மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17
சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17
நீங்கள் ஆபீஸ்ரா? உங்களைத்தான்...
சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

50 வருடங்களுக்கு முன்பாக ரஷ்யாவில் எழுதப்பட்ட கதை இது. 'அதிகாரி' என்ற இந்தக் கதையை எழுதியவர் வசிலி விசியோவ்.

டிமிட்ரி என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்கு தன் கீழ் உள்ள ஊழியர்களை அதிகாரம் செய்தே பழக்கம். கட்டளைகளை யாராவது செய்யத் தவறினால், கடுமையான தண்டனைகள் தருவார். அவருக்கு உண்மையான ஓர் ஊழியன் இருந்தான். பெயர், இவான். அலுவலகத்தில் கடைநிலை ஊழியன்.

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

அதிகாரிதான் அவனுக்குத் தெய்வம். அவரைக் குளிர்ச்சிசெய்து வைத்துக்கொள்வதற்காக எந்த வேலை வேண்டுமானாலும் செய்யக்கூடியவனாக இருந்தான். ஆணைகள் இட்டுப் பழகிய டிமிட்ரி, வீட்டிலும் மனைவி, மக்கள், வேலையாட்கள் யாவருக்கும் உத்தரவிட்டபடியே இருப்பார். வீட்டில் அவராக உடைகளை மாற்றிக்கொள்வதுகூட கிடையாது. அதற்கும் ஒரு பணியாள் இருந்தான். அவனிடம் தன் உள்ளாடைகளைக் கழட்ட வேண்டும் என்று உத்தரவிடுவார். அவன் கழட்டிவிடுவான். படுக்கையிலும் தன்னை இரண்டு முறை முத்தமிடவும் என்று மனைவிக்கு கட்டளை இடுவார். அதை மட்டுமே அவள் நிறைவேற்றுவாள். குளிப்பது, சாப்பிடுவது, பேசுவது என்று வீட்டின் அத்தனை செயல்களும் அவரது உத்தரவின் பெயரில்தான் நடந்தன. ஒருவரும் அவரை எதிர்த்துப் பேசுவதே இல்லை. டிமிட்ரி போலவே இவானுக்கும் ஒரு குடும்பம் இருந்தது. ஆனால், அதை அவன் கவனிப்பதே இல்லை. அதிகாலையில் எழுந்தவுடன், தன் வேலைகளை வேகவேகமாக முடித்துக்கொண்டு அலுவலகம் வந்துவிடுவான். மாலை அலுவலகம் முடிந்தாலும், அதிகாரி வீட்டுக்குப் போய்விடுவான். அவர், அவனை ஒரு வளர்ப்பு நாயைப் போலவே நடத்தினார்.

25 வருடங்களாக அதே அலுவலகம். அதே வேலை என்று இருந்த அவர்களின் அன்றாட வாழ்க்கை திடீரென ஒருநாள் ஓர் உத்தரவின் காரணமாக உருமாறியது. இருவரும் தொலைதூரத்தில் இருந்த தீவு ஒன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டார்கள். அதிகாரி, தன் மனைவி பிள்ளைகளிடம், தான் இல்லாத நாட்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டு தீவை நோக்கிப் பயணம் துவக்கினார். ஆறு நாட்களுக்குப் பிறகு அவர்களை ஒரு கப்பல், தீவில் இறக்கிவிட்டது.

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

அதிகாரி இவானிடம் தன்னை அலுவலகத்துக்கு அழைத்துப் போகும்படி கட்டளை இட்டார். இவான் அவரை கூட்டிக்கொண்டு நடந்தான். அந்தத் தீவில் கட்டடங்களோ, அலுவலகமோ, வீடுகளோ வேறு மனிதர்களோ எவரும் இல்லை என்பதை சில மணி நேரத்தில் அறிந்துகொண்டார்கள். அடுத்த கப்பல் வரும் வரை திரும்பவும் முடியாது.

அலுவலகம் இல்லாதபோதும் தான் அதிகாரியே. ஆகவே, தன் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டியது அவனது பொறுப்பு என்று இவானிடம் கத்தினார். இவான் அப்படியே நடந்துகொள்வதாகச் சொன்னான். கடந்த 10 ஆண்டு கால வரிச் செலவுக் கணக்குகள் கொண்டுவந்து காட்டப்பட வேண்டும் என்று உத்தரவிடுவார். இவான் இல்லாத கணக்கு வழக்குகளுக்கு எங்கே போவான். ஆகவே, அவன் ஒரு கணக்குப் புத்தகத்தை சுமந்து வருவது போல பாவனை செய்வான். அவரும் கையெழுத்து இடுவது போல பாவனை செய்வார். அந்த கணக்கு நோட்டை அடுத்த அலுவலகம் அனுப்பிவைத்துவிட்டு வருவதாக இவான் வெளியே செல்வான்.

இந்த நாடகம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அதிகாரி தங்குவதற்கு உரிய இடம் இல்லை. சாப்பிட உணவும் இல்லை. காற்றும் குளிரும் அதிகமாக இருந்தது. அத்தனை சிரமங்களுக்கும் இடையில் அதிகாரி தனது அடுக்கடுக்கான உத்தரவுகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். இவானுக்கு முதல்முறையாக, 'இது என்ன பைத்தியக்காரத்தனம்? ஏன் இந்த மனிதன் இப்படி நடந்துகொள்கிறான்?' என்று எரிச்சலாக வந்தது.

ஒருநாள் இந்த அபத்தம் தாங்க முடியாமல்... இவான், ''நம் இருவருக்கும் அரசாங்கம் தண்டனை அளித்துத்தான் இங்கே அனுப்பி இருக்கிறது. இதில் நீங்கள் அதிகாரியும் இல்லை. நான் கடைநிலை ஊழியனும் இல்லை'' என்று கோபப்பட்டுக் கத்தினான். அதிகாரி அதை ஏற்க மறுத்து, ''நான் ஓய்வு பெற்றாலும்கூட ஓய்வு பெற்ற அதிகாரி என்றுதான் அழைப்பார்கள். தண்டனை உனக்கு மட்டும்தான். நீ என்னை இவ்வளவு எடுத்தெறிந்து பேசியதால், உன்னைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார். இவான் பயந்து அவர் கால்களைப் பிடித்து மன்னித்துவிடும்படியாகக் கெஞ்சினான்.

இரண்டு வாரங்கள் இந்த அபத்த நாடகம் நடந்தது. பசி, குளிர், உறக்கமின்மை இருவரையும் ஒடுக்கி இருந்தது. அடுத்த கப்பல் எப்போது வரும் என்று காத்திருந்தார்கள். முதன்முறையாக அதிகாரி தான் ஏன் எந்த நேரமும் அதிகாரியாக நடந்துகொண்டோம் என்று குற்ற உணர்ச்சிகொண்டார். கடைநிலை ஊழியனும் தான் கடைநிலையில் இருப்பது வேலையில் மட்டும்தானே... எதற்காக சுயமரியாதையை அடகுவைத்து அதிகாரி காலை நக்கிக் கொண்டு இருந்தோம் என்று உணர ஆரம்பித்தான். இருவரும் அதைப்பற்றி பேசிக்கொள்ளவே இல்லை. அடுத்த கப்பல் வந்தபோது, இருவரும் மயங்கிக் கிடந்தார்கள். கப்பல் இருவரையும் ஏற்றிக்கொண்டு வீடு புறப்பட்டது.

கடலின் நடுவே கண் விழித்துப் பார்த்த அதிகாரி, அவசர அவசரமாக உத்தரவிடத் துவங்கினார். கப்பல் மாலுமி சலிப்போடு சொன்னான்... ''அதிகாரிகளை கடவுளாலும் திருத்த முடியாது. எனவே, அந்த ஆளைக் கடலில் தூக்கிப் போட்டுவிடுங்கள்'' என்று. உடனே அதிகாரி சொன்னார், ''அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. முதலில் என் கடைநிலை ஊழியனைத் தூக்கி கடலில் எறியும்படி உத்தரவிடுகிறேன்'' என்றார். அவர்கள் இரண்டு பேரையும் கடலில் தூக்கி எறிந்துவிட்டு கப்பல் திரும்பிக்கொண்டு இருந்தது. முழ்கிக்கொண்டு இருக்கும்போதும் அதிகாரி ஏதோ உத்தரவிடும் சத்தம் கேட்டது. கீழ்ப் படிய யாருமே இல்லை என்று கதை முடிகிறது.

சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் சென்று இருந்தேன். அருவியில் குளிப்பதற்கு கடுமையான நெருக்கடி. அரசு உயர் அதிகாரி ஒருவரும் குளிப்பதற்கு வந்திருந்தார். அவருக்குத் துணையாக நான்கு அலுவலக ஆட்கள். அவர் வருவதற்கு முன்பாகவே காவலர்கள் குளித்துக்கொண்டு இருந்தவர்களை, ''தள்ளு... தள்ளு'' என்று விலக்கிவிட்டார்கள். எண்ணெய் தடவப்பட்ட பெரிய தொப்பையுடன் பவ்யமாக நடந்து முன்னால் வந்த அதிகாரி தன் வீட்டு ஷவரில் குளிப்பது போல ஆனந்தமாகக் குளித்தார். ஒரே பிரச்னை... அருவியை அவர் விருப்பப்படி அதிகமாக்குவதோ, குறைப்பதோ முடியாது என்பது மட்டுமே. காத்திருந்தவர்களின் முணுமுணுப்புக் குரல்கள் அருவி சத்தத்தில் ஒடுங்கிப்போய் இருந்தன.

கோயிலில், ரயில் பயணத்தில், விமான நிலையத்தில் இது போன்று அதிகாரிகளுக்காகக் காத்திருக்கும் ஊழியர்களையும் அவர்களது பவ்யத்தையும் காணும்போது ஆதங்கமாக இருக்கும். மதுரை கோயிலில் யாரோ ஓர் அதிகாரி சாமி கும்பிட்டுவிட்டு இன்னொரு வாசல் வழியாக வெளியேறி ஜீப்பை நோக்கி நடக்கத் துவங்கினார். அவரது செருப்பைத் தூக்கிக்கொண்டு ஊழியர் ஒருவர் அவசரமாக ஓடுவதைக் கண்டேன். வெள்ளைகாரர்கள் காலத்தில் இது போல நடந்தது என்று படித்து இருக்கிறேன். ஆனால், வெள்ளைக்காரன் போன பிறகும் அதிகாரம் அடிமை நிலை மாறவே இல்லை போலும். அதிகாரிக்கு இவ்வளவு பவ்யம் காட்டும் ஊழியர்கள் இது போன்ற சேவையை தன் அப்பா, அம்மாவுக்கோ, மனைவி, பிள்ளைகளுக்கோ செய்வார்களா?

அதிகாரம் என்பது தன் கையில் கொடுக்கப்பட்ட பொறுப்பு என்பதைப் பலர் உணராமல் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அதிகாரிகளும் இப்படி நடந்துகொள்வது இல்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை ரயிலில் சந்தித்தேன். ''ஏன் நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்தானே?'' என்றபோது அவர், ''சொந்த வேலையாகச் செல்கிறேன். எதற்கு விமானப் பயணம்?'' என்று சிரித்தபடியே... தான் வடஇந்தியாவில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவன் என்றும், தனது அப்பா இன்றைக்கும் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார் என்றார். அவருடைய சகோதரிகள் இன்னமும் விவசாயம் செய்கிறார்கள். அந்த நினைவு எப்போதும் அடிமனதில் இருக்கிறது என்றார்.

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

இவரைப் போன்றவர்களும் அதிகாரிகளாகத்தானே இருக்கிறார்கள். ரயில் நிலையத்தில் இறங்கும்போது அவருக்கு எந்தவிதமான சிறப்பு வரவேற்பும் தரப்படவில்லை. தனது பெட்டியை தானே எடுத்துக்கொண்டு அவர் போனார். எளிமையை யாரும் கற்றுக்கொடுக்க முடியாது. அது ஓர் இயல்பு என்று தோன்றியது.

'Hell in the Pacific' என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். ஜான்பூர்மென் இயக்கியது. லீமார்வினும் தொசிரே மிபுனேவும் நடித்தது. அற்புதமாகப் படமாக்கப்பட்ட, இரண்டே கதாபாத்திரங்கள் நடித்த படம்.

இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றில் அமெரிக்கனும் ஜப்பானியனும் மாட்டிக்கொள்கிறார்கள். அமெரிக்கன் ஒரு கப்பல் விபத்தில் அந்த தீவுக்கு வந்து சேர்கிறான். ஜப்பானியன், விமானம் விபத்துக்கு உள்ளாகி அந்த தீவில் விழுகிறான். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் அலைந்து திரிந்து ஒருவரை மற்றவர் கண்டுகொள்கிறார்கள். உலக யுத்தத்தில் அமெரிக்காவும் ஜப்பானும் எதிரிகள். ஆகவே, இவர்களும் தங்களை எதிரிகளாக நினைக்கிறார்கள். அமெரிக்கனுக்கு ஜப்பானியன் பேசும் பாஷை புரியவில்லை. ஜப்பானியனுக்கும் ஆங்கிலம் புரியாது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க முற்படுகிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். தப்பி ஓடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தால் மட்டுமே அங்கிருந்து தப்பிச் செல்ல முடியும் என்பதை உணர்கிறார்கள். அவர்களுக்குள் இருந்த நாடு, இனம் சார்ந்த அடையாளங்கள் மெள்ள அழிகின்றன. இருவரும் மனிதர்கள் என்ற பொதுமை மட்டுமே அவர்களிடம் உள்ளது. ஒரு படகை உருவாக்கப் போராடுகிறார்கள். அதில் தப்பி கடலில் பயணம் செய்து இடிந்து போன இன்னொரு நகரத்துக்கு வந்து சேர்கிறார்கள். அங்கே யாருமே இல்லை. ஆனால், ஆயுதங்கள் கிடக்கின்றன. அதைக் கண்டதும் பழைய பகை திரும்பத் துவங்கிவிடுகிறது. ஒருவரை ஒருவர் தாக்க முற்படும்போது அங்கு புதைத்துவைக்கப்பட்ட கண்ணி வெடி வெடித்து இருவரும் இறந்துவிடுகிறார்கள்.

இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமேகொண்ட படம். ஒரு நிமிடம்கூட கண்ணை விலக்க முடியாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. மனிதர்கள் ஒருவர் மீது மற்றவர்கொள்ளும் விரோதம், வெறுப்புக்கு எவை காரணமாக இருக்கின்றன என்பதை வலிமையாகச் சித்தரிக்கிறது. ஜப்பானியனாக நடித்திருப்பது அகிரா குரசோவா படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்த தொசிரோ மிபுனே. இந்தப் படத்தில் அவரது மாறுபட்ட நடிப்பைக் காணலாம்.

அடுத்த மனிதனை அடக்கி ஒடுக்கி தன் கட்டளைகளை ஏற்கவைப்பதில் மனிதர்களுக்கு எப்போதுமே ஓர் ஆனந்தம் இருக்கிறது. அந்த மனப்பாங்கு குடும்பம், சமூகம் என்று பேதமில்லாமல் நடைமுறையில் இருக்கிறது என்பார் ஆண்டனியோ கிராம்சி. அது 100 சதவிகித உண்மை. இந்த மனப்பாங்கில் இருந்து எப்படி விடுபடுவது? எப்படி மாற்றிக்கொள்வது? என்பது நாம் யாவரும் முடிவெடுக்க வேண்டிய முக்கிய சவால்!

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17

மல்யுத்தம் ஒரு காலத்தில் புகழ்பெற்ற விளையாட்டு. இதில், தாராசிங், கிங்காங் போன்றவர்கள் பெரும் புகழ்பெற்று இருந்தார்கள். ஊர் ஊராக மல்யுத்தப் போட்டிகள் நடத்தபட்டன. சாண்டோ, பயில்வான் என்று அழைக்கப்பட்ட குஸ்திச் சண்டை வீரர்கள் சவால்விட்டுச் சண்டையிட்டனர். வெற்றி பெற்றால், பெரிய தொகை பரிசாகத் தரப்பட்டது. மல்யுத்தப் போட்டிகளைக் காண்பதற்கு மக்களுக்கும் பெரிய விருப்பம் இருந்தது. இன்று மல்யுத்தப் போட்டிகள் நடப்பது அபூர்வமாகிவிட்டது. கர்நாடகாவில் தசரா சமயத்தில் மல்யுத்தப் போட்டிகள் நடக்கின்றன. மல்யுத்த வீரர்களுக்குப் பயிற்சி தரும் இடத்தின் பெயர் கரடி. மைசூரை ஒட்டி நிறையக் கரடிகள் இருந்தன. மல்லர்களும் இருந்தார்கள். இன்று அழிந்து வரும் வீரக் கலையில் ஒன்றாக உள்ளது. ஜப்பானிய வீரக் கலைகள் உலகில் மிகுந்த வரவேற்பும் கவனமும் பெற்றுவரும் சூழலில் நமது மரபான கலைகள் கைவிடப்படுவதும், அழிந்துபோவதும் உணரப்படாத பேரிழப்பே!

 
சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17
-இன்னும் பரவும்
சிறிது வெளிச்சம்! - நீங்கள் ஆபீஸரா? உங்களைத்தான்... - 17