மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16
எஸ்.ராமகிருஷ்ணன்,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16
உடைந்த புத்தர் சிரித்தார்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

கிண்டி அருகில் சாலையோரம் பொம்மைகள் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்தேன். அந்தக் கடையில் ஏதாவது மண் பொம்மை இருக்குமோ என்று தேடிப் பார்த்தேன். ஒன்றைக்கூடக் காணவில்லை. வட இந்தியக் குடும்பம் அது. செயற்கைக் களிமண்ணால் அச்சில் வார்க்கப்பட்ட பொம்மைகள். யாவும் ஒன்று போலவே இருந்தன. எதிலும் உயிரோட்டம் இல்லை.

இன்று மண் பொம்மைகள் அலங்காரப் பொருட்களாக மட்டுமே ஆகிவிட்டிருக்கின்றன. குளிர்சாதனமிட்ட நட்சத்திர விடுதிகளின் உணவறைகளில் மண் குதிரைகள் மௌனமாக நிற்பதைக் கண்டிருக்கிறேன். எந்தக் குழந்தையின் கைவிரல்களும் அதில் படுவதில்லை. ஒரு பொம்மையாக இருந்துகொண்டு குழந்தையின் கைவிரல் படாமல் போவது துரதிருஷ்டமே. நகரங்களில் காட்சிக்காவது பொம்மைகள் வைக்கப்படுகின்றன. கிராமங்களில் அதுவும் இல்லை. தானியங்கி விளையாட்டுக் கார்கள், பந்து, பிளாஸ்டிக் பொம்மைகள் தவிர, கடந்த 10 வருடங்களில் நான் எவரது வீட்டிலும் ஒரு மரப் பொம்மையோ, மண் பொம்மையோ காணவே இல்லை.

பொம்மை விற்கிற ஆள் தெருவில் வரும் நாளுக்காகச் சிறுவயதில் காத்துக்கிடந்திருக்கிறேன். அலாதியான குரலில் 'பொம்மே... தலையாட்டிப் பொம்மே' என்று பாடியபடியே வருவான். வயதை மறந்து சிறுவர்கள், பெண்கள் யாவரும் அவனை நோக்கி உற்சாகமாக ஓடுவார்கள். பெரிய மூங்கில் கூடை ஒன்றில் கிருஷ்ணன் பொம்மை, உண்டியல், புத்தர், மான், குதிரை என்று விதவிதமான பொம்மைகள் வைத்திருப்பான். அதன் வண்ணங்கள் அற்புதமானவை. அந்தப் பொம்மைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கக்கூடியவை.

வாங்கிய பொம்மைகளை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்பதற்குச் சண்டை வரும். இந்தச் சண்டையில் எவரது பொம்மையாவது உடைந்து சிதறும். சிதறிய பொம்மைகளுக்காக அழும் சிறுவர்களின் துக்கம் உண்மையானது. அந்த அழுகை எளிதில் சமாதானம்கொள்ள முடியாதது. இனி, ஒட்டவே முடியாத அந்தப் பொம்மையின் இழப்பை எப்படி ஈடுசெய்வது என்று சிறுவனுக்குப் புரிவதே இல்லை.

உடைந்த மறு நிமிடம் பொம்மை அந்நியமாகிவிடுகிறது. அதுவரை கையில் வைத்துக் கொஞ்சிய பொம்மையை அள்ளிக் குப்பையில் போடுகிறார்கள். பொம்மையின் கண்கள் அதன் விதியை நினைத்து மௌனமாக நம்மை வெறிக்கின்றன.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

முயல் போன்ற வடிவில் உள்ள உண்டியல் ஒன்றினை ஒரு முறை வைத்திருந்தேன். அதில் காசு நிரம்பியதும் உடைக்கும் நாள் வந்தது. அவரவர் உண்டியல்களை எடுத்து வந்து உடைத்து சில்லறைகளை எண்ணிக்கொண்டு இருந்தார்கள். யார் அதிகம் சேர்த்தது என்ற போட்டி. எனக்கு அந்த முயலை உடைப்பதற்கு மனம் இல்லை. உடைக்காமல் அதில் சேர்ந்த சில்லறைகளை எடுக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். பேசாமல் இப்படியே இந்த முயலை யாரும் அறியாமல் கண்மாயின் அடர்ந்த கருவேலங்காட்டுக்குள் கொண்டுபோய் விட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால், காசு சேர்க்கும் போட்டியில் தோற்றுவிடுவேனே என்ற தயக்கம் அதைச் செய்யவிடாமல் தடுத்தது.

முயலைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உயர்த்திய காதுகளுடன், சாந்தமான கண்களுடன் முயல் அமர்ந்திருந்தது. அதை மண் உருவம் என்று நம்ப முடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு உடைப்பது என்று முடிவு செய்து ஓங்கித் தரையில் அடிக்க முயற்சித்தேன். கைவரவில்லை. என் கையில் முயலின் ரோமங்கள் படுவது போன்ற உணர்ச்சியே இருந்தது. நான் உண்டியலை உடைக்கவில்லை என்று சொல்லி, அதை வைத்துவிட நினைத்தேன். ஆனால், என் கண் முன்னே பிடுங்கி அந்த உண்டியல் உடைக்கப்பட்டது.

உள்ளே இருந்து சில்லறைகள் கொட்டின. நான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டவனைப் போல அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். உண்டியலில் இருந்த காசுகள் களிம்பேறி இருந்தன. கை நிறையச் சில்லறைகளை அள்ளியபோதும் குதூகலம்கொள்ளவே இல்லை. சின்னஞ்சிறு வயதின் துயர்கள் காரணங்களால் விளக்கிப் புரிந்துகொள்ள முடியாதவை. அவை உதட்டில் ஒட்டிய பருக்கை போல நினைவில் ஒட்டி இருக்கின்றன.

சென்னை மாநகரில் அடுக்குமாடி வணிக வளாகங்கள் பெருகிவிட்டன. சீனா, கொரியா, ஏன் ஸ்பானியப் பழங்குடி பொருட்கள்கூட விற்பனையாகின்றன. ஆனால், சமைப்பதற்கு மண் சட்டி வாங்க வேண்டும் என்றால், எங்கே வாங்குவது என்று தேடி அலைய வேண்டியிருக்கிறது. பானை விற்பவர்கள், பானை செய்பவர்கள் யாவரும் வணிக மாற்றத்தின் சூறாவளியில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டார்களா?

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

இன்றும் சீனாவில் மரபான பீங்கான் கிண்ணங்களில் சாப்பிடவே மக்கள் விரும்புகிறார்கள். ஜப்பானில் பிளாஸ்டிக் தேநீர்க் கோப்பைகளை உபயோகிப்பது விருந்தினர்களை அவமதிக்கக்கூடிய செயல். ஆனால், நாம் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதில் மிதமிஞ்சிப் போய்விட்டோம். சில நாட்களுக்கு முன்பு தேநீர்க் கடை ஒன்றில் ஓர் ஆள் காபி வாங்க வந்தான். ஒரு பிளாஸ்டிக் கவரில் காபியைச் சூடாக ஊற்றி ரப்பர் பேண்ட் போட்டுத் தந்தார்கள். திகைப்பாக இருந்தது.

வட மாநிலங்களில் இன்றும் மண் கோப்பைகளில் தேநீர் கிடைக்கிறது. துணிப்பை, காகிதப் பைகளை உபயோகிக்கிறார்கள். நம்மிடம் கழிவுக் காகிதங்கள் வண்டி வண்டியாகக் கிடக்கின்றன. ஆனால், அவை முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவது இல்லை.

நமது மரபுக் கலைகள் கவனிப்பார் அற்றும், மரபு என்று நாமாக விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளாலும் பின்பற்றப்படாமலே போய்விடுகின்றன. பல கலைகள் அந்த வீட்டு மனிதர்களைத் தவிர, வேறு எவருக்கும் கற்றுத்தரப்படக் கூடாது என்று மறைந்து போய்விட்டன. அது போலவே, சாதி, மதம், ஆண் - பெண் பேதம் என்று பொல்லாத காரணங்கள் காட்டி கலைகள் கற்றுக்கொள்வதைப் பல ஆண்டுகள் தடுத்தும் விலக்கியும் வந்ததும் இன்று அதன் கவனமின்மைக்கு ஒரு காரணம்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

'The King of Masks' என்ற சீனப் படத்தைப் பார்த்திருக்கிறேன். வ்யூ டியான்மிங் இயக்கியது. வீதி நடனக் கலை சீனாவில் பிரபலமானது. முகமூடிகளைப் பயன்படுத்தி ஆடும் வயதான வீதி நடனக் கலைஞர் ஒருவர், தன் கலையைத் தனக்குப் பிறகு யார் கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்து, ஒரு பையனைத் தத்து எடுக்கிறார். அந்தக் கலை மரபின்படி ஆண்களுக்கு மட்டுமே அந்தக் கலை கற்றுத்தரப்பட வேண்டும். ஆகவே, சிறுவனுக்கு முகமூடி நடனத்தைக் கற்றுத்தருகிறார். சிறுவன் வீதி நடனக் கலைஞருடன் படகு வீட்டில் தங்கி, அவருக்கு ஒத்தாசை செய்தபடியே கற்றுக்கொள்கிறான். துணைக்கு ஒரு குரங்கு அவர்களோடு இருக்கிறது. நன்றாக நடனமாடக் கற்றுக்கொள்கிறான்.

ஒருநாள் நடனமாடும் கிழவருக்குத் தன்னோடு இருப்பது ஒரு சிறுமி. அவள் ஆண் போல வேஷமிட்டிருக்கிறாள் என்ற உண்மை தெரிய வருகிறது. ஒரு பெண்ணுக்கு இந்தக் கலையைக் கற்றுத்தருவதா என்று அடித்துத் துரத்துகிறார். அந்தச் சிறுமி, தன்னுடைய அப்பா வறுமை காரணமாகத் தன்னைச் சிறுவன் என்று விற்றுவிட்டதாகக் கதறுகிறாள். அவளைக் கிழவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவர் செல்லுமிடம் எல்லாம் அந்தச் சிறுமி பின்னாடியே போகிறாள். ஆனால், அவளைக் கிழவருக்குப் பிடிக்கவில்லை. வெறுத்து ஒதுக்குகிறார். 'பின்னாடி வராதே' என்று அடிக்கிறார்.

ஒருநாள் கிழவரை அதிகாரத்தை எதிர்ப்பதாகச் சொல்லி படை வீரர்கள் பிடித்துக்கொண்டு போய் சிறையில் அடைக்கிறார்கள். கிழவரை மீட்க சிறுமி போராடுகிறாள். முடிவில் அரசன் அவளது நம்பிக்கையை உணர்ந்து கிழவரை விடுதலை செய்கிறான். கலையின் முன்னால் ஆண்-பெண் பேதம் இல்லை என்பதை விளக்கும் மிக அற்புதமான படம்.

கலைகள் மனித ஆசைகளின் வெளிப்பாடுகள். அவை அந்தரங்கமான சந்தோஷத்தைத் தருபவை. மனதை வளப்படுத்துபவை. காரணம் இன்றி அதைக் கைவிடுவதும், சிதைத்து உடைப்பதும் நம் உடல் உறுப்புகளைக் குறை செய்வது போன்றதே.

10 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சியில் ஒரு சிறுவன் கல்லால் செய்யப்பட்ட ஓர் அடி உயர புத்தரின் சிலைகளை விற்பதைக் கண்டேன். அவன் ஒரு சிலையின் விலை 15 ரூபாய் என்றான். இதன் மதிப்பு தெரிந்துதான் சொல்கிறானா என்ற சந்தேகத்துடன் மறுபடியும் கேட்டேன். அவன் இரண்டு சிலைகளை வாங்கிக்கொண்டால் 25 ரூபாய்க்குத் தருவதாகச் சொன்னான். அவை எங்கிருந்து கிடைத்தன என்று

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

கேட்டபோது, அந்தப் பையன் பதில் பேசாமல் இருந்தான். ஏதோ ஓர் இடத்தில் இருந்து உடைத்துக் கொண்டுவந்திருக்கிறான் என்பது புரிந்தது.

நீண்ட நேரம் பேசி அவனைச் சம்மதிக்கவைத்தபோது பக்கத்துக் கிராமம் ஒன்றுக்கு என்னை அழைத்துப் போனான். அங்கே இடிந்துபோயிருந்த பௌத்தக் கோயில் ஒன்றின் பின்பக்கம் 108 புத்த உருவங்கள்கொண்ட ஒரு பாறை இருந்தது. அதில் இருந்த பல சிற்பங்களை உடைத்து இந்தச் சிறுவனும் இவனைப் போன்ற சிலரும் விற்றுவிட்டார்கள். மீதம் இருந்தவை, உடைந்த கால்களும் தாமரை மலர்களும் மட்டுமே. இது போல பல கிராமங்களில் புத்தர் சிலைகள் உடைத்து விற்கப் படுவதாகச் சிறுவன் சொன்னான்.

நூற்றாண்டு பழமையான சிற்பங்கள் உடைத்துச் சிதைத்து சந்தைப் பொருள் போல பத்துக்கும் இருபதுக்கும் விற்பனையா கின்றன. இது எங்கோ காஞ்சியில் நடக்கின்ற விஷயம் மட்டுமில்லை. இந்தியாவின் கலாசார மேன்மைக்குச் சாட்சிகளாக உள்ள பல நூறு சிற்பங்கள், ஓவியங்கள் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இது போல அடையாளமற்றும், கவனிப்பார் அற்றும் கிடக்கின்றன. கை கால்கள் உடைக்கப்பட்டும் முகம் சிதைக்கப்பட்டும், அழிந்துபோன சிற்பங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்.

தாஜ்மகாலைப்பற்றித் தெரிந்த நமக்கு கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்கள் பற்றித் தெரியவில்லை. அஜந்தா ஓவியங்கள் மேல்கொண்ட வியப்பு, ஏன் நம்மை சித்தன்னவாசலைப் பார்க்க உந்தித் தள்ளவில்லை. மகாபலிபுரத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினியின் போர்க் கோலம் பார்த்து இருக்கிறீர் களா? எத்தனை அற்புதமான சிற்பம் அது. கோயில் தேரில் உள்ள சிற்பத்தை யார் நின்று கவனித்துப் போகிறார்கள்?

ஆயிரம் வருடங்களுக்கு முந்தி வாழ்ந்த மனிதனின் எலும்பு கூட இன்று இல்லை. ஆனால், அவன் செய்த சிற்பம், ஓவியம் மற்றும் நுண்கலைகள் நம்மோடு இருக்கின்றன. அவன் பேசிய மொழி அப்படியே இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வதுடன் காப்பாற்றவும் வேண்டியது நமது அவசியமான செயல் அல்லவா!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16

துரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜலட்சுமிக்கு இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருது கிடைத்து இருக்கிறது. சிறு வயதில் போலியோ நோய் தாக்கி கால்கள் பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி, தன் உடல்நலக் குறைவைப் பெரிதாக எண்ணி ஒடுங்கிவிடாமல் போராடி, குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் வெற்றிபெறத் துவங்கினார். மாநில அளவில் தங்கப் பதக்கங்கள் பெற்ற இவர், 2004 பெல்ஜியத்தில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். மாற்றுத் திறன் படைத்தோருக்கான போட்டிகளில் மலேசியாவிலும் வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கிறார். எளிய குடும்பம். அப்பா, டீக்கடை வைத்திருந்தவர். அவர் மறைவுக்குப் பிறகு அம்மா அதை நடத்தி வருகிறார். தனது உடல் குறைபாடுகளை எண்ணி ஒடுங்கிவிடாமல் போராடி வெற்றிச் சாதனைகள் புரிந்த ராஜலட்சுமி கொண்டாடப்பட வேண்டிய சாதனைப் பெண்!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16
-இன்னும் பரவும்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 16