விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்
விகடன் பொக்கிஷம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

ந்த ஆண்டு முதல் இதழில் வெளியான 'உபய குசலோபரி' பகுதியிலிருந்து...

'ஆனந்த விகடன்' ஆரம்பித்த காலத்தில், நகைச்சுவையும் எளிய நேர் நடையும் புதுமையாயிருந்தன. 'இப்படியும் தமிழில் எழுத முடியுமா?' என்பதே ஆச்சரியத்துக்கிடமாயிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்தப் 'புதுமை' போய்விட்டது. இப்போது தமிழில் யாராவது நகைச்சுவையுடன் எழுதினால் அல்லது ரஸமான கதை எழுதினால் அதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. வாசகர்கள் இயல்பாக நல்ல கட்டுரைகளையும் கதைகளையும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சித்திரங்களும் அப்படித்தான். அழகிய படங்களாகட்டும், வேடிக்கைப் படங்களாகட்டும் எவ்வளவு நன்றாயிருந்தாலும் ஆச்சரியமுண்டுபண்ணுவது கிடையாது; அவை நன்றாயிராமல் போனால்தான் இப்போது வாசகர்களுக்கு ஆச்சரியம் உண்டாகும்! (விகடனைப் பொறுத்தவரையில் அத்தகைய ஆச்ச ரியத்தை வாசகர்களுக்கு அளிப்பதாக உத்தேசம் இல்லை!)

'ஆனந்த விகட'னுக்கு இப்போது பதினோராண்டு நிரம்பி, பன்னிரண்டாவது ஆண்டு பிறந்திருக்கிறது! அன்று போலவே இன்றும் 'விகடன்' தமிழ் மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாயிருப்பதை நினைக்க, எனக்கே வியப்பாயிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால், அந்த இரகசியத்தை இங்கே வெளியிட்டு விடுகிறேன்.

பத்திரிகையின் உள் அம்சங்களை அடிக்கடி அபிவிருத்தி செய்தும், புதிய புதிய அம்சங்களைச் சேர்த்தும் வந்ததனால்தான் விகடன் தன் நேயர்களுடைய அபிமானத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறான். இனியும், அந்த யுக்தியைக் கையாண்டு தமிழர்களின் ஆதரவை நிலைநிறுத்திக் கொள்வான் என்பதில் சந்தேகமில்லை.

காலப் பெட்டகம்

'ஒளியும் ஒலியும்' என்னும் தலைப்பில் சினிமா செய்திகள் வெளியாகின. மனைவி தன் கணவனை அடிக்கும் வடிவேலு - கோவை சரளா பாணி நகைச்சுவை அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டதுபோலும்! இதோ, இந்தக் கட்டுரையைப் பாருங்கள்...

தமிழ் டாக்கிகளில் 'ஹாஸ்ய நடிகர்' வேஷம் போட்டுக் கொள் ளுபவர்கள் இப்பொழுதெல்லாம் அதிகச் சம்பளம் கேட்கிறார்கள் என்ற புகார் கிளம்பியிருக்கிறது. புருஷன், மனைவி இருவரில் புருஷன் வேஷம் போட்டுக் கொள்ளுகிறவர் தமது சினிமா மனைவியிடமிருந்து நல்ல உதை வாங்கிக்கொள்ள வேண்டியிருக் கிறது. அதாவது, அவ்விதமாகக் கதைப் போக்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் அதிகச் சம் பளம் கேட்பதற்குக் காரணமாம்! மனைவி புருஷனை அடிக்காவிட் டால் அந்த 'காமிக்'கை யாரும் ரசிக்கமாட்டார்களென்பது பொது வாகப் பட முதலாளிகளின் அபிப் ராயமாயிருப்பதனால் நடிகர்கள் கேட்கும் அதிகச் சம்பளத்தைக் கொடுத்துத்தான் ஆக வேண்டு மல்லவா! மனைவி புருஷனை அடிக்கும் இந்தப் பழக்கம் நம் வீடுகளிலும் பரவிவிடுமோ என்று பயப்படவேண்டிய விஷயமாக வும் இருக்கிறது இப்பொழுது.

நாட்டு நடப்பை அலசும் 'அப்பளக் கச்சேரி' பகுதி ஜனவரி முதல் இதழில் தொடங்குகிறது.

ராஜகோபாலாச்சாரியார் 'ராஜாஜி' ஆனார்!

காலப் பெட்டகம்

''வடக்கே எங்கேயோ ஒரு பொம்மனாட்டி மந்திரியாகியிருக்கிறாளாமே!''

''ஆமாம். ஐக்ய மாகாணத்தில். அதுதான் காசி, பிரயாகை எல்லாம் இருக்கே, அந்த தேசம். அவள் பெயர் விஜயலக்ஷ்மி. காங்கிரஸ் பிரசிடென்ட் ஜவாஹர்லால் நேரு, போன வருஷம் நம் ஊருக்குக்கூட வந்தார்; பெரிய பெரிய மீட்டிங்கி எல்லாம் நடந்ததல்லவா, அவருடைய தங்கை இவள். பத்திரிகையில் அவள் படங்கூடப் போட்டிருந்தது'' என்றாள் யமுனா.

''அவளைப் பாராட்டித்தான் எங்கள் மீட்டிங்கில் தீர்மானம் செய்தோம். இன்னும், நம் ஊரில் பொம்மனாட்டிக்கு மந்திரி வேலை கொடுக்காததற்காக ராஜாஜியைக் கண்டித்தோம்...'' என்று பேபி சொல்லி வருகையில்,

''அது யாரடி ராஜாஜி? நம்முடைய ராஜிக்கு ஏதாவது உறவோ?'' என்று பாட்டி கேட்டாள்.

யமுனா இடிஇடியென்று சிரித்துவிட்டு, ''இல்லை, பாட்டி! ராஜாஜி நம்முடைய மாகாணத்தின் காங்கிரஸ் தலைவர். அவர்தான் இப்போது பிரதம மந்திரிகூட. அவருடைய முழுப் பெயர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார். இவ்வளவு நீளமான பெயர் வடக்கத்தியாரின் வாயில் நுழையவில்லையென்று, அவர்கள் அவருடைய பெயரை 'ராஜா' என்று சுருக்கி, 'ஜி' என்ற மரியாதைப் பட்டத்தைச் சேர்த்து, 'ராஜாஜி' ஆக்கிவிட்டார்கள்'' என்றாள்.

- 'அப்பளக் கச்சேரி'யில் (1.8.37) ஒரு பகுதி.


இந்த ஆண்டு ஆரம்பம் முதல், அட்டையில் 'வாஷ் டிராயிங்' ஓவியங்கள் இடம்பெறத் தொடங்குகின்றன. மாதிரிக்கு இதோ ஓர் அட்டை.

காலப் பெட்டகம்

பிரபல இந்தி நாவலாசிரியர் பிரேம்சந்த் எழுதிய புகழ்பெற்ற படைப்பான 'ஸேவாஸதனம்', இந்த ஆண்டு முதல் இதழிலிருந்து தொடர்கதையாக வெளியாகத் தொடங்கியுள்ளது.

காலப் பெட்டகம்

கல்விச் சீர்திருத்தம்!

ஹைஸ்கூல்களில் பிள்ளைகளின் மூளையையும் கைகளையும் சரியாக உபயோகப்படுத்தக் கற்றுக் கொடுப்பதுதான் முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியம்.

இப்போது எப்படியென்றால், ஹைஸ்கூல் மாணாக்கர்களின் மூளையை, பரீட்சை என்னும் கொலைகார ஏற்பாட்டினால் மழுங்கச் செய்து விடுகிறார்கள். கைகளுக்கு ஒரு வேலையும் கொடுக்காமல் எவ்விதத் தொழிலுக்கும் உழைப்புக்கும் பிரயோஜனமற்றதாய்ச் செய்துவிடு கிறார்கள்.

பரீட்சைகளை அடியோடு எடுக்காவிட்டாலும், பரீட்சைகளுக்காக நெட்டுருப்போடும் வழக்கத்துக்காவது அவசியமில்லாமல் செய்துவிட வேண்டும். பிள்ளைகளின் கையில் புத்தகங்களைக் கொடுத்து, பரீட்சைகளுக்கு பதில் எழுதச் சொல்ல வேண்டும். புத்தகத்தைப் பார்த்து ஒரு மாணாக்கன் கேள்விக்குப் பதில் எழுதத் தெரிந்துகொண்டு விட்டான் என்றால், அவன் தன்னுடைய அறிவை நன்கு உபயோகப்படுத்தத் தெரிந்து கொண்டுவிட்டான் என்று ஏற்படும்.

விஷயங்களை அறிந்துகொள்வதற்கு ஆர்வத்தை உண்டாக்கி, அதற்கு வேண்டிய பயிற்சியையும் தருவதுதான் ஹைஸ்கூல் கல்வியின் நோக்கமாக வேண்டும்.

அத்துடன், ஹைஸ்கூல் மாணாக்கன் ஒவ்வொருவனுக்கும் ஒரு கைத் தொழில் தெரிந்திருக்க வேண்டும். அதை அவன் ஜீவனோபாயத்துக்குக் கைக்கொள்ள வேண்டுமென்று அவசியம் கிடை யாது. கையின் பயிற்சிக்காகவே ஒவ்வொரு மாணாக்கனும் கைத்தொழில் கற்கவேண்டும்.

- கட்டுரையின் ஒரு பகுதி


காலப் பெட்டகம்

ஆண் சிங்கம்
சிறுகதை - 'மணி'

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது. பிரமாதமாக விளம்பரங்கள் ஒட்டப்பட்டன. என்னென்ன கிரியைகள் நடக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் ஒழுங்காக நடத்திய பின், சர்க்கஸ் ஆரம்பிக்கப்பட்டது.

நோட்டீஸில் 'பயங்கரம்! ஆச்சரியம்!! வீரம்!!! இம்மூன்றும் ஒன்று சேரும் கட்டத்தில், சிங்கமும் ஒரு பெண்ணும் இருப்பார்கள்' என்று வெளியிடப்பட்டிருந்தது. அதே போல் யாராவது செய்தால், 500 ரூபாய் பரிசு கொடுப்பதாயும் அதே நோட்டீஸில் பயமுறுத்தப்பட்டிருந்தது.

சர்க்கஸ் ஆரம்பித்த தினத்தன்று ஒரே கூட்டம். ஒவ்வொரு காட்சியாக முடிந்தது. கடைசியாக, அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு பெரிய கூண்டில் சிங்கத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதே சமயம் ஒரு மாது அந்தக் கூண்டில் தோன்றினாள்.

சர்க்கஸ் மானேஜர் ஒரு மேடையில் ஏறி நின்று, ''மகா ஜனங்களே! இப்போது நடக்கப்போகும் அதி ஆச்சரியமான, பயங்கரமான பாகத்தை இம்மாது செய்யப் போகிறாள். இவள் என் மனைவி. இதைப் போல இங்கு யாராவது செய்யமுடியுமென்று தைரியமாக மாரைத் தட்டி, மீசையை முறுக்கிக்கொண்டு முன்வாருங்கள். உடனே 500 ரூபாய்!'' என்று கத்திவிட்டு, ''வெல்லத் துண்டு எங்கே?'' என்று இரைந்தார்.

ஓர் அச்சு வெல்லத்தை எடுத்து, அதை அந்த மாதின் நாக்கில் வைக்கச் சொன்னார். அவ்வாறே உடனே செய்யப்பட்டது. தூரத்தில் சிங்கம் உறுமிக்கொண்டு நின்றது. ''ரைட்டோ!'' என்றார் மானேஜர். சிங்கம் அந்தப் பெண்ணின் பக்கம் நெருங்கியது. வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கண்ணை மூடாது பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிங்கம் அந்தப் பெண்ணின் பக்கத்தில் நின்றது. மறு நிமிஷம், என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? சிங்கம், தன் நாக்கை நீட்டி பெண்ணின் நாக்கிலிருந்த வெல்லத்தை நக்கியது!

எல்லோருக்கும் இக்காட்சி தூக்கிவாரிப்போட்டது. ஒருவன் மட்டும் சாவதானமாகத் தன்னுடைய இடத்தை விட்டு எழுந்தான். தன் மார்பைத் தட்டிக்கொண்டு, மீசையையும் முறுக்கிக்கொண்டு மானேஜர் நிற்குமிடத்தை நோக்கி நடந்தான். அவன் வரவைக் கண்டு மானேஜர், ''என்ன விஷயம்?'' என்று கேட்டார்.

''நான் அப்படிச் செய்கிறேன்!'' என்றான்.

உடனே அவர் ஜனங்களை நோக்கி, ''சகோதர சகோதரிகளே! என் மனைவி நீங்கலாக, இதோ இந்தச் சூரப்புலியும்... இல்லை, இல்லை... இந்த ஆண் சிங்கம் இதைச் செய்துவிடுவதாக முன் வந்திருக்கிறார். இவர் இதைச் செய்துவிட்டால் 500 ரூபாய் கொடுப்போம்! இல்லாவிடில் அவர் 500 ரூபாய் கொடுக்க வேண்டும்!'' என்றார்.

''சரி! என்னால் செய்ய முடியாவிட்டால் 500 ரூபாய் கொடுத்துவிடுகிறேன்'' என்றான் அவன்.

ஒரு வெல்லத் துண்டு கொண்டு வரப்பட்டது. அதை மானேஜர் அவன் கையில் கொடுத்து, ''உன் நாக்கில் வைத்துக் கொள்'' என்றார்.

''ஏன்?'' என்று அதியாச்சரியமாய்க் கேட்டான் அவன்.

''அந்தப் பெண் செய்தது போல் செய்ய!''

''கேவலம்! ஒரு பெண் செய்ததை நான் செய்யவா? நான் அந்தச் சிங்கம் போலவே செய்கிறேன். அதுதானே என்னைப் போன்ற ஆண் சிங்கத்திற்கு அழகு!'' என்று ஒரு போடு போட்டான் அவன்.

மானேஜர் மிரள மிரள விழித்தார். ஜனங்கள் சிரித்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே!


சினிமா மூளை

தமிழ்நாட்டிலும் 'சினிமா' மூளை இருக்கிறது என்பதை இப்பொழுது பலர் நிரூபிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாப்போலிருக்கிறது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸைச் சேர்ந்த மிஸ்டர் சுந்தரம் மேல் நாடுகளுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறார். ரொம்ப விஷயங்களையும் சேகரித்து வந்திருக்கிறாரென்றும், நெல்லிக்காய் மூட்டையை மெல்ல மெல்ல அவிழ்த்து விடுகிறாரென்றும் தெரிகிறது. இவர் முதன்முதல் 'சதி அஹல்யா'வைத் தயாரித்தார். எடுத்த எடுப்பிலேயே ரொம்பவும் தடபுடல் செய்துவிடவில்லை. இப்பொழுது 'பத்ம ஜோதி'யைக் கொண்டு வந்திருக்கிறார். இவை ஒருபுறம் இருக்க. முதல்முதலாகத் தமிழ்ப் படங்களில் கார்ட்டூன் படங்களைச் சிருஷ்டிக்கும் பெருமையை மிஸ்டர் சுந்தரம் அடித்துக்கொன்டு போய்விட்டார். இதுவும் போதாதென்று, சேலம் சுதேசிப் பொருட்காட்சிக்கு விஜயம் செய்த தொழில் மந்திரி வி.வி.கிரியையும் சினிமா நடிகராக்கியிருக்கிறார். என்ன நினைக்கிறீர்கள் தமிழர்களைப் பற்றி?

நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய 'ராஜமோஹன்' என்ற கதை, சென்னை நாஷனல் மூவிடோனில் தயாராகி வருகிறது. அதில் கதாநாயகனாக நடிக்கும் ஸ்ரீ கே.பி.கேசவன் அதன் ஆசிரியையைக் கோயிலில் வைத்துக் கும்பிடவேண்டுமென்று சொல்லுகிறா ராம். ஒரு கட்டத்தில் அவர் கன்னத்தில் அறை விழுகிறது! ''இந்த மட்டும் அறையோடு விட்டாரே! சவுக்கால் வெளுக்கும்படி கதை எழுதாமலிருந்தது என் அதிர்ஷ்டம்தான்'' என்கிறாராம். இதைப் போலவே மற்ற நாவலாசிரியர்களுக்கும் கோவில் கட்டப்பட வேண்டுமானால், அடி உதை எல்லாம் மிகக் குறைவாக இருக்கும்படி கதை எழுத வேண்டும்!

-19.9.37 இதழில் 'ஒளியும் ஒலியும்' பகுதியில் இடம்பெற்ற இரண்டு சினிமாத் துணுக்குகள்.

காலப் பெட்டகம்

ர்.கே.நாராயணசாமி (ஆர்.கே.நாராயண்தான்) எழுதிய 'சுவாமியும் சிநேகிதர்களும்' தொடர்கதை இந்த ஆண்டில்தான் வெளியானது. படங்கள் மாலி.


'விகடன் பேச்சு' என்ற தலைப்பு 'சிரிக்காதே' என்று மாறிவிட்டது!

காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

பிள்ளை: அப்பா! உங்களைக் காலையில் எழுப்ப வேண்டுமா?

தகப்பன்: வேண்டாம்! எழுப்பவேண்டுமானால், அப்போது சொல்கிறேன்.

------------------

காலப் பெட்டகம்

மனைவி: நீங்கள் சொன்ன வேடிக்கைக் கதைகளையெல்லாம் கேட்டு என் அம்மாளுக்குச் சிரித்துச்சிரித்து உயிரே போய்விடும் போலாகி
விட்டது.

கணவன்: அவளை வரச் சொல்! இன்னும் வேடிக்கையானகதைகள் வைத்திருக்கிறேன்.


காலப் பெட்டகம்

1937 தேர்தலில் காங்கிரஸ் வென்று, மந்திரிசபை அமைத்தது. ராஜாஜி தமிழகத்தின் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (சுதந்திரத்துக்கு முன்பு பிரதம மந்திரி என்பது, தமிழக முதலமைச்சர் பதவிதான்!)

பகுத்தறிவுப் போட்டிகள் (குறுக்கெழுத்துப் போட்டி) தொடங்கியது இந்த ஆண்டுதான்.

 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்