செங்கல்பட்டில் முஸ்தஃபா ஃபேர்வெல்!
##~## |
சனி, ஞாயிறு விடுமுறைக்கே வெள்ளிக் கிழமைகளில் உற்சாக ஊர்வலம் நடத்துவார்கள் நமது வாண்டுகள். கோடை விடுமுறை என்றால் கேட்கவும் வேண்டுமா? செங்கல்பட்டு அரசுப் பள்ளியில் கடைசித் தேர்வை எழுதி முடித்த மாணவர்களின் லைவ் கொண்டாட்டங்கள் இங்கே...
மணி அடிக்கும் நொடிக்குக் காத்திருந்தது போல, அணை உடைத்த புது வெள்ளமாக வகுப்புகளில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறினார்கள் மாணவர்கள். வாழ்நாள் முழுவதும் பரீட்சை எழுதத் தேவைப்படும் அளவுக்குப் பிரமாண்டமான இங்க் பாட்டி லைப் பையில் இருந்து எடுத்து, சக மாணவர் களின் மீது அபிஷேகம் நடத்த சிலர் முயல, நெல்லிக்காய் மூட்டையைப் பிரித்ததுபோல ஆளுக்கொரு திசையில், அலறிப் பறக்கத் தொடங்கினார்கள் மாணவர்கள்.

பஸ் ஸ்டாண்ட் முழுக்கவே பல்வேறு பள்ளிகளின் மாணவர் பட்டாளம்தான். இங்க், வாழைச் சாறு, கோல மாவு பவுடர், நீலம், ஜிகினா பவுடர் என மாணவர்கள் கைகளில் ஏகப்பட்ட பிரம்மாஸ்திரங்கள்.

அரை லிட்டர் பாட்டிலோடு சுற்றிக்கொண்டுஇருந்த சுந்தரத்தை மடக்கினோம். ''நான் கொலம்பஸ் ஸ்கூல்ல ஏழாவது படிக்கிறேன். ரெண்டு நாளா வாழை மட்டையைப் பிச்சு சாறு எடுத்து, அதுல உஜாலா கலந்து எடுத்துட்டு வந்திருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸும் ஏதோ கலந்து கொண்டுவந்திருக்கானுங்க. எதுவுமே எடுத்துட்டு வராத யாரோ ஒருத்தன், எங்க ஹெட்மாஸ்டர்கிட்ட கோள் மூட்டிவிட்டுட்டான். அவர் ஒவ்வொரு பையா செக் பண்ணி எல்லாத்தையும் எடுத்துட்டார். இப்படிலாம் எதுனா நடக்கும்னுதான், நான் ஸ்கூலுக்கு வெளியிலயே வாழை மட்டைச் சாறை ஒளிச்சு வெச்சுட்டுப் போயிருந்தேன். பார்த்தா, எல்லாப் பயலுவளும் என்னை மாதிரியே இப்படித்தான் பதுக்கிட்டு பரீட்சை எழுத வந்திருக்கானுங்க. நாங்கள்லாம் யாரு? சிங்கம்ல!'' என்று பெருமை பேசிய சுந்தரம், ''ரெண்டு நிமிஷம் வெயிட்டீஸ். அந்தா ஒரு க்ரூப் யூனிஃபார்ம்ல வருது. ஒரு காட்டு காட்டிட்டு வர்றேன்!'' என்று வாயாலேயே ஹாரன் அடித்தபடி காற்றைக் கிழித்துப் பறந்தான்.
''என்னங்கண்ணா போட்டாலாம் புடிக்கறீங்க. சொல்லிருந்தா கொஞ்சம் பவுடர் போட்டுட்டு வந்திருப்போம்ல!'' என்று கிண்டலும் கேலியுமாகத் தொடங்கிய ப்ரியா, ''பக்கத்து கிளாஸ் பசங்க என் முகத்துல ஜிகினா பூசிட்டுப் போயிட்டானுங்க. இதுக்காகவே நாங்க நாலஞ்சு பேர் காசு போட்டு 50 ரூபாய்க்கு ஜிகினா பாக்கெட் வாங்கிட்டு வந்தோம். ஆனா, ஒரு பயலுவோளும் கையில கிடைக்க மாட்றானுங்க!'' என்று கொஞ்சம் கடுகடுத்தார். ''அண்ணா வாங்குனது வேஸ்ட்டா போயிடும்ணா. நீங்க கொஞ்சம் பூசிக்குங்களேன்!'' என்று அவர்ஜிகினா வைக் கையில் எடுக்க, நாம் எஸ்ஸ்ஸ்கேப்!
- பா.ஜெயவேல்