மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 28

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 28

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28
எஸ்.ராமகிருஷ்ணன் , ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28
இளைஞர்களை நம்பலாமா?
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28

கொண்டாட்டங்களில் மட்டும்தான் இன்றைய இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. யாருக்கும் சமூக அக்கறைகள் கிடையாது. குடி, ஆட்டம் பாட்டம், விரைவாகப் பணம் சம்பாதிக்கும் பேராசை இவைதான் இளைஞர்களுக்குப் பொது குணம் என்று பரவலாக ஒரு எண்ணம். நான் இந்த எண்ணங்களுக்கு நேர் எதிரானவன். முன் எப்போதையும்விட இன்றுதான் இளைஞர்கள் சமூக அக்கறைகளில் நேரடியாகவும் சுய அர்ப்பணிப்போடும் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்த சமூகத்துக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறார்கள். அது பலரின் கண்ணில் படுவது இல்லை, அல்லது அதன் முக்கியத்துவம் பெரிதாக அடையாளம் தெரியாமலே போய்விடுகிறது.

ஜெர்மனியில் உள்ள கனரகத் தொழிற்சாலை ஒன்றில் உயர் பதவியில் வேலை செய்த 28 வயது இளைஞன், அதை உதறிவிட்டு, சென்னையில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுவதை நான் அறிவேன். இது போலவே, அமெரிக்காவில் பார்த்து வந்த வேலையைத் துறந்துவிட்டு, வனவாசிகளுக்கு என்று சிறப்புப் பள்ளி அமைத்து, கல்வி அறிவு தந்து வரும் இளைஞர்களை அறிவேன்.

மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் என்று துறை சார்ந்த தங்கள் திறமைகளை மக்கள் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற பொது அக்கறை, முன் எந்தக் காலத்தையும்விட இன்று அதிகம் காணப்படுகிறது. ஆனால், இவர்கள் சந்திக்கும் தடைகளும் முட்டுக்கட்டைகளும் அதற்கான உரிய அங்கீகாரம் இன்மையுமே இவர்களின் தொடர்ந்த செயல்பாட்டினைத் தடுத்துவிடுகிறது.

உயர் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றிய ஓர் இளைஞன், விவசாயத்தின் மீது ஆர்வம்கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகம் திரும்பியிருந்தான். ஒருநாள் என்னை வந்து சந்தித்து, தான் கிராமத்தில் விவசாயம் செய்யப் போவதாகத் தெரிவித்தான். முதன் முறையாக விவசாயம் செய்ய விருப்பப்படும் ஒரு படித்த விஞ்ஞானியை நேரில் காண்பது சந்தோஷமாக இருந்தது. விவசாயத்தில் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைப்பற்றி விசாரித்தேன். தன்னுடைய சொந்தக் கிராமத்தில் கொஞ்சம் இடம் வாங்கி, புதிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய விரும்புவதாகச் சொன்னான். அந்த இளைஞனின் கண்களில் விவரிக்க முடியாத கனவுகள் மிதந்துகொண்டு இருந்தன.

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உருவாகி இருக்கின்றன. ஆனால், எத்தனை விவசாயக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன? விவசாயம் சார்ந்த எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம் சார்ந்த அக்கறைகள் உருவாகியுள்ள சூழலில்கூட, அதை முறையாகக் கற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் ஏன் கல்வி அமைப்புகள் முன்வரவே இல்லை? இயற்கை விவசாயம்பற்றி கற்றுக்கொள்வதற்கு என ஏன் தனியே ஒரு கல்லூரி அமைக்கக் கூடாது? அதோடு, விவசாயத்தின் ஆதாரப் பிரச்னையான நீர்ப்பங்கீடு, நீராதார மேம்பாடு போன்றவற்றைப்பற்றிய அக்கறைகள் ஏன் கல்வி நிறுவனங்களில் சிறப்புக் கவனம் பெறவே இல்லை என்று அன்று நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

தன்னிடம் பெரிய கனவுகள் இல்லை. ஆனால், நடைமுறைப்படுத்தக்கூடிய சில சாத்தியங்களைத் தான் வைத்திருப்பதாகவும், அதை ஏதோ ஒரு வணிக நிறுவனத்திடம் விற்பதைக் காட்டிலும், சுயமாகச் செய்து பார்த்து மக்களுக்குப் பயன் உள்ளதாக மாற்ற முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தான், அந்த இளைஞன்.

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28

தன்னுடைய கிராமத்துக்குச் சென்று ஐந்து ஏக்கர் அளவில் நிலம் வாங்கி, அதில் தன்னுடைய விவசாயப் பணிகளைக் கவனிக்கத் துவங்கினான். அவன் சந்தித்த முதல் பிரச்னை, அவனது அக்கறைகளை அவனது குடும்பம் முட்டாள்தனமான செயலாகக் கருதி, அதற்கு ஒத்துழைப்புத் தர மறுத்தது. விவசாயக் கூலிகளாகத் தாங்கள் வாழ்ந்த கடந்த காலத்தைப்போலவே மகனும் கிராமத்தில் வந்து விவசாயம் செய்வது அவர்களை அவமானப்படுத்துவதாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அடுத்த தடை அவனது சாதி. இரண்டும் அவனை முடக்க ஆரம்பித்தன. எனக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதிஇருந்தான்.

முன் எப்போதையும்விட இன்று கிராமங்களில் சாதியும் சாதிய அடையாளங்களும் மிக முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றன. தனது விவசாய முயற்சிகளுக்கு சொந்தக் கிராமத்தில் உள்ள இன்னொரு சாதியினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஓர் ஆண்டு முழுவதும் தன்னுடைய விவசாயம் தொடர்பான முயற்சிகளை உள்ளூர் மக்களுக்குப் புரியவைப்பதற்குப் பெரிய போராட்டத்தை மேற்கொண்டான். மக்கள் பாரம்பரியமான விவசாய அறிவைக் காரணம் இல்லாமலே கைவிட்டுவிட்டார்கள். அதே நேரம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும் இல்லை. விவசாயம் வெறும் வணிக நோக்கமாக மட்டுமே மிஞ்சிவிட்டிருக்கிறது என்பதை அவன் முழுமையாக உணர்ந்தான்.

இதற்கிடையில் உள்ளூர் பஞ்சாயத்தின் இடையூறுகள், விவசாயத் துறை சார்ந்த அதிகாரிகளின் முட்டுக்கட்டைகள், என்று அவனது முயற்சிகளில் ஒன்றிரண்டுகூடச் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், அவனது பணம் ஏதேதோ வழிகளில் அவனை விட்டுப் போய்க்கொண்டே இருந்தது. சற்று மனச்சோர்வு அடைந்து, ஆறு மாத காலம் மறுபடியும் அமெரிக்கா சென்றிருந்தான். அங்கிருந்தபடியே தனது கிராமத்தில் உள்ள விவசாயப் பணிகளை வீட்டாரைக் கவனித்துக்கொள்ளச் செய்தான்.

ஆனால், ஊர் திரும்பி வந்தபோது அவனது விவசாய முயற்சிகள் முழுமையாகக் கைவிடப்பட்டு, சிதைந்து போயிருப்பதைக் கண்டு, மனச்சோர்வும் அதிருப்தியும்

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28

அடைந்தான். ஆனாலும், அவனது ஆசையைக் கைவிடவில்லை. அடுத்த ஒரு வருடம் விவசாயப் பண்ணை ஒன்றை அமைக்கப் போராடினான். இப்போது அவனது பிரச்னை, அவர் நிலத்தை ஒட்டிய பகுதிகளை வீட்டுமனையாக விற்பனை செய்துவிட்டிருந்தார்கள். ஆகவே, அவனது நிலத்தையும் வீட்டுமனையாக விற்கத் தயாரா என்று அடுத்தடுத்து நிலத் தரகர்கள் நெருக்கடி தர முயற்சித்தார்கள். மூன்று ஆண்டுகள் அவன் விடாமல் முயற்சி செய்து தோல்வியைச் சந்தித்தான்.

பின்பு ஒரு நாள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டுக் கிளம்பினான். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தாண்டின் இரவில் எங்கிருந்தோ தொலைபேசியில் என்னிடம் பேசினான். நிச்சயம் வெறுத்துப்போய் அமெரிக்கா போயிருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால், அவன் அஸ்ஸாமுக்குச் சென்று அங்கே ஒரு விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, பண்ணை அமைத்திருப்பதாகவும் அந்தப் பண்ணை சிறப்பாகச் செயல்படுவதாகவும் சொல்லி, அமெரிக்க வேலையை விட்டுவிட்டு, முழுமையாகத் தான் ஒரு விவசாயியாக இருப்பதாகவும் தெரிவித்தான்.

ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் விஞ்ஞானம் படித்துவிட்டு விவசாயியாக மாறுவதை ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறோம். தடைகளை உருவாக்கி அவர்களை இருப்பிடத்தில் இருந்தே விரட்டி அடிக்கிறோம் என்று ஆதங்கமாக இருந்தது. இந்த இளைஞரின் செயல் எனக்கு மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியது. விவசாயம் மட்டுமே தனது துறை என்று தேர்வு செய்து, அதில் தான் விரும்பியதைச் சாதிக்கும் அந்த மன உறுதி மிகுந்த பாராட்டுக்கு உரியது.

தமிழ்நாட்டில் விவசாயக் கல்லூரியில் படித்துவிட்டு தன்னை முழு நேர விவசாயியாகக் கொண்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கக் கூடும். நாம் வியந்து பார்க்கும் மேற்குலகம் ஒரு பக்கம் தொழில்நுட்பத்தில் எவ்வளவு

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28

மேம்பாடு அடைந்தாலும் அடிப்படை விவசாயத்தைக் கைவிடவில்லை. மாறாக, இளைஞர்கள் விவசாயம் சார்ந்த அக்கறையுடன் செயல்படுவதையும் புதிய பண்ணைகள் அமைத்து விவசாய மேம்பாட்டினை உருவாக்குவதையும் கண்கூடாகக் காண முடிகிறது.

இளைஞர்கள் தங்கள் விருப்பத்தின் பாதையில் போராடத் தயாராகவே இருக்கிறார்கள். அவர்கள் அனுபவத்தில் இருந்து உருவாக்கும் பாடங்களைப் பொதுவெளி அங்கீகரிக்கவே இல்லை. அதுதான் முக்கியக் குறைபாடு. உலகெங்கும் இளைஞர்கள் புதிய சிந்தனைகளுடன், மாற்று முயற்சிகளுடன் துறை சார்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு இன்று சாதனை செய்தவர்களின் வயது விவரங்களைப் பார்த்தால் துல்லியமாகத் தெரிகிறது.

ஜெர்மனியில் வெளியான The Edukators என்றொரு படம் பார்த்தேன். மூன்று இளைஞர்களின் கதை. ஒரு விடுமுறை நாளின்போது ஜெர்மன் நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊரே கொண்டாட்டத்தில் மிதக்கிறது. அதே நகரில் ஓர் உயரமான இடத்தில் 20 வயது ஆணும் பெண்ணும் ஒன்றாக அமர்ந்தபடியே நகரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நகரில் மக்கள் தினசரி குறைந்தபட்சம் 6 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். 4 மணி நேரம் குடி, கொண்டாட்டம் என்று செலவிடுகிறார்கள். ஒருவருக்கும் அடுத்த மனிதர்பற்றி அக்கறையே இல்லை. என்ன வாழ்க்கை இது என்று அந்தப் பெண் எரிச்சல்படுகிறாள். அந்த இளைஞன், 'எவ்வளவு போராட்டங்கள், யுத்தத்தில் உயிர் இழப்புகள், அத்தனையும் மக்கள் எளிதாக மறந்துவிடுகிறார்கள். பணம்தான் மக்களின் ஒரே ஆதர்சம். ஆனால், இந்த நகரைப்பற்றிக் கவலைப்பட என்னைப்போல சிலர் இருக்கிறார்கள். இந்த மக்களுக்கு ஒரு பாடம் கற்றுத் தர வேண்டும். அந்தப் பாடத்தைப் பணம் படைத்தவன் உணர வேண்டும்' என்று சொல்கிறான்.

அதுதான் படத்தின் ஆதாரப்புள்ளி. படத்தில் மூன்று இளைஞர்கள் நகரில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களின் வீடுகளைத் தேடி அடையாளம் காண்கிறார்கள். அதில் ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்குள்ள சோபா, கட்டில் நாற்காலி போன்றவற்றை இடம் மாற்றிப் போடுகிறார்கள். 'உங்கள் பாதுகாப்பை மீறி உங்கள் வீட்டுக்குள் எங்களால் உள்ளே வர முடியும். இப்போது நாங்கள் உங்கள் அறையை மாற்றிவைத்துள்ளோம். உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அதை நீங்கள் செய்யத் தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிஇருக்கும்' என்று ஒரு குறிப்பை இளைஞர்கள் எழுதிவைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படி அவர்கள் புகுந்த வீடுகளைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர்கூட அவர்கள் மீது புகார் கொடுப்பது இல்லை. 'பணக்காரன் தனது பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளவே மாட்டான்' என்று ஒரு இளைஞன் ஆத்திரப்படுகிறான்.

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28

இந்தச் சூழலில் ஒரு பணக்கார வீட்டுக்குள் புகுந்து வீட்டினைத் தலைகீழாக வைத்துக்கொண்டு இருக்கும்போது, பணக்காரன் வந்துவிடுகிறான். வேறு வழி இல்லாமல் அவனை மடக்கி கடத்திக்கொண்டு போகிறார்கள்.

படம், கடத்தப்பட்ட பணக்காரனுக்கும் இளைஞர்களுக்கும் நடக்கும் முடிவு இல்லாத விவாதங்களில்தான் வலிமை அடைகிறது. '6 ஆயிரம் சதுர அடி வீட்டில், கணவன் - மனைவி இரண்டு பேர் வசிக்கிறீர்கள். எதற்காக இத்தனை அறைகள், கார்கள், நீச்சல்குளம், படகு வீடு, விலை உயர்ந்த தொலைக்காட்சிப் பெட்டிகள். ஆடம்பரங்கள்?' என்று இளைஞன் கேட்கிறான். அதற்குப் பணக்காரன், 'எதையும் தன்னால் விலை கொடுத்து வாங்க முடியும் என்பதுதான் பணக்காரனின் விருப்பம். வாங்கிய பொருட்களை எல்லாம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று நினைப்பது மிடில் கிளாஸ் மனப்பாங்கு' என்று கேலி செய்கிறான் பணக்காரன்.

பணக்கார வீடுகளில் கணவன், மனைவியிடையே சண்டை, பிள்ளைகள் ஹாஸ்டலில் வளர்கிறார்கள். உறவினர்கள் எவரும் வருவதே இல்லை. வீடு முழுவதும் போலித்தனம். ஏன் இதை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று இளைஞன் கேட்கிறான். அதற்குப் பணக்காரன் அதை மறைப்பதற்குத்தான் அவ்வளவு பெரிய வீடு, கார், அலங்கார உடைகள் எல்லாமே. உண்மையில் பணக்காரன் நிம்மதியற்றவன். அவனால், ஒருவேளை சந்தோஷமாகச் சாப்பிட முடியாது என்று உண்மையை ஒப்புக்கொள்கிறான், பணக்காரன்.

பணக்காரன் மீது படித்த இளைஞர்கள் வருத்தம் கொள்கிறார்கள். அவனை வீட்டில் கொண்டுபோய் ஒப்படைக்க முடிவு செய்கிறார்கள். அவர்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறான் பணக்காரன். ஒருநாள் பணக்காரனை அவன் வீட்டில் கொண்டுபோய்விடுகிறார்கள். அவன் உடனே போலீஸில் புகார் செய்து, அவர்களைக் கைது செய்ய முயற்சி எடுக்கிறான். இளைஞர்கள் தப்பிவிடுகிறார்கள். ஓர் இளைஞன் சொல்கிறான், 'பணக்காரர்கள் திருந்தவே மாட்டார்கள். அவர்களைத் திருத்துவது எளிதில்லை. ஆனால், இளைஞர்கள் அவர்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பயம் அவர்களுக்குத் தெரியும்' என்பதோடு படம் நிறைவுறுகிறது.

இன்றைய உலகை இளைஞர்கள் அக்கறையுடன் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அக்கறையை அங்கீகரிக்கவும் மாற்றுச் சக்தியாக மாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை என்றே தோன்றுகிறது!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28

கல்கத்தா அருகில் உள்ள ஹான்ஸ்புகாரில் சாலையோரம் காய்கறி விற்றுக்கொண்டு இருந்த சுபாஷினி மிஸ்ரி தன்னைப்போலவே நடைபாதைவாசிகள் மருத்துவ உதவிகள் இல்லாமல் அவதிப்படுவதைக்கண்டு, அதற்கு மாற்றுவழி ஏற்படுத்த வேண்டும் என்று தனது சேமிப்பு மற்றும் நன்கொடைகள் மூலம் ஓர் இலவச மருத்துவமனையைத் துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். படிக்காத காய்கறி விற்கும் பெண்ணின் விடா முயற்சி இன்று ஒரு மாற்று மருத்துவமனையாக உருவாகி, ஆயிரமாயிரம் எளிய மக்களுக்கு உதவி செய்து சாதித்து வருகிறது!

 
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - இளைஞர்களை நம்பலாமா? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 28