
என் வள நிலத்தின் மலையிறங்கும் அருவிகள் வான் தெறிக்கின்றன
அழகான ஒரு கனவு
ஆயிரமாயிரம் தும்பிகள் என் நிலமெங்கும் திரிகின்றன
மழை வரும் என்பதாய் ஒரு வானிலை
இருள் குருவிகள் தலையுரசப் பறக்கும்
சீதளத்தில் கிழக்கிலிருந்து நீ வருகிறாய்
மயில் தோகை விழிகள்
புடவையாய் சரசரக்க
திருந்த வகிடெடுத்த கருங்குழல் கற்றைகள்
சன்னமாய்க் கலைந்து காற்றைக் கிறுகிறுக்க
பறக்கும் என் பார்வைத் தட்டான்கள்
உன் ஒவ்வொரு அசைவிலும் மோதி
மீளும் வழியற்ற சிலந்தி வலைப் பூச்சிகளாக
அதிலேயே அப்பிக்கொள்கின்றன
குலைந்து நிலம்
உன் மென் அடிக்குப் பூவாகக் கனிய
கையசைவின் சிறுகாற்றில்
என் வள நிலத்தின்
மலையிறங்கும் அருவிகள்
வான் தெறிக்கின்றன
மதயானையின் பிளிறலில்
மத்தகங்கள் அதிர்வதுபோல்
அச்சிறு நடைக்கே மென் முலைகள் அதிர்கின்றன

பிறை நிலாப் புன்னகையில்
மறைபற்கள் உதிக்கச் சிரித்து நின்றாய்
உன் சருமத்தின் குளிர்ச்சியை
என் கண்கள் உணர்ந்தன
முகப்பூச்சின் மென் வேதி மணமும்
உன் இயல்பான வாசமும் எனை விண்ணவனாக்கின
பதற்றமாய்க் காத்திருக்கும்
என் பூஞ்சையான
இரு சக்கர வாகனத்தில்
பெருங்கருணை போல் அமர்ந்துகொள்கிறாய்
தேவீ!
இந்த வண்டியை இப்படியே வானுக்கு விடவா?