100-லிருந்து 500 வரையில் தொகை எகிறும். சமயங்களில் 1,000 ரூபாயைக் கூடத் தொடும். கோயம்புத்தூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, ஈரோடு என பல இடங்களில் இந்த சூதாட்டம் ஃபேமஸ். இந்த ஆட்டத்தின் விதிகள் அப்படி ஒன்றும் கடுமையாக இருக்காது. ஒருவரே இரண்டு எண்களை எடுத்துக்கொள்ளலாம். கையில் பைசா இல்லையா. மற்றவர்களோடு அணி சேரலாம். அணி மாறலாம். மாசக் கடைசியா... பந்தயத் தொகை 5 ரூபாய் வரை இறங்கும். மழை பெய்யவில்லை, விவசாயம் நொடித்துவிட்டது. கூலி வேலைக்குக் கூட கூப்பிட ஆள் இல்லையா... 1 ரூபாயில் இருந்து ஆட்டம் ஆரம்பிக்கும். காலை 10 மணிக்கு ஆரம்பித்தால், சாயங்காலம் 6 மணிக்கு ஆட்டம் முடியும். அதற்கடுத்து இருட்டில் எண்கள் தெரியாதே!
நெடுஞ்சாலை அருகே இருக்கும் கிராமங்களில் இந்த சூதாட்டம் நேர்மையாக நடக்கும். கொஞ்சம் ஒதுக்குப்புறமாக உள்ள கிராமங்களில் சில கில்லாடிகள் தில்லாலங்கடி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் கிராமத்துச் சாலைகளில் குறைந்த வண்டிகளே வருவதால் ரெகுலராக 'என்னென்ன வண்டிகள் வரும், அதன் பதிவு எண் என்ன, அது எத்தனை மணிக்கு வரும்?' என்று ஒரு டேட்டா பேஸைப் பக்காவாக ரெடி பண்ணுவார்கள். நேரத்துக்கு ஏற்ப எந்த எண் அதிகம் ரிப்பீட் ஆகுமோ, அதையே சூது எண்ணாகத் தேர்ந்தெடுப்பார்கள். அப்புறம் என்ன... அம்புட்டு பணத்தையும் அள்ள வேண்டியதுதானே.
இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்!
|