கட்டுரைகள்
Published:Updated:

கவிதை: தனிமைக்காலம்

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

கரிகாலன்

பிழைத்திருப்பதன் வழி!

தேசங்களின் அதிபர்கள் காலையில் தோன்றி

நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்கிறார்கள்

காபி கோப்பையைப் பற்றியிருக்கும்

கரத்தில் சூடுபரவி நாம் இன்னும்

எண்ணாகவில்லையென்பது

ஆறுதலைத் தருகிறது

பிரியமானவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு

பதில் வரும் இடைவெளியில் தீ நுண்மம்

ஏளனமாகச் சிரிக்கிறது

முன்பெல்லாம் ஞாபகமென்பது

மலராக இருந்தது

இப்போது அது ஒரு சாவி

இறந்தகாலத்தின்

ஒரு கதவைத் திறக்கிறேன்

நீ பாடிக்கொண்டிருக்கிறாய்

பொழியும் மழையில்

காலம் சிறிது உறைகிறது

வேற்றுக்கிரக வாசிகளைத்

தொற்ற முடியாமல்

நம் கதவுகளுக்கு வெளியே

வைரஸ் நாணித் தலைகவிழ்கிறது

நிகழ்காலத்துள்

மீண்டும் நுழைகிறேன்

மரணத்தின் கணக்கில் மீள்பவனிடம் காதல்

ஒரு மலர்க் கொத்தை நீட்டுகிறது!

கவிதை: தனிமைக்காலம்

மகத்துவம்!

உனைத் தேடிவந்த

எல்லா பாதைகளிலும் போலீஸ்காரர்கள் நின்றனர்

எட்டுத் திசைகளையும்

144 மூடியிருந்தது

உனக்காகப் பாடி அனுப்பிய

குரலை நான்காவது அலைவரிசையின்

விளம்பரப் பாடல் அழித்தது

ஓர் உயிர்க்கொல்லிக்

கிருமிக்கு அஞ்சி

உலகம் தன் கதவடைத்தது

மொட்டை மாடியில்

உதடுகள் பிரிக்காமல்

வயலின் இசைத்து

துணி உலர்த்துகிறாய்

ஈரச்சேலையை உதறும்போது

உன் அம்சவர்த்தினியை

உரசிச் சிறகடிக்கிறதே

அது வண்ணத்தியில்லை

யாரும் அறிந்திராத

ஒன்பதாவது

திசையைத் திறந்த

உன் காதலன்!

கவிதை
கவிதை

மூன்றாம் உலக யுத்தத்துக்கு சிவிலியன்களின் பங்களிப்பு!

பாதங்களில் வேர்கள்

முளைத்துவிடக்கூடாதே என்ற

அச்சத்தில்

நேற்று 50 சதுர அடிகளுக்குள்

நடந்துகொண்டிருந்தேன்

25 வார்த்தைகளைப் பேசியிருப்பேன்

500 சொற்களை எழுதியிருப்பேன்

100 சொற்களைக் கேட்டிருப்பேன்

அவற்றில் 75 டிவி பேசியவை

அவையும் நோயாளிகள்,

இறந்தவர்கள் குறித்த

புள்ளிவிவரங்கள்

எனக்கு வெளியே

எனது சிறிய நகரம் இருந்தது

எனது பெரிய தேசம் இருந்தது

என் அம்மா இருந்தாள்

என்னை அன்பு செய்பவர்கள் இருந்தனர்

பசித்தவர்களுக்கும்

அவர்களது உணவுத்தட்டுகளுக்கும் இடையே 144 இருந்தது

நடு வீதியின் வெய்யிலில் நின்று எரிச்சலான போலீஸ்காரர்கள்

யாராவது சாலையில் நடந்தால் அவர்களது பின்பக்கத்தில்

ஆத்திரத்தைத் தணிக்க விரும்பிக் காத்திருந்தனர்

முகங்களே இல்லாமல்

ஒரு மாஸ்க் இன்னொரு மாஸ்க்கிடம்

பேசுவதைப் பார்க்கப் பிடிக்கவில்லை

இறந்துவிட்ட தைரியத்திலோ என்னவோ

எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மாஸ்க்கில்லாமல்

டிவியில் ஆடிப் பாடினார்கள்

அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர்

நம் சன்னலுக்கு வெளியே தொடங்கிவிட்டது

துப்பாக்கிகளைச் சுத்தம் செய்த

ராணுவவீரர்கள்

உறங்கப்போய்விட்டார்கள்

மருத்துவர்களும் செவிலிகளும்

வெள்ளை உடைகளில் யுத்தம் செய்வார்களென

யாரும் கற்பனை

செய்திருக்க மாட்டார்கள்

புனைவைவிட யதார்த்தம்

நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது

ஒரு டாக்டருக்கு மாஸ்க் இல்லை

கைகளை சுத்தம் செய்ய சானிட்டைசர் இல்லையென்றால்

வதந்தியைப் பரப்புவதாக

அரசாங்கம் எச்சரிக்கிறது

இன்றைய அதிகாலை

எனக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்

சன்னலுக்கு வெளியே

தோட்டத்தில் ஒரு பலா

தன் காயை முதுவேனிலில்

பழுக்க வைத்திருக்கிறது

இம்மூன்றாம்

உலக யுத்தத்தில் பங்கேற்க

மருத்துவராகவோ செவிலியராகவோ

இருக்க வேண்டியது அவசியமில்லை

பாதங்கள் வேர்பிடிக்க

கைகள் கிளைகளாக

கனிகளைத் தரவேண்டி

இல்லத்தில் நாம்

ஒரு தருவாவோம்!