மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன் - 22

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன் - 22

சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22
சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22
சிறிது வெளிச்சம்!
ஏன் இந்த இலவச புத்தி?
சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22
சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22

ருடத்துக்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு என ஏதாவது இயற்கையான மகிழ்விடம் ஒன்றுக்குச் சென்று நான்கைந்து நாட்கள் தங்கி வர வேண்டும் என்ற கனவு எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அந்தக் கனவு சில வேளை சாத்தியமாகிறது. பல நேரங்களில் பொய்த்துப் போய்விடுகிறது. ஆனால், யாவர் அடிமனதிலும் சுகமான காற்று, பசுமையான புல்வெளி, குளிரும் பனி என ஈரம் நிரம்பிய நாட்களைக் கொண்டாட வேண்டும் என்ற தேடுதல் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

நிறைவேறாத எளிய கனவுகள் வெறும் உதிர்ந்த நட்சத்திரங்கள்தானா? உண்மையில் நம் எளிய ஆசைகள் இன்றைய ஏமாற்றும் கூட்டத்தின் மூலவிதையாக உள்ளன. ஆசைகளைத் தூண்டிவிட்டுப் பணம் பறிப்பதற்கான ஏமாற்று நிறுவனங்கள், தனி நபர்கள் பெருகிவிட்டார்கள்.

எல்லாத் தவறுகளும் சிறிய ஆசையில்தான் துவங்குகின்றன போலும். என் நண்பர்களில் ஒருவர் தன் மனைவி, குழந்தைகளுடன் தீம்பார்க் ஒன்றுக்கு விடுமுறை நாள் ஒன்றில் சென்றிருந்தார். வாசலில் பூர்த்திசெய்து போடும்படியாகத் தந்த ஒரு கூப்பனில் சுயவிவரங்களை நிரப்பிப் போட்டுவிட்டு வந்தார். மறுநாள் ஒரு தொலைபேசி அழைப்பு.

அவர் பூர்த்தி செய்த இலவசக் கூப்பனுக்குப் பரிசு விழுந்திருப்பதாகவும், அதைப் பெறுவதற்காக அவரும் அவரது மனைவியும் ராயப்பேட்டையில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு வரும்படியாகவும், அவர்களுக்கு ஒரு கிச்சன் செட் மற்றும் ஒரு வார காலம் மலைவாசஸ்தலம் ஒன்றில் தங்குவதற்கான இலவச அனுமதிச் சீட்டு மற்றும் ஒருநாள் சென்னையில் கடற்கரை விடுதி ஒன்றில் தங்கிக்கொள்வதற்குச் சிறப்பு அனுமதிச் சீட்டு தர உள்ளதாக அந்த அழைப்பு சொல்லியது.

இரவெல்லாம் அவரும் மனைவி, குழந்தைகளும் தாங்கள் மேற்கொள்ளப்போகிற உல்லாசப் பயணம் குறித்து மகிழ்ச்சியோடு இருந்தார்கள். அதிர்ஷ்டம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதாகச் சந்தோஷம்கொண்டார்கள்.

மறுநாள் அதே தொலைபேசி அழைப்பு. கணவன் மனைவி இருவரும் கட்டாயம் ஒன்று சேர்ந்து வர வேண்டும். இந்தப் பரிசு முற்றிலும் இலவசமானது. தவறவிட வேண்டாம் என்று அன்பாகச் சொன்னாள் ஒரு பெண். சந்திப்புக்கான நேரம் குறிக்கப்பட்டது. சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் அந்த அலுவலகத்துக்குச் சென்றார்கள். அது ஒரு தனியார் நிறுவனம். தாங்கள் இந்தியா முழுமையாக நவீன வசதிகொண்ட ரிசார்ட் வைத்துள்ளதாகவும் அதில் எதில் வேண்டுமானாலும் அவர்கள் தங்கிக்கொள்ளலாம் என்றும், அதைப் பற்றிய ஒரு விளம்பரப் படம் ஒன்றினை அவர்கள் காண வேண்டும் என காத்திருக்கச் சொன்னார்கள்.

ஒரு மணி நேரம் அவர்கள் காத்திருந்த பிறகு யாரும் அவர்களைக் கவனிக்கவேஇல்லை. முடிவில் ஓர் ஆள் அவர்களை அழைத்துப்போய் எந்தெந்த நகரங்களில் அவர்களின் தங்கும் இடங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கத் துவங்கினான்.

அவர்கள் அதில் தாங்கள் எங்கே வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாமா என்று கேட்டபோது, அது உங்கள் விருப்பம் என்று சொல்லி, ஒரு விண்ணப்பத்தை எடுத்துவந்து அதைப் பூர்த்தி செய்யும்படியாகச் சொன்னான்.

சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22

ஆசையாகப் பூர்த்திசெய்து விண்ணப்பத்தைத் தந்த பிறகு, 'இந்த சேவையைப் பயன்படுத்த எங்களது கிளப்பில் உறுப்பினராக வேண்டும். அதற்கு 50 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். இன்று செலுத்தினால் 30 ஆயிரம் மட்டுமே என்று சொல்லி, பணத்தை எப்படி செலுத்தப்போகிறீர்கள்' என்று கேட்டான் அந்த நிறுவன அதிகாரி.

நண்பர் திகைப்புடன் தான் அவ்வளவு பணம் கொண்டுவரவில்லை என்றதும், 'உங்கள் கடன் அட்டையைப் பயன்படுத்திச் செலுத்துங்கள்' என்று வற்புறுத்த ஆரம்பித்தான். 'எனக்கு இதில் விருப்பம் இல்லை' என்று நண்பர் முகம் சுழித்தவுடன் நிறுவன ஆள் பலத்த குரலில், 'ஏன்டா! ஓசியில் ஊர் சுத்திக்காட்ட நாங்க என்ன லூஸா?' என்று கொச்சையாகப் பேசி, குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் கட்டி முன்பதிவாவது செய்யுங்கள் என்று திட்டினார். அந்த அவமானத்தை நண்பரால் தாங்க முடிய வில்லை. தாங்கள் கிளம்புவதாகச் சொன்னபோது,

சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22

அவர்களை வெளியேவிடாமல் தடுத்த இருவர், பணம் கட்டாமல் வெளியே போக முடியாது என்று சொல்லி, அவர்கள் கையில் இருந்த 1,800 ரூபாயைப் பறித்துக்கொண்டார்கள். அதற்கு ரசீது கொடுங்கள் என்று கேட்டதற்கு, அதெல்லாம் வீடு தேடி வரும் என்றதோடு, 'போய்த் தொலையுங்கள்' என்று ஆங்கிலத்தில் கத்தியபடியே அந்த ஆள் அவர்களை வெளியேவிட்டிருக்கிறான்.

பயம், அவமானம், தங்கள் கனவு சிதறிப்போனதன் வலி யாவும் ஒன்று சேர, அவர்கள் வெளியே வரும்போது, இன்னொரு ஜோடி தங்களின் விடுமுறைக் கனவுகளுடன் வரவேற்பறையில் உட்கார்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.

நடுக்கத்துடன் வீடு வந்து சேர்ந்த நண்பர் இரவுஎல்லாம் அவமதிப்பின் வலியில் புரண்டுகொண்டேஇருந்தார். இணையத்தில் அந்த நிறுவனம்பற்றித் தேடினார். அங்கே அவரைப் போல ஏமாந்துபோன வர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பதை அறிந்தார். அவர்களில் பலர் இதை வெளிப்படை யான புகாராக ஏமாந்த கதையை எழுதியிருந்தார்கள். இலவச மோசடி பற்றி வாசிக்க வாசிக்க... அந்த வலி அதிகமானது. மறுநாள் அதே நிறுவனத்தில் இருந்து போன். மிச்சப் பணம் எப்போது கிடைக் கும் என்ற மிரட்டல். வெளியே பகிர்ந்துகொள்ள முடியாத அந்தக் காயம் அவரது அன்றாட வாழ்க்கையைச் சில வாரங்களுக்கு நடுக்கம்கொள்ளச் செய்துவிட்டது. பின்பு தானாக அந்தத் தொலைபேசி அழைப்பு நின்றுபோனது.

இப்படி ஏமாந்த கதைகள் யாவர் வீட்டிலும் இருக்கின்றன. ஆனால், ஏமாந்தவர்களில் ஒருவர்கூட அதைத் தடுக்க முன்வரவும் இல்லை. அடுத்து ஏமாறாமலும் இல்லை. நகரம் ஒரு பக்கம் நம்பிக்கையின் வெளிச்சமாகத் தெரிவது போலவே மறுபக்கம் ஏமாற்றின் இருளாகவும் விரிந்து இருக்கிறது.

ஷாப்பிங் மால், தீம்பார்க், சினிமா தியேட்டர், உணவகம் என்று பல இடங்களிலும் இலவசப் பரிசு பற்றிய விண்ணப்பங்களைக் கொட்டி இருக்கிறார்கள். அதை மிகச் சிரத்தையோடு பூர்த்திசெய்து போடும் மக்களில் பெரும்பான்மையோர் இது போன்று ஏமாந்து, தங்களின் கைப்பொருளைப் பறிகொடுத்து, வசையும் அவமானமும்பட்டுத் திரும்பி இருக் கிறார்கள். இவர்களில் ஒருவர்கூட இது வரை வெளிப்படையாகப் புகார் செய்ய முன்வரவில்லை. காரணம், தங்கள்பட்ட அவமானம் வெளியே தெரிந்துவிடுமே.

ஏமாற்றுபவர்கள் எளிய மனிதர்களையே குறிவைக்கிறார்கள். மனைவி, குழந்தைகளுடன் கு¬றவான செலவில் சில நாட்கள் தனக்குப் பிடித்த உல்லாச ஸ்தலங்களில் தங்க நடுத்தரவர்க்க மனிதன் ஆசைப்படுகிறான். அதைச் சாத்தியப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் போகவே, எப்படியாவது இது நிறைவேறுமா என்று ஏக்கம் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த ஆதங்கத்தை, நிரா சையை இதுபோன்ற கொள்ளை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.

நடந்ததை நினைக்கும்போது படித்து உயர் பதவி ஒன்றில் வேலை செய்யும் என் நண்பர் மீதுதான் கோபமாக இருந்தது. நல்ல வேலையில் உள்ளவர்கள் கூடப் பகுத்தறிவை மறந்து இலவசமாகக் கிடைக்கிறது என்றவுடன் எதையும் பெற்றுக்கொள்ள ஏன் துடிக்கிறார்கள். இதைப்பற்றி ஊடகங்கள், காவல் துறை எவ்வளவு விழிப்பு உணர்வு தந்தபோதும் ஏன் அதைப் பொருட்படுத்துவதே இல்லை.

உண்மையில், பொதுமக்கள் மனதில் இலவசத்தின் மீது அதீத விருப்பம் கொப்பளித்துக்கொண்டு இருக்கிறது. சாலையில் நின்றபடியே போகிற வருகிற ஒவ்வொருவருக்கும் 10 ரூபாய் பணம் கொடுங்கள். எதற்கு என்று கேட்காமல் வாங்கிக்கொண்டு போய் விடுவார்கள். இதே ஆட்களில் ஒருவரை நிறுத்தி '10 ரூபாய் பணம் வேண்டும்' என்று கேளுங்கள். 'ஏன் கை, கால் இல்லையா, உழைத்துச் சாப்பிடக் கூடாதா' என்று அறிவுரை சொல்வார்கள். நீ இலவ சமாக 10 ரூபாய் வாங்கியபோது எங்கே போனது உன் கை, கால்கள். ஏன் இந்த இலவசப் புத்தி?

அடிப்படை வசதியற்ற ஏழை எளியவர்கள் இந்த ஏமாற்றுகளில் அதிகம் பலியாவது இல்லை. இலவசமாக ஒரு பாக்கெட் ரவை கிடைக்கிறது என்று 1,000 ரூபாய்க்குப் பலசரக்கு வாங்குவது இல்லை. ஹாலிடே ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் குளிப்பது பற்றிக் கனவு காண்பது இல்லை. அவர்கள் பசித்த வயிறோடு இருந்தபோதும் இலவசக் கனவுகளுக்கு ஆசைப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். நடுத்தர வர்க்க மனிதன்தான் எதையும் இலவசமாகப் பெறத் தயாராக இருக்கிறான். அதற்கான வரிசையில் நிற்கிறான்... போராடுகிறான்... அவமானம் அடை கிறான். அதிலும் அறிவைப் பயன்படுத்தி நடை பெறும் மோசடிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாமல் பெருகிவிட்டிருக்கிறது.

'Not a Penny More, Not a Penny Less' என்றொரு படம். ஜெஃப்ரி ஆர்ச்சரின் நாவலை அடிப்படையாகக்கொண்டது. ஏமாந்துபோனவர்களின் வலியைப் பிரதிபலிக்கிறது. ஹார்வி பங்குச் சந்தை விற்பனையைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றுவதில் கில்லாடி. அவன் வலையில் விழாத ஆட்களே இல்லை. ஒரு போலி நிறுவனத்தின் பேரில் அவன் பங்குச் சான்றிதழ்களை விற்பனை செய்து ஏமாற்றுகிறான். இதில் நான்கு பேர் ஏமாந்துபோயிருக்கிறார்கள். ஒருவர், ஸ்டீபன் என்ற பேராசிரியர். மற்றவர், ராபின் என்ற மருத்துவர். மூன்றாவது, ஜீன் பியாரி என்ற கலைப் பொருள் விற்பனையாளர். நான்காவது, ஜேம்ஸ். பரம்பரைப் பணக்காரன்.

சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இவர்கள் மனம் உடைந்துபோகிறார்கள். படித்த அறிவாளி என்று கருதப்படும் தங்களைப் போன்றவர்களை ஓர் ஆள் எளிதாக ஏமாற்றிவிட்டதை அப்படியே விடக் கூடாது. அவனிடம் எவ்வளவு பணம் ஏமாந்தோமோ, அதே பணத்தை அவனிடம் இருந்து ஏமாற்றிப் பறிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

அது எளிது இல்லை என்று அவர்களுக்குத் தெரிகிறது. ஆனால், ஏமாற்றுகிறவன் தங்களை நம்ப வைத்து ஏமாற்றியது போலவே அவனையும் தாங் கள் நால்வரும் கூட்டாகச் சேர்ந்து நம்பவைத்து ஏமாற்றிப் பணம் பறிப்பது என்று முடிவு செய்கிறார் கள்.

இதற்காக அந்த ஆளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அவனை நம்பவைக்க நாடகம் ஆடி, அவனிடம் இருந்து ஒவ்வொருவருக்கும் உரிய பணத்தை மீட்கிறார்கள். ஏமாற்றுக்காரனை ஏமாற்றும் புத்திசாலிகளின் கதை சினிமாவில் சாத்தியமாகக்கூடும். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஏமாந்தவர்கள் அதில் ஒரு ரூபாயைக்கூடத் திரும்பப் பெறுவது இல்லை. ஏமாற்றியவன் தனி மனிதன் அல்ல. அவன் ஒரு சங்கிலித் தொடர். அந்தச்சங்கிலியின் கண்ணியில் யார் யாரோ இணைந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நமக்குப் பரிச்சயமானவராக, நண்பராகக்கூட இருக்கக்கூடும்.

பரிசு என்பது நாம் விரும்பி மற்றவர்களுக்கு அளிப்பது. அன்பின் வெளிப்பாடு. பிறந்த நாள், திருமணம் என்று நிகழ்வுகளில் மட்டுமே நாம் பரிசளிக்கப் பழகியிருக்கிறோம். நமக்குப் பரிசளிக்கக் காரணங்கள் தேவையாக இருக்கின்றன. நிஜத்தில் பரிசு பெறுவதும் தருவதும் உன்னதமான தருணம். வாங்கிக்கொள்வதைவிடவும் பரிசளிப்பது பெரிய சந்தோஷம். பரிசு கிடைத்திருக்கிறது என்பதை மலிவான விளம்பர யுக்தியாக மாற்றியது வணிகச் சந்தை. அதன் அதீத வளர்ச்சிதான் இன்றைய ஏமாற்று வித்தைகள். முடிவற்ற ஏமாற்றத்தின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதில் நாம் இருக்கிறோமா என்பதை முடிவு செய்வது நம் கையில்தான் இருக்கிறது!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22

முதுமை பலருக்கும் ஒடுங்கிப்போகும் வயதாக இருக்கும் நிலையில், தனது 66-வது வயதில் சைக்கிளில் புத்தகங்களை வைத்துக்கொண்டு கிராமம் கிராம மாகச் சென்று விற்பனை செய்து வருகிறார், ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த நரசிங்கா ராவ். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், புத்தகங்களின் மீதான ஆர்வத்தில் அதை வீடு வீடாகக் கொண்டுபோய் விற்கிறார். 'கிராமத்தைத் தேடி வரும் ஒரே புத்தக விற்பனையாளர் தான் மட்டுமே' என்று சொல்லும் நரசிங்கா ராவ், யாருக்காவது ஏதாவது புத்தகம் தேவை என்றால், அதை வாங்கி வந்து தருபவராகவும் இருக்கிறார்.

'சோப்பு விற்பதற்குக்கூட படித்த இளைஞர்கள் வீடு வீடாகத் தேடி வரும்போது, புத்தகம் விற்பதற்கு ஏன் பலரும் வர மறுக்கிறார்கள் என்பதுதான் எனது ஒரே ஆதங்கம்' என்கிறார் நரசிங்கா ராவ். புத்தகங்கள் விற்பது வெறும் வேலை மட்டுமில்லை... அது சேவை என்றபடியே தினமும் 50 மைல் தூரம் சைக்கிளில் சுற்றிப் புத்தக விற்பனை செய்கிறார் இந்தச் சாதனையாளர்!

 
சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - ஏன் இந்த இலவச புத்தி? : எஸ்.ராமகிருஷ்ணன்  - 22