மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன் - 20

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன் - 20

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20
எஸ்.ராமகிருஷ்ணன் ,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20
சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20
பல்லின்னா பயப்படுவீங்களா?
சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20
சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20

யம்... மனிதனின் ஆதார உணர்ச்சி. எதற்குப் பயம், எதைக் கண்டு பயம் என்ற பட்டியல் முடிவில்லாதது. ஆனால், பயமில்லாத மனிதன் எவனும் இல்லை. பயத்தைக் காட்டிக்கொள்ளாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

பயம்தான் மனிதக் கற்பனையின் ஆதாரப் புள்ளி. பல கண்டுபிடிப்புகளுக்குப் பின்னே பயம் ஒரு விதையாக இருக்கிறது. காந்திஜி இரவில் விளக்கைப் போட்டுக்கொண்டுதான் உறங்குவார் என்ற வரியைப் படித்த என் நண்பர் மிகுந்த சந்தோஷத்துடன், ''இந்த விஷயத்தில் நானும் காந்தி மாதிரி. நான் தூங்கும்போது அறையில் விளக்கு பிரகாசமாக எரிய வேண்டும்'' என்றார். ''நீங்கள்தான் தூங்கிவிடுவீர்களே... பிறகு எதற்கு வெளிச்சம்?'' என்று கேட்டேன். அவர், ''அதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. இந்தப் பிரச்னையால் ரயிலில் போனால், என்னால் தூங்கவே முடியாது'' என்றார்.

உலகம் இப்படி எண்ணிக்கையற்ற பயங்களால் ஆனது. ஒவ்வொரு பயமும் ஒரு பிரச்னையாக வளர்ந்துவிடுகிறது. அதை நாளெல்லாம் சுமந்துகொண்டே அலைகிறோம். சில பயங்கள் காலமாற்றத்தில் வடிந்து போய்விடும். சில பயங்கள் வயதான பிறகுதான் வரவே துவங்கும். பயம் விசித்திரமானது. அதைப்பற்றி நினைக்கத் துவங்கியதும் அதற்கு கைகால்கள் முளைத்துவிடும். ஆக்டோபஸ் பற்றிக்கொள்வது போல நம்மை அது பற்றிக்கொண்டுவிடுகிறது. ஒவ்வொரு வயதிலும் அதற்கேற்ற பயங்கள் நம்மோடு இருக்கின்றன.

எனக்குத் தெரிந்த பேராசிரியர் ஒருவர் சென்னையின் புறநகரில் புதிதாக வீடு கட்டினார். பல வருடக் கனவு அது. வங்கிக் கடனில் கட்டியது. சிறிய குடும்பத்துக்குப் போதுமான வீடு. அந்த வீட்டுக்குக் குடி போன நாலைந்து வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் என்னைத் தேடி வந்தார்.

''எப்படி இருக்கிறது புதிய வீடு?'' என்று கேட்டேன். ''வீடு நன்றாக இருக்கிறது. ஆனால், பயமாக இருக்கிறது'' என்றார். ''என்ன பயம், உங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறைய வீடுகள் இருக்கின்றனவே?'' என்றேன். ''பயம் அதைப்பற்றி இல்லை. என் புதிய வீட்டில் பல்லியே இல்லை. 'பல்லி வராத வீட்டில் மனிதர்கள் வாழ முடியாது' என்று என் மனைவி சொல்கிறாள்'' என்றார்.

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20

அப்படி ஒரு விஷயத்தையே அன்றுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். பல்லி இல்லாத வீட்டில் மனிதர்கள் குடியிருக்க முடியாது என்ற பயத்தை யார் உருவாக்கினார்கள்? எப்படி அது ஏற்பட்டது என்று தெரியவில்லை. ''இதெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா?'' என்று கேட்டேன். தயக்கத்துடன் அவர், ''நானும் அதை நம்பவில்லை. ஆனால், அந்த வீட்டுக்கு மாறிய பிறகு எங்களுக்குக் கெட்ட கனவுகள் அதிகம் வருகின்றன. பல்லிகள், மனிதர்களின் பேச்சை உற்றுக் கேட்கக்கூடியவை. அவ்வப்போது பதில் தரக்கூடியவை. அதனால்தான் பல்லி சாஸ்திரம் எல்லாம் எழுதப்பட்டு இருக்கிறது. என் மனைவி தன் அலுவலகத்தில் உள்ள ஒருவரிடம் விசாரித்திருக்கிறாள். அவர் பல்லி இல்லாத வீட்டில் குடியிருந்தால் துர்சம்பவங்கள் நடக்கும் என்று சொன்னாராம்'' என்றார்.

என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் வேடிக்கையாக, ''பிளாஸ்டிக்கில் பல்லி விற்கிறார்கள். அதை வாங்கிச் சுவரில் ஒட்டிவிடுங்கள்'' என்றேன்.

''என் பிரச்னையை நீங்க புரிஞ்சுக்கிடவே மாட்டேங்கிறீங்க'' என்று ஆதங்கத்துடன் சொல்லியபடியே விடைபெற்றார். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பின்பு ஓர் இரவு போன் பண்ணினார். தன் வீட்டில் நிறைய புகை போட்டு வைத்திருப்பதாகவும், அப்படி புகை போட்டால் பல்லி வந்துவிடும் என்று பலசரக்குக் கடைக்காரர் ஆலோசனை சொன்னாராம். ஆனால், அவர் நம்பியது போல பல்லி வரவில்லை. மாறாக, வீட்டில் இருந்து புகை கசிந்து வருகிறது என்று யாரோ புகார் சொல்லி, தீயணைப்பு வண்டிதான் வந்து இறங்கி விசாரித்துப் பிரச்னையானது.

பின்பு ஒருநாள் பேராசிரியர் நூலகத்தில் வசிக்கும் பல்லி ஒன்றைப் பிடித்துக் கொண்டுவந்து வீட்டில் விட்டுப் பார்த்தார். அது ஓர் இரவுகூடத் தங்கவில்லை. மறுமுறை பல்லி முட்டையைக் கொண்டுவந்து வைத்து, அதில் இருந்து குஞ்சு வரும் வரை காத்திருந்தார். பல்லி போன்ற சித்திரம் வரைந்து சாந்தி பூஜை செய்தார். எதுவும் பலிக்கவில்லை. கணவன் - மனைவி இருவரும் தினமும் பல்லியைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆலோசனை கேட்டார்கள். கம்ப்யூட்டர் உதவியால் அதைப்பற்றிய தகவல்கள் தெரிந்துகொண்டார்கள். ஆனால், பல்லி வரவே இல்லை. முடிவில் அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, தங்களது பழைய அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டார்கள்.

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20

100 வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு மனிதன் நடந்துகொண்டு இருந்தால், படிப்பறிவு இல்லை, உலக அனுபவம் தெரியவில்லை என்று சொல்லலாம். சாட்டிலைட் யுகத்தில் படித்த அனுபவமிக்க மனிதர் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி, அதற்குப் பயந்து போய் சொந்த வீட்டைக் காலி செய்து வந்ததை எப்படி எதிர்கொள்வது? பலரும் வீட்டில் உள்ள பல்லியை விரட்ட வழி தேடி அலைகிறார்கள். ஆனால், இப்படி ஒருவர் பயத்தோடு இருக்கிறார். என்ன முரண் இது?

ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. மனிதர்களின் பயங்களுக்கான காரணங்கள் விசித்திரமானவை. அதை எளிதில் தீர்த்துவிட முடியாது. அபத்தமாக நடந்துகொள்வது மனித இயல்பின் ஒரு பகுதி போலும்.

பல்லி ஒன்றைக் கற்றுத்தருகிறது. அது பிரச்னையில் மாட்டிக்கொண்டு தப்பிக்க இயலாதபோது தனது வாலைத் துண்டித்துக்கொள்ளும். இந்தச் செயல், நம்மிடம் உள்ள ஒன்றை இழப்பதன் வழியே ஒரு பிரச்னையில் இருந்து நாம் விடுபட முடியும் தந்திரம். தன் வாலைத் தானே துண்டித்துக்கொள்வது போன்ற துணிச்சலான தற்காப்பு முடிவுகள் அவசியமானவை என்பதையே உணர்த்துகிறது. அதை நாம் பெரிதாகக் கவனம் கொள்ளவில்லை.

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20

20 வருடங்களுக்கு முன்பாக 'The Gods Must be Crazy' என்ற ஒரு ஹாலிவுட் படம் வெளியானது. மிகத் தரமான நகைச்சுவைப் படம். காட்டில் வசிக்கும் ஆதிவாசிகள் எப்படி நாகரிக மாற்றங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் பயம்கொள்கிறார்கள் என்பதைப்பற்றியது. தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதியில் உள்ள பாலைவனத்தில் ஆதிவாசிகள் வசிக்கும் ஓர் இடத்தில் விமானத்தில் இருந்து ஒரு கோக் பாட்டில் தூக்கி வீசப்படுகிறது. அதைத் தற்செயலாக ஆதிவாசி ஒருவன் கண்டு எடுக்கிறான்.

அது என்னவென்று அவனுக்குப் புரியவில்லை. அதை விசித்திரமான பொருளைப் போலப் பார்க்கிறான். அதை வாங்கி ஒருவன் இசைக் கருவி போல ஊதிப் பார்க்கிறான். ஒரு பெண் அதை வைத்து துணி துவைக்கிறாள். ஒரு ஆள் அதை வைத்து கடினமான பழங்களை உடைத்துச் சாப்பிடுகிறான். இப்படி அது என்னவென்று தெரியாமல் பயன்படுத்தப்படுகிறது. ஒருநாள் ஒரு சிறுவன் அந்தப் பாட்டிலால் அடுத்தவன் தலையில் அடித்துவிட, ரத்தம் கொப்பளிக்கிறது. இந்த பாட்டில் தங்களைச் சோதிக்க சாத்தான் போட்டது என்று கருதிய ஆதிவாசி ஒருவன், அதைக் கடலின் ஆழத்தில் தூக்கி எறிந்துவிடுவதாக ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறான்.

அந்தப் பயணத்தில் அவன் நிறையச் சம்பவங்களை எதிர்கொள்கிறான். அதில் ஒன்று, ஒரு ஜீப் அவனை வேகமாகக் கடந்து போகிறது. மணலில் ஜீப் டயர்களைக் காணும் அவன், அது என்ன மிருகம் என்று புரியாமல் விசாரிக்கிறான். இவ்வளவு வேகமாக ஓடும் மிருகத்தைத் தான் கண்டதில்லை என்று வியக்கிறான். வெள்ளைத் தோல் உள்ள பெண்ணைக் கண்டதும் அவளுக்கு உடல் முழுவதும் ஏன் வியாதியாக உள்ளது என்று விசாரிக்கிறான்.

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20

மந்தையில் மேயும் ஆடு ஒன்றை வேட்டையாடி அதற்காகக் காவல் துறையால் பிடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படும்போது ஆடு, மாடு, மரங்கள் போன்றவை தனிநபர்களுக்கு எப்படிச் சொந்தமாக இருக்க முடியும். அது யாவருக்கும் பொதுவானதுதானே என்று கேட்கிறான். இப்படி ஆதிவாசி இந்த நாகரிக உலகை, அதன் பொருள்புரியாத செயல்களைத் தொடர்ந்து கேள்வி கேட்கிறான். சலிப்புற்று தன் வேலை முடிந்ததும் இருப்பிடம் திரும்புகிறான்.

ஆப்பிரிக்காவில் மரங்கள் யாவருக்கும் பொதுவானவை. எந்த மனிதனும் எந்த மரத்துக்கும் உரிமை கொண்டாட முடியாது. எவரும் எந்த மரத்தில் இருந்தும் பழம் பறித்துச் சாப்பிட முடியும். ஆதிவாசிகளாக நாம் கருதும் மக்கள் நம்மைவிட விசாலமான மனதும் அக்கறையுமாக இருக்கிறார்கள். அவர்களது ஒரே பயம், நமது நாகரிகம். அதன் கருவிகள். நமது பயத்தை இன்னொருவன் வணிகமாக்கிப் பணம் சம்பாதிப்பதை நாளிதழ் செய்திகள் தினமும் தெரிவிக்கின்றன. ஆனாலும் நாம் அதைக் கண்டுகொள்வதோ, மாற்றிக்கொள்வதோ இல்லை.

'The house lizard love story' என்ற தாய்லாந்து நாட்டின் விளம்பரப் படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன். 40 செகண்டுகள் ஓடக்கூடியது. ஒரு வீட்டின் கூரையில் இரண்டு பல்லிகள் ஒன்றையன்று ஆரத்தழுவிக் காதலிக்கின்றன. திடீரென அந்தக் கூரையில் விரிசல் விழுகிறது. ஆண் பல்லி தவறி விழுகிறது. பெண் பல்லி தாவிப் பிடிக்கிறது. ஆனால், அந்தப் பிடியில் இருந்து நழுவி பல்லி உயரத்தில் இருந்து விழுகிறது. வீட்டின் ஓர் இடத்தில் மூன்று பேர் அமர்ந்து செக்கர்ஸ் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். பல்லி அவர்கள் முன் விழுந்து சிதறிச் சாகிறது. ஐயோ, என்றபடியே ஒருவன் நிச்சயம் இதன் துணைப் பல்லி மேலே இருக்கக்கூடும் என்கிறான்.

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20

அவன் சொல்லி முடிப்பதற்குள் பெண் பல்லி தானே தாவி தரையை நோக்கி விழுகிறது. அதுவும் அதே இடத்தில் விழுந்து சாகிறது. விரிசலை நீ கவனித்திருந்தால், இந்தப் பல்லிகள் செத்துப்போயிருக்காது என்று கத்துகிறான் ஒருவன். இதற்கு ஒரே விடை, ப்ளைவுட் பலகையைப் பொருத்துங்கள். நமது வீடு நமக்கானது மட்டுமில்லை என்று ப்ளைவுட் கம்பெனியின் பெயர் திரையில் தோன்றி வீட்டின் வடிவம் மாறுகிறது.

நம் வீடு நாம் வசிப்பதற்கானது மட்டுமில்லை. நம்மைச் சார்ந்த எவ்வளவோ நுண் உயிரிகள் பறவைகள், செடிகொடிகள் வளர்கின்றன. அதன் மீது நம் அக்கறை வேண்டும் என்பதையே இந்த விளம்பரம் வெளிப்படுத்துகிறது. நாம் அதைத் தவறாகப் புரிந்துகொண்டோ அல்லது பயமாகவோ மாற்றிவிட்டால், அதன் முழுப் பொறுப்பும் நம்மையே சாரும்.

பயம், நம் நிழல் போன்றது. அது நம்மைவிட பெரிதாக இருப்பது போல பல நேரம் தோன்றும். அது நிஜம் இல்லை, வெறும் மயக்கம். அந்த எளிய உண்மையை நாம் மறந்துவிடுவதே இத்தனைக்கும் காரணம்!

சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20

பார்வை வெளிச்சம்!

னித மூளை மற்றும் நரம்பியல் செயல்பாடுகள் பற்றி உலக அளவில் சிறந்த மருத்துவராகவும், மிக முக்கிய ஆய்வாளராகவும் உள்ளவர் டாக்டர் வில்லியனூர் சுப்ரமணியம் ராமச்சந்திரன். நரம்பியல் மருத்துவத் துறையின் மார்க்கோ போலோ என்று கொண்டாடப்படும் இவர், பத்மபூஷண் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். தமிழ்நாட்டின் வில்லியனூரில் பிறந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்று, இன்று அமெரிக்காவில் Center for Brain and Cognition இயக்குநராக உள்ளார். இந்த நூற்றாண்டின் சாதனையாளர்கள் வரிசையில் இவரை டைம் இதழ் கௌரவித்துள்ளது. இன்னமும் அறியப்படாத மனித மூளையின் விசித்திரங்களை ஆராய்ந்து, புதிய வெளிச்சமிடும் இவரது பங்களிப்பு, மருத்துவ உலகில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. அவ்வகையில் மருத்துவர் ராமச்சந்திரன் நாம் கொண்டாடப்பட வேண்டிய தலை சிறந்த மனிதர்!

 
சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20
- இன்னும் பரவும்
சிறிது வெளிச்சம்! - சாவைச் சுமந்த பயணம் :எஸ்.ராமகிருஷ்ணன்  - 20