
கவிதை
மதுபானக் கடையை
கற்பூரத்தால் வழிபடுகிறான்
மகிழ்ச்சியின் கற்பூரவாசனை
அவன் பின்னிருக்கும் முடிவற்ற வரிசையைக் கிறுக்கேற்றுகிறது
கொதிக்கும் உலை நீரின் ஆவியைக் குடித்து
பசியாற்றும் வீடு
கடன் வாங்கிய காந்தி நோட்டோடு
மாநில எல்லையோர மதுபானக் கடைக்கு ஓடுகிறான்
நசுங்கிக்கிடக்கும் சமூக இடைவெளிக்குக்
குடைக்கம்பி விரிந்துகிடக்கும்
ஆதார் அட்டை நீட்டியவன்
வாயில் கக்கத்தில் கவ்வியது போக
ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு போத்தலைச் சுமந்து செல்கிறான்
கால்விரல் போத்தல்கள் உடைந்திடாதவாறு
குதிங்கால்களின் நுனியால் தரையும் நோகாதவாறு...
கம்பத்தின் மீது தலைகீழாய் ஏறியவன்
இன்னும்கொஞ்ச போதைக்கு
வழிப்போக்கர்களை யாசிக்கிறான்
மீறினால்
மின்கம்பியைக் காலால் கவ்வுவேன் என மிரட்டுகிறான்
அதிர்ச்சியுற்ற மின்கம்பம்
தன்னைத் தானே பெயர்த்து ஓடுகிறது
கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பொட்டல்காட்டில்
படர்ந்துகிடக்கிறது சூரியன்
மரத்தடுப்பான்களின் இடையே
பிளாஸ்டிக் நாற்காலிகள் காத்திருக்கின்றன
பருந்துப் பார்வையிலிருந்து முகத்துக்கு ஜூமாகும் கேமரா
முகக் கவசம் கழுத்துக்கு இறங்கி ஏறுகிறது
உள்ளங்கையோ டோக்கனை விரித்துக்காட்டுகிறது
அறுந்த காட்சியின் ஊடாக
தொப்பியைக் கழற்றி மண்டையைச் சொறிந்துகொள்கிறார்
காவல் ஆய்வாளர்
லோலோவென்று அலைகிறது நாக்கு
கொஞ்ச நேரம் சுருட்டிவைத்தால்தான் என்ன
நகரத் தெருக்களிலெல்லாம் உரசித் தேய்ந்து
பருமன் குறைந்துவிட்டதல்லவா
ஊரடங்கால் மூடப்பட்ட கடைகளின் பூட்டை
வெறித்து வெறித்து
ஷேவிங் திரவத்தைக் குளிர்பானத்தில் கலந்து அருந்தியது
வரையறுக்கப்பட்ட போத்தல்கள்
தீர்ந்துவிட்டன
மூன்றடி இடைவெளி விட்டு
இன்னும் டோக்கன்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பதால்
குழப்பமுற்ற காவலாளி
தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறான்
நகலெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
சிறுதும் நிறம் மங்காமல்
கிணற்று நீரில் இறங்கியவன்
வட்டமான வானிடம்
ஒரு துளி போதையைக் கேட்டுக் கெஞ்சுகிறான்
மழைத்துளியில் கலந்துகொடுத்தது
போதாது
கிணற்றிலிருந்து மேலே ஏறி வா
மழைத்துளியையே போதையாக்கிக்கொடு
மேகங்களை சேகரிக்கும் நொடியில்
நிலாவை உலப்ப
கிணற்றையே அசைக்கிறான்
முழுக் கிணற்றையும் மூழ்கடித்தது மது
வாளி வாளியாய் இறைத்த அம்மதுதான்
நாட்டின் இரைப்பையை நிரப்புகிறது.
