வானமும் நிலவும் போல, நகமும் சதையும் போல என்று 1930 பாணியில் உதாரணம் சொல்வதைவிட 'டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், ஆர்.கே.லட்சுமணும் போல' என்று சொன்னால்தான் இன்றைக்குப் பொருத்தமாக இருக்கும். 35 வருடங்களாக அலுக்காமல் கார்ட்டூன்களை வரைந்து குவித்து வரும் லட்சுமண், ஓய்வு நேரத்தில் எழுத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார். அவரது சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், அனுபவங்கள் ஆகியவற்றின் அழகான தொகுப்பாக மலர்ந்திருக்கிறது 'மிபீறீமீ பிஷீuக்ஷீs'. நாவல் போல இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியாது. ஒவ்வொரு அயிட்டமும் ஒரு சுவை. எனவே, கல்யாண விருந்தை ருசி பார்ப்பது போல, மெதுவாகச் சுவைத்து, அசை போட வேண்டும்.
கணிதம், தத்துவம் இரண்டிலும் உச்ச கட்டப் புகழ் பெற்றிருந்த மேதை பெர்ட்ராண்ட் ரஸ்ஸலை லட்சுமண் சென்று சந்தித்தபோது, மணிக்கணக்கில் பேசினார் அவர். ''எந்த ஒரு கருத்தையும் எடுத்துச் சொல்வதற்குச் சிறுகதைதான் தகுந்த உத்தி'' என்ற ரஸ்ஸல், நிறைய உதாரணங்களைச் சொல்லி விளக்கினார். விடை பெறும்போது, ''இந்தியர்களான நீங்கள் கண்டுபிடித்தது நத்திங்! நத்திங்!'' என்றார். லட்சுமணுக்கு முகம் சிவந்து போயிற்று. ''இல்லை சார், அப்படிச் சொல்லி விட முடியாது. உதாரணமாக செஸ் ஆட்டம்...'' என்று லட்சு மண் தட்டுத் தடுமாறி ஏதோ சமாதானமாகக் கூற முயன்ற போது, கண்களில் குறும்பு கொப்பளிக்க, ''இந்தியர்கள் கண்டுபிடித்தது நத்திங்! அதா வது நத்திங் என்ற கோட்பாட் டையும் அதன் வரிவடிவமான பூஜ்யத்தையும் நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள். கணிதத்தின் மாபெரும் கண்டுபிடிப்பல்லவா அது!'' என்றாராம் அந்தப் பொல்லாத மனிதர்.
டேவிட் லோவின் மீது அபாரமான பக்தியும் காதலும் உண்டு லட்சுமணுக்கு. தமது அபிமான கார்ட்டூனிஸ்ட்டை ஒரு நாள் அதிகாலை டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில், அதுவும் தமக்காக அவர் காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது இனிமையான அதிர்ச்சி லட்சுமணுக்கு.
லோவுக்கு பம்பாய் நகரைச் சுற்றிக் காட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் லட்சுமண். ஒவ்வொரு இடமாகப் பெருமையுடன் அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார். ''மிஸ்டர் லோ! இந்தியா என்றால் சாதுக்களும் பாம்பாட்டிகளும்தான் என்று அயல்நாட்டினர் ரொம்பப் பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்களாவது இங்கு வித்தியாசமான காட்சிகளைப் பார்த்ததாக ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?'' என்று கேட்டு, மெரைன் டிரைவ் பகுதியைக் காண்பித்தார் லட்சுமண். |