மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன் - 25

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன் - 25

சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25
சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25
வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி?
சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25
சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25

லக யுத்தங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் என எதையும் கண்டுகொள்ளாத நம் பொது ஜனங்கள், உண்மையில் பயப்படுவது ஒரே ஒரு சண்டையை நினைத்துத்தான். அது வீட்டுச் சண்டை.

யோசித்துப்பார்த்தால் வீட்டுச் சண்டை என்ற சொல் பார்க்க எளிமையாகத் தோன்றுகிறதே அன்றி, உலக யுத்தங்கள்கூட இவ்வளவு தீவிரமாக நடந்திருக்குமா என்று பிரமிக்கவைக்கும் அளவு விஸ்வரூபம்கொள்கின்றன. நடைபாதைவாசியில் இருந்து நாடாளும் மனிதர் வரைக்குமான பொதுப் பிரச்னை... வீட்டுச் சண்டை. இந்தச் சண்டையில் யார் எதிரி, யார் நண்பர், என்ன காரணத்தால் சண்டை நடக்கிறது என்பது அறிந்துகொள்ளவே முடியாது. கோயில், பூங்கா, கடற்கரை, ரயில், பேருந்துப் பயணங்களில் மனிதர்கள் அதிகம் பேசிக்கொள்வது வீட்டுச் சண்டையைப்பற்றித்தான். அதன் திரைவடிவம்தான் இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்கள்.

மின்சார ரயிலில் ஒருநாள் காலை, வேலைக்குச் செல்லும் பெண் ஒருத்தி மயங்கி விழுந்துவிட்டாள். உடனே, சகபயணிகள் அவளுக்குத் தண்ணீர் தந்து உட்காரவைத்தார்கள். ஒரு பெரியம்மா, ''என்ன வீட்ல சண்டையா?'' என்று கேட்டார். ''ஆமாம்'' என்று மயங்கிய பெண் தலையசைத்தவுடன், ''அதுக்காகச் சாப்பிடாம வந்துட்டயாக்கும்'' என்று கேட்டார். அந்தப் பெண் தலைஆட்டினாள்.

என்ன சண்டை என்று யாரும் கேட்கவில்லை. காரணம், எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. சண்டை இல்லாத வீடுகளோ, கோபித்துக்கொள்ளாத கணவன் - மனைவியோ உலகில் இல்லை. வீட்டுச் சண்டையில் உருவான கோபம், இயலாமை, வலி, ஏக்கம் யாவும் பொது வெளிகளில் மிதந்துகொண்டு இருக்கிறது. அதுதான் சக மனிதன் மீது கோபமாக எதிரொலிக்கிறது. 'நானே வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருக்கேன். நீ வேற ஏன் உயிரை வாங்குற?' என்று வாய்விட்டுச் சொல்லும் பலரைக் கண்டிருக்கிறேன்.

நதிமூலம், ரிஷிமூலம் தேடிக் காணவே முடியாது என்பார்கள். அத்துடன் வீட்டுச் சண்டைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதன் வேர் எங்கே இருக்கிறது... விதை என்று முளைத்தது என்று கண்டுபிடிக்கவே முடியாது. ஒருவகையில் இந்த வீட்டுச் சண்டைகள்தான் வாழ்வின் ருசி. ஒவ்வொரு குடும்பமும், அதற்கான காயங்களையும் சண்டைகளையும்கொண்டு இருக்கிறது.

குடும்பச் சண்டைகளில் வார்த்தைகள்தான் பிரதான ஆயுதம். அந்த நிமிஷங்களில்தான் இத்தனை வார்த்தைகள் அறிந்துவைத்திருக்கிறோமா என்று ஆச்சர்யம் உருவாகிறது. வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தெரியாத ஆண், எளிதில் அடிஉதைக்கு இறங்கிவிடுகிறான். வன்முறை, குடும்பத்தின் பிரிக்க முடியாத பகுதி போலும்.

கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் கிடப்பவர்கள், பேசாமல் இருப்பவர்கள், தன்னைத்தானே தண்டித்துக்கொள்பவர்கள், வீட்டைவிட்டுப் போகிறவர்கள், அழுது அழுது ஓய்கிறவர்கள், கடவுளின் முன்பு பிரார்த்தனையாகக் கொட்டுபவர்கள், தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் என்று சண்டையின் பிரதி பலிப்புகள் ஆண் - பெண் பேதமின்றி ஆயிரம் வழிகளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. சண்டை ஓய்வதே இல்லை. மரங்களை உலுக்கும் காற்று ஓய்ந்து போவதுபோல, அது அடங்குகிறதே தவிர, விலகிப் போவதே இல்லை!

பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த், உறவு என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமம். அங்கே தனது வயதான அப்பா - அம்மாவைக் காண்பதற்காக நகரத்தில் இருந்து மகன் கிளம்பிச் செல்கிறான். சொந்த ஊருக்குப் போய் ஐந்து வருடங்களாகிவிட்டன. வேலை, பிள்ளைகளின் படிப்பு என்று நகரத்தில் தங்கிவிட்டவன் அவன்.

சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25

ஒவ்வொரு பண்டிகையின்போதும் அவனது அப்பா ஊருக்கு வரும்படி கடிதம் எழுதுவார். அவனும் போக வேண்டும் என்று ஆசைப்படுவான். ஆனால், சந்தர்ப்பம் ஏற்படாமல் போய்விடும். இந்த ஆதங்கம் காரணமாக 10 நாட்கள் லீவு போட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பிப் போவான். அழகான கிராமம் அது. தன்னைக் கண்டதும் அப்பா - அம்மா மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்தபடி கதவைத் தட்டுவான். அவனைக் கண்டதும் அம்மா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, ''இப்போதான் எங்க ஞாபகம் வந்துச்சாக்கும். உயிரோடு இருக்கமா, செத்துட்டமானு பார்க்க வந்துட்டயாக்கும்'' என்று திட்டுகிறாள். ஏதோ கோபத்தில் பேசுகிறார் என்று அப்பாவைக் காண்கிறான். அவர் வரவேற்று உட்காரவைக்கிறார்.

அவர் முகமும் சோர்ந்து இருக்கிறது. ''என்னப்பா'' என்று விசாரிக்கிறான். ''உங்க அம்மாவோட ஒரே சண்டைப்பா'' என்று சொல்லிவிட்டு, கட்டிலில் படுத்துக்கொள்கிறார். அன்றிரவு அம்மா சமைக்கிறாள். சாப்பாடு போடுகிறாள். ஆனால், வாய் ஓயாமல் சண்டை. அவனைப் பேசவிடாமல் கத்திக்கொண்டே இருக்கிறாள். ஒரு நாள்கூட வீட்டில் இருக்க முடியவில்லை. என்றோ நடந்த விஷயங்களை நினைத்து நினைத்து அம்மா சண்டையிடுகிறாள். அழுகிறாள். சாப்பிட மறுத்து வெறுந்தரையில் ஒடுங்கிக்கொள்கிறாள். மகன் ஆசையாக வாங்கி வந்த புடவையைத் தூக்கி எறிகிறாள். அப்பாவும் திட்டுவதில்லையே தவிர, முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்கிறார்.

என்ன ஆயிற்று இவர்களுக்கு? கடிதம் போட்டு ஊருக்கு வா... வா என்று ஆசையோடு அழைத்துவிட்டு, இப்படி நடந்துகொள்கிறார்களே என்று எரிச்சல் அடைந்து, இதற்காகவா ஊருக்கு வந்தோம் என்று மறுநாளே நகரம் கிளம்புகிறான். அவனை வழி அனுப்ப வந்த அப்பா சொல்கிறார், ''நீ நினைக்கிற மாதிரி உங்கம்மா சண்டைக்காரி இல்லடா. அவளுக்கு இந்த வீட்ல சண்டைபோட என்னைவிட்டா யாருமே இல்லை. நீ வந்ததும் அவ மனசுலகிடந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்துக்கிட்டா. இது ஆதங்கம், இயலாமை. நீ போன பிறகு அமைதியாகிருவா. உன் மேல காட்டவெச்சிருந்த பாசம் அத்தனையும் என் மேல காட்டுவா. உங்கம்மா ரொம்ப நல்லவ. அவளுக்குச் சண்டை போடுறதுக்கும் ஒரு ஆள் வேண்டிஇருக்குப்பா. அதுதான் மனுஷ சுபாவம். ஒரே ஆள்கூட எத்தனை நாள்தான் சண்டை போடுவா. அதுக்காகவாவது நீ ஊருக்கு வந்து போய்க்கிட்டு இரு'' என்று வழியனுப்பிவைக்கிறார்.

சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25

பிரேம்சந்த் கால வீட்டுச் சண்டைகளின் அடியில் அக்கறை ஒளிந்திருந்தது. இன்றைய சண்டைகள் பெரும்பாலும் பரஸ்பர வெறுப்பிலும், நெருக்கடியிலும், புரிந்துகொள்ளாமையில் இருந்துமே துவங்குகின்றன. தன் தவறுகளை மறைப்பதற்கான நாடகமாகிறது. பல நேரங்களில் கற்பனையான பயங்கள், காரணம் இல்லாத கோபம், புறச்சூழலின் மீதான எரிச்சல், யார் மீதோ காட்ட வேண்டிய கோபம் யாவும் வீட்டின் பிரச்னைகள் ஆகிவிடுகின்றன. இந்தக் கசப்பு உணர்வுதான், 'உறவிலே வேகுறதைவிட ஒரு கட்டு விறகிலே வேகலாம்' என்று பழமொழியாக உருவெடுத்திருக்கிறது.

கோபத்தில் இருந்து உருவானதைவிடவும் சிரிப்பில் இருந்தே அதிக சண்டைகள் உருவாகி இருக்கின்றன. சிரிப்பை மனிதர்கள் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்கிறார்கள். கேலி செய்வது, அவமதிப்பது, அவமானப்படச் செய்வது போன்றவற்றைச் சிரிப்பால் எளிதாகச் செய்துவிட முடிகிறது என்பது மனித அனுபவம். அதனால்தான் பொய்ச் சிரிப்பு என்ற சொல்லே உருவாகிறது. நமது பெரும்பான்மைச் சிரிப்புகள் பொய்ச் சிரிப்புகளே. அது ஒரு நடிப்பு. அடுத்தவர் முன்பு தான் இயல்பாக இருப்பது போன்ற பாவனை.

சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25

The War of the Roses என்ற ஹாலிவுட் படம், குடும்பச் சண்டையின் உச்சபட்சம் என்னவாகும் என்பதை மிக அழகாகச் சித்திரிக்கிறது. வாரன் அட்லர் இயக்கிய இந்தப் படத்தில் மைக்கேல் டக்ளஸ், கேதலின் டர்னர் நடித்திருக்கிறார்கள். கெவின் என்ற வழக்கறிஞரைத் தேடி, ஒரு ஆள் தன் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற வழக்குடன் வருகிறான். என்ன காரணம் என்று கேட்கையில், தான் சிகரெட் பிடிப்பதைத் தன் மனைவி கடுமையாகத் திட்டுகிறாள். அது தினம் தினம் சண்டையாகிறது என்கிறான். அந்த நபருக்கு, தனக்குத் தெரிந்த ஆலிவர் பார்பரா என்ற ஜோடியின் கதையைச் சொல்கிறார் கெவின்.

ஆலிவர் ஓர் இளம் வழக்கறிஞன். இவர் ஒரு நாள் ஏலக்கடையில் பார்பரா என்ற அழகான இளம்பெண்ணைச் சந்திக்கிறான். இருவரும் ஒரே சிலையை ஏலத்தில் எடுக்கப் போட்டியிடுகிறார்கள். பார்பரா ஜெயித்துவிடுகிறாள். அவளது ரசனையைப் பாராட்டும் ஆலிவர், அவளோடு பேசிப் பழகத் துவங்குகிறான். கலைரசனை காரணமாக நட்பு உருவாகி அது காதலாகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

தனது தொழிலில் மேலே வரப் போராடுகிறான் ஆலிவர். பார்பரா ஓர் உணவகத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள். இருவரும் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாகப் பரஸ்பரம் சண்டையிடுகிறார்கள். குற்றம்சாட்டுகிறார்கள். இந்தச் சண்டையால் இருவரும் பிள்ளைகளைக் கண்டுகொள்வதே இல்லை. இதனால் பிள்ளைகள் கண்டதையும் சாப்பிட்டு உடல் பெருத்து, பிடிவாதமும் கோபமுமாக வளர்கிறார்கள்.

ஆலிவர் தன் தொழிலில் மேம்பாடு அடைகிறான். பணம் வரத் துவங்குகிறது. நண்பர்களுக்கு வீட்டில் பெரிய விருந்து தருகிறான். அதில் அவன் நண்பர்களிடம் பொய்யாகச் சிரித்து நடிப்பதை பார்பரா கேலி செய்கிறாள். அதைத் தாங்க முடியாமல் ஆலிவர் சண்டை போடுகிறான். பார்பராவும் தன் வேலையில் முன்னேற்றம் அடைகிறாள். தனியே சம்பாதிக்க ஆரம்பிக்கிறாள். யார் பெரியவர் என்ற சண்டை வீட்டில் ஆரம்பமாகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். தான் பெரிய ஆள் என்பதைக் காட்ட தேவையற்ற பொருட்களை வாங்கி வீட்டை நிரப்புகிறார்கள். வருடங்கள் போகின்றன.

ஒருநாள் ஆலிவர் தனக்குத் திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டதுபோல உணர்ந்து மருத்துவமனைக்குப் போகிறான். தான் சாகப்போவதாக நினைத்து மனைவிக்கு உருக்கமான கடிதம் எழுதுகிறான். தன்னை வந்து பார்க்கும்படி மனைவிக்குத் தகவல் தருகிறான். அவள் மருத்துவமனைக்கு வரவே இல்லை. மருத்துவப் பரிசோதனை முடிவில் ஆலிவருக்கு நெஞ்சுவலி இல்லை என்று வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25

அன்றிரவு ஆலிவர் எழுதிய கடிதத்தைப் படித்த பார்பரா அவன் உயிரோடு இருக்கிறானா எனச் சோதிக்க அவன் மூக்கில் விரல்வைத்துப் பார்க்கிறாள். விழித்துக்கொண்ட ஆலிவர் கத்துகிறான். 'நீ செத்துப் போயிருந்தால் மிகச் சந்தோஷமாக இருப்பேன். விவாகரத்து வாங்கும் சிரமம் இருக்காது' என்கிறாள் பார்பரா. ஆலிவர் அவளை மோசமாகத் திட்டுகிறான்.

இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், வீட்டில் உள்ள பொருட்களில் எதையும் அவளுக்காக விட்டுக்கொடுக்க முடியாது என்கிறான் ஆலிவர். பார்பரா அத்தனையும் தன்னுடையது என்கிறாள். சண்டை வளர்கிறது. பரஸ்பரக் கோபம், வெறுப்பில் வீட்டுப் பொருட்களை உடைத்து நொறுக்குகிறாள். மீன் தொட்டியில் ஒண்ணுக்கு அடிக்கிறான் ஆலிவர். பார்பரா காரை உடைக்கிறாள். இப்படி வீடு யுத்தகளமாகிறது. முடிவில் ஒருநாள் தொங்கும் விளக்கு முறிந்து விழுந்து இருவருமே செத்துப்போகிறார்கள். குடும்பச் சண்டைகள், விவாகரத்து வழக்கு என்று போவதைவிட பரஸ்பரம் புரிந்துகொள்வது மேலானது. அதுதான் தனது ஆலோசனை என்று கெவின் சொல்வதோடு படம் நிறைவுறுகிறது.

கடல் அலைகள் எவ்வளவு சீறிக்கொண்டு கடலைவிட்டு வந்தாலும், மறுபடியும் கடலுக்கே திரும்பிவிடுகின்றன. தன்னைக் கரைத்துக்கொண்டுவிடுகின்றன. வீட்டுக் கோபங்கள், சண்டைகளும் இப்படிப்பட்டதுதானோ?

பார்வை வெளிச்சம்

பெரும்பான்மை அரசுக் கட்டடங்கள், நீதிமன்றங்கள், திரையரங்கு கள், பேருந்து நிலையங்கள், பொதுக் கழிப்பறை, ரயில் கழிப்பறைகளில் சக்கர நாற்காலியில் வருபவர்கள் உள்ளே செல்ல முடிவதில்லை. உடல் குறைபாடு கொண்டவர் களுக்கான பிரத் யேக நடைபாதைகள், கழிப்பறைகள், மாற்றுப் பாதைகள் இல்லாத காரணத்தால் தினம் தினம் அவர்கள் தடுமாறு கிறார்கள். செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி கள், விண்வெளி ஆய்வு என்று கோடி கோடியாகப் பணம் செலவழிக்கப்படு கிறது. அதில் ஒரு சதவிகிதமாவது இவர்கள் மீது காட்டப்படவே இல்லை. மடக்கவும் நீட்டவும்கூடிய எளிய மேடை கள், சக்கர நாற்காலி வசதிகள் உலகெங் கும் நடைமுறையில் உள்ளன. அவை நம்மிடையே அதிகம் இல்லை. ஆஸ்தி ரேலியாவில் வீல்சேர் ரோல் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கிறது. அதன் முக்கியக் கவனம், சக்கர நாற் காலி பயன்படுத்துகிறவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், மாற்று வழிகள், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், சாத்தியங்கள்பற்றி மக்கள் அறிந்துகொள்வதாகும்!

 
சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25
-இன்னும் பரவும்
சிறிது வெளிச்சம்! - வீட்டுக்காரம்மாவைச் சமாளிப்பது எப்படி? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 25