ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

தியாகத் திருநாள்

தியாகத் திருநாள்


விகடன் பொக்கிஷம்
தியாகத் திருநாள்
தியாகத் திருநாள்
 
தியாகத் திருநாள்
தியாகத் திருநாள்
தியாகத் திருநாள்
தியாகத் திருநாள்

லகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களுடைய சமயக் கட்டளையின் அடிப்படையில் அமைந்திருக்கும் திருநாட்கள் இரண்டு. இந்தத் திருநாட்களைக் குறிக்கும் அரபிச்சொல் 'ஈத்' என்பதாகும். 'ஈத்' என்ற அரபிச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வரும் நாள் என்று பொருள். அது ஆண்டுதோறும் வந்துகொண்டிருக்கிற திருநாளைக் குறிப்பதாக ஆயிற்று. முதலாவது திருநாள் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமாகிய 'ரமலான்' முடிந்து பத்தாம் மாதமாகிய 'ஷவ்வால்' மாதத்தின் முதல் நாளில் அமைவது.

நோன்பைத் தொடர்ந்து வருகின்ற திருநாள் ஆகையால், அதனை 'நோன்புப் பெருநாள்' என்று தமிழ் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். எக்காரணம் பற்றியோ இந்தப் பெருநாளுக்கு 'ரம்ஜான்' என்ற பெயர் தவறாக வந்துவிட்டது. 'ரம்ஜான்' என்ற சொல்லே 'ரமலான்' என்ற அரபிச் சொல்லிலிருந்து திரிந்தோ மருவியோ வந்ததுதான். எப்படியிருப்பினும் ரமலான் மாதம் முடிந்த பிறகு அடுத்து வருகிற ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் அமைகிற இந்தப் பெருநாளை 'ரம்ஜான்' என்று அழைப்பது பொருத்தமற்றதே ஆகும். அரபு மொழியில் இத்திருநாள் 'ஈதுல் பித்ர்' என்று சொல்லப்படும். 'பித்ர்' என்பது ஓர் ஈகை. 'ஈதுல் பித்ர்' என்ற அரபுச் சொற்றொடருக்கு நேரான தமிழ் சொற்றொடர் 'ஈகைத் திருநாள்' என்பதே ஆகும். அது ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் அமைகிற திருநாளையே குறிக்கும்.

முஸ்லிம்களுடைய இரண்டாவது திருநாள், இஸ்லாமிய ஆண்டின் கடைசி மாதமாகிய 'துல்-ஹஜ்'ஜின் பத்தாம் நாளில் அமைவது. இதனைத் தமிழ் முஸ்லிம்கள் 'ஹஜ்ஜுப் பெருநாள்' என்று அழைக் கிறார்கள். 'ஹஜ்' என்ற சொல்லுக்கு ஓர் இடத்திற்குச் செல்வது என்று பொருள். இஸ்லாமிய சமயக்கொள்கைகளின்படியும் கோட்பாடுகளின்படியும் அரபு நாட்டில் உள்ள மக்கா என்ற நகரில் அமைந்திருக்கிற 'கஅபா' எனப்படும் இறையில்லத்தை நோக்கிச் செல்லும் பிரயாணத்தை இந்த ஹஜ் என்ற சொல் குறிப்பதாக ஆயிற்று. முஸ்லிம்களின் ஜம்பெருங் கடமைகளுள் ஐந்தாவதாகச் சொல்லப்படுவது இந்த ஹஜ் என்ற புனிதப் பிரயாணமாகும். 'கஅபா', 'மஸ்ஜிதுல் ஹராம்' - அதாவது, மாட்சிமைமிக்க, புனிதமிக்க ஆலயம் - என்றும் வழங்கப்படுகிறது. இஃது இன்ன காலத்தில் தோன்றியது என்று கணித்திட இயலாது. இதனை இபுராஹீம் நபியவர் களும் அவர்களின் மைந்தரான இஸ்மாயீல் நபியவர்களும் புதுக்கியமைத்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இபுராஹீம் நபியவர்கள் இறைவனுடைய துணையன்றை மட்டுமே நம்பி, ஊர் ஊராக ஓய்வு ஒழிச்சலின்றி அலைந்து திரிந்து கொள்கைப் பிரசாரம் செய்தார்கள். அவர்கள் இறுதியாக வந்தெய்திய திருத் தலமே 'மக்கா' நகரமாகும்.

இறைவனுடைய திருப் பொருத்தத்தையன்றி வேறெதையுமே நாடாத மனமுடைய அப்பெருமகனாருக்கு ஒரு சோதனை! தம் நாயகனின் திருப்பொருத்தத்தைப் பெற இவர் எத்துணைத் தியாகத்தினைச் செய்யவல்லார் என்பதை உலகோருக்குக் காட்டும் சோதனை அது! தங்களுடைய வயோதிகப் பருவத்தில் பிறந்து பல்லாற்றானும் தங்களுக்கு உறுதுணையாக விளங் கும் ஒரே மகனான இஸ்மாயீலை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற சமிக்ஞை இறைவனிட மிருந்து தங்களுக்கு வந்ததாக இபுராஹீம் நபியவர்கள் உணர் கிறார்கள். பதைபதைத்த நெஞ்சத்தினராகி, இதனைத் தம் மைந்தரிடம் வெளியிடுகிறார்கள். மலை குலையினும் தம் நிலை குலையாத மனத்திண்மை மிக்க தந்தையின் மைந்தர் இஸ்மாயீல்! தந்தையின் குறிப்பறிந்து ஒழுகும் குணக்குன்றான அவர், 'எந்தையே! இறைவனின் கட்டளை இது என்றால், தயக்கமின்றி நிறை வேற்றுக' என்று சொல்கிறார்.

தியாகத் திருநாள்

துல்-ஹஜ் மாதம் எட்டாம் நாள், குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் தம் நம்பிக்கை ஒளி யாகத் திகழும் ஒரே மைந்தனான இஸ்மாயீலின் குனிந்த கழுத்தைக் குறிபார்த்துக் கூரிய வாளை வீசு கிறார்கள் இபுராஹீம் நபியவர்கள். ஆனால் இறைவனே அவர்களைத் தடுத்தாட்கொண்டு விடுகிறான். இஸ்மாயீலுக்குப் பதிலாக ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடப் பணிக்கிறான். இந்த நிகழ்ச்சியை இஸ்லாமியத் திருமறையாகிய திருக்குர்ஆன் மிக அழகிய சொற் களால் அற்புதமாக விவரிக்கிறது.

உள்ளத்தை உருக்கும் இந்தத் தியாக நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுபவர்கள், இபுராஹீம் நபியவர்கள் தம் மைந்தரான இஸ்மாயீல் நபியவர்களை அறுத் துப் பலியிட முற்பட்ட மினா என்ற இடத்தில் ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ அறுத்துப் பலியிடுகிறார்கள். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் தத்தம் இடங்களில் இருந்து கொண்டே இதனைச் செய்கி றார்கள். இந்த மிருக பலியானது 'குர்பான்' என்றும் 'உல்ஹிய்யா' என்றும் வழங்கப்படுகிறது. அரபு மொழியிலுள்ள இவ்விரு பதங்க ளுமே தியாகம் என்ற பொருளைத் தருவனவாகும். ஆழ்ந்த பொருள் பயக்கும் இச்சொற்களை நுணுகி ஆய்ந்த பெரியோர், 'இவை மிரு கங்களை அறுத்துப் பலியிடும் புறச்சடங்குகளை மட்டும் குறிப் பனவாகா. யான், எனது என்னும் செருக்கறுத்து, ஊன் உருக, உளம் உருக இறைவனை வழிபடுவதையும் குறிப்பனவாகும்' என்று நவின்றுள் ளனர். இந்த 'குர்பான்' அல்லது 'உல்ஹிய்யா'வைச் செய்கிற நாளையே 'ஈதுல் அல்ஹா' என்று அரபு மொழியில் வழங்குகின்றனர். 'துல்-ஹஜ்' மாதத்தில் வருகின்ற பெருநாள் என்பதாலும், ஐந்தாம் கடமையான ஹஜ்ஜுப் பயணத் தோடு தொடர்புள்ளது என்பதா லும் இதனை 'ஹஜ்ஜுப் பெரு நாள்' என்று தமிழ் முஸ்லிம்கள் குறிப்பது தவறன்று. எனினும், 'தியாகத் திருநாள்' என்று சொல்வதே பொருத்தமுடையது.

ஆனால், ஆழ்ந்த கருத்தும் அரும்பொருளும் பயக்கின்ற இப்பெயர்களால் மட்டுமின்றி 'பக்ரீத் பண்டிகை' என்றும் மக்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். இப்பெயர் நம் நாட்டில் மட்டுமே வழங்கப்படுவதாகும். 'பகரத்துன்' என்பது மாட்டைக் குறிக்கும் அரபிச் சொல். 'பகரா' என்பது ஆட்டைக் குறிக்கும் ஹிந்திச் சொல். இந்த ஈதின்போது ஆடோ மடோ அறுக்கப்படுவதால், இதனை 'பகர-ஈத்' என்று பிற சமயத்தவர் பெயர் வைத்திருக்கலாம். அதனை எத்தகைய மறுப்பும் இன்றி முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டமையால், இப்பெயரே இந்திய நாடு முழுவதும் இன்று நிலைத்துவிட்டது.

இந்த இரு திருநாட்களிலும் முஸ்லிம்கள் அனைவருக்கும் சிறப் பான கூட்டுத் தொழுகை விதியாக் கப்பட்டிருக்கிறது. இறைவனுடைய கட்டளைப்படி நோன்பு நோற்று ஒரு பெருத்த சோதனையில் வெற்றி பெற்றதற்காகவும், இறைவனுக்காகத் தம்மையே அர்ப்பணிக்கச் சித்தமாக இருக்கும் உறுதியை வெளிப்படுத்துகிற வகையிலும் இந்த இரு திருநாட்களும் முஸ்லிம்களால் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன.

ஐந்து கடமைகள்!

தியாகத் திருநாள்

லிமா எனப்படும் மூல மந்திரம், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவை முஸ்லிம்களின் ஐந்து கடமைகள்.

'வணக்கத்திற்குரியவன் அல்லா(ஹ்). முகம்மது, அல்லா(ஹ்)வின் இறுதித் தூதர்' என்பதை மனத் தில் உறுதிகொண்டு நாவினால் மொழிவது முதல் கடமையான கலிமா ஆகும்.

தினமும் ஐந்து நேரம் தொழுவது இரண்டாவது கடமை.

ரமலான் மாதம் முழுவதும் உபவாசம் இருப் பது மூன்றாவது கடமை யான நோன்பு ஆகும்.

செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (இரண்டரை சத விகிதம்) ஆண்டுதோறும் ஏழைகளுக்குத் திருக்குர் ஆனில் விதிக்கப்பட்டுள்ள படி விநியோகிப்பது 'ஜகாத்' எனும் நான்காவது கடமை. வாய்ப்பும் வசதியும் உள்ள வர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்காவுக்குச் சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவது ஐந்தாவது கடமை.

 
தியாகத் திருநாள்
தியாகத் திருநாள்