
வாலிஓவியங்கள் : மணி, தமிழ்
ஓர் உள்ளுணர்வு!
##~## |
துக்கடாக்கள் போல் -
துண்டு துண்டாகச் -
சிற்சில
சிந்தனைகள்...
முப்பதாண்டுகளுக்கு
முன்பு தொடங்கி -
முந்தாநாள்
முடிய!

கணவன் வரக் கண்டு -
கவறாட்டத்தை விட்டெழுந்த -
பானுமதியின் மேகலையைப்
பற்றிக் கர்ணன் இழுக்கையில்...
தரையில் சிதறிய
தரளங்களை -
'எடுக்கவோ? கோக்கவோ?’
என்றானே துரியோதனன்...
அதுபோல -
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இறைந்துகிடக்கும் நிகழ்வுகளை - ஓர் இழைகொண்டு கோத்துச் சொல்கிறேன்;
இருப்பினும் இவற்றுள் -
ஒரு 'COGENCY OF THOUGT’ உள்ளதை ஓரலாம் நீங்கள்!
'நான் ஆணையிட்டால்...’;
'நினைத்ததை நடத்தியே -
முடிப்பவன் நான்! நான்! நான்!’;
'நான் செத்துப் பிழைச்சவன்டா...’;
'மூன்றெழுத்தில் - என்
மூச்சிருக்கும்...’;
- இப்படி எத்துணையோ படப் பாடல்கள்
எம்.ஜி.ஆரின் தனித்தன்மையை எடுத்துச் சொல்வதாக, நான் எழுதியிருக்கிறேன்.
ஒரு பாட்டுக் கூட - இப்படி தன்னைப் பற்றி எழுதப்பட வேண்டுமென்று -
எம்.ஜி.ஆர். என்னைக் கேட்டுக் கொண்டதில்லை; இது இறைவன் அறிய -
அந்த 'வடிவேல்’ அறிய சத்தியம்!
நானாக - எம்.ஜி.ஆருக்கு மக்கள் நடுவே இருக்கும் - CHARISMA வைக் கருதி, இந்தப் பாடல்களைப் புனைந்தேன் -
அவருடைய தனித் தன்மையைச் சுட்டுவதோடு -
எழுத்தில், என் தனித் தன்மையையும் இது சுட்டும் என்பதால்தான்!
இன்னணம் இருக்குங்கால் - ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னை அழைத்து -
சில கருத்துக்களைச் சொல்லி - அவை சமூகம், அரசியல் சார்ந்தவை -
என்னை எழுதித் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அந்தப் பாட்டுதான் -
'நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று; அதை
நானுனக்குச் சொல்லட்டுமா இன்று;
நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை; இது -
அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை!’
- இது 'நேற்று இன்று நாளை’ படத்தில் வருகின்ற பாட்டு.
படத்தில் இந்தப் பாடலைப் பாடுமுன், கதாநாயகன் - அதாவது எம்.ஜி.ஆர்.
- 'இயற்றியவர் வாலி’ என்று என் பெயரைச் சொல்லிவிட்டுப் பாடுவார்!
மேற்கண்ட பாடலைக் குறிப்பிட்டு, 'அண்ணே! இது மாதிரி என் படத்துல ஒரு பாட்டு நீங்க எழுதித் தரணும்!’ என்று -

ஒரு படவுலகப் பிரமுகர் கேட்டார்;
எழுதிக் கொடுத்தேன்.
அந்தப் படத்தின் கதாநாயகனும் அவரே; இயக்குநரும் அவரே!
அவர் எனது நெடுநாளைய நண்பர்;
முதன்முதலில் அவரை நான் சந்திக்க நேர்ந்தது -
அவர் நடித்த ஒரு படத்தின் -PREVIEW SHOW-வில்!
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு -
ஓர் அதிகாலையில் ஒரு PHONE!
'வாலி சார்! நான் ஒரு படம் பண்ணியிருக்கேன்; உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நெய்தல் நிலத் துல நடக்கிற கதை.
BACKWATER தான், மொத்தப் படத்தோட BACKDROP!
கலாசாகரம் ராஜகோபால்தான் ART DIRECTOR; N.பாலகிருஷ்ணன் கேமரா; சலீல் சவுத்ரிதான் மியூஸிக்!
AVM-AC தியேட்டர்ல, இன்னிக்கு ஈவினிங் SHOW போடறேன்; SELECTED AUDIENCE!
நீங்க வந்தீங்கன்னா - எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கும்!’
- இவ்வாறு அன்போடு தொலைபேசியில் என்னை அழைத்தவர் -
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. கே.விஜயன்.
நானும் விஜயனும் ஒரே ஊர்க்காரர்கள்; திருச்சி.
முப்பது ஆண்டுகளுக்கு முன் - நான் பார்த்த அந்தப் படம் -
இன்னும் என்னுள் வேர்பரப்பி நிற்கிறது!
மொத்தப் படம் - A FEAST FOR THE EYES!
உரையாடல்களும், கதைப் போக்கும் சிவப்புச் சிந்தனையோடு 'மனிதம்’ பேசின;
யாங்கணும், யதார்த்தமோ யதார்த்தம்!
கதாநாயகனும் கதாநாயகியும் புதுமுகங் களாக இருந்த காரணத்தால் -
பல படங்களில் தழுவியும் நழுவியும் குளிர் விட்டுப் போகாமல் -
கூந்தல் முதல் குதிகால்வரை கூச்சம் கோலோச்ச நின்றது -
பலகணி வழியே பக்கத்து வீட்டுச் சிறிசுகளின் சீண்டல்களையும், சிணுங்கல்களையும் பார்ப்பதுபோல் -
காதல் காட்சிகளில், CALF - LOVE எனும் நெறிசாரா வெறியைக் காட்டியது!
படச் சுருளில் ஒரு பாரகாவியம் எழுதிஇருக்கிறீர்’ என்று விஜயனைப் பாராட்டி விட்டு -
'யாரு இந்தப் புது ஹீரோ?’ என்று வினவினேன்.
'மதுரைக்காரப் பையன்’ என்றார் விஜயன்.
'அதான் - தமிழ் உச்சரிப்பு, தேங்கா உடைச்ச மாதிரி இருக்கு’ என்று நான் சிலாகிக்க -
அந்த இளைஞரை எனக்கு விஜயன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
நாவற்பழ நிறம்; ஆனால், கண்ணில் ஒரு வகைக் கனல், கனன்று கொண்டிருந்தது!
நான், கார் ஏறும்போது விஜயனை அருகழைத்துச் சொன்னேன்;
'இந்த ஆள் ஒரு பெரிய ரவுண்ட் வருவான்!’
I AM NOT A PROPHET! நான் ஒரு ஜோதிடன் அல்ல.
ஆனால் - எனக்குள் ஓர் 'INTUITION’ அந்தப் புதுமுக நடிகன் - திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வான் என்று!
என் படத்தில் பணியாற்றியபோது - 1976-ல் - நான் பாரதிராஜாவிடம் சொன்னேன் -
'இவன் - இருபதாண்டு காலம் தன் இசையால் திரையுலகை ஆள்வான்!’ என்று-
திரு.இளையராஜாவைப் பற்றி!
நான் பார்த்த கே.விஜயனின் படம் - 'தூரத்து இடி முழக்கம்’; அதன் கதாநாயகனான புதுமுகத்தைத்தான் - 'இந்த ஆள், பெரிய ரவுண்ட் வருவான்!’ என்று, ஊகித்து உரைத்தேன்.
அந்தப் புதுமுகம்தான்
திரு.விஜயகாந்த்!
திரு.விஜயகாந்த்தான் - தன் படம் 'விருதகிரி’க்காக -
எம்.ஜி.ஆர். பாட்டுபோல் - அதாவது, 'நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று? என்கிற மாதிரி, வேண்டுமென்று என்னைக் கேட்டது!
என் இனிய இளவல் - திரு.சுந்தர் சி. பாபு இசையமைத்து, ஷங்கர் மகாதேவன் பாடிய அந்தப் பாடல், கீழ்க்கண்டவாறு தொடங்கும்.

'மக்கள் ஒரு புறம்;
தெய்வம் ஒரு புறம்;
பக்கம் துணையென
நிற்கும் இருபுறம்;
எட்டுத் திசைகளும்
தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு;
கோடிக் கரங்களும்
நீரை விட்டன;
கொள்கை விதைகளும்
வேரை விட்டன;
நாளைத் தாய்க்குலம்
நம்மை வாழ்த்திடப் பூக்கும் நல் அரசு!’
- எம்.ஜி.ஆருக்கு எப்படி எழுதுவேனோ, அப்படி விஜயகாந்துக்கு எழுதிக் கொடுத்தேன்.
ஏனெனில் - என்னளவில், நான் விஜயகாந்தை 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று விளிப்பதில் CONVINCE ஆகியிருந்தேன் -
வருஷா வருஷம் - தன் பிறந்த நாளில் திரு.விஜயகாந்த், ஏழை எளியவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்ததால்!
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே - விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றிக் 'குமுதம்’ ஏட்டில் - கீழ்க்கண்டவாறு ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
'களம் புகுந்த -
கறுப்பு நிலா...
ஏழை எளியோர் -
வாழ்வில்
வெளிச்சம் வழங்கவல்ல...
ராத்திரி நேரத்து அகலா?
ராமாவரத்து நகலா?’
- இந்த வினாவிற்கான விடையை இப்போது சொல்கிறேன்.
'இது
அகல் அல்ல;
நகல் அல்ல;
பாதம் முளைத்து வந்த
பகல்!
I AM NOT A PROPHET! நான் ஒரு ஜோதிடன் அல்ல.
எனக்குள் ஓர் 'INTUITION’.
- சுழலும்...