படி விருதுநகரில் நான் வசித்த வீடு ஒன்றுக்குச் சமீபத்தில் போயிருந்தேன். என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் எனக்கு இல்லை. காலை பதினோரு மணி இருக்கும். முன்னால் உள்ள இரும்புக் கதவைத் தள்ளி நுழையும்போது பத்து வருஷங்கள் பின்னால் போவது போலவே இருந்தது. அது என் வீடு என்ற உரிமை இப்போது இல்லை என்றபோதும், அது எனக்குப் பரிச்சயமான இடம் என்ற உரிமை எனக்கு இருப்பதாகவே உணர்ந்தேன்.
வீட்டின் காலிங்பெல்லை அடிப்பதற்காக நின்றுகொண்டு இருந்தேன். இதே காலிங்பெல்லை எத்தனை இரவுகளில் வந்து அடித்திருக்கிறேன். ஏதேதோ பயணங்களின் முடிவில், யாவரும் உறங்கிய பின்னிரவில் இதே காலிங்பெல் முன்னால் நின்றபடியே கதவை வெறித்துக்கொண்டு இருந்திருக்கிறேன். அன்றும் அந்தக் கதவின் முன்னால் அப்படியேதான் இருந்தேன்.
|