மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 08

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 08

பகைவனுக் கருள்வாய்!

 ##~##

1972.

ஆகஸ்ட்டு 15.

கண்ணதாசனிடமிருந்து ஒரு கால்!

'வாலி! கவிதா ஹோட்டலுக்கு நைட் எட்டு மணிக்கு வாங்க; சுதந்திரத்தின் வெள்ளி விழாவை - நள்ளிரவில் ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டாடுறோம்!’

கண்ணதாசன்!

பேரறிவும், பிள்ளை மனமும் ஒரு சேரப் பிசைந்துவைத்த ஒரு கலவை!

மாலை நேர

மேடைகளில் -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 08

எளியேனும் கண்ணதாசனும்

எலியும் பூனையுமாய்; கோப்பையை -

ஏந்தும் இரவுப் பொழுதுகளில்

எதுகையும் மோனையுமாய்!

காங்கிரஸ் மேடைகளில் கண்ணதாசன் என்னைக் காய்ச்சுவார்.

'எவண்டா எழுதியது - காது கொடுத்துக் கேட்டால் குவா குவா சத்தம் என்று? பிள்ளைத்தாய்ச்சி வயத்துல காதெ வெச்சுப் பாருங்க - 'அப்படிக் கேக்குதான்னு!’

எம்.ஜி.ஆர். மேடைகளில் கண்ணதாசனை எளியேன் ஒரு பிடி பிடிப்பேன்.

'காதலிக்கவே நேரமில்லாதவனுக்குத் தன்னைக் காதலிப்பார் யாருமில்லைன்னு - எப்படிய்யா தெரியும்?’

இப்படி இருவரும் பொருதுவோம்; இரவில் - சித்ராலயா அலுவலகத்திலோ, எம்.எஸ்.வி. வீட்டிலோ - ஒன்றாக OLD SMUGGLER பருகுவோம்!

காரை நானே ஓட்டிக்கொண்டு கவிதா ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தேன் இரவு எட்டு மணிக்கு.

அன்பில் தர்மலிங்கம்; சித்ரா கிருஷ்ணசாமி; சிவாஜி ஃபிலிம்ஸ் ஸ்ரீனிவாசன்; எம்.எஸ்.விசுவநாத அண்ணன்; வானதி திருநாவுக்கரசு என -

கலக்கலாக ஒரு சபை ஏற்கெனவே களை கட்டியிருந்தது. அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு மட்டும் - TEETOTALLER!

கையில் கிண்ணத்தை வைத்துக்கொண்டு கண்ணதாசன் இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றிக் கவிதைகள் பாடினார். சபை, சிரக்கம்பம் செய்தது.

என் பங்குக்கு நானும் ஓரிரு பாடல்களை இசைத்தேன்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 08

நள்ளிரவு வந்தது. கடிகார முட்கள் இரண்டு ஒன்றானது. அனைவரும் - நிதானத்தில் இல்லாமலேயே 'ஜெய்ஹிந்த்’ என்று கூவி -

சுதந்திர வெள்ளி விழாவிற்கு ஸ்வாகதம் சொன்னோம்!

பாம்பு ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு - வட இந்திய நடனம் ஒன்றை ஆடலானாள் ஓர் இளம் பெண்!

தற்கு முந்தைய வாரம்தான் - அந்த ஹோட்டலில் ஒரு ரெய்டு நடந்தது.

கன்னடத்தில் பெரிதாகவும், தமிழில் சற்றுக் குறைவாகவும் பிராபல்யம் பெற்றிருந்த ஓர் இசையமைப்பாளர், காவல் துறையின் வசமாகி - அது பேப்பரில் வந்திருந்தது! அதுஎன் கவனத்திற்கு அப்போது வரவில்லை; எல்லோரும் ஆட்டம் பாட்டம் முடிந்து, அவரவர் காரில் புறப்பட்ட பின்பு -

நான் ஒரு பெண்ணுடன் ஓர் அறைக்குள் ஒதுங்கினேன்!

கதவைச் சாத்தி நான் உள்ளே தாளிடத் தொடங்குகையில், ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் கண்ணதாசனிடம் பேசினார் கீழ்க்கண்டவாறு; அது என் காதில் விழுந்தது!

'அண்ணே! வாலி நல்ல ஆளா இருந்தாக்கூட - தொழில்ல உங்களுக்கு எதிர்க்கடை விரிச்சவரு! இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி - இத்தனாம் நெம்பர் ரூமை ரெய்டு பண்ணுங்கன்னு - வெளியில இருந்து போலீசுக்கு ஒரு இன்ஃபார்மர் மாதிரி போன் போடுறேண்ணே! வாலி மாட்டுவாரு; பேப்பர்ல வரும்; அது எம்.ஜி.ஆரையும் தர்மசங்கடத்துல வைக்கும்!’

சிப்பந்தி இப்படிச் சொன்னவுடன், அந்த ஆளின் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விட்டார் கண்ணதாசன்!

'நான் கூப்டு வந்திருக்கிறான் அவன்; என்னை நம்பி வந்தவனை, போலீசுல புடிச்சுக் கொடுக்கச் சொல்றியா? என்னை அவ்வளவு கேவலமானவன்னா நெனச்சே? அந்த ஆளு எப்ப ரூமெ விட்டு வெளிய வர்றான்னோ - அப்ப ஒழுங்கா கார்ல ஏத்தி அனுப்பு!’

கண்ணதாசன் கிடுகிடுவென்று மாடியிறங்கிப் போன பின் -

சில நொடிகளிலேயே நான் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

தலைக்கேறிய போதை தரையிறங்கவும் - நான் காரேறி வீடு வந்து சேர்ந்தேன், என் கண்கள் பனிக்க!

கண்ணதாசன் விரும்பியிருந்தால், என்னை அசிங்கப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கலாம்; அன்னணம் செய்யவில்லை! ஏன்?

அரி, ஒரு நாளும் நரியாகாது; நெறி ஒரு நாளும் வெறியாகாது!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 08

துபோல் இன்னொரு சந்தர்ப்பம். என் வீட்டுக்குப் பக்கம் ஒரு படக் கம்பெனி. அங்கு பாட்டெழுதிவிட்டு, என் வீட்டுக்குக் கண்ணதாசன் வர,

என் மனைவி காஃபி போட்டுக் கொடுத்தாள். நானும் கவிஞரும் பேசிக்கொண்டிருக்கையில் -

திருச்சி பொன்மலையைச் சேர்ந்த என் பழைய நண்பன் ஒருவன், அவன் வீட்டுத் திருமணப் பத்திரிகை கொடுக்க வந்தான்.

கண்ணதாசனைப் பார்த்ததும் அவன் சற்று அதிர்ச்சியுற்றான்; அந்த நேரத்தில் அவனைப் பார்த்து நானும் சற்று அதிர்ச்சியுற்றேன்.

கண்ணதாசனோ, 'என்ன தம்பீ! எப்படிஇருக்கே? வீட்டுல கல்யாணமா? எனக்கொரு பத்திரிகை கொடு; வாழ்த்து அனுப்புறேன்!’ என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கூறினார்!

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்பது குறள்; கண்ணதாசன் அதன் பொருள்!

ல்யாணப் பத்திரிகையோடு என் வீட்டுக்கு வந்தவர் பெயர் இருதயராஜ்.

அண்ணாவைப் பிரிந்து திரு.ஈ.வி.கே. சம்பத்தோடு கண்ணதாசன் வந்த பிறகு -

திருச்சி டவுன் ஹாலில் பெரும் கூட்டம் ஒன்று நடந்தது.

அதில்தான் அறிஞர் அண்ணா அவர்களைத் 'திரு.அண்ணாதுரை அவர்களே’ என்று கண்ணதாசன் விளித்துப் பேச -

முன் வரிசையில் இருந்த ஒருவன், மேடைக்குத் தாவி, கண்ணதாசனின் சில்க்குச் சட்டையைப் பற்றி இழுத்து, மூர்க்கத்தனமாகத் தாக்க முயல -

கண்ணதாசன் அவனைத் தன் கையால் தடுத்துப் புறந்தள்ளினார்.

கூட்டத்தில் பயங்கரக் கலவரம் வெடித்தது!

ந்தக் கூட்டத்தில் தன்னைத் தாக்க வந்த அந்த ஆளைத்தான் என் வீட்டில் சந்தித்த கண்ணதாசன் நலம் விசாரித்தார்!

கண்ணதாசன் கண்ணதாசன்தான்!

- சுழலும்...

ஒவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்