மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன் - 21

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன் - 21

 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21
 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21
சிறிது வெளிச்சம்!
கற்களை வாசித்திருக்கிறீர்களா?
 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21
 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21

முதுகில் உள்ள மச்சத்தைப் போல, நம்கூடவே இருக்கிற, ஆனால், கவனிக்கப்படாமல் போகிற விஷயங்கள் நிறைய உலகில் இருக்கின்றன. உலகில் மிகப் பெரிய தண்டனை புறக்கணிப்புதான். அதைப் போல வலி தருவது வேறில்லை.

நம்மை அறியாமலே நாம் எவ்வளவோ விஷயங்களைத் தவறவிட்டு இருக்கிறோம். அல்லது நாம் கண்டுகொள்ளாமல் போனதாலே பல விஷயங் கள் காலத்தில் அடையாளமற்றுப் போயிருக்கின்றன.

'Stone reader' என்ற டாகுமென்டரி படம் ஒன்றினைப் பார்த்தேன். 1972-ம் வருடம் அமெரிக்காவில் மார்க் மாஸ்கோவிட்ச் என்ற இளைஞன் Dow Mossman என்ற எழுத்தாளரின் The Stone of Summer என்ற நாவலைப்பற்றிக் கேள்விப்பட்டு, படிப்பதற்காக வாங்குகிறான். ஏதோ காரணத்தால் அதை உடனடியாகப் படிக்க முடியவில்லை. தனது புத்தக அலமாரியில் தூக்கிப் போட்டுவிடுகிறான்.

வாழ்க்கை நெருக்கடி, குடும்பப் பிரச்னைகள் என்று அலைந்து திரிந்ததில் அந்த நாவலை மறந்துவிடுகிறான். வருடங்கள் கடக்கின்றன. படிக்கப்படாமலே அந்த நாவல் அவனது அலமாரியில் கிடக்கிறது. 30 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தற்செயலாக அந்த நாவல் கண்ணில் படுகிறது. ஆசையாக வாங்கிய நாவலை இத்தனை வருடங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்று உடனடியாகப் படிக்கத் துவங்குகிறான்.

இரண்டு மூன்று நாட்களில் அந்த நாவலைப் படித்து முடிக்கிறான். அற்புதமான நாவல். இப்படி ஒரு நாவலை இத்தனை வருடங்களாகப் படிக்காமல் இருந்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி உருவாகிறது. டவ் மோஸ்மென் வேறு என்ன எழுதி இருக்கிறார் என்று தேடிப் பார்க்கிறான். எதுவுமே கிடைக்கவில்லை. அவரைத் தேடிச் சென்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்கிறான்.

அவர்கள் டவ் மோஸ்மென் இந்த ஒரே ஒரு நாவலைத்தான் எழுதினார். அதன் பிறகு எதையும் எழுதவே இல்லை. எழுத்துலகைவிட்டே விலகிப் போய்விட்டார் என்கிறார்கள். அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரிக்கிறான். அவரது முகவரியோ, அவரைப்பற்றிய விவரங்களோ எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

தனது ஆதர்ச எழுத்தாளரைத் தானே தேடிக் கண்டு பிடிப்பது என்று கிளம்புகிறான். இதற்காக அந்த நாவலின் எடிட்டரை, அட்டைப் படம் வரைந்த ஓவியரை, பத்திரிகையில் விமர்சனம் எழுதியவரை என எல்லோரையும் பார்த்து விவரம் கேட்கிறான். ஆனால், ஒருவருக்கும் மோஸ்மென் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. காலம் அவர் பெயரை முழுமையாக மறந்து போயிருந்தது. ஆனால், விடாப்பிடியாக மாஸ்கோவிட்ச் தேடி அலைகிறான்.

 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21

இந்தப் பயணம் ஒரு வகையில் தனது 30 வருடக் கடந்த காலத்தை நோக்கித் திரும்பச் செல்வது போன்று இருக்கிறது. ஓர் இடத்தில் தன் அம்மாவுக்கு போன் செய்து, தான் அந்த நாவலை விலைக்கு வாங்கிய வயதில் எப்படி இருந்தேன். என்ன புத்தகங்கள் படித்தேன். என்ன மன நிலையில் இருந்தேன் என்று விசாரிக்கிறான். தான் ஒருவேளை அந்த நாவலாசிரியரைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன பேசுவது என்று ஆலோசனை கேட்கிறான்.

அந்த நாவல் அவனை ஊர் ஊராக இழுத்துக்கொண்டு அலைகிறது. டவ் மோஸ்மென் பற்றி ஒருவரும் அறிந்திருக்க வில்லை. கிழிந்துபோன பக்கங்களுடன் உள்ள அந்த நாவலைக் கையில் எடுத்த படியே பயணிக்கும் வழியில், ஒரு சிறிய தகவல் கிடைக்கிறது. அதைப் பற்றிக் கொண்டு பயணம் செய்து, டவ் மோஸ் மெனைச் சந்திக்கிறான்.

குடிகாரராக, மனச்சோர்வுற்றுத் தனிமையில் வாழும் முதியவராக அவரைப் பார்க்கும்போது, இவரா அந்த உன்னத நாவலை எழுதியவர் என்று தோன்றுகிறது. அது போலவே டவ் மோஸ்மெனுக்கு தான் 30 வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு நாவலைப் படித்துவிட்டு, அதற்காகத் தன்னை ஒரு மனிதன் அலைந்து திரிந்து தேடி வந்திருப்பதை உணர்ச்சிபூர்வமாக வரவேற் கிறார்.

தன் விருப்பமான எழுத்தாளரைச் சந்தித்த மகிழ்ச்சியில், அவர் ஏன் அந்த ஒரு நாவலோடு எழுதாமலே போனார் என்று கேட்கிறான் மாஸ்கோவிட்ச். அவர் பதில் சொல்லவில்லை. மௌனமாக இருக்கிறார். எது அவரை இப்படி ஆக்கியது? குடும்பமா... அகப்பிரச்னைகளா அல்லது எதிர்வினையா, பாராட்டுகளே இல்லாத புறக் கணிப்பா? காரணம் தெரியவில்லை. ஒரு சிறந்த நாவலை எழுதியபோதும் மோஸ்மென் ஒருவர் நினைவில்கூட இல்லாமல், வாழும் நாளிலே மறக்கப்பட்டவராக இருக்கிறாரே என்று வேதனைப்படுகிறான்.

டவ் மோஸ்மென் அதைப்பற்றி பெரிதாகக் கலக்கமடையவே இல்லை. அவர் தனக்குப் பிடித்தமான ஷேக்ஸ்பியரைப்பற்றி, தனக்கு விருப்பமான மார்க் ட்வைன் பற்றிப் பேசுகிறார். தன்னிடம் இருந்து எழுத்தாளன் என்ற அடையாளம் மறைந்துபோய்விட்டது என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்.

காலம் மறந்த ஒரு கலைஞன் மறுபடி கண்டுபிடிக்கப்படுகிறான். மோஸ்மெனைப் பற்றிய இந்தத் தேடுதலை முழுமையான ஓர் ஆவணப்படமாகச் செய்திருக்கிறார் மாஸ்கோவிட்ச். அதுதான் ஸ்டோன் ரீடர்.

 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21

துப்பறியும் படங்களைப் பார்ப்பது போன்று அத்தனை ஈர்ப்பு. எங்கே டவ் மோஸ்மெனைச் சந்திக்க முடியாமலே இந்தப் பயணம் முடிந்துவிடுமோ என்ற ஆதங்கம் பார்ப்பவர் மனதில் உருவாகிறது. இருவரும் சந்திக்கிற நிமிடத்தில் பார்வையாளன் தானே அந்த எழுத்தாளரைக் கண்டுபிடித்தது போல உணர்கிறான். சிறந்த டாகுமென்டரிக்கான உலகத் திரைப்பட விழா விருதுகள் பல பெற்றுள்ள இந்த ஆவணப் படம் நிறையக் கேள்விகளை எழுப்புகிறது.

ஏன் காரணம் இல்லாமல் ஒன்றைப் புறக்கணிக்கிறோம்? நம்மைச் சுற்றிய கலைஞர்களை, கலைகளைக் கொண்டாட ஏன் மறந்துபோனோம்? நமது புத்தக அலமாரியில் உள்ள படிக்கப்படாத புத்தகத்தில் ஒன்று நம் சிந்தனையை மாற்றி விடக்கூடியது என்பதை எதற்காக மறந்துபோகிறோம்? பாராட்டும், அங்கீகாரமும், தொடர்ந்த அரவணைப்பும் இல்லாத கலைஞன் ஒடுங்கிப்போய்விடுவான். அல்லது கலையைவிட்டு விலகிப் போய்விடுவான் என்ற உண்மையை ஏன் நாம் புரிந்துகொள்வதே இல்லை?

இந்த டாகுமென்டரி என்னை மிகவும் பாதித்தது. தமிழில் 'இடைவெளி' என்ற சிறந்த நாவலை எழுதிய சம்பத் நினைவுக்கு வந்தார். அவர் ஒரே ஒரு நாவல் மட்டுமே எழுதினார். கூடுதலாக ஐந்தாறு சிறுகதைகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால், அது புத்தகமாக வரவில்லை. இந்த ஒரு நாவலின் வழியே சம்பத் என்றென்றும் தமிழ் நாவல் உலகில் முக்கிய இடம் பெற்றிருப்பார். சம்பத்தை இன்றுப் படிக்கத் துவங்கும் ஒரு வாசகன், நிச்சயம் மாஸ்கோவிட்ச் தேடிச் சென்றது போன்று அலையக்கூடும். அவனுக்கு மிச்சமாகக் கிடைப்பது 40 வயதுக்குள்ளாகவே இறந்துபோய்விட்ட சம்பத்தின் நினைவு மட்டுமே.

கவனமின்மையும் புறக்கணிப்பும் இரண்டும் சகோதரர்கள் போலும், இரண்டும் ஒன்றாகவே வருகின்றன. அல்லது ஒருவர் வந்தவுடன் மற்றவர் இணைந்துகொண்டுவிடுகிறார்.

சிறு வயதில் கிராமக் கோயிலில் நாகஸ்வரம் வாசிப்பவர்களின் மயக்கும் இசையை மெய்ம்மறந்து கேட்டபடியே நிற்பேன். காற்றெங்கும் நாகஸ்வரத்தின் நறுமணம் பரவிக்கொண்டு இருக்கும். உலகின் உன்னதமான இசை அது. மேளமும் நாகஸ்வரமும் இணைந்து கோயில் சிலைகளைக்கூட கைகால் வீசித் துடிக்கச் செய்யும்படியாக இருக்கும். வசீகரமான சர்ப்பம் ஒன்று நெளிந்து உடல் அழகைக் காட்டியபடியே, துடிக்கும் நாவுடன் ஒளிரும் கண்களுமாக வேகவேகமாகக் கடந்து செல்வது போன்றிருக்கும், அந்த இசையின் தன்மை.

மிக நன்றாக வாசிக்கிறார்கள் என்று பாராட்டிச் சொல்ல வேண்டும் என்று மனதில் தோன்றும். ஆனால், சொன்னதே இல்லை. அவர்களின் பெயர்களைக்கூட அறிந்துகொள்ள ஆர்வப்பட்டது இல்லை. என்ன காரணம்? யோசிக்கையில் அவமானமாக இருக்கிறது.

அவர்கள் பிரபலமானவர்கள் இல்லை. அவர்களின் இசை குறுந்தகடாகவோ, இசைத்தட்டாகவோ வெளியானது இல்லை. அருகாமைக் கிராமங்களைத் தாண்டி அவர்கள் பெரிய கச்சேரிகளுக்குச் சென்று தங்கள் இசைத் திறமையைக் காட்டி பாராட்டுகள் பெற்றதில்லை. துளசிச் செடிகளைப் போல அவர்கள் கோயில் மாடத்துக்குள்ளாகவே ஒடுங்கி, தங்கள் வாழ்க்கையின் பாதியைக் கடந்து போய்விட்டார்கள்.

காலம் அவர்களை எப்போதுமே புறக்கணிப்பின் பிடிக்குள்ளாகவே வைத்திருந்தது. தெரு அதிர சாமி தேரில் உலா வரும்போது, அவர்கள் மல்லாரி வாசித்தபடியே முன்னால் வருகிறார்கள். வீதியெங்கும் மலர்களை வீசி எறிவது போன்று இசை உதிர்கிறது. ஆயிரம் கைகள் சாமியைக் கும்பிடுகின்றன. ஒரு கரம்கூட வாசிப்பவர்களின் திறமைக்குக் கை தட்டுவதில்லை. அன்போடு ஒரு வார்த்தை சொல்வதில்லை. கடவுளின் மௌனத்தைவிடவும் மனிதர்களின் மௌனம் கொடுமையானது.

 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21

கோயில் மேளம் வாசிக்கும் கலைஞர் இறந்துபோன நாளில் அது ஊரின் துக்கமாக இருக்கவில்லை. 10 பேர்களே சாவு வீட்டின் முன் நின்றிருந்தார்கள். பதின்வயதில் இருந்து பெத்த பிள்ளையைப் போல அவர் தூக்கி அலைந்த மேளம் மகா மௌனத்துடன் ஓரமாக இருந்தது.

அழுது ஓலமிடும் மேளக்காரரின் மனைவி, 'ஒரு பொழுது எங்களுக்குனு நீங்க வாசிச்சதேயில்லையே... கோயிலு கோயிலுன்னுதானே இருந்தீக. இப்போ அந்தச் சாமி எங்களைக் கைவிட்ருச்சே' என்று புலம்பினாள்.

உலகின் உன்னத இசை யாவும் முடிவில் காற்றில் கலந்துவிடுவதுபோல, அந்தக் கிராமத்து இசைக் கலைஞனின் முடிவும் அமைந்துவிட்டிருந்தது. இது யாரோ ஒருவருக்கு எங்கோ நடந்த ஒன்றல்ல. தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கிராமங்களில் கோயில் சார்ந்து வாழ்ந்து மடிந்த அத்தனை இசைக் கலைஞர்களுக்கும் பொதுவானது.

அவர்களில் எவரும் அதை உலகின் மீதான வெறுப்பாக மாற்றவே இல்லை. தனக்குப் பெயர் கிடைக்கவில்லையே, தன்னை எவரும் பாராட்டவில்லையே என்று ஒருவர்கூட இசையைப் புறக்கணிக்கவில்லை. தன்னடக்கமும், போதுமென்ற மனதும்கொண்டு இருந்ததால்தான் புறக்கணிக்கப்பட்டார்களோ என்னவோ.

காலம் கருணையற்றது. அது கண் முன்னே உன்னதங்களைக் குப்பையில் வீசி எறிகிறது. கண்டு பிடிக்கவும், மீட்டு எடுக்கவும், உரியவற்றுக்கு மீண்டும் கௌரவம் தரவும் மாஸ்கோவிட்ச் போல ஒருவன் அலைந்துகொண்டு இருப்பான். அந்த நம்பிக்கைதான் கலைஞர்களை என்றைக்கும் செயல்படவைக்கிறது!

பார்வை வெளிச்சம்

பார்வை அற்றவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவனான சாய்கிருஷ்ணா அரிய சாதனைகள் செய்து வருகிறான். சமீபத்தில் இந்திய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்று ஸ்வீடனில் நடைபெற்ற பார்வையற்றவர்களுக்கான உலக ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள இருக்கிறான். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரிய சாய்கிருஷ்ணா, தனது பயணம் மற்றும் அன்றாடப் பயிற்சிகளுக்குத் தேவையான பொருளாதார உதவிகள் இன்றி மிகுந்த சிரமத்தில் இருக்கிறான். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவனது திறமை, உலகின் சாதனையாக மாற உதவ வேண்டியது நம் அனைவரின் கடமை!

 
 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21
- இன்னும் பரவும்
 சிறிது வெளிச்சம்! - கற்களை வாசித்திருக்கிறீர்களா?: எஸ்.ராமகிருஷ்ணன்  - 21