பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கவிதையைக் கொடுத்து, இசையைத் தொடுத்து, நாடகம் நடித்து பல்வேறு உணர்வுகளை பரிதவித்த பொழுதெல்லாம் பசி நிறைந்த பிள்ளைக்கு பசி மறக்கச் செய்த தமிழ் முத்தமிழ். அந்த முத்தமிழை ரசிக்க பற்பல வழி இருந்தாலும் 90களின் முற்பகுதியில் பிறந்த எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம் அதிகம்.
தேடல் இனிது, மனம் நாடியதைத் தேடி அடைதல் இனிதினும் இனிது, நாடியதை பிறரிடம் ரசித்து உணர்தலின் பொழுது அலாதி இன்பம். நான் ரசித்த சினிமா கலைஞர்களை பற்றி இங்கே பகிர்கிறேன்..
நீங்கா கலைஞன் பாகம் 1 : இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..!

*இளையராஜா - எஸ்.பி.பி*
1966 ஆம் ஆண்டு சினிமாவில் ஒரு புதிய இசை ஒலித்தது. அதே வருடம், கன்னட சினிமாவும் அவரை வரவேற்று வாய்ப்பளித்தது. பின்பே, வந்தோரை வாழவைக்கும் சென்னை அவர் கரத்தைபிடித்து அரவணைத்தது. தன் முதல் பாடல், தமிழில் பாடி வெளிவராமலே சென்றது, இத்தனைக்கும் அது மெல்லிசை மன்னரின் இசையில்.
பின் 1வன் இசையில் மக்கள் திலகத்திற்கும் எம்.எஸ்.வி இசையில் காதல் மன்னனுக்கும் ஆக, "ஆயிரம் நிலவே வா" மற்றும் "இயற்கை என்னும் இளைய கன்னி" என்று 1969 ஆம் ஆண்டில் தமிழில் எஸ்.பி.பி சிப்பிக்குள் இருந்து முத்துக்களாய் வெளிவந்தார்.
கமலின் திரையுலக வரலாற்றிலேயே அவருக்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்தது இந்த இசைச்சிற்பி தான். ஆம், கமலுக்கு சிப்பிக்குள் முத்து படத்தில் எஸ்.பி.பி. பின்னணி குரலாக ஒலித்தார்.
"நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடலை பாடி வாய்ப்பு கேட்டு பின் "ஆயிரம் நிலவே வா" என்று முதலில் ஒலித்து "வான் நிலா நிலா அல்ல" என்று மீண்டும் இணைந்து எம்எஸ்வி - எஸ்பிபி கூட்டணி நிலவை வர்ணித்தது.
அந்த நிலவை எஸ்பிபியும் விடவில்லை, நிலவும் எஸ்பிபி ஐயும் விடவில்லை. பின் இணைந்த இளையராஜா கூட்டணி நிலவை வர்ணிக்க ஒன்றா, இரண்டா? பல பாடல்கள். "இளைய நிலா" பொழிகிறதே என்று இசைஞானியின் இசையோடு முதலில் இசைந்து, பின் "நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" என நிலவையும் சொக்க வைத்து, பின் "வா வெண்ணிலா என வெண்ணிலவையும் மயக்கி காதல் நிலவையும் மயக்கினார். "நிலாவே வா" என மனைவியின் பிரிவையும்,மன தடிசலனமும் வெளிப்படுத்தினார். "நிலவு தூங்கும் நேரம்" நிலவையும் நம் மனதையும் எத்தனை கவலைகள் இருந்தாலும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்தது. இப்படி நிலவுக்கும் தனக்கும் இருந்த பந்தத்தை "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" என்ற பாடலின் மூலம் அவர் இசையில் அழகாக இசைந்தார் இசைத்தார்.

இசைஞானி இந்த நவரச கலைஞனை பற்பல சூழலுக்கு பாடவைத்தார். ஒன்றா, இரண்டா? எஸ்பிபி ஆறு தேசிய விருது வாங்கினார், அதில் சாகர சங்கமம், ருத்ர வீணை போன்ற இளையராஜாவின் இசையில் அமைந்த படங்கள் உண்டு. ஒரு கலைஞனுக்கு இத்தனை முகங்களா என வியக்கும் வண்ணம் இருக்கும் எஸ் பி பி யின் பல பாடல்கள்.
"காதலின் தீபமொன்று", காதல் அறியாதவன், புரியாதவன் கூட ஒருமுறை பாடலைக் கேட்டால் காதலின் மயக்கம் கொண்டு, காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைப்பான். அத்தகைய தன்மை கொண்டது. எண்பதுகளில் வாழ்ந்த காதல் மன்னர்களின் தேசிய கீதமாக கூட இருந்திருக்கும் இந்தப் பாடல். கொடுத்த மயக்கத்திலும், காதல் தந்த இணக்கத்திலும் தன்னை மறந்தவர் பலர்.
காதல் இனிது, காதலில் தேடல் இனிது. கடைசி வரை காதலில் ஒரு தேடலை நம் மனதில் கொண்டு செல்லும் பாடல், "கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா" என்ற பாடல். மைக் மோகனின் வளர்ச்சியில், மிக முக்கியமான மூவரில், எஸ்பிபி ஒருவர் மற்ற இருவர் இளையராஜா, சுரேந்தர்.
மிக எதார்த்த வரிகள் கொண்டு பாடல் செல்கையில், மிக அழகான கர்நாடக சங்கீதத்தை நுழைத்திடுவர் இந்த கூட்டணி. கேட்கையிலே ஏதோ கோவில் திருவிழாவில் இசை கச்சேரி கேட்பது போல இருக்கும்.
கிராமத்துக்கு அப்படி ஒரு பாடல், புதுமையான நகரத்திற்கு எப்படி கொடுப்பது? இருக்கிறது, இந்த கூட்டணியின் இசைச்சரம் , "சங்கீத மேகம்". இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும், அப்பாடலின் வரிகள் போல, "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"என்று மலர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இவர் மூச்சும் இவர் பாட்டும் அணையா விளக்கு தான்.

அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே என்று ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு பொழுதும் மனதோடு ரீங்காரமிட அமைந்த "கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே" இசைஞானியின் இசையை தட்டி எழுப்பும் அந்த சந்தங்கள் அடடா!!! ராஜாவா எஸ்பிபி? யார் சிறந்தவர் என்று எண்ணாமல், இந்தக் கூட்டணி ஒன்று சேர்ந்து பிறர்க்கு போட்டி தரும் கூட்டணி ஆகவே அமைந்தது!
தமிழக அளவில் அல்ல இந்திய அளவில் நவரசத் கலைஞன் தான், வாழ்ந்த வாழ்க்கைக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பாடிய பாடல் , "ஆடி மாச காத்தடிக்க வாடி புள்ள" போன்ற பாடல்கள் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழும் கிராமியக் கலைஞர்களின் இசைக்கு மிகுந்த போட்டி தரும் பாடல். பிறர் குரல் மாற்றிப் பேசுவர், இவர் குரல் மாற்றிப் பாடுவதிலும் வல்லவராய் இசையின் மன்னவராய் ஆகியிருப்பது மிக சுலபமன்று அதீத பயிற்சியால் மட்டுமே முடியும்.
Folk பாடுவதிலும் வல்லவர், கிராமத்தில் "மாங்குயிலே பூங்குயிலே" சேதி ஒன்று என்று தாரை தப்பட்டை கிழிய நகரத்திலே "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ" என்று கால் நடனமாட செய்பவரும் இந்த இன்னிசை கலைஞன் தான். பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் சேர்ந்தால் தான் படத்தின் வெற்றி. இந்தக் கூட்டணியின் மகத்துவம் இதிலும் தனித்தன்மை வாய்ந்தது.
கர்நாடக இசை முறையாய் சிறுவயதில் பயிலவில்லை என்றாலும், பின் நாட்களில் பயின்றார். "சங்கீத ஜாதி முல்லை" எஸ்பிபியின் இசை வாழ்வில் ஒரு மணிமகுடம். இந்தப் பாடல் தரும் சோகம், தேடல், பரிதவிப்பு, எப்படி புனைவது எழுத்தில். "நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்" என்ற வரிகளின் போது எஸ்பிபி குரலுக்கும் மேலத்திற்கும் கடும் போட்டி நடக்கும். பாடல் முடியும் தருணம் "ஆஸ்கர் அவார்ட்" புண்ணியம் செய்யவில்லை என்றுதான் தோன்றும்.

" மணியோசை கேட்டு எழுந்து" இருமிக்கொண்டே பாடவேண்டும்! இருப்பினும் பாடல் அழகான தான் இருக்கவேண்டும்!! இது சாத்தியமா? சாத்தியம்! பாடினார், பாடி முடித்தார் இசையை அடுத்த நிலைக்கு அழைத்து தொடுத்தார்.
" மண்ணில் இந்த காதல்" என்ற பாடலில், இசைஞானியின் இசையில், எஸ்பிபி இன் கந்தர்வக் குரலில், அதிலும் மூச்சுவிடாமல் பாடல் அழகுக்கு அழகு சேர்த்து திரைத்துறைக்கே அழகு சேர்த்தனர் இளையராஜா- எஸ்பிபி!!!
அமுதும் தேனும் போல், தமிழருக்கு மெல்லிசையில் அற்புத பாமாலைகள் பல தந்து இந்நாள்வரை இசையால் வசமாகா இதயம் எது என்று நாம் உணரும் படி நம்மை பல சந்தர்ப்பங்களிலும் மன ஓட்டத்திற்கு இணங்க இந்தப் பாடல்கள் நம் நெஞ்சை அள்ளி அணைத்து அரவணைக்கும் தன்மை உடையது. மீண்டும் இப்படிப்பட்ட ஒரு அற்புதம் தமிழ் திரையில் அமைவது சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும்.
-த.செங்கதிர் தாசன்
(இளையராஜா- எஸ்.பி.பி காம்போவில் உங்களுக்கு பிடித்த பாடலை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க...!)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.