மந்திர க்ளைமேட் ரகசியம் சொல்லும் மத்திகிரி!
##~## |
நெருக்கி அடிக்கும் நெரிசல், மூச்சுத்திணற வைக்கும் சுகாதாரச் சீர்கேடுகளில் சிக்கித் தவிக் கும் நகரவாசிகள் அந்த வழியே கடக்கும்போது ஏக்கப் பெருமூச்சுவிடும் ஸ்பாட்... மத்திகிரி கால்நடைப் பண்ணை!
ஓசூர் - தேன்கனிக் கோட்டை சாலையில் இருக்கிறது இந்தப் பண்ணை. 1,641 ஏக்கரில் பரந்து விரிந்து நிற்கும் பண்ணையில், திரும்பிய திசை எங்கும் பச்சைப் பசேல். வழி நெடுக சாமரம் வீசும், நூற்றாண்டுகளைக் கடந்த மரங்கள், கம்பீரமாகக் காட்சி அளிக்கும் ஆங்கி லேய பாணிக் கட்டடங்கள், ஆண்டு முழுவதும் ஜில் கிளைமேட் என்று வற்றாத ஊற்றாக வழிந்துகொண்டு இருக்கிறது இயற்கை அழகு.

187 ஆண்டுகள் பாரம்பரியம்கொண்ட இந்தப் பண்ணை, 1824-ல் ஆங்கிலேயர்களால் நிறுவப் பட்டது. இதை ரிமவுண்ட் டிபோட் என்ற அதிகாரி, ராணுவத் தளத்துக்காக வளைத்துப் போட்டார். ஆயுதக் கிடங்கும், குதிரை லாயமும் இங்கே செயல்பட்டன. ஆங்கிலேயர்கள் 1924-ல் சென்னை அரசாங்கத்தின் வேளாண் துறை வசம் இந்தப் பண்ணையை ஒப்படைத்தனர். பிறகு, 1938-ல் இது சென்னை கால்நடைத் துறை வசம் போனது. 'மத்திகிரி கேட்டில் ஃபார்ம்’ என்ற பெயர் 1970-ல் 'லைவ் ஸ்டாக் ஃபார்ம்’ என்று மாற்றம் பெற்றது.

பெயரில்தான் மாற்றங்களே தவிர, இன்றும் ஆதிப் பரிசுத்தத்துடன் இருக்கிறது பண்ணை. பச்சைப் பரப்பில் மேய்ந்தபடியே கொம்பு தீட் டும் மாடுகள், மடி முட்டி பால் குடித்துத் துள்ளித் திரியும் இளங்கன்றுகள், மாடுகளின் முதுகில் உட்கார்ந்து பூச்சிகளைத் தின்னும் கரிக் குருவிகள் என ரசிப்பதற்கு ஏராளமானவை இருக்கின்றன. இங்கே வளரும் பசுக்கள் சுரக்கும் கெட்டியான பால்தான் மத்திகிரி மற்றும் ஓசூர் மக்களின் ஆரோக்கியத்துக்கு அத்தாரிட்டி. பசுக்களுக்குச் செலுத்தும் உறை விந்து சினை ஊசிகளும்இங்கே தான் தயாராகின்றன. காங்கேயம், ஜல்லிக்கட்டுக் காளைகள், கத்திவார், தாரோ ரேஸ், சிந்தி, ஜெர்சி போன்ற கன்றுகளும் இங்கே உற்பத்தி செய்யப் படுகின்றன. ஆடு, கோழி, வெள்ளைப் பன்றி தொடர்பான ஆராய்ச்சிகளும் இங்கு அமோகம். இங்கே வளர்க்கப்படும் கம்பீரக் குதிரைகள்தான் காவல் மற்றும் ராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆலைகளும், கான்க்ரீட் கட்டடங்களின் நெருக்க மும் குளுமையைக் குறைக்கப் பார்த்தாலும், மத்திகிரி பண்ணையின் தயவால் பெங்களூருவுக்கு இணை யாகக் குளிர்கிறது ஓசூர்!
- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்