அனுபவங்கள் பேசுகின்றன!
##~## |
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
வரவேற்கத்தக்க உறவு!
என் தோழியும், அவள் கணவரும் வேலைக்குச் செல்பவர்கள். அவளுடைய அண்ணனும்,

அண்ணியும் தீபாவளிக்காக அவளுடைய வீட்டுக்கு வருவதாக ஏற்பாடு. சனிக்கிழமையன்றுதான் தீபாவளி என்றாலும், புதன்கிழமையே வந்துவிட்டனர். இவர்களுக்கு லீவு இல்லாததால், வேறு வழியின்றி ஆபீஸுக்கு சென்றார்கள். திரும்பி வந்து பார்த்தால்... பெரும்பாலும் அலங்கோலமாக கிடக்கும் அந்த வீட்டை கண்ணில் ஒற்றிக் கொள்வது போல மாற்றி அமைத்திருந்தார்களாம் அண்ணன் - அண்ணி. ''சும்மாதானே வீட்டில் இருந்தோம். அதான்'' என்று கேஷ§வல் பதில் வேறாம்.
'உறவுகளின் வருகை' என்றாலே பலரும் பயப்படும் இந்த அவசர யுகத்தில்... இந்த அண்ணன்- அண்ணியின் பாதையைப் பின்பற்றினால், எத்தனை முறை சென்றாலும், உறவினர்கள் வீட்டில் 'சிவப்புக் கம்பள’ வரவேற்பு கிடைக்கும் என்பது நிச்சயம்!
- ஏ.ஜே.தில்ஷாத்பேகம், சத்தியமங்கலம்

பசியாற்ற, கிழமை பார்க்கலாமா..?
'புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில், பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுத்தால் மிகவும் விசேஷம்’ என்பது ஐதீகம். புரட்டாசியில், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு ஒரு வெள்ளிக்கிழமையன்று சென்றிருந்தேன். கோயிலுக்கு வெளியே திரிந்து கொண்டிருந்த பசு மாடுகளுக்கு ஒரு பெண்மணி அகத்திக்கீரை கொடுத்துக் கொண்டிருக்க... ''அம்மா, நாளைக்குத்தானே சனிக்கிழமை. பசுக்களுக்கு சனிக்கிழமையில் அகத்திக்கீரையை கொடுப்பதுதானே விசேஷம்?'' என்றேன். ''பசியா இருக்கற மாட்டுக்கு சனிக்கிழமையும் தெரியாது.

வெள்ளிக்கிழமையும் தெரியாது. நாளைக்கு ஒரே பசு மாட்டுக்கு பத்து பேரு அகத்திக்கீரையைக் கொடுத்து, அந்த ஜீவனை அவஸ்தைப்படுத்து வாங்க! கிடைக்கிற புண்ணியம் எந்தக் கிழமையில செய்தாலும் கிடைக்கும்'' என்று சட்டென்று சொன்னார் அந்தப் பெண்மணி.
இப்போது நானும் கிழமை பார்க்காமல், பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வருகிறேன்.
- மீனா முருகேசன், தஞ்சாவூர்
கையில் வந்ததைக் கொடுப்பதா?
என் தோழியை தற்செயலாக ஜவுளிக் கடையில் பார்த்தபோது... எண்பது, தொண்ணூறு, நூறு சென்டிமீட்டர் என பலவித அளவுகளிலும், பல வண்ணங்களிலும் ரவிக்கைத் துணி வாங்கிக் கொண்டிருந்தாள். ''ஏன் இப்படி வாங்குகிறாய்?'' எனக் கேட்டேன். அவள் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது...

''பண்டிகைகள் வரும்போது, ரவிக்கைத் துணிகளை பரிசாகக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. பெரும்பாலும் உடல்வாகு, நிறம் போன்றவற்றையெல்லாம் பார்த்து கொடுப்பது கிடையாது. பீரோவில் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுக்கிறார்கள். வாங்கிச் செல்பவர்கள்... 'இந்த ஜாக்கெட் பிட் நம்ம அளவுக்கு குறைவா இருக்கே... இந்த நிறத்துல கொடுத்திருக்கா பாரு...' என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டே... அதை வீணே போட்டு வைத்திருப்பதோ... தூக்கி வீசுவதோதான் நடக்கிறது. அதனால்தான் வருபவர்களுக்கு பொருந்தும்படியான ரவிக்கைத் துணிகளை கொடுப்பதற்காக இப்படி வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சம்பிரதாயத்துக்காக கொடுத்தாலும், முகம் மலரும்படி கொடுத்தால்தானே நமக்கும் முழு நிறைவு கிடைக்கும்'' என்றாள் தோழி!
- சியாமளா பாலு, திருச்சி