சொல்வனம்
யாரும் அறியா தற்கொலைகள்
மேற்குத் தொடர்ச்சிக் காடுகளில்
ஒரு மலை வாசஸ்தலத்தின்
கொண்டை ஊசி வளைவுகளை
லாகவமாகக் கடந்துகொண்டிருக்கிறது
ஓர் அரசுப் பேருந்து.
அவள் கண்ணீரால்
நனைந்திருக்கிறது
இவன் வலது தோள் சட்டை.
கிராமம் ஒன்றின்
மருந்துக் கடையில்
நடுங்கியபடியே
நெற்பயிருக்கெனச் சொல்லி
பால்டாயில் வாங்கிக்கொண்டிருக்கிறது
தோற்றுப்போன ஒரு குரல்.
அடித்துப் பெய்த பேய் மழைக்கு
அடுத்த நாளில்
பதினாறு கமான் பாலத்தின் மேல் நின்று
காட்டாற்று வெள்ளத்தை
வெறித்துப் பார்க்கின்றன
கண்ணீர் தளும்பும்
கண்கள் நான்கு.
அடுக்கு மாடிக் கட்டடமொன்றின்
27-வது மாடியில்
மின்விசிறிக்கேற்ப
இடவலமாக
உருண்டுகொண்டிருக்கிறது
சற்று முன் காலியான ஒரு
தூக்க மாத்திரை குப்பி.
இரு கைகள்
குளிர் ஆசுவாசம்கொண்டிருக்க
இன்னுமிரண்டு படபடவென
நேசத்தின் வேதனையைக்
காற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தன
கண்கள் நிலைகொண்டிருந்தன.
எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து
சனத்திரள் மிகுந்த நிலையத்தில்
குலுங்கி நிற்கிறது
இள ரத்தம் தோய்ந்த
ஒரு பழைய இன்ஜின் பெட்டி!
-வேங்கட ரமணன்

மௌனக் கூடு
இரைச்சலான கீழ் வீடு
துன்புறுத்துகிறது
காலியான பின் அதிகமாய்!
-தேனம்மை லெட்சுமணன்
கத சொல்லப்போறேன்...
படுத்திருக்கும் குழந்தைக்கு
கதை சொல்லித் தூங்கவைப்பது
அலாதியானது எப்போதும்.
கதை கேட்டதிலோ, சொல்வதிலோ
அவ்வளவு பரிச்சயமில்லை என்னிடம்.
எனினும்,
ஓர் இலக்கில்லாமல் கதையை
எங்கோ ஆரம்பித்து
எப்படி முடிப்பது
எனத் தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கையில்
அது தெரிந்தோ என்னவோ
குழந்தை எப்போதும்
பாதியிலேயே
தூங்கிவிடுகிறது!
-கு.விநாயகமூர்த்தி
நிராகரிப்பு
அனைத்து உயிரினங்களிலும்
ஆணும் பெண்ணுமாய்
ஒரு ஜோடி
நோவாவின் கப்பலில்.
நீராலழிந்த புவிக்கோளத்தின்
மீட்டுருவாக்கத்தின்பின்
திகைத்து நிற்கிறான் நோவா
கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்
பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த
மூன்றாம் பாலினம் நோக்கி!
-கவின் மலர்
