"அண்ணா, இன்னைக்கு கலவரம் நடக்குமா ?"

''இந்தத் தேசத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள் குழந்தைகள்தான். அந்தக் குழந்தைகளிடம் நாம் வெளிச்சத்தை விதைக்கப் போகிறோமா, விபரீதத்தை விதைக்கப்போகிறோமா என்பதைப் பற்றியது தான் இந்தக் குறும்படம்!'' - தெளிவாகப் பேசுகிறார் முருகன். தனியார் வங்கியில் பணிபுரிந்துகொண்டே திருவண்ணாமலை சேனல்களில் தொகுப்பாளராக இருக்கும் முருகன், 'தீர்ப்பு’ என்னும் குறும் படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
''செப்டம்பர் 30 , 2010. இந்தியாவின் பதற்றமான நாட்களில் ஒன்று. அன்றுதான் அயோத்தி பிரச்னை குறித்த தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு 'தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?’ என்று ஒரு புறம் அலசின. இன்னொருபுறம் எங்கே, எப்போது கலவரம் வெடிக்கும் என்று எல்லோருக்குமே ஒரு கறுப்பு எதிர் பார்ப்பு இருந்தது. அன்று காலை 8 மணி. அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டு இருந் தேன். பக்கத்து வீட்டு பையன் ஓடி வந்து 'அண்ணா, இன்னைக்கு கலவரம் நடக்குமா? எங்க அம்மா ஸ்கூலுக்கு போக வேணாம்னு சொல்றாங்க. எனக்குப் பயமா இருக்கு!’ என்றான். அந்த வார்த்தைகளை ஒரு குழந்தையின் உதடுகள் உச்சரிக்கும்போது பதற்றத்தின் வெப்பம் பற்றிக்கொண்டது எனக்கு. 'அப்படி எல்லாம் எதுவும் நடக்காது’ என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினாலும் அலுவலகம் செல்லும் வழியில் இதே யோசனை. அப்போதுதான் இந்தக் குறும்படத்துக்கான கரு தோன்றி யது.
எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, ஷைலஜா இருவரும் பக்கபலமாக இருந்து உதவினார்கள்.தொடர்ந்து மூன்று நாட்கள் திருவண்ணாமலையில் படப்பிடிப்பை நடத்தினோம். குழந்தை நட்சத்திரமாக வம்சி என்னும் சிறுவன் நடித்து இருக்கிறான். அவனிடமே பேசுங்கள்'' என்றார் முருகன்.
##~## |
''காலையில எழுந்து டி.வி நியூஸ் பார்த்து பயந்து போய் என் அப்பாகிட்டே அதைப் பற்றி கேட்கிறேன். ஆனால், அவர் ஒண்ணும் சொல்லாமல், என்னை ஸ்கூலுக்கு அனுப்பிடுறார். ஆனால், அம்மாவோ, 'இன் னைக்கு ஸ்கூலுக்குப் போக வேணாம். கலவரம் வரும்’னு பயமுறுத்தறாங்க. பயத்தோடயே நானும் ஸ்கூலுக்குப் போறேன். கிளாஸ்ல உட்கார்ந்து இருந்தாலும் மனசு முழுக்கப் பயமா இருக்கு. நான் பாடத்தைக் கவனிக்காததை கவனிக்கும் என் சார், என்னை எழுப்பி விசாரிக்கிறப்போ, என் பயத்தைச் சொல்றேன்.
'எதுக்கு சார் தீர்ப்பு சொல்லப் போறாங்க... அப்படிச் சொன்னா என்ன நடக்கும்?’னு அவர்கிட்டே கேட்கிறேன். அவரும் அயோத்தி பிரச்னையை விளக்குறார். என் னோட ஃப்ரெண்ட்ஸ், பக்கத்து வீட்டுக் காரங்க இவங்க எல்லாம் என் ஞாபகத்துக்கு வர்றாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சாதி, ஒவ்வொரு மதம். தீர்ப்பு வந்தா இவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கனு யோசிக்கும்போது திரும்பவும் பயம்.
சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது, பெட்டிக் கடைகளில் போஸ்டர் தொங்குது.

'அயோத்தி - தீர்ப்பு வெளியானது, எங்கும் எந்தக் கலவரமும் நடைபெறவில்லை’ன்னு போஸ்டர்ல நியூஸ் பார்க்கவும் எனக்கு மனசெல்லாம் சந்தோஷம். முகம் எல்லாம் சிரிப்பு. அப்படியே படம் முடியுது!'' என்று சொல்லும்போதே வம்சி யின் முகத்தில் பரவசம்!
''மத வெறிக்கு எதிரான இந்தப் படம் எந்த வகையிலாவது மானுட ஒற்றுமைக்கு உதவினால் எனக்கு மகிழ்ச்சி!'' என்கிறார் முருகன்.
தேவையான 'தீர்ப்பு’தான்!
- யா.நபீசா