மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15
எஸ்.ராமகிருஷ்ணன்,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15
வாருங்கள்... தேவதூதன் ஆகலாம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15

ள்ளியில் எப்போதும் கேட்கப்படும் ஒரு கேள்வி, வளர்ந்து பெரியவன் ஆனதும் நீ என்னவாகப் போகிறாய் என்பது. டாக்டராக, இன்ஜினீயராக, கலெக்டராக என்று ஒவ்வொருவரும் அதற்கு ஒரு பதில் சொல்லி இருப்போம். ஆனால், எத்தனை பேர் அன்று சொன்ன பதிலை அப்படியே வாழ்வில் ஜெயித்துக் காட்டி இருக்கிறார்கள்.

விளையாட்டு வீரனாக வேண்டும், இசைக் கலைஞராக வேண்டும், ஓவியராக வேண்டும், பாடகியாக வேண்டும், உலகம் முழுவதும் சுற்றிவந்து சாதனை புரிய வேண்டும், என்று பள்ளி வயதில் கண்ட கனவுகளில் எத்தனையை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். ஏன் மறந்துபோனோம்?

'ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனையாக எதைக் கருதுவது? எதைத் தனது குழந்தைப் பருவத்தின் கனவுகளாக, ரகசிய ஆசையாகத் தனக்குள்ளாக வளர்த்து வந்தானோ, அதை அவன் அடைந்து காட்டுவது' என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற கணிப்பொறித் துறைப் பேராசிரியர் ரான்டி பாஷ் தனது சிறப்புச்சொற் பொழிவில் குறிப்பிடுகிறார். அது 100 சதவிகிதம் உண்மை!

அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க்கில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ரான்டி பாஷ் பேராசிரியராகப் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னைச் சாவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்த ரான்டி, அதை ஏற்றுக்கொண்டு மீதம் இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாகச் செலவிடுவது என்று முடிவு செய்து, தனக்கு விருப்பமானபடி வாழ்ந்து 2008-ல் இறந்தார்.

புற்றுநோய் முற்றிய நிலையில், அவர் தனது பல்கலைக்கழகத்தில் கடைசி உரை என்ற பெயரில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தினார். கடந்த 10ஆண்டு களில் நான் கேட்ட மிகச் சிறந்த உரை அது. Randy Pausch Last Lecture என்ற அவரது சொற்பொழிவு முழுமையாக யூ டியூப்பில் இருக்கிறது. அதன் உரைவடிவ மும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

நமது சிறு வயது கனவுகள் எவை என்ற பட்டியல் நினைவில் இருக்கிறதா? ரான்டி தன் பால்ய வயதின் கனவுகளாக புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பறப்பது. புட்ஃபால் சேம்பியன் ஆவது, கின்னஸ் ரிக்கார்டு புக்கில் இடம்பிடிப்பது, வால்ட் டிஸ்னியோடு பணியாற்றுவது என்ற கனவுகளின் நீண்ட பட்டியலை வைத்திருந்தார். அதில் எதை அடைந்தார். எப்படி அடைந்தார். எதைத் தவறவிட்டார் என்பதையே தனது உரையின் முக்கிய அம்சமாகக் குறிப்பிடுகிறார். அந்த உரையில் என்னைக் கவர்ந்த விஷயம் வாழ்வின் அடிப்படைகள் பற்றி அவர் சொல்லிய கருத்துக்கள்.

கால்பந்து விளையாடுவதற்காக அவர் தேர்வானபோது அவரது பயிற்சியாளர், 'இந்த விளையாட்டில் ஒரு பக்கம் எத்தனை பேர் இருப்பார்கள்?' என்று கேட்கிறார். உடனே ரான்டி, 'ஒரு பக்கம் 11 பேர், இரண்டு பக்கமும் சேர்ந்து 22 பேர் விளையாடுகிறார்கள்' என்றார். ஆனால், பந்து ஒரு நேரத்தில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்டார் பயிற்சியாளர். 'ஒரு நேரத்தில் ஒரு ஆளிடம் மட்டுமே பந்து இருக்கிறது' என்று ரான்டி சொன்னதும், 'அதுதான் அடிப்படை. எத்தனை பேர் விளையாடினாலும் பந்து ஒரு நேரத்தில் ஒரு ஆளின்

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15

காலடியில்தான் இருக்கிறது. அதை அவர் என்ன செய்யப்போகிறார். மற்ற 21 பேர் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? என்பதுதான் உண்மையான சவால்!' என்கிறார்.

சந்தர்ப்பத்தை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம். எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதுதான் வாழ்வின் நிஜமான சவாலும். விளையாட்டின்போது பயிற்சியாளர், பலர் முன்னால் ரான்டியைக் கடுமையாகத் திட்டுகிறார். 'தவறு செய்கிறாய் முட்டாளே' என்று கத்துகிறார். ஆனால், அந்தக் கடுமையான சொற்கள் மட்டுமே விளையாட்டினைக் கற்றுக்கொள்ளச் செய்தது. விமர்சனங்கள் எப்போதுமே சூடானவைதான். அந்த வலிதான் நம்மை ஜெயிக்கத் தூண்டுகிறது.

விளையாட்டினைத் தவிர, வேறு எங்கும் இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வெளிப்படையாக இருக்காது. ஆகவே, நாம் விளையாட்டில் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது. நம் சிறு வயதுக் கனவுகள் நம் பள்ளி மைதானங்களில், வீட்டின் படுக்கை அறையில் உதிர்ந்துமறைந்து விட்டன. முதலில் அதை நாம் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டும். எது நம் மனதின் முதல் ஆசையாக இருந்தது? அதை நாம் அடைய முயற்சி செய்தோமா? ஏன் முயற்சிக்கவில்லை? படிப்பு, வேலை, குடும்பம் என்று மட்டுமே ஏன் சுருங்கிவிட்டோம்? நான் அறிந்தவரை வெற்றிபெற்ற பெரும்பான்மையினர் தன் பால்ய வயதின் கனவுகளை நிறைவேற்றியவர்கள் அல்லது அந்த இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். ரான்டி பாஷின் உரை நிறைய யோசிக்க வைக்கிறது. நிறைய கற்றுத்தருகிறது.

ஒரு ஜென் கதை நினைவுக்கு வருகிறது. புகழ்பெற்ற ஜப்பானியப் படைத் தளபதி தனது வீட்டுக்கு ஒரு துறவியை அழைத்திருந்தார். துறவி வீட்டுக்குள் நுழைந்தவுடன் தனது கலைப் பொருட்களின் சேமிப்பைக் காட்டி அதைப்பற்றி புகழ்ந்தார் தளபதி. துறவி அதை லட்சியம் செய்யவே இல்லை. முடிவில், துறவி அங்கிருந்த சீனக் களிமண்ணால் செய்த ஒரு கிண்ணத்தைத் தரையில் தூக்கிப்போட்டார். கண் முன்னே கிண்ணம் உடைந்து நொறுங்குவதைத் தாள முடியாமல் தளபதி துடித்துப் போய் கோபத்தில் கத்தினார்.

துறவி அமைதியாகச் சொன்னார். 'உன் கண் முன்னால் ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்குவதை உன் மனதால் தாங்க முடியவில்லை. ஆனால், உன் முன்னே எத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். எவ்வளவு உயிர்கள் கை கால் துண்டாகி வலியால் துடித்து இறந்துபோயின. அப்போது ஏன் உன் மனது துடிக்கவில்லை?' இந்தப் பதிலைக் கேட்ட மறு நிமிடம் தளபதிக்குத் தனது அறியாமையும் உலகின் இயல்பும் புரிந்துவிடவே, தானும் துறவியானார் என்கிறது ஜென் கதை.

எளிய உண்மைகள் எப்போதுமே மகத்துவமானவை. அவை வாழ்வில் இருந்து பெறப்படுகின்றன. அதைச் சொல்கிற மனிதன் சுயஅனுபவத்தில் இருந்து சாறு வடித்து அந்த நிஜத்தை நாம் பருகத் தருகிறான். ரான்டியின் சொற்களிலும் உண்மையின் வாசனையே வீசுகின்றன. ரான்டியின் சொற்கள் எந்த நிஜத்தை நமக்குப் புரியவைக்கிறதோ அதன் மற்றொரு வடிவமாக உள்ள திரைப்படம் 'Being There'. 1979-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம் அது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15

சாத்தியங்களை ஒரு மனிதன் எப்படி ஏற்படுத்திக்கொள்கிறான், நெருக்கடியிலும் ஒருவனால் எப்படி தன் இயல்பை மாற்றிக்கொள்ளாமல் வாழ முடியும்என் பதை எடுத்துச் சொல்லும் அற்புதமான படம் 'Being There'.. பீட்டர் செல்லர்ஸ் நடித்த கடைசிப் படம். ஜெர்சி குரோன்ஸ்கியின் நாவலை ஹால் ஆஸ்பி படமாக்கி இருந்தார்.

படத்தில் பீட்டர் செல்லர்ஸின் பெயர் சான்ஸ். 50 வயதுத் தோற்றம். அவர் ஒரு வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்கிறார். அந்த வீட்டைத் தவிர, வெளி உலகமே தெரியாது. ஒருநாள் வீட்டுக்காரர் இறந்துபோகவே, புதிதாக வீட்டை விலைக்கு வாங்கிய நபர் சான்ஸை வேலையைவிட்டுத் துரத்துகிறார்.

எங்கே போவது... என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் தடுமாறும் சான்ஸ் அவர் வைத்த செடிகள், மரங்களை இனி யார் பார்த்துக்கொள்வார்கள் என்று மிகவும் வருத்தப்படுகிறார். கையில் ஒரு குடை, ஒரு பெட்டியுடன் போக்கிடம் இல்லாமல் சாலையில் அலையும் சான்ஸ், சாலையோரம் உள்ள மரங்கள் ஏன் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கப்படாமல் கிடக்கின்றன என்று காவலர்களிடம் அக்கறையுடன் விசாரிக்கிறார். அவர்கள் அவ ரைப் பைத்தியம் என்று துரத்துகிறார்கள்.

சாலையைக் கடக்கும்போது ஒரு காரில் மாட்டி அவரது கால் அடிபடுகிறது. அந்த விபத்துக்குக் காரணமாக இருந்த பெண், அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போய் சிகிச்சை தருகிறாள். அவள் பென் ரான்ட் என்ற பெரும் கோடீஸ்வரரின் மனைவி. அவளது கணவருக்கு சான்ஸைப் பிடித்துப்போகிறது.

பென், அமெரிக்க ஜனாதிபதியின் நெருக்கமான நண்பர் மற்றும் ஆலோசகர். இவரைச் சந்தித்து ஆலோசனை கேட்கவருகிறார் அமெரிக்க ஜனாதிபதி. அவரிடம் பென் தன் நண்பர் என்று சான்ஸை அறிமுகப்படுத்துகிறார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது சான்ஸ் குறுக்கிட்டு, 'வேர் பாதிக்கப்படாத வரை மரத்தைப் பற்றிக் கவலை இல்லை' என்கிறார். ஜனாதிபதி உற்சாகமாகி அவர் என்ன சொல்கிறார் என்று தொடர்ந்து கேட்கிறார்.

'வெயில் காலம் வந்தால் நிச்சயம் மழைக் காலம் தொடர்ந்து வரும். நாம் மழைக்கு முன்பாக விதைத்துவிட வேண்டும். மழைக் காலம் தள்ளிப்போகலாம். ஆனால், தவறுவதே இல்லை!' என்று தனது விவசாய அறிவை ஆலோசனையாகச் சொல்கிறார். அந்த பதிலை அமெரிக்க ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்துக்கான மாற்று யோசனையாக ஏற்றுக்கொண்டு, உறுப்பினர் சபையில் சொல்லி

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15

பாராட்டினைப் பெறுகிறார். உடனே, யார் இந்த சான்ஸ் என்று பத்திரிகைகள் தேட ஆரம்பிக்கின்றன. தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் தனது தோட்டக் கலை அறிவில் இருந்தே சான்ஸ் பதில் சொல்கிறார். அந்தப் பதிலின் நுட்பம் எதற்கும் அது பொருந்துவது போல அமைகிறது. மிகுந்த புகழ்பெற்றுவிடுகிறார்.

எழுதப் படிக்கத் தெரியாத தன்னிடம் எந்தத் தனித் திறமையும் இல்லை. தன்னை ஏன் இப்படிப் புகழ்கிறார்கள் என்று சான்சுக்கு வியப்பாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அவர், 'ஏன் மக்கள் ஒருவரை ஒருவர் சார் என்று அழைகிறார்கள். அதற்குப் பதிலாக நண்பரே என்று அழைக்கலாமே?' என்று கேட்கிறார். இரண்டும் சொற்கள்தான் என்றபோதும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது?

சான்ஸ் தன் அனுபவத்தில் இருந்து கண்டறிந்த உண்மைகளை எந்த ஒளிவு மறைவும் அற்று வெளிப்படுத்துகிறார். அதைத் தேசமே கொண்டாடுகிறது. ஆனால், அவர் தனக்குக் கிடைக்கும் பணம், புகழ் யாவையும்விட்டு எப்போதும் போலவே ஒரு தோட்டக்காரராக ஒரு ஏரியை நோக்கிப் பயணம் செய்கிறார். முடிவில் ஒரு தேவதூதன் போல அந்த ஏரித் தண்ணீரின் மீது நடந்து போய்க்கொண்டு இருக்கிறார் சான்ஸ்.

தன்னுடைய செயல்களால் மட்டுமே மனிதர்கள் மேன்மைஅடைகிறார்கள். அதுதான் மனிதனை தேவதூதன் ஆக்குகிறது என்று படம் சொல்கிறது. வேலை போய்விட்டது, தெருவில் நிற்கிறோம் என்று ஒருபோதும் சான்ஸ் கலக்கம் அடையவில்லை. மரங்கள், செடிகள் எப்போதும் புகார் சொல்வது இல்லை. தான் தனிமைப்படுத்தப்பட்டதாக நினைப்பது இல்லை. மாறாக, போராட்டத்துடன் தன் இயல்பை இழக்காமல் இயற்கை அப்படியே இருக்கிறது என்று பெரியநம்பிக் கையை உருவாக்குகிறார்.

உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள். அதுதான் உங்கள் மகிழ்ச்சிக்கான ஆதார விதை என்று ரான்டியும் சான்சும் சொல்கிறார்கள். இதை மறக்கும்போதுதான் பிரச்னைகள் கிளைவிடத் துவங்குகின்றன. சந்தோஷம் என்பது இரண்டு துடுப்புகள்கொண்ட படகு. ஒன்று, கொடுப்பது. மற்றது, வாங்குவது. இரண்டையும் சமமாக நாம் பயன்படுத்த வேண்டும் என்பதே எளிய உண்மை!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15

டந்து தனி ஆளாக உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை நனவாக்கி வருகிறார் ஹார்ல் பிஸ்பி (Karl Bushby). 14 ஆண்டுகள், 36,000 மைல் தூரம், 25 நாடுகள், 6 பாலைவனங்கள், 7 பிரமாண்டமான மலைப் பகுதிகள். 4 பனிப்பிரதேசம் என்று நீளும் இந்த பயணத்தின் பெயர் கோலியாத். 1998-ம் ஆண்டு சிலி நாட்டின் புயந்தா அர்னாஸ் நகரில் இருந்து துவங்கிய பயணம், இன்றும் தொடர்கிறது. இன்னும் 3 ஆண்டுகள் கழித்து, 2012-ல் நடை பயணத்தை முடிப்பார். இங்கிலாந்தில் பிறந்த ஹார்ல் பிஸ்பி, ராணுவத்தில் பணிபுரிந்தவர். உலகப் பயணம் மேற்கொள்பவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு பயணம் மேற்கொள்வார்கள். 'எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. பயணம் செய்வது தனது சிறு வயதுக் கனவு. அதை நிறைவேற்றவே நடந்து உலகைச் சுற்றி வருகிறேன்' என்கிறார் ஹார்ல் பிஸ்பி!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15
- இன்னும் பரவும்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 15