
வாலிஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்
நான் நாணுகின்றேன்!
##~## |
'வழுதாவூர்’; 'வழுதாவூர்’; என்றோர் ஊர்; விழுப்புரம் பக்கம்.
அவ் வழுதாவூர், அடியேன் இதுகாறும் வழுத்தா ஊராயிருந்து - இப்போது நான் வாய் மணக்க வழுத்தும் ஊராகிப்போனது!
காரணம் -

அகவை தொண்ணூற்றேழு வரை, அஷ்டாட்சரத்தை வைகலும் ஓதி, வீர வைஷ்ணவராய் விளங்கிப் பின் விண்ணகரம் போய் -
நித்ய சூரியாய்த் திகழும் பரமபாகவ தோத்தமரான திரு.சாமிக்கண்ணுக் கவுண்டர்!
தினம் தினம் தேவராஜப் பெருமாளுக்குத் திருவால வட்டக் கைங்கரியம் புரிந்தவரும்;
ஆச்சரிய புருஷனாகவும் - ஆச்சாரிய புருஷனாகவும் எதிராஜரால் ஏற்றுக்கொள்ளப் பட்டவரும் ஆன -
திருக்கச்சி நம்பிகள்தான், வானின்றிழிந்து வழுதாவூர் வந்தாற்போல் -
திருமண் சாத்திக்கொண்டும், திவ்வியப் பிரபந்தங்களைச் சேவித்துக்கொண்டும் திகழ்ந்த திரு.சாமிக்கண்ணனார் -
பிறிதொரு நப்பின்னையே எனப் பிறங்கிய திருமதி இலட்சுமி அம்மாளுடன் வைணவ மரபு வழுவாது இல்லறம் நடத்தி வந்தார்.
அவ் இருவருக்கும் - நாவெல்லாம் நாலாயிரம்; நெஞ்செல்லாம் நாராயணம்!
சாமிக்கண்ணனாருக்கு ஒரு சத்புத்திரர். தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி!
அனவரதமும் ஆழ்வாரில் ஆழ்வார்; இருந்தால் எழுந்தால் நின்றால் நடந்தால் - 'நாராயணா’தான்!
நாலாயிரத்துக்கும் உரையெழுதியவர்; அதை உயர்ந்த காகிதத்தில் அச்சிட்டு உலகெங்கும் விநியோகித்தவர்.
அது மட்டுமோ?
மேடையேறி 'மைக்’ கைப் பிடித்தால் - பாசுரங்கள் பாபநாசம் அருவிபோல் பாய்ந்து வந்து -
அவையோர் அகவழுக்கை அலம்பும்! நேற்று எழுதிய சினிமாப் பாட்டை நினைவில் வைத்து - மறுநாள் பேசத் தெரியாதவன் நான்!
அய்யங்கார் மரபில் வந்து, ஆழ்வார்களை மனனம் செய்யாத அடியேன் -
சாமிக்கண்ணனார் புதல்வரைக் கண்டு சர்வாங்கமும் கூசிப்போய் -
நாணி நிற்கின்றேன்!
நாளும் என்னை நாண வைத்துக்கொண்டு இருக்கும், இன்னொருவரைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்!

அவர் வாயைத் திறந்தாலே, ஆழ்வார்கள் வந்து விழுவார்கள்; தினம் தினம் நுனிநாக்கில் நின்றுகொண்டிருப்பவர், திருமங்கை ஆழ்வார்.
பொழிச்சலூர் வாழ் ஸ்ரீமான் பார்த்தசாரதி அய்யங்காருக்கும், திருமதி மைதிலி அம்மை யாருக்கும் புதல்வராகப் பிறந்த -
அவர் ஒரு பத்திரிகையாளர்; என் வீட்டுக்குள் நுழையும் போதே - கடகடவென்று பாசுரங்களை என் காதுகளில் கொட்டித் தீர்ப்பார்!
நாலு ஆழ்வார் பாடல்களை நினைவில் ஒழுங்காக வைத்துக்கொள்ளாத நான் -
அவரைக் கண்டு நாணாமல் என் செய்வேன்?
இதை எழுதுங்கால் - என் சிந்தனைகள் ஸ்ரீரங்கத்திற்குச் செல்கின்றன!
மதுரகவி ஆழ்வார் தவிர - மற்ற ஆழ்வாரெல்லாம் மங்களா சாஸனம் செய்த -
திவ்விய க்ஷேத்திரம் திருவரங்கம்; அங்கு தெருமண் எல்லாம் திருமண்!
நம்மாழ்வாரைத் தவிர 'தேவு மற்றொன்றறியேன்’ என்று உறுதியாய் நின்று - உரகசயனனைப் பாடாது விட்டவர் மதுரகவி!
உரகசயனனென்றும்; உதகசயனனென்றும் ஆழ்வாராதிகள் சுட்டுவது -
பாலாழியிலும்; பைந்நாகப் பாயிலும் படுத்துக் கிடந்து -
பின் -
விசும்பு விட்டு அயோத்தி இறங்கி, வீடணன் வழியே -
திருவரங்கம் வந்து இரு தீர்த்தங் கள் நடுவே, அறிதுயில் கொள்ளும் அரங்கமா நகருளானை!
முப்பதாண்டு காலம், மூலை முடுக்கெல்லாம் திரிந்து -
திருவரங்கத்துத் தெருப்புழுதியை உடலிலும் உள்ளத்திலும் அப்பிக் கொண்டவன் நான்; தமிழ் என்னைத் தழுவாமலிருக்குமா?
தினம் தினம் திரும்பிய பக்கம் எலாம், திதிக்கத் திதிக்கத் திவ்வியப் பிரபந்தம் -
காது குரும்பையைக் கல்லிப் பின், புந்தியுள் புகுந்து பூந்தமிழை போதிக்குமே!
திருவரங்கத்தமுதனார் யாத்து அருளிய 'இராமானுச நூற்றந்தாதி’ யைக் கேட்டவனுக்குக் கனவில் கூடக் கட்டளைக் கலித் துறைபாட வருமே!
செங்கட் சீயம் சிரிக்க - மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்குக் கீழே -
ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு முன்பு - நான்கு கால் மண்டபத்தில், அட்டணைக்கால் போட்டு அமர்ந்துகொண்டு -
தான் இயற்றிய 'இராமாவதார’த் தைத் திருவழுந்தூர்க்காரன்-
அரங்கேற்றிய ஊரல்லவா, அரங்கன் ஊர்! இவ்வூர்க்காரனுக்குக் கற்றா வர வேண்டும் கன்னித்தமிழ்?
எஸ்.எஸ்.எல்.சி. வரை - என்னுடைய SECOND LANGUAGE சமஸ்கிருதம்; பறங்கியர் காலப் பாடத் திட்டத்தில் -
வடமொழி அல்லது வண்டமிழ் - இரண்டில் ஒன்றை இரண்டாம் பாடமாகக் கற்கலாம் என்றிருந்தது!
இருப்பினும், இங்கிலீஷ் ஞானம் இருந்தோர்க்கெல்லாம், இருந்தமிழ் ஞானமும் இருந்தது இயல்பாக!
திருவாய் மொழியின் பால் தீராத மையல் மேவி நின்றதால் -
உதட்டில் ஆங்கிலத்தையும், உள்ளத்தில் அருந்தமிழையும் -
உட்கார்த்தி ஊட்டி வளர்த்தபடி, உலகு சுற்றியோர் ஆவர் -
அரங்கமா நகரத்தார்!
இல்லையேல் -
'NEWYORK TIMES’ நிருபர் - 'கணையாழி’ கஸ்தூரிரங்கனென்றும்;
SILICON VALLEY - ல் புழங்கியவர் - சிறுகதைப் பள்ளத்தாக்கிலும் ஒரு சீதளப் பூந்தென்றலாய் உலவிய 'சுஜாதா’ வென்றும்..
என்னணம் ஏற்றம் பெற ஏலும்?
ஒரு சாலை மாணாக்கரான கஸ்தூரி ரங்கனும்; 'சுஜாதா’ ரங்கராஜனும் திருவரங்கத்துத் திருவாய் மொழிப்புனலில், குடைந்தாடியோர்!
'திருமலாச்சாரி’; 'திருமலாச்சாரி’ என்று திருவரங்கம் மேல உத்தர வீதியில் ஒரு நண்பர்; என் நாடக நடிகரும் கூட!
மணவாள மாமுனிகள் மரபில் வந்தவராதலால் -
பின்னாளில் பெரிய ஸ்ரீவைஷ்ணவராகப் பரிணமித்துப் - பிரபந்தங்கள் குறித்துப் பிரவசனம் பண்ணலானார்!
அவரிடம் - திருவாய்மொழிப் பாடம் கேட்க -
வாரம் ஒருமுறை திருச்சியிலிருந்து திருவரங்கம் வருவார் -
தகவுசால் ஒரு தமிழ் வித்வான்; நெற்றியில் ஸ்ரீசூர்ணம்; பட்டு வேஷ்டி; பட்டு ஜிப்பா; நல்ல ஆகிருதி; பார்ப்பவர் யாரும் பயபக்தியோடு வணங்கி நிற்கும் பாண்டித்தியம்!

அவர்தான் - அருந்தமிழ்க் கொண்டல் திரு.அய்யன்பெருமாள் கோனார் அவர்கள்!
உலகு புகழ் 'கோனார் நோட்’ஸை உருவாக்கியருளிய உத்தமர்!
திருமலாச்சாரி வீட்டில் அவரை நான் சந்தித்துத் தண்டனிடுவதுண்டு; ஒருமுறை, என்னிடம் பேரன்பு கொண்டு, அவர் கீழ்க் கண்டவாறு சொன்னார்.
'வாலி! ஒண்டமிழில் ஒருவன், நூலாயிரம் படிக்கலாம்; அவை, போலாயிரம் படிக்கலாம்; அதற்கு மேலாயிரம் படிக்கலாம்; ஆனால், நாலாயிரம் படித்தாலே யன்றி - அவனது நாக்கு, நற்றமிழ் வங்கியாகாது!
நீ - வளரும் கவிஞன்; விடாதே, ஆழ்வார் களை! வேளை கிடைக்கும் போதெல்லாம் பிரபந்தங்களைப் படி; அந்த அருளிச்செயல்கள் - உன் அறிவைச் சாணை பிடிக்கும்!’
அய்யன்பெருமாள் கோனார் அவர்கள் அறுபதாண்டுகளுக்கு முன் அடியேனுக்கு அறிவுறுத்தியதை அவ்வப்போது நினைப்பேன்.
இந்த நினைப்பை - நாளாவட்டத்தில் என்னால் நடைமுறைப்படுத்த முடியாதபடி போய்விட்டது!
ஒருமுறை 'சுஜாதா’ என்னிடம், 'வாலி! நீ அவதார புருஷன் எழுதின மாதிரி - வசன கவிதையில, நாலாயிரத்துக்கும் உரை எழுது; ஸ்ரீரங்கத்துல வளந்துட்டு - ஸ்ரீரங்கத்து மண்ணுக்கு நீ ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டாமா?’ என்று என்னை உசுப்பிவிட்ட போதும் -
நாலாயிரத்தைப் பாராயணம் பண்ணாமல் விட்டுவிட்டோமே என்று, நானே என்னைக் கடிந்துகொண்டேன்!
'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ எழுதி சுஜாதா தன் கடனைத் தீர்த்தார்; தீர்க்காமல் நிற்கிறது என் கடன்!
'நாலாயிரத்தை’ச் சம்பாதிக்காத வைணவன் நாற்பது லட்சத்தைச் சம்பாதித்து - ஜென்மத்தைக் கடைத் தேற்றிவிட முடியுமா?
இருபதாண்டுகளுக்கு மேலாக என்னை - நாலாயிரமும் நாராயணமும் சொல்லி நாண வைத்துக் கொண்டிருப்பவர் -
அமரர் சாமிக்கண்ணனாரின் அருமந்தப் புதல்வர் -
மாண்புமிகு அமைச்சர் பெருந்தகை - திரு.ஜெகத்ரட்சகன்!
அவர் - நாளும் நிகழ்த்துகிறார் நாவில் நாராயண வேள்வியை -
ஒரு ரிஷி போல; அவருக்கு வாய்த்த மனைவி யார் பெயரும் - ஒரு ரிஷிபத்தினி பெயர்தான்! ஆம்; அனுசூயா!
இஃதே போல் -
என்னை நாண வைத்துக் கொண்டிருக்கும் இன்னொருவர் -
'ஆழ்வார்க்கடியான்’ என நான் அன்போடு விளிக்கும் -
திரு.மை.பா.நாராயணன்!
படத்திற்குப் புதிதாகப் பாடல் எழுத வருபவர்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்: 'உங்களிடம் வாக்கு வங்கி இருந்தால்தான் - வர்ண மெட்டுக்கு ஏற்ப வார்த்தைகளைப் போட முடியும்!’
'தமிழ் உனக்கு வசப்பட -
கம்ப ராமாயணம் படி; பிரபந்தங்கள் படி!’
- பாவேந்தர் பாரதிதாசன்!
- சுழலும்...