ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

ஆலயம் ஆயிரம்

ஆலயம் ஆயிரம்


தொடர்கள்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்
 
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம்

ட்சன் தான் வளர்த்த யாகத்துக்கு மருமகன் மகேஸ்வரனுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்த்தான்.

ஈசனின் துணைவியும் தட்சனின் மகளுமாகிய தாட்சாயணி, ஈசனின் அனுமதி இல்லாமலே யாகத்துக்குச் சென்றாள். தட்சனால் அவமானப்படுத்தப்பட்டு யாகத் தீக்குள் பாய்ந்தாள்.

சினமுற்ற சிவபெருமான், தனது அங்கமான வீரபத்ரரை, தட்சனின் தலையைக் கொய்து வர அனுப்பினார். வீரபத்ரர் யாகத்தை அழித்தார். தட்சனையும் வதம் செய்தார்.

அதன் பின்னும் ஆவேசம் அடங்காமல், கோடி சூரியப் பிரகாசத்துடன் வீரபத்ரர் அலைந்து திரிந்தார். அதனால் அவனி அதிர்ந்தது. ஆங்காங்கே பற்றி எரிந்தது.

தேவர்களும் முனிவர்களும் பராசக்தியின் பாதம் பணிந்து, வீரபத்ரரின் ஆவேசம் அடங்க வழி புரியுமாறு வேண்டினர்.

பத்ரரின் ஆவேசத்தை அடக்கும் பொறுப்பைத் தன் அங்கமான பத்ரகாளியிடம், பராசக்தி ஒப்படைத்தாள்.

கௌதமி நதி தீரத்தில், முனிவர்கள் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்து வந்த முனி மண்டலிப் பிரதேசத்தில்தான் வீரபத்ரர் மதம் பிடித்த களிறாக அலைந்துகொண்டு இருந்தார்.

பத்ரகாளி, அந்த இடத்தை அண்டினாள். அருகிலிருந்த சரபைய்ய ஏரியில் அமிழ்ந்து எழுந்து, அதிரூப சுந்தரியாக, களங்கமற்ற கன்னிகையாக வெளிப்பட்டு வீரபத்ரரை நெருங்கினாள்.

அவளைக் கண்ட மாத்திரத்தில் அண்ணலின் ஆவேசம் சற்று அடங்கியது. அக்கணமே அன்னையை அவர் காந்தர்வ விவாகம் புரிந்து, அவளுடன் கூடினார். அவரது ஆவேசம் அடியோடு தணிந்தது.

ஐயன், அன்னையை மணந்த இடத்தில் ஒரு கோயில் எழுந்தது. அந்த ஆலயம், நதியில் உண்டான வெள்ளப் பெருக்கில் மூழ்கியது. லிங்க ரூப வீரபத்ரரும் பத்ரகாளியும் கோதாவரியின் ஆழத்தில் அமிழ்ந்துகிடந்தனர்.

ஆலயம் ஆயிரம்

அவ்வமயம், குமரகிரியை ஆண்ட சரபராஜ மன்னனின் கனவில் இறைவன் எழுந்தருளி, கோதாவரியில் இருக்கும் தன்னை மீட்டு எடுத்து, ஆலயம் ஒன்றை அமைக்குமாறு ஆணையிட்டார்.

மன்னனும், தன் ஆட்களுடன் கோதாவரியில் மூழ்கியிருந்த லிங்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அதன் மீது கடப்பாறை பட்டது. குருதி கொப்பளித்து, கோதாவரியே குருதி நிறத்தில் ஓடத் துவங்கியது.

மன்னனும் மற்றவர்களும் அச்சத்துடன் சுவாமியை ஏந்திச் செல்ல, சற்று தொலைவிலேயே லிங்கத்தின் சுமையானது யாராலும் சுமக்க முடியாத அளவுக்குக் கூடியது.

அரசர், அந்த இடத்திலேயே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயமும் எழுப்பினார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், முரமள்ளாவில் உள்ளது பத்ரகாளி சமேத வீரேஸ்வர சுவாமி ஆலயம். முனி மண்டலி என்று அறியப்பட்ட இடமே முரமள்ளாவாக மருவியிருக்கிறது.

கோபுர வாசலைக் கடந்தால், பிரமாண்ட வெளிப்பிராகாரம். பலிபீடம் மற்றும் கொடிமரத்தை அடுத்து இருக்கும் மண்டபத்தில் சுவாமிக்கு நேர் எதிரே இரட்டை நந்தி. இரண்டு நந்திகளில் சிறிய நந்தி உபநந்தி என்றழைக்கப்படுகிறது.

கருவறைக்கு முன்பாக வலது பக்கம் விநாயகர் தரிசனம்.

கருவறையில் வீரேஸ்வர சுவாமி லிங்க வடிவில், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.

உக்கிர லிங்கம் என்பதால் தினம் அபிஷேகத்துக்கு முன் சந்தனம் சாத்தி உக்கிரம் தணிக்கப்படுகிறது. இருந்தும் சுவாமிக்குச் சாத்தப்படும் வில்வ இலைகள் நாழிகை நேரத்துக்குள் வாடி வதங்கிவிடுகின்றன.

சுவாமியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக அன்னை பத்ரகாளி, கன்னி வடிவில் சுவாமியின் பீடத்திலேயே எழுந்தருளி இருக்கிறாள்.

லிங்க ரூப வீரேஸ்வர சுவாமியையும், கன்னி வடிவ பத்ரகாளியையும் ஒரே பீடத்தில் அருகருகே தரிசிக்கும் போது, அகத்தில் ஆனந்தம் பொங்குகிறது.

கருவறைக்கு முன்னால் உள்ள அர்த்த மண்டபத்தில் சுவாமியும், அன்னையும் ரிஷப வாகனத்தில் உற்சவ மூர்த்திகளாகக் காட்சி அளிக்கின்றனர்.

தரிசனத்துக்குப் பின் கருவறையின் வடக்கு வாசல் வழியாக வெளிப்பட்டால், சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம். சாந்திக் கல்யாணக் கோயில் என்பதால் பின்னிப் பிணைந்திருக்கும் அரவங்கள் தூணில் சிற்பமாகப் பொளியப்பட்டுள்ளன.

ஆலயப் பிராகாரத்தில் தனியரு கோயிலில் க்ஷேத்திர பாலகர் லட்சுமி நரசிம்ம சுவாமி, அன்னையுடன் ஆனந்த தரிசனம் அளிக்கிறார்.

இந்தத் திருத்தலத்தில் நித்ய கல்யாணம் நடத்திக் கொள்கிறார் வீரேஸ்வர சுவாமி.

திருமணம் ஆகாத கன்னிகளுக்கு, இறைவனுடன் திருமணம் செய்துவைத்தால், திருமணத் தடைகள் நீங்கி விரைவிலேயே மணப்பேறு கிட்டுவதால் இறைவனுக்குத் தினமும் குறைந்தபட்சம் 27 திருமண உற்சவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

மழை, புயல் என இயற்கையின் சீற்றங்கள் எவற்றையும் பொருட்படுத்தாமல், திருமண உற்சவங்கள் தினம் இரவு 7 மணிக்குத் தொடங்கி 10 மணி வரையில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

உற்சவத்தின்போது யக்ஷகானக் கலைஞர்கள் பாடல் இசைக்கிறார்கள். மேள, தாளங்கள் முழங்குகின்றன.

திருமணம் நிறைவேறிய பின், தம்பதிகள் கோயிலில் வழங்கப்படும் அரிசியைக் கொண்டுசென்று சாதம் சமைத்து உண்டால் குழந்தை பிறக்கும்.

சுகப்பிரசவத்துக்கு சுவாமியிடம் வேண்டிக்கொண்டால், பெரிய நந்திக்கு அருகில் இருக்கும் உப நந்தியைத் திருப்பிவைக்கிறார்கள். தவறாமல் சுகப்பிரசவம் ஆகிறது.

திருமணப்பேறு அளிக்கும் வீரேஸ்வரரையும் பத்ரகாளியையும் திருமண உற்சவக் கொண்டாட்டத்தின் ஊடே தரிசிக்கும்போது, நாம் அனுபவிக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளில் வழங்க இயலாது!

ஆலயம் ஆயிரம்

 
ஆலயம் ஆயிரம்
- தரிசிப்போம்
ஆலயம் ஆயிரம்