மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 44

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஓவியம் : மணி

உறையூர் வாத்தியார்!

##~##

'புஸ்தகம்-
ஹஸ்த பூஷணம்!’

- வாகீச கலாநிதி திரு.கி.வா. ஜகன்னாதன் அவர்கள் வாய் மலர்ந்தருளிய ஒரு வடமொழி வாசகம் இது.

இதன் பொருள் -

'ஏடு
என்பது -
நம் கை அணியும்
நகை!’

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 44

த்தகு புத்தக நகைகளைப் புத்தம் புதிதாய்ப் பதிப்பகங்கள் படைக்கின்றன - பொற்கொல்லர் அனைய சொற்கொல்லர் தமைக்கொண்டு!

பதிப்பகங்கள் பால் பற்றுடையவன் நான். பற்று வரவு கருதியல்ல இப்பற்று; அவற்றின் பணி கருதி!

பதிப்பகங்கள் தாம்

படிமிசை -
எம்மனோர்
எழுதிய -
நூல்கள் நடக்க உதவும்
கால்கள்!

புத்தகங்கள் பட்டிதொட்டியெங்கும், பல புத் தகங்கள் புகப் பதிப்பகங்கள் தாம் -COURIER . அவற்றை விட்டால் அப்பணி ஆற்ற ஆர்தாம் உரியர்?

டங்களுக்குப் பாட்டெழுதும் ஒருவன், கோடம்பாக்கத்தில் கோலோச்சுதல் வேறு; கோதறு தமிழில் நூலோச்சுதல் வேறு!

முன்னது - இருந்து வாழ்வதற்கு உதவும்;

பின்னது - இறந்து வாழ்வதற்கு உதவும்!

எனது - எழுத்துக்கு மரியாதையும்; கழுத் துக்கு மலர் மாலையும் வரக் காரணமாக இருப்பவை, பதிப்பகங்களே.

'வானதி’ - முதன்முதல் என் கவிதைத் தொகுப்பைப் பதிப்பித்தது; 'விகடன்’ - முதன்முதல் என் காவியங்களைப் பதிப்பித்தது; 'அல்லையன்ஸ்’ - முதன்முதல் என் குறுங்காவியத்தைப் பதிப்பித்தது; 'கலைஞன்’ - முதன்முதல் என் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்தது; 'குமரன்’ - முதன்முதல் என் ஆயிரம் திரைப் பாடல்களைப் பதிப்பித்தது; 'கண்ணதாசன்’ - முதன்முதல் எனது கண்ணதாசனைப் பற்றிய நூலைப் பதிப்பித்தது!

இப்படி - என் முதல்களுக்கெல்லாம் முதல்கள் போட்டவர்கள் எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள்; இன்றளவும் இழையறாத சக்கியமானவர்கள்.

வ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரி களாவது சொல்ல வேண்டும்.

'விகடன்’ திரு.ஸ்ரீனிவாசன் -

என் எழுத்துகளை

ஏந்தி நிற்கும் -

நிழற்பட நாடாக்களை விட, 'நினைவு நாடாக்கள்’தாம் - நீணிலத்தார் நெஞ்சங் களை மயிலிறகாய் நீவுகிறது எனில் -

அதற்கு, இவரே காரணம். தமிழைத் தாங்குவதில் தந்தை வழி தனயன்!

'கலைஞன்’ திரு.நந்தா.

நந்தா, ஒரு நந்தா விளக்கு; எந்தக் காற்றையும் எதிர்கொண்டு நிற்கும் சுடர்;மாசிலாமணி பெற்ற மாசிலா மணி!

'அல்லயன்ஸ்’ திரு.ஸ்ரீனிவாசன்.

நூற்றாண்டு கண்ட நூற்பதிப்பகத்தைக் காற்றாண்டு நிற்கும் ககனம் போல், விரிவாக்கி வைத்தவர்; அதற்குக் காரணம் -

ALLIANCE IS KNOWN FOR IT'S RELIANCE!

'குமரன்’ திரு.வைரவன்.

இந்த வைரவன் -

நெறி எனும் தறியில் நூல்களை நெய்பவன்;

நிலமிசை இல்லை இவ்வைரவனை  வைபவன்;

தமிழுக்குத் தகவு செய்பவன்; தர  வேண்டிய

சன்மானத்தை தாராளமாய்ப் பெய்பவன்!

'கண்ணதாசன்’ திரு.காந்தி.

கவிஞர் எழுதிய - கால் கை முளைத்த   கவிதை;

இவனுக்கு நான் சிறிய தந்தை; காரணம்,

இவனுக்கு இல்லை சிறிய சிந்தை!

இவ் வரிசையில் 'வானதி’ திரு.திருநாவுக்கரசு பற்றிக் கொஞ்சம் விரித்துச் சொல்ல வேண்டும்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 44

திரு.திருநாவுக்கரசுதான், ஒரே நேரத்தில் என் பத்துப் புத்தகங்களை ஒருசேர வெளியிட்டவர்.

காஞ்சிப் பெரியவாளையும்; காங்கேய நல்லூர்ப் பெரியவரையும்...

அச்சு வாகனத்தில் அமர்த்தித் தேசம்எங்கும், இந்த தேவகோட்டைக்காரர்தான் சுமந்து சென்றார்; சூடற்கரிய அருள்நலம் சூடி நின்றார். நூலால் வரும் பொருளைக் காட்டிலும், நூலுள் வரும் பொருளைப் பெரியதாய்க் கருதுவார்!

காளியாச்சியின் கேள்வர்; கங்குலும் பகலும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு PROOF பார்த்துவிட்டுத் தான் மறுவேலைக்கு மீள்வர்!

இவரைப் பற்றி, நான் ஒரு விழாவில் பாடியதைக் கேட்டு கி.வா.ஜ. கைதட்டிச் சிரித்தார்.

பாட்டு இதுதான்:

'மனையாளின் நூலிடையில்
மனம்வைக்க நேரமின்றி -
மணித்தமிழ் நூலிடையில்
மணிக்கணக்காய் ஆழ்ந்திருப்பார்!

சிங்கிள் டீ கிடைக்காமல்
சிரமத்தில் இருந்தோரும் - இவரது
ராயல் டீ கிடைத்ததனால்
ராஜாக்கள் ஆனதுண்டு!’

திகம் என் நூல்களை அச்சிட்டவர் என்பதால், திரு.வானதி திருநாவுக்கரசின் வார்த்தைக்குக் கட்டுப்படுவேன்.

அப்படி ஒரு முறை - அவரது வற்புறுத் தலின் பேரில், தேவகோட்டைக்குக் கந்த சஷ்டி விழாவிற்குப் போனேன். வருஷம், எழுபத்தைந்தோ, எழுபத்தாறோ நினைவில் இல்லை.

என் தலைமையில் கவியரங்கம்; கண்ணதாசனின் தனி உரை 'அர்த்தமுள்ள இந்து மதம்’ பற்றி.

நானும் கண்ணதாசனும் - தேவகோட்டை யில் திரு.சேவுகன் செட்டியார் அவர்களின் வீட்டில் பக்கத்துப் பக்கத்து அறையில் தங்கியிருந்தோம்.

கண்ணதாசன் அவரது துணைவியார் திருமதி. புலவர் வள்ளியம்மையோடும், பெண் குழந்தை விசாலியோடும் வந்திருந்தார்.

மாலைதான் எங்கள் நிகழ்ச்சிகள். நானும் கண்ணதாசனும் செட்டியார் வீட்டு வாசற் பந்தலில் காற்றாட உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தோம். நண்பகல் நேரம்.

பக்கத்தில்தான் விழா நடக்கும் வளாகம். காலையிலிருந்து பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

தலைப்பு - 'கண்ணகி; மாதவி; இவ் இருவரில் யார் மேல்?’ என்பது.

நானும், கவிஞரும் கேட்டுக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருந்தோம்.

திடீரென்று கண்ணதாசன், 'வாலி! நீர் பட்டிமன்ற நடுவரா இருந்தா - என்ன தீர்ப்புச் சொல்லுவீர்? கண்ணகி, மாதவி இருவரில் யார் மேல்?’ என்று கேட்க -

'இருவருமே MALE இல்லை; இருவருமே FEMALE!’ என்று நான் தீர்ப்பளிப்பேன் என்றேன்.

கண்ணதாசன், 'வாலீங்கற பேருக்குத் தகுந்த மாதிரி, குரங்கு புத்திய்யா உமக்கு?’ என்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார்.

தை எழுதுகையில் -

கண்ணகி, மாதவி பற்றி, என் இருபத்தைந்தாம் வயதில், திருச்சி எழுத்தாளர் சங்கத்தில் நான் படித்த கவிதையன்று நினைவிற்கு வருகிறது.

அவையில் - அகிலன்; சுகி; துறைவன்; மீ.ப.சோமு; திருலோகம்; கிருஷ்ணசாமி ரெட்டியார்; வித்வான் துரைசாமி என்று பலர்.

கவிதையின் தலைப்பு 'இருமாதர்’; அரை குறையாக நினைவில் உள்ளது. அது இதோ...

'ஒருத்தி குலத்தார்
ஓம்பியது கடல் வணிகம்;
இன்னொருத்தி குலத்தார்
இயற்றியது உடல் வணிகம்!

ஒருவனே தழுவினான்
இருவரை; அவ்
இருவருமே கற்பு நெறியில்
இடம்பெயறா இரு வரை!

அவர்களது
ஆளன் -
புகாரில் பிறந்தவன்;
புகாரில் இறந்தவன்!

ஒருத்தி-
விண்மகள் மரபில் வந்து
மண்மகள் ஆனவள்; இன்னொருத்தி
மண்மகள் மரபில் வந்து
விண்மகள் ஆனவள்!

- இப்படிப் போகிறது கவிதை;இதை வெகுவாகப் பாராட்டியவர், உறையூரில் பணி புரிந்த ஒரு தமிழ் வாத்தியார். எனக்கு நன்கு பரிச்சயமானவர்.

அவர், சிற்றூர்தோறும் சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றவர்; திரு.அய்யன் பெருமாள் கோனாராலேயே சிலாகிக்கப்பெற்றவர்!

அந்த வாத்தியார், கண்ணகி மேல் தனக்குள்ள ஈடுபாட்டால், தன் மகளுக்குக் கண்ணகி என்றே பேர் வைத்தார்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 44

அவர் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன்.

'என் பெண்ணைக் கண்ணகி போல், சிலப்பதிகாரத்தையே சோறாக ஊட்டி ஊட்டி வளர்க்கிறேன். இவள், இன்னொரு கண்ணகி; இன்னொரு கற்புக்கனல்!’ என்று உணர்ச்சி உந்தப் பேசுவார்.

ஒரு முறை, நான் அவரிடம் சொன்னேன். ''சார்! கண்ணகி, வணக்கத்திற்குரிய குலமகள் என்பதில், இரண்டாம் கருத்தேயில்லை; இருப்பினும் அவள், 'தேரா மன்னா!’ என்று காவலனைக் கடிந்ததற்குப் பதிலாக, 'தேரா மணாளா!’ என்று கோவலனைக் கடிந்திருக்க வேண்டும். கண்ணகி போன்ற உங்கள் மகளுக்கு, கோவலன் போன்ற கணவன் வாய்த்தால் - நாளை என்ன செய்வீர்கள்? வாழாவெட்டியாக மகள் வாழ்வதைப் பார்த்து, சினம் கொள்வீர்களா? இன்னொரு கண்ணகி என்று சிலாகித்து நிற்பீர்களா?''

- இப்படி நான் கேட்டதும், 'நீ கண்ணகியைக் கொச்சைப் படுத்துகிறாய்; உருப்பட மாட்டாய்!’ என்று என்னைக் கோபித்து அனுப்பினார்!

திருச்சியை விட்டு சென்னை வந்து - திரை யுலகில் நான் பிரபலமான பல வருடங்களுக் குப் பின்னால் திருச்சி சென்றபோது -

உறையூர் தமிழ் வாத்தியார் பற்றி விசாரித்தேன்.

அவருக்கு வாய்த்த மருமகன், கோவலன் போலவே வேறொரு மாதவி பின் போக - மகள் கண்ணகி வாழாவெட்டியாக -

வாத்தியார் மருமகனைக் கண்டித்தும், அவன் வழிக்கு வராது அவரை வசைபாடி விரட்ட -

மகள் படும்பாடு காணச் சகியாது, அந்த வாத்தியார் சித்த ஸ்வாதீனமில்லாமல் சில காலம் வாழ்ந்து, சிவலோகம் போனார் என்று நான் கேள்விப்பட்டேன்!

தொலைக்காட்சியில் ஒரு தொடர் வந்தது - 'சக்திமான்’ என்று. அதைப் பார்த்துப் பார்த்து, டெல்லியில் ஒரு சிறுவன் -

சக்திமான் ஆகவே தன்னைப் பாவித்து, மேல் மாடியிலிருந்து கீழே குதிக்க - மூளை சிதறி மடிந்து போனான்!

ந்தச் சிறுவனுக்கும், இந்தச் சிலப்பதிகார வாத்தியாருக்கும் -

அதிக வித்தியாசமில்லை!

- சுழலும்...