ரகசியம் சொன்ன விக்ரம்
##~## |
எத்திராஜ் காலேஜ் கல்ச்சுரல் 'ஆரம்ப்-மைத்ரி 2011’-விழாவின் சீஃப் கெஸ்ட்... விக்ரம்! ''கிருஷ்ணா வந்தாச்சு..'', ''சீயான்..'', ''ஓ போடு'' என அரங்கம் அதிர எழுந்த சந்தோஷ அலையைப் பார்த்ததும் சிரித்தபடி மேடை ஏறினார் விக்ரம்.
''நான் காலேஜ் நிகழ்ச்சிகளுக்கு அதிகம் போறது இல்லை. 'தெய்வத் திருமகள்’ ரிலீசுக்குப் பிறகு நான் கலந்துக்குற முதல் நிகழ்ச்சி இது'' என்ற விக்ரம், கையை குழல்போல் சுருட்டி, ''கிருஷ்ணா வந்தாச்சு...'' என்றதும், ''சாரா வந்தாச்சு...'' என கேர்ள்ஸ் மத்தியில் இருந்து வந்தது கோரஸ் அலை. தொடர்ந்து எத்திராஜ் ஏஞ்சல்ஸின் கேள்விகளுக்கு விக்ரம் பதில் அளித்தார். அந்த சிட்-சாட் அப்படியே இங்கே..
''சாரா எங்கே?''
''சாரா இப்ப செம பிஸி. பெரிய சைல்ட் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டாங்க. அடுத்ததா ஷாரூக் கான்கூட நடிக்குறாங்க.

'' 'சீயான்’னா என்ன அர்த்தம்?''
''பெருசு, தலனு அர்த்தம்.''
''நீங்கள் நடித்ததில் உங்களுக்கு க்ளோஸான கேரக்டர் எது?''
'' 'அந்நியன்’ அம்பி. அடுத்ததா ரெமோ!''
அடுத்து என்ன படம், என்ன கேரக்டர்?
'' 'ராஜபாட்டை’. ஜிம்பாய் கேரக்டர்.''
''மறக்க முடியாத நாள் எது?''
'''சேது’ ரிலீஸ் ஆன டிசம்பர் 10. நான் ரிலீஸ் ஆன டிசம்பர் 14.''

''அனுஷ்காகிட்ட எப்படிப் பேசுவீங்க?''
''இப்படித்தான் பேசுவேன்.'' (கழுத்தை நிமிர்த்தி மேலே பார்த்துச் சொல்கிறார்.)
''அனுஷ்காவோட ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியிருக்கலாமே?''
''டைரக்டர் விஜய்கிட்டே கேட்டேன். 'கிருஷ்ணா கேரக்டர் அப்படி எல்லாம் ஆடக் கூடாது!’னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்!''
''பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் யார்?''
''பிடிச்ச ஹீரோக்கள் ஷாரூக், சல்மான். ஹீரோயின் லிஸ்ட் பெருசு. ஒவ்வொரு படத்துக்கும் தகுந்த மாதிரி மாறும். இப்ப ரெண்டு வருஷத்துக்கு அனுஷ்காவேதான். ஆனால், எப்பவும் பிடிச்ச ஹீரோயின் சாராதான்!''
''பிடிச்ச இயக்குநர்?''
''மணி சார், ஷங்கர் சார். ரொம்ப க்ளோஸ்னா பாலா!''

''ரோல் மாடல் யார்?''
''எதற்காகவும் என்னை விட்டுத் தராத என் மகள்.''
''வெற்றி ரகசியம்?''
''எங்கேயும், எதற்கும் விழுந்து விடாமல் இருக்குறது!''
''உங்கள் வெற்றிக்குக் காரணமான பெண்கள்?''
''என் அம்மா ராஜேஷ்வரி, என் மனைவி ஷைலா, என் சைக்காலஜி டீச்சர்.
கல்ச்சுரலில் ஆடிப் பாடிய தேவதைகளுக்கும், 'மிஸ்எத்திராஜ்’ விருதை பி.எஸ்சி. சைக்காலஜி படிக்கும் வேதா நாதள்ளாவுக்கும் பரிசுகளை தந்த விக்ரம், 'எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நல்லா இருக்கீங்க. நல்லாப் படிக்கிறீங்க. உங்க கனவுகளுக்கு உயிர் கொடுங்க. வாழ்க்கையில் முன்னேறுங்கள்’ என்று சல்யூட்வைத்து விடை பெற்றார். 'பை பை சீயான்’ என்று வழி அனுப்பிவைத்தார்கள் தேவதைகள்.
- க.நாகப்பன், படங்கள்: ஜெ.தான்யராஜு