மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 32

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 32


30-12-09
சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32
எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்!
சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32
சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32
 
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32
சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32

வ்வொரு நாளும் ஏதேதோ ஊர்களில் இருந்து சிறுவர்கள் வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள். சாலை ஓரங்களில், சினிமா அரங்குகளில், உணவகங்களில், ரயில் நிலையங்களில் இவர்கள் கண்ணில் படுகிறார்கள். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று இவர்கள் கண்கள் ரகசியமாக நோக்குகின்றன. யாராவது அழைத்து விசாரிக்கும்போது, வாய் நிறையப் பொய் சொல்கிறார்கள்.

வீட்டைவிட்டு ஓடி வந்த ஒவ்வொரு சிறுவனும் ஒரு காரணம் வைத்திருக்கிறான். அந்த உண்மையை அவன் யாரோடும் பகிர்ந்துகொள்வதே இல்லை. கையில் இருக்கும் காசை சாப்பாடு, சினிமா, கூலிங்கிளாஸ், சிகரெட், பீர் என்று இரண்டு நாட்களில் செலவழித்துவிட்டு, அதன் பிறகு ஏதாவது ஒர் உணவகத்தில், கடையில் வேலை செய்கிறான். சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் அங்கிருந்தும் ஓடிவிடுகிறான்.

சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32

அவன் அடைய விரும்பிய சந்தோஷங்கள் சீக்கிரம் வடிந்துவிடுகின்றன. அதன் பிறகு நெருக்கடி அவனைத் துரத்தத் துவங்குகிறது. திசைகெட்டு அலைகிறான். சொந்த அடையாளத்தை மறைத்தபடியே பெருநகரம் ஏதாவது ஒன்றில் தன்னைக் கரைத்துக்கொண்டுவிடுகிறான். இந்தத் தொடர் சோகம் ஏன் நமக்கு வெறும் செய்தியாக மட்டுமே தெரிகிறது. சாலைச் சிறுவர்கள் மீது ஏன் நாம் அக்கறை காட்ட மறக்கிறோம்?

பள்ளியில் படித்த நாட்களில் சிங்கமுத்து என்ற என் வகுப்புத் தோழன் ஒருவன் எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக வீட்டைவிட்டு ஓடிப்போனான். எம்.ஜி.ஆர். இருப்பது சென்னையில் என்றுகூடத் தெரியாமல், அவன் கள்ள ரயில் ஏறி கன்னியாகுமரியில் இறங்கியிருக்கிறான். வேகவேகமாகக் கடற்கரையில் நடந்து போய் எம்.ஜி.ஆர். வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்து இருக்கிறான். ஒருவருக்கும் தெரியவில்லை. பசியோடு அலைந்து திரிந்து போலீஸாரிடம் மாட்டிக்கொண்டான்.

அவர்கள் போன் செய்து பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்துவிட்டார்கள். வீட்டில் அவனுக்குச் சரியான அடி. பள்ளி முழுவதும் விஷயம் பரவி, அவன் பெயரே எம்.ஜி.ஆர். என்றானது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மாலை திரும்பவும் சிங்கமுத்து ஓடிப்போனான். இன்று வரை அவன் வீடு திரும்பவே இல்லை. வருடக்கணக்கில் குடும்பம் அவனைத் தேடி அலைந்து கதறியது. ஆனால், அவன் கிடைக்கவே இல்லை. எம்.ஜி.ஆரைப் பார்த்தானா... இல்லையா என்றும் தெரியவில்லை.

சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32

கண் முன்னே வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்படும் ஜீவராசிகளைப்போல சிலர் நம் கைவிட்டுப் போய்விடுகிறார்கள். பின்பு, அவர்கள் நினைவுகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தியைப் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன், தன் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயைத் திருடிக்கொண்டு நண்பர்களுடன் சென்னைக்கு ஓடி வந்து இஷ்டம்போலக் குடித்து, ஊர் சுற்றி, கையிருப்பு காலியானதும் பேருந்தில் ஒரு ஆளின் செல்போனைத் திருட முயன்று பிடிபட்டான் என்றிருந்தது.

வீட்டில் திருடுவது சிறுவர்களின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. ஐந்தோ, பத்தோ திருடுவார்கள். அதைவைத்து சினிமா பார்ப்பது, சிகரெட் பிடிப்பது என்று செலவழிப்பார்கள். பின்பு ஒருநாள் பிடி பட்டு அடி வாங்கி இனிமேல் திருந்திவிடுவதாகப் பொய் சத்தியம் செய்வார்கள். அது தலைமுறை தலைமுறையாக மாறாத குணம்.

ஆனால், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்பாவின் சம்பளப் பணம் முழுவதையும் திருடிக் கொண்டு சென்னைக்கு வந்து குடிப்பது, ஒரு நாளைக்கு மூன்று சினிமா பார்ப்பது, வேசைகளைத் தேடி அலைவது, விதவிதமான காலணிகள் வாங்கு வது என்ற அதீத மனப்பாங்கைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிறுவர்கள் ஏன் தன் வயதை மீறி நடந்துகொள்ள எப்போதும் ஆசைப்படுகிறார்கள். ஆறாம் வகுப்பிலே காதல் தோல்வி கண்ட சிறுவர்கள் இன்று இருக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு போவதற்குள் பாய் ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் எண்ணிக்கை எத்தனை என்று கணக்கிடுகிறார்கள்.

உல்லாசமாக ஊர் சுற்ற பைக் தேவைப்படுகிறது. செலவழிக்க கை நிறையப் பணம் வேண்டியிருக்கிறது. இணையத்தின் வழியே எளிதாகக் கிடைக்கும் ஆபாசப் படங்கள் அவர்கள் பாலியல் ஆசைகளைக் கொந்தளிக்கச் செய்கின்றன. விளம்பரங்கள் உருவாக்கும் கனவுகள் தூண்டுகின்றன. குற்றத்தைக் கொண்டாடும் திரைப் படங்கள் அவர்களுக்கு முன் உதாரணமாகின்றன.

பதின்வயதுச் சிறுவன் முன் எப்போதையும்விட இன்று அதிகம் தத்தளிப்பும் குழப்பமும்கொண்டு இருக்கிறான். அவனைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இரு தரப்பும் தவிக்கிறது. தமிழகத்தில் முன்பு வறுமையால் வீட்டைவிட்டு ஓடியவர்கள் அதிகம் இருந்தார்கள். இன்று ஓடுகிறவர்களில் பெரும்பான்மையினர் வீடு அனு மதிக்காத உல்லாசங்களைத் தேடியே வெளியேறு கிறார்கள்.

சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32

சிறு வயதில் குற்றவாளிகளாகப் பிடிபட்டு, சீர்திருத்தப் பள்ளியில் படித்தவர்கள் இன்று என்னவாக இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் வாழ்வில் உயர்ந்திருக்கிறார்கள்? நேரடியாக அந்தத் தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாக உள்ள ஜெயில் எப்படி இருக்கிறது? அங்கே என்ன கற்றுத்தருவார்கள்? யார் பாடம் நடத்துகிறார்கள்? அந்த வகுப்பறை எப்படி இருக்கிறது என்ற அடிப்படை விவரங்கள் பொதுமக்கள் அறியாதவை.

நான் அறிந்தவரை புதுக்கோட்டையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை அரசின் சிறைத் துறை நடத்தி வருகிறது. அங்குள்ள சிறுவர்கள் ஓர் இசைக் குழுவை உருவாக்கி உள்ளார்கள். அந்த இசைக் குழுவின் நிகழ்ச்சி ஒன்றை ஒருமுறை கேட்டு இருக்கிறேன். சிறப்பாக இருந்தது.

வீட்டைவிட்டு ஓடி வந்த சிறுவர்களில் பலர், தவறான ஆட்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். வேறு மாநிலங்களுக்குக் கடத்தப்படுகிறார்கள். கொத்தடிமைகளாக, கூலியாட்களாக ரத்தம் சொட்டச் சொட்டப் பிழிந்து எடுக்கப்படுகிறார்கள். ஒரு சிறுவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குப் பெற்றோர் மனநிலை ஒரு முக்கியக் காரணமே.

இரானில் இளங் குற்றவாளிகள் பகிரங்கமாகவே தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறார்கள். 17 வயது உடைய பெனாட் மதுக் கடையில் ஏற்பட்ட சண்டையில் எசான் என்பவனைப் பாட்டிலால் தாக்கிக் கொன்றுவிடுகிறான். அதற்காக அவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை நிறைவேற்ற ஆணையிட்டது. மூன்று ஆண்டுகள் மேல்முறையீடு நடைபெற்றது.

இதற்கிடையில், பெனாட்டின் அப்பா மற்றும் உறவினர்கள், நண்பர்கள், எசானின் தாய், தந்தையிடம் மண்டியிட்டு அவனை மன்னிக்கும்படி வேண்டினார்கள். எசானின் பெற்றோர் அவனை மன்னிக்கவே இல்லை. முடிவில் தூக்குத் தண்டனைக்கு முன் தினம் பெனாட், எசானின் தாயைச் சந்தித்து, அவள் காலில் விழுந்து கண்ணீர்விட்டுத் தன்னை மன்னித்துவிடும்படியாக அழுதான்.

சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32

'நாளை உன் கழுத்தை இறுக்கப்போகும் சுருக்குக் கயிற்றை வேடிக்கை பார்க்கவே நான் காத்திருக்கிறேன்' என்று விலக்கித் தள்ளிவிட்டாள் எசானின் தாய். மறு நாள் பெனாட் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டு ஒரு முக்காலி மீது நிறுத்தப்பட்டு இருந்தான். எசானின் தாய், அந்த முக்காலியைத் தன் காலால் உதைத்து பெனாட்டின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிவைத்தாள். அவள் கண் முன்னே பெனாட்டின் சாவு நடந்தேறியது. புரிந்துகொள்ள முடியாத மனித உணர்வெழுச்சியின் நாடகம் அது.

வீட்டைவிட்டு ஓடி வந்த சிறுவர்களின் வாழ்க்கை குறித்து தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. திரைப்படங்களில் அது வெறும் உத்தி மட்டுமே. ஆனால், அஸ்ஸாமியின் புகழ்பெற்ற இயக்குநரான ஜானு பரூவா Konikar Ramdhenu என்ற படத்தை இயக்கிஇருக்கிறார். இதை டெல்லி திரைப்பட விழாவில் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பான படம். இந்தப் படம் வீட்டைவிட்டு ஓடி வரும் சிறுவனின் பார்வையிலே விவரிக்கப்படுகிறது.

குக்கூ... 11 வயது கிராமத்துச் சிறுவன். ஒருநாள் வீட்டைவிட்டு ஓடி கௌஹாத்தி நகருக்கு வந்துவிடுகிறான். நகரில் எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு கார் மெக்கானிக் பட்டறையில் வேலைக்குச் சேருகிறான். அங்கே அவனைப்போல ஓடி வந்த சில சிறுவர்கள் வேலை பார்க்கிறார்கள். பட்டறையிலே உறங்குகிறான். ஒருநாள் குக்கூவை மெக்கானிக் வன்புணர்ச்சிகொள்ள முயற்சிக்கிறான். பயந்துபோன குக்கூ அவனை இரும்பு ஸ்பானரால் ஓங்கி அடிக்க, அந்த மெக்கானிக் இறந்துபோய்விடுகிறான்.

குக்கூவை போலீஸ் கைதுசெய்து நீதிமன்றம் கொண்டுசெல்கிறார்கள். அங்கே குக்கூ உண்மையைச் சொல்ல மறுக்கிறான். ஆனால், குற்றத்தை ஒப்புக்கொள்கிறான்.

மிகப் பழமையான சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு குக்கூ அனுப்பப்படுகிறான். அந்தப் பள்ளியில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருக்கிறது. அதில் இரண்டு ஒப்பந்தக்காரர்கள் காசு அடிக்கிறார்கள். அங்கும் சிறுவர்கள் கட்டாயப் பால் இச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஊழல் மோசடி தலைவிரித்து இருக்கிறது. அந்தச் சூழலை குக்கூவால் தாங்க முடியவில்லை. வன்புணர்ச்சியை எதிர்க்கும் அவனைச் சக சிறுவர்கள் மற்றும் சிறைக் காவலர் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அவன் இந்த நரகத்தில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று தெரியாமல் போராடுகிறான்.

சீர்திருத்தப் பள்ளிக்கு வந்தபோதும் தான் ஏன் மெக்கானிக்கைக் கொன்றேன் என்ற உண்மையை குக்கூ சொல்லவே இல்லை. அதை விசாரித்து அறிக்கை அனுப்பும்படி சிறை வார்டனுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பிஸ்வபாரோ என்ற அந்த வார்டன் மிக நல்லவர். குக்கூவோடு அன்பாகப் பழகி, அவன் ஏன் வீட்டைவிட்டு ஓடிவந்தான் என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்கிறார். குக்கூ தன் ஊர் மிக அழகான கிராமம் என்றும் அங்கே தனது வீடு மிகப் பெரியது என்றும் கதைவிடுகிறான்.

அவனைப்பற்றிய விவரங்களை அறிந்துகொண்ட வார்டன், ஒரு நாள் கிளம்பி அந்தக் கிராமத்துக்குப் போகிறார். அது மிகவும் பின்தங்கிய கிராமம். எந்த அடிப்படை வசதியும் இல்லை. குக்கூவின் அம்மா இறந்துபோய்விட, மாற்றாந்தாய் அவனை மிகவும் துன்புறுத்தி இருக்கிறாள். குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கிறது. அதனால்தான் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கிறான்.

இந்த உண்மைகளை அறிந்த வார்டன், குக்கூவின் பிரச்னை எங்கிருந்து துவங்கியது என்பதை அறிந்துகொள்கிறார். அவரே மெக்கானிக் பட்டறைக்கும் சென்று விசாரிக்கிறார். உண்மை முழுமையாகப் புலப்படுகிறது.

முடிவில், அவர் நீதிமன்றத்தில் உண்மையை எடுத்துச்சொல்லி, குக்கூவை விடுவிக்கிறார். அவன் ஊருக்குக் கிளம்புகிறான். அவனோடு தானும் கிராமத்துக்கு வரப்போவதாக பிஸ்வா சொல்லவே, உண்மையைச் சொல்லிவிடுகிறான் குக்கூ. தனக்கு அந்த உண்மைகள் யாவும் முன்பே தெரியும் என்று அவனை அணைத்துக்கொள்ளும் பிஸ்வா, முடிவில் குக்கூவைத் தனது பையனாகத் தத்தெடுத்துக்கொள்கிறார். சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். ஏன் சிறுவர்கள் குற்றவாளி ஆக்கப்படுகிறார்கள் என்பதை இந்தப் படம் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

வீட்டை விலக்கி ஓடிய கால்கள் எவ்வளவு தூரம் கடந்து போனாலும், கண்ணில் விழுந்த மணல் துகள்போல வீட்டின் நினைவுகள் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கக்கூடும். அதுதான் என்றாவது அவர்களை ஊருக்கு அழைத்துவரும் ஒரே துணை!

சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32

பார்வை வெளிச்சம்!

ணிப்பூரின் தலைநகரான இம்பாலாவில் வசிக்கும் கே.பிரதீப் குமார் ஓர் எய்ட்ஸ் நோயாளி. நோயால் மனம் தளர்ந்துவிடாமல் தன் உடலை முறையாக உடற்பயிற்சி செய்து உறுதியாக்கி, 60 கிலோ எடைப் பிரிவில் வெற்றிபெற்று, மிஸ்டர் மணிப்பூராக 2000-ம் ஆண்டு தேர்வு பெற்றார். எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை. அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பதே தனது முக்கியப் பணி எனும் பிரதீப்குமார், தனது ஒரே ஆசை மிஸ்டர் வேர்ல்டு பட்டத்தை வெல்ல வேண்டும் என்கிறார். பொதுவாக, எய்ட்ஸ் நோயாளிகள் உடல் நலிவுற்று நோயாளியாகவே வாழ்ந்து இறக்க நேரிடும் என்ற அவநம்பிக்கையை உருமாற்றி, தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் பிரதீப்குமார்!

 
சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - எம்.ஜி.ஆரைப் பார்க்கணும்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 32