
வாலிஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்
கரந்து நிற்பவை!
##~## |
அவர் ஓர்-INTERNATIONAL CELEBRITY!
ஆம்;
வையம் வழுத்தும் ஒரு வயலின் கலைஞர்; அவர் பெயர் டாக்டர் திரு. L.சுப்பிரமணியம்.
டாக்டர் என்பது அவர் பெற்ற முனைவர் பட்டமல்ல; மருத்துவர் பட்டம். அவர் ஒரு எம்.பி.பி.எஸ்.
‘STETHOSCOPE’; ‘SURGICAL INSTRUMENTS’ -

இவற்றோடு இழைய வேண்டிய விரல்கள்-
'STRINGS’ களோடு இழைகின்றன; கத்தி பிடிக்க வேண்டிய கை - கை வில்லால், வயலின் தந்திகளை அரிவதுபோல் அரிகிறது; அரிய அரிய - வயலின், வர்ண மெட்டுகளைச் சொரிகிறது.
'L’ என்றால் LEARNER -ஐயும் குறிக்கும்; 'LEGEND’ ஐயும் குறிக்கும்;
திரு. 'L’ சுப்பிரமணியத்தில் இருக்கும் 'L’ - இரண்டாம் வகையைச் சேர்ந்தது.
அது சரி;
ஒரு மருத்துவருக்குள்ளிருந்து, தியாகராஜஸ்வாமி வெளிப்படுகிறாரே - எப்படி?
ஒன்றுக்குள் இன்னொன்று ஒன்றிக்கிடப்பதும் - காலத்தே அது கண் விழிப்பதும் இயற்கை நியதி போலும்!
'ஓம்’ -
ஓரெழுத்து;
'சோ’ -
ஓரெழுத்து!
முன்னது - ஆன்மிகத்தை
முன்னிட்டு நிற்பது;
பின்னது - அரசியலை
முன்னிட்டு நிற்பது!
1960-ல் சென்னை வானொலியில் ஒரு நாடகம் நடிக்கப் போயிருந்தேன்.
அங்குதான் - திரு.சுகி.சுப்பிரமணியன் அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் திரு. சோ.
அடர்த்தியான முடியோடு, அழகுற வாரி வகிடெடுக்கப்பெற்ற கிராப்; மூக்கின் மேல் மொய்த்துக்கிடந்தது கண்ணாடி; கண்ணாடிக்குப் பின்னாடி -
உருண்டை உருண்டையான விழிகள் உமிழ்ந்துகொண்டிருந்தன, அவர் உள்ளிருக்கும் அறிவு வெளிச்சத்தை.

ஆம்;
அவர் ஒரு LAWYER; புகழ்வாய்ந்த ஒரு கம்பெனியில், LEGAL ADVISER!
சட்டம் படித்த ஒரு மனிதன், சபையேறி நடிக்க வந்ததும்; சபையேறி நடிக்க வந்த மனிதன், சினிமாவில் நடிக்கப் புகுந்ததும்; சினிமாவில் நடிக்கப் புகுந்த மனிதன், சினிமாவை இயக்கப் புகுந்ததும்... இன்னும் இன்னும்...
ஒரு வக்கீலுக்குள் இத்துணை வடிவங்கள் உறைந்துகிடந்ததும்; அன்னணம் கரந்துகிடந்த அவை -
அவ்வப்போது வெளிப்பட்டதும் அதிசயமல்ல; நான் ஆரம்பத்தில் சொன்னபடி, அது இயற்கை நியதி!
சட்டம்; சினிமாவோடு - சம்பந்தப்பட்ட ஒரு மனிதன் - 'சட்’டென்று பத்திரிகை ஆசிரியராகப் பரிணாமம் பெறுவதும் - அதுவும் அட்டை டு அட்டை - அரசியலை உள்ளீடாய்க்கொண்டிருப்பதும் -
'அந்த ஆசாமியா, இந்த ஆசாமி! - என்றென்னைக் கேட்கவைக்கிறது!
'BLITZ’ - நடத்திய திரு.கராஞ்சியா; 'FILM INDIA’ - நடத்திய திரு.பாபுராவ் படேல்; இன்னும் - திரு.குஷ்வந்த் சிங்; 'LAST PAGE’ எழுதிக்கொண்டுஇருந்த திரு.க்வாஜா அஹமத் அப்பாஸ்...
இவர்கள் வரிசையிலே இருத்துவேன் சோவை.
எனக்கும் சோவுக்கும், ஏராளமான விஷயங்களில் ஏழாம் பொருத்தம்தான்; இருப்பினும், சோவிடம் நான் சொக்கிப்போகிறேன்.
அவரும் 'அவாள்’; நானும் 'அவாள்’ என்பதாலல்ல. நானும் அவாள் இவாளைக் கடந்தவன்; அவரும் அவ்வாறே.
பின் - என் இதயம் அவர் பின் போவதேன் என்று வினவினால், இதோ அதற்கான விடை.
எழுத்திலும் சொல்லிலும் - அவர் ஏற்று நிற்கும் கற்பு நெறி; வேண்டுதல் வேண்டாமை அற்று விமர்சித்தல்; ஆதி சங்கராயிருந்தாலும், ஆட்டோ சங்கராயிருந்தாலும் - பேதா பேதமற்றுத் தன் கருத்தைக் காரண காரியங்களோடு பெய்தல்; மற்றும் அஞ்சாமை; துஞ்சாமை; ஆரிடமும் கெஞ்சாமை...
இத்துணைக் குண நலன்களோடு ஒரு பத்திரிகை நடத்திக்கொண்டு - ஏச்சை யும் பேச்சையும் - சம திருஷ்டியோடு ஏற்றுக்கொண்டு -
அகவை எழுபத்தேழில் ஒருவன் ஆன்ம பலத்தோடு நிற்பது கண்டு, என் புருவங்கள் பொட்டுக்கு ஏறுகின்றன.
புல்லேந்தும் குலத்தில் பிறந்து, வில்லேந்தும் குலத்தார்போல் துலங்கிய -
துரோணரை நான் எப்பவும் துதிப்பேன் - கரம் கூப்பி; சோ அவர்கள் - துரோணரின் கார்பன் காப்பி!
ஒருவனை -
'அவன்’ என்று அடையாளப்படுத்திச் சொல்கிறோம்.
ஆனால் - அந்த அவன் ஓர் 'அவன்’ மட்டுமல்ல; அவனுள் ஒன்பது 'அவன்’கள் கரந்துறைகிறார்கள்.

ஒரு முகம் மட்டும். அந்த ஒன்பான் முகங்களுள் - ஊரறிய உலகறியத் தெரியவருகிறது.
ஒருவாய்ச் சோற்றுக்கு, வருவாய் வேண்டுமல்லவா?
அதன் பொருட்டு அவன், தன் ஒருமுகத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி - ஓர் அலுவலகத்திலோ; அல்லது சொந்தமாக ஒரு தொழில் தொடங்கியோ -
அதில் ஈடுபட்டு அல்லும் பகலும் சிரத்தையுடன் உழைத்து -
தன் திறமைக்கேற்ப - தான் உகுக்கும் வியர்வைக்கேற்ப -
வளமும் வாழ்வும் பெறுகிறான்.
'SURVIVAL’ க்கான ஒரு 'SECURITY’ உத்தியோகமோ, தொழிலோ - ஏதேனும் ஒன்று நிரந்தரமாக அமையப் பெற்ற பின் -
அவன் - அவனுக்குள் இருக்கும், இதர 'அவன்’களை -
ஒருவர் பின் ஒருவராக மெல்ல மெல்ல வெளிப்படுத்தி, உலகின் மாட்டு உலவவிடுகிறான்.
உலகு வியக்கிறது - 'அவனா இவன்?’ என்று.
எவனுக்குள் எவன் இருக்கிறானென்று எவனுக்குத் தெரியும், அவனைத் தவிர? நான் சொல்லும் 'அவன்’ -
'அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பார்களே -
அந்த 'அவன்’!
குடை நிழலமர்ந்து, குஞ்சரம் ஊர்ந்த குலோத்துங்கன் திருச்சபையில் -
'தஞ்சைக் கோவை’ பாடிய, வாணியன்தாதன் இருந்தான்; 'உத்தரகாண்டம்’ பாடிய, ஒட்டக்கூத்தன் இருந்தான்; 'இராமாவதாரம்’ பாடிய கம்பன் இருந்தான்; அவன் மகன் அம்பிகாபதி இருந்தான்; இதுபோல், இன்னும் அனேகக் கவிஞரேறுகள்!
ஆனால் -
மன்னன் குலோத்துங்கன் அவர்களை ஆதரித்தானே தவிர - மருந்துக்குக்கூட, அவனொரு கவிதை பாடியதில்லை; காரணம், அவன் காவலனே தவிர, கவிஞனல்ல! அதற்கான கடாட்சம் அவனுக்கு அப்பிறவியில் வாய்க்கவில்லை.
அந்தக் குறையைத் தீர்க்கவோ என்னவோ -
தற்காலத்தில், தமிழ் கூறும் நல்லுலகில் -
'குலோத்துங்கன்’ என்னும் பெயரில், குவிக்கிறார் ஒருவர் கவிதைகளை எழுதி!
பத்தாண்டுகளுக்கு முன்னதாக நான் படித்த அவரது கவிதைகள் - அன்று தொட்டு இன்று மட்டும் -
விழுமிய இறைச்சிப் பொருள்களை உள்ளீடாகக்கொண்டு உலா வருகின்றன.
'சின்னச் சின்ன வாக்கியங்களில் - ஒரு சித்து விளையாட்டுபோல் - சிந்து விளையாட்டை நிகழ்த்துகின்றாரே - யாரிந்த குலோத்துங்கன்?’ - என்று நான் ஆராயப் புகுந்து, இன்னாரென அறிய வந்ததும் -
'இந்த மனிதனுக்குள், இப்படியரு மனிதனா?’ என்று விழிகளில் வியப்பு அப்ப நின்றேன்!
இந்த வியப்பு, இன்னும் அதிகமாகியது அண்மையில் - அந்தக் குலோத்துங்கக் கவிராயர் யாத்த -
'மானுட யாத்திரை’ என்னும் காவியத்தை வாசிக்க நேர்ந்த போது!
மூன்று கவடாக முளைத்திருக்கும் தமிழ் போல் -
மூன்று பாகங்களாக முகிழ்த்திருக்கும் நூல் - 'மானுட யாத்திரை’.
கவித்துவமும் கருப்பொருளும் காமுற்றுக் கலந்தாற்போன்ற காவியம் இது.
'எமக்குத் தொழில் கவிதை’ என்று பாரதி சொன்னானே -
அப்படிக் கவிதை யாப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் ஒருவர் - 'குலோத்துங்கன்’ என்றிருந்தால் -
'கவிஞன், காவியம் படைப்பதில் என்ன காணக் கூடாத அதிசயமிருக்கிறது?’ என்று நான், விஷயத்தை அத்தோடு விட்டிருப்பேன்.
அவர் வேறு தொழிலில் வையப் புகழ் வாய்த்தவர்; அவருடைய அந்த ஒரு முகம்தான் - உலகு ஆராதிக்கும் திருமுகம்.
நீர் வளத் துறையில் நிபுணராயிருக்கும் ஒருவர் - நற்றமிழின், சீர் வளத் துறையிலும் சிறப்பெய்தி நிற்கிறார் என்றால் -
ஒன்றிலிருந்து ஒன்றுக்கான இந்த 'TRANSITION’தான் - நம்முள், வியப்பை விதைக்கிறது.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகவும், பல்வேறு முனைவர் பட்டங்களைப் பெற்றவராகவும் இருக்கின்ற திரு.வி.சி.குழந்தைசாமி அவர்கள்தான்
- 'குலோத்துங்கன்’ என்று அறிந்ததும், நான் வியப்பெய்திய காரணம் -
எவ்வளவு பெரிய கல்விமானாயிருந்தாலும் - கவிஞனாக முடியாது, கடாட்சம் இருந்தாலே அன்றி!
அத்தகு கடாட்சம் இவருக்கு அட்டியின்றி இருப்பதை -
'மானுட யாத்திரை’யை வாசித்து அறிக! அது, தமிழுக்கு வாய்த்த புதிய தகவு!
இவர் பின்னாளில் - 'V.C.’ ஆக, விளங்குவார் என்று முன் கூட்டியே அறிந்த இயற்கை -
இவரது பிறப்பையட்டிய இனிஷியலாக - 'V.C.’ எனும் இரு எழுத்துகளை அருளி இருக்கிறது.
'V.C.’ எனும் ஈரெழுத்தின் விரிவுதான் - VICE CHANCELLOR!
- சுழலும்...