வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எதிர்பாராமல் நமக்கு தெரிந்த அல்லது நம்மை தெரிந்த ஒருவரை சந்திக்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?
அதுவே பலராக மாறும் போது எப்படி இருக்கும்!
உண்மை. என்னுடன் கல்லூரியில் படித்த பல நட்புகளை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
மாநிலக் கல்லூரியில் 70 -73 வருடங்களில் வேதியியல் படித்த நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்து பன்னிரண்டு வருடங்களாக தொடர்ந்து சந்தித்து வருகிறோம். தமிழ் ஆங்கிலம் என்று இரண்டு மீடியாக்களும் சேர்ந்து மொத்தம் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்த காலம்.

அந்த காலத்தில் பெண்கள் மட்டும் இல்லை ஆண் பிள்ளைகளுக்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு. பெற்றவர்களுக்குப் பயந்து பணிந்து நடந்த காலம்.
இன்றைய செல்ஃபோன் தொலைக்காட்சி கூட வராத நாட்கள்.. பேருந்தை மட்டுமே நம்பியிருந்த காலம்.
டீன்ஏஜில் பார்த்த நண்பர்களை பல வருடங்கள் கழித்து பார்க்கிறோம்.
அன்று பெற்றவர்கள் கட்டுப்பாட்டில்! இன்றோ பிள்ளைகளின் கட்டுப்பாட்டில்! வயதாகிறதல்லவா? ஒரு முழுசக்கரம் சுழன்று வந்த பாதையில் பசுமை நிறைந்த நினைவுகள் எத்தனையோ? எவ்வளவு கால கட்டத்தை கடந்து வந்திருக்கிறோம்!
சென்னையிலேயே இருந்ததால் பல முறை கல்லூரியை கடந்து சென்றிருக்கிறேன். இது நான் படித்த கல்லூரி என்ற நினைவுடன் நம்முடன் படித்தவர்கள் யார் யார் எங்கிருக்கிறார்களோ என்ற ஒரு எண்ணமும் தோன்றி மறையும். நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து கொட்டிய பிறகு எங்கே போய் தேடுவது?

எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ. என்றிருந்த நிலை மாறி எல்லோரும் பார்த்துக் கொள்ள கலந்துரையாட ஏற்பாடு செய்த நண்பர்களை நன்றியுடன் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு முறை கல்லூரியிலேயே அதே வகுப்பு அறையில் அமர்ந்து உரையாடி மகிழ்ந்தோம்.
திருமணங்களில் கலந்து கொள்ளும் போது எங்கள் புதல்வர்கள் என் அம்மா/ அப்பா வோட கல்லூரி சிநேகிதர்கள் என்று அறிமுகப்படுத்தும்போது ஒரு பெருமிதம் ஏற்படும் பாருங்கள் அதை அனுபவித்துத்தான் உணரமுடியும்.
பலர் பிரமிப்புடன் பார்த்திருக்கிறார்கள். வியப்பு மகிழ்ச்சி என்று பல உணர்வுகளையும் கலவையாக உணர்ந்திருக்கிறோம்.
நட்பில் சிலர் மருத்துவர்கள். தொழிலதிபர்கள். கல்வி நிறுவனங்களின் மேலாளர்கள் வங்கி அலுவலர்கள் என்று பலவிதமான முகங்கள்..
உறவுகளில் எதிர்பார்ப்பு இருக்கலாம் . உண்மையான நட்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதை கண்கூடாக கண்டு மகிழ்கிறோம்.
நெதர்லாந்தில் என் பெண் வீட்டில் இருந்த போது சைனஸ் மருந்துகளை டாக்டர் நண்பர் மூலம் அறிந்து அங்கு வந்து கொண்டிருந்த என் பெண்ணின் அலுவலக நண்பர் மூலம் வரவழைத்தோம்.

மதுரையில் கொரோனா சமயத்தில் மாமியார் மறைவுக்குப் போன இடத்தில் எல்லோருமாக ஒரே வீட்டில் இருக்க வேண்டியிருந்தது.
பல முறை முயற்சித்தும் அப்போதைய E. Pass கிடைக்கவில்லை. கிடைக்கும் தருணத்தில் அதே மருத்துவ நண்பர் வாட்ஸ்அப்பில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று பரிந்துரை அனுப்பியிருந்தார். அதை காட்டி மதுரையிலிருந்து சென்னை வந்தோம். ஐந்தே மணி நேரத்தில் வந்து சேர்ந்த அந்த பயணம் மறக்கவே முடியாது.. சாலை எல்லாம் வெறிச் சோடியிருந்தது. செக் போஸ்ட்களில் மட்டும் சில காவல் அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.
2020 ல் நாங்கள் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை ஏலகிரியில் நடத்தினோம்.
எல்லா ஏற்பாடுகளையும் செய்து முக மலர்ச்சியுடன் வரவேற்ற நண்பர்கள். மனிதத் தேனீயாகவே மாறி எந்த ஒரு சிரமமும் இல்லாது பார்த்துக்கொண்ட நட்பின் சங்கமம்.
நாங்கள் நினைத்து மகிழும் நாளாக மாறியது.
நல்ல வேளையாக அதன் பிறகு தான் கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் வந்தன.
எல்லோருமேபல விதங்களிலும் தங்கள் அனுபவங்களையும் பார்த்து ரசித்த காட்சிகளையும் பகிர்ந்து கொண்டோம்.
கூடுதலாக பேரன் பேத்திகளின் பள்ளிப் போட்டிகள் பரிசுகள் என்று நீளும் பல சந்தோஷமான நினைவுகள்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் பெண்கள் கல்லூரியில் படித்திருந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருந்திருக்காதே என்று நினைத்ததுண்டு.
ஆனால் இப்போது எல்லோரையும் பார்க்கும் போது இந்த கல்லூரியில் படித்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.அத்தோடு நண்பர்களின் துணைவியார்/ துணைவர்களும் இணைந்து எங்களுடன் உரையாடி மகிழும் போது மனது சிறகடித்து பறக்கிறது
பல வேறு மாறுபட்ட விவாதங்களும் மோதல்களும்தான் வாழ்க்கை என்றிருக்கும் போது எங்களால் இனிமையான ஒரு சந்திப்பு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து மகிழ முடிகிறது என்பது ஒரு பெரிய விஷயம்.
எல்லோருடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் இல்லாமல் நடத்த முடியாது. அந்த விதத்தில் என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.