விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்

ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்

ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்
காஷ்யபன், ஓவியம்: ஜெ.பி, படம்: பொன்.காசிராஜன்
ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்
ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்
மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்
ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்
ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்

மிருகண்டு மகரிஷி தம் மனைவி மருத்து வதியுடன், எளியதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நிறைவான வாழ்க்கைதான் எனினும், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்ற குறை இருந்தது. ரிஷியும் ரிஷிபத்தினியும் ரிஷபவாகனனிடம் குழந்தை வரம் அருளுமாறு யாசித்தனர்.

ஒருநாள் இரவு, முனிவரின் கனவில் முக்கண்ணன் எழுந்தருளினான். 'நூறு ஆண்டுகள் வாழக்கூடிய, ஆனால் மந்த புத்தியுள்ள மைந்தன் வேண்டுமா? அல்லது, பதினாறு ஆண்டுகளே ஆயுள்கொண்ட ஞானக் குழந்தை வேண்டுமா?' என்று கேட்டார்.

முனிவர் ஞானக் குழந்தையே வேண்டும் என்று உரைக்க, அவ்வாறே அருளிய ஈசன் மறைந்தார்.

மருத்துவதி கருவுற்றாள். உரிய காலத்தில் ஆண் மகவை ஈன்றெடுத்தாள். மார்க்கண்டேயன் என்னும் பெயரோடு, குழந்தை வளர்ந்தான். அழகில் அர்ச் சுனன்; ஒழுக்கத்தில் ஸ்ரீராமன்; குறும்புகளில் பிருந்தாவனத்து நந்தகுமாரன்; அறிவிலோ அந்த ஆதிசங்கரனே!

மார்க்கண்டேயனுக்குப் பதினைந்து வயது பூர்த்தி ஆகியது. தமது குலக்கொழுந்து பதினாறாவது ஆண்டு நிறைவன்று ஆயுள் துறக்க நேரிடுமே என மனம் வருந்திக் கண்ணீர் சிந்தினார் முனிவர். விஷயம் அறிந்து, மருத்துவதி கதறி அழுதாள். மார்க் கண்டேயனோ, ''கயிலைநாதனின் கருணையால் உதித்த உயிரை அழைத்துக்கொள்ளவோ, 'இங்கேயே இரு' என்று ஆசீர்வதிக்கவோ அவருக்குத்தான் அதி காரம் இருக்கிறது. ஈசனின் தலங்கள் அத்தனைக்கும் யாத்திரையாகச் சென்று, அவன் அடி பணிவோம். எனது ஆயுளை அதிகரிப்பதோ அபகரிப்பதோ அவன் திருவுளப்படி ஆகட்டும்'' என்றான்.

பல தலங்களில் பரமேஸ்வரனைத் தரிசித்தார்கள். பதினாறாம் ஆண்டு நிறைவு பெறும் நாளன்று திருநாவாய் வந்தடைந்தார்கள். மார்க்கண்டேயன் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரித்தபடி திருநாவாய் முகுந்தனைத் தரிசிக்க ஆலயத்துள் நுழைந்தான்.

அது சமயம், கூற்றுவனும் அங்கு வந்து சேர்ந் தான். ஆலயத்துள் சென்ற மார்க்கண்டேயன் வெளி வர வாயிலில் காத்திருந்தான்.

மார்க்கண்டேயனிடம், வாயிலில் எமன் காத்து இருப்பதைச் சொன்ன மாலன், எமனை மருட்ட வல்லவர் மகாதேவனே என்பதால், அருகிலிருக்கும் திருப்பரங்கோடு ஆலயத்துள் உறையும் மகாதேவனைச் சரணடையுமாறு கூறி, ஆலயத்தின் பின் வாசல் கதவைத் திறந்து, அனுப்பிவைத்தார்.

மார்க்கண்டேயன், மகாதேவன் ஆலயம் வந்து அடைந்தான். செய்தி அறிந்த கூற்றுவனும் மகாதேவனின் ஆலயத்தை அடைந்தான். கூற்றுவனைக் கண்ட மார்க்கண்டேயன், உடனே ஓடிச் சென்று 'அபயம்' என மகாதேவனைத் தழுவினான்.

கூற்றுவன் வீசிய பாசக் கயிறு மார்க்கண்டேயனை மட்டுமின்றி, மகாதேவரையும் சேர்த்துக் கட்டியது. அடுத்த கணம், சிவ லிங்கம் இரண்டாகப் பிளந்தது.

ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்

கைலாயநாதன் கால சம்ஹாரமூர்த்தியாய் எழுந்தரு ளினார். மூன்றடி முன்னே எடுத்துவைத்து, சூலத்தால் காலதேவனைக் குத்தி, எட்டி உதைத்தார். மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவி வரம் அளித்து மறைந்தார்.

மார்க்கண்டேயன் சிரஞ்சீவி வரம் பெற்ற புனிதத் தலமான திருப்பரங்கோடு, திரூருக்கு அருகில் அமைந்துள்ளது.

பழைமையான ஆலயம்! வாயிலில் இருந்து நீளும் நடையில் சென்றால், இரு புறங்களிலும் திண்ணைகள்கொண்ட திறந்தவெளிப் பிராகாரம். வலம் வந்தால், வடமேற்கு மூலையில் ஒரு குளம் காட்சி அளிக்கிறது. எமனைக் குத்திய சூலத்தில் இருந்த குருதி அந்தக் குளத்தில்தான் கழுவப்பட்டது என்பது ஐதீகம்.

இதையட்டி கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு தனிக்கோயில். வணங்கிக் கடந்தால், மேற்கு வாயில். கருவறை நோக்கிச் செல்லும் பாதையில், அடுக்குக் குத்து விளக்கில் தீபங்கள் ஒளிர்கின்றன. அடுத்து, கொடி மரம்.

நமஸ்கார மண்டபத்தில், மூலவருக்கு நேர் எதிரில் நந்தி.

கருவறையில் திருப்பரங்கோட்டப் பன் எனப்படும் மகாதேவர். இவர் ரௌத்திர பாவம் கொண்டதால், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். கால சம்ஹாரமூர்த்தியாய்க் காட்சி தந்து, எமனை வதைத்ததால், மிருத்யுஞ்ஜயர் என்றும் அறியப்படுகிறார்.

சுயம்பு மூர்த்தி; சிறிய பாணம்; சதுர ஆவுடையார்; லிங்கத்துக்கு மேல் வரிசையாக விளங்கும் பித்தளைப் பிறைகள், சுடரொளியில் தகதகக்கின்றன.

மார்க்கண்டேயன் போன்ற ஞானமும் தீர்க்காயுசும் கொண்ட குழந்தையை அரு ளுமாறு வேண்டிக்கொண்டு, கருவறையைச் சுற்றி சிறு சிறு தொட்டில்களைத் தொங்க விட்டிருக்கிறார்கள் மக்கள்.

ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்

கஜபிருஷ்ட வடிவில் இருக்கும் கரு வறைக்கு இடப்பக்கம் ஒரு தனிச் சந்நிதி யில், சரவிளக்குகள் சூழ பார்வதி தரிச னம் தருகிறாள். அன்னையை அடுத்து, கணபதி எழுந்தருளி இருக்கிறார்.

வெளிப் பிராகாரத்தில் மகாதேவருக்கு வலப்புறத்தில் நான்கு சந்நிதிகளில் நான்கு லிங்கங்களின் தரிசனம். முதல் சந்நிதியில் இருப்பவர், மார்க்கண்டேயன் கட்டித் தழுவியவர்.

எமனைத் துரத்த ஈசன் மூன்று அடி எடுத்துவைத்தார் என்பதால், அந்த மூன்று பாத அடிகளும் மூன்று சிவலிங்கச் சந்நிதிகளாக எழுப்பப்பட்டுள்ளன.

திருநாவாய் முகுந்தன் மார்க் கண்டேயரை இந்த ஆலயத்துக்கு அனுப்பிவைத்ததால், மூன்றாவது பாத சிவசந்நிதிக்கு முன்பாக முகுந்தன் ஒரு தனிச் சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார்.

மூலவருக்குத் தினம் சங்காபிஷேகம்! நிறைவான நீண்ட ஆயுளை வேண்டி பக்தர்கள் மிருத்யுஞ்ஜய யாக பூஜையும் செய்கிறார்கள்.

மகாதேவரை அடிபணிவோம். மரண பயத்தை வெல்லுவோம்!

உங்கள் கவனத்துக்கு

தலத்தின் பெயர்: திருப்பரங்கோடு. சுவாமியின் திருநாமம்: மகாதேவர். எங்கே உள்ளது: கேரளாவில். எப்படிப் போவது: சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் சென்று திரூரில் இறங்கினால் அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இருக்கும் திருப்பரங்கோட்டுக்குப் பேருந்து, கார் மற்றும் ஆட்டோவில் செல்லலாம். எங்கே தங்குவது: திரூரில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன. தரிசன நேரம்: காலை 5.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை; மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை!

 
ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்
ஆலயம் ஆயிரம் -மரண பயம் அகற்றும் திருப்பரங்கோடு மகாதேவர்