வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இளையராஜா என்னும் இசை மாமேதையின் இன்னிசையில் உருவான காலத்தால் அழிக்க முடியாத பாடல் களில் ஒன்று
"என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?
ஏன் வாட்டுது ?
ஆனால் அதுவும் ஆனந்தம்...’’ என்றபாடல். ரோஜாப்பூ ரவிக்கைகாரி படத்தில் இடம்பெற்ற புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய பாடல். பாடல் முழுக்க தபேலாவை விளையாட வைத்திருப்பார் . இந்த பாடல் செவியில் ஜீவித்து ஜீவனில்லயித்து உணர்வுகளை வருடும்.
பாடல்களின் இடையே ஏன் நிறுத்திட்டீங்க ?அப்படின்னு கதாநாயகி கேட்கிறப்ப 'உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா '... இல்ல சொல்லி சிவச்சந்திரன் திரும்பிப் பார்க்கும் பொழுது ஒரு நிசப்தம் நிலவும். அது (வேற லெவல் சார் நீங்க.) இளையராஜா அவர்களுக்கே உரித்தானது.

படைத்தவன் கடவுள் என்றால் நீயும் கடவுள் தான் இசையை படைப்பதினால் ...! மனதை மயக்கும் இந்த பாடலை காட்சிக்கு தக்கவாறு இயக்குனர் பயன்படுத்தியிருப்பார். இந்த காட்சி அமைப்பிற்கு இசை ஞானி தேர்ந்தெடுத்த ராகம் மதுவந்தி ராகம். உண்மையில் மது குடித்த வண்டாக நம்மை கிறங்க வைக்கும் இந்த ராகத்தை இசையோடு உயிரையும் கலந்து வாணிஜெயராம் பாடியிருப்பார். உம்பாடலை கேட்பதற்கு எனக்கு ஒரு ஜென்மம் போதாது ஐயா.!
*சோகத்தையும் சுகமாக்க இசைஞானியால் மட்டுமே முடியும். அவரின் பாடல்கள் மனதை ஊடுருவி செல்லும் வல்லமை பெற்றவவை. மென்மையான காதல் நினைவுகளை பிரதிபலிக்க இசைஞானியின் இசையால் மட்டுமே முடியும். எல்லா காயங்களுக்கும் வலிகளுக்கும் இந்த ஒருபாடல் மருந்தாக அமையும் என்றால் மிகையில்லை.
புண்பட்ட மனதை ஆறுதல் படுத்தும் ராஜா சாரின் நிறைய பாடல்களில் இதுவும் ஒன்று.
இதயக்கோயில் படத்தில் இடம்பெற்ற "நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா" என்ற பாடல்.

இது போல் மனதை வருடும் பாடலுக்கு இசையமைக்க இசைஞானியைத் தவிர யாராலும் முடியாது. இந்த பாடலின் இசையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை .
"கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் ..வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்."
இந்த வரிகளில் இசை...தேனாய் இனிக்கும். நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? என்று (இசையில்) கேட்காதீர்கள் . உங்கள் ராகம் கேட்காத வீடுகளும் இல்லை ! மனிதர்களும் இல்லை!
*முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அப்படித்தான் இந்தப் பாடலும் . இயற்கை அன்னையால் படைக்கப்பட்ட ஒரு அதிசய பிறவி தான் இசைஞானி அவர்கள்.
``அடி ஆத்தாடி இள மனசொன்னு றெக்ககட்டி பறக்குது சரிதானா..".
கடலோரக்கவிதைகள் படத்தில் இடம்பெற்ற பாடல். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதியதாக கேட்பதுபோல் பேரானந்தம் இன்பமான காதலை வார்த்தையால் சொல்ல முடியாத ஆரோக்கியமான காதலை இசையால் தவழவிட்டு இருப்பார் இசைஞானி அவர்கள்.

"தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம் உண்மை சொல்லு ..பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்"
இனி ஒரு ஜென்மத்தில் இப்படி எல்லாம் பாடல்கள் வருமா என்ன??! உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் நமக்குள் நுழைந்து நம்மை ஆட்கொள்ளும் பாடல்இது.
இந்த பாடலின் இடையே மத்தளம் கொட்டுவது இன்னும் மனசை லேசாக்கும். இளமையாக்கும். இந்தப் பாடலில் இசை தேவனின் குரலும் இசையும் சொல்ல வார்த்தைகளே இல்லை .
"இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல முன்னபின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல"
இசைஞானிக்கு மட்டுமே பாடல்களில் ஹம்மிங் வைத்து இசையமைக்க தெரியும். அமைதியான இரவில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு ரேடியோவில் இந்த பாடலை கேட்கும் சுகம் இருக்கிறதே அது ஒரு சுகானுபவம். இளையராஜா சார் நீங்கள்என்றும் ராஜாவே தான். மொத்தத்தில் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இசைஞானியின் பாடல்கள் தான்.
மொத்தத்தில் இசைஞானி இல்லை எனில் இசை இல்லை இசைஞானியின் இசை இல்லை எனில் நான் இல்லை!
யாரைப் போலவும் இல்லாமல் ' இதுதான் நான்' என்று தன் இயல்பு மாறாமல் இசையமைக்கும் இளையராஜா அவர்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
என்னத்தான் வாழ்க்கை அழகானதாக இருந்தாலும் வேலை பளுவுக்கு இடையே என்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள நான் நாடுவது ராஜா சாரின் பாடல்களைத் தான். எதிர்காலத்தை குறித்த நம்பிக்கைகளே நம்மை சோர்ந்து போகாமல் ஊக்குவிக்கின்றன.
கடந்த காலத்தை நினைவு படுத்த எத்தனை எத்தனையோ நினைவுகள் இருந்தாலும் அதே பச்சை வாசத்தோடு நினைவுபடுத்த பாடல்களால் மட்டுமே முடியும். குறிப்பாக ராஜா சாரின் பாடல்கள்.
அந்த வகையில எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல்..
ஜானி படத்தில் வரும்..
'ஆசையக்காத்துல தூது விட்டு....' என்ற பாடல்.

இசைஞானியின் மிகப்பெரிய வித்தை இந்த பாடல். இப்பாடலை கண்களை மூடிக்கொண்டு கேட்டால்... மலைப் பிரதேசத்தில குளிர் புகுந்த மரங்களின் அடியில் மூட்டிய தீக்கங்குகளின் வெக்கையை நம்மால் உணரமுடியும்.
குழலோசை+அதீத தன்மையோடு அதிரும் ட்ரம்ஸ்+உடன் ஒலிக்கும் அந்த அற்புத தாளம்... பின்னணி இசையோடு கேட்க சரித்திரப் பாடல்.. ஆமாம்.. ராஜா சாரின் சரித்திரம்.
மலை வாசிகளின் இயற்கையான வாத்திய சத்தத்தை உருவாக்கி இலக்கியம் படைத்திருப்பார் ராஜாஸார்.
மலைவாசிப் பெண் ஜானி (ரஜனி)மேல் தான் கொண்ட காதலை வெறும் பார்வையாலாயே உணர்த்தும் இப்பாடல் மிக உணர்வுபூர்வமானது.
``வாசம் பூவாசம்....’’ என்ற முதல் சரணத்தில் சுபாஷிணியின் கண்கள் கவிதை பேசும்.
இரண்டாம் பல்லவி தொடங்கி சரணத்தில் 'உணர்வுகளின் இளவரசி' எஸ்.பி.ஷைலஜா அதி அற்புதமாக பாடியிருப்பார். இப்படி கதாநாயகியின் உள்ளத்து ஆசையயை இசையால் சுலபமாக புரியவைத்த ராஜாஸார்...
இதோ இன்னொரு பாடலில் கதாநாயகன் தன் காதலைச் சொல்வதற்கு உருகி உருகி இசை அமைத்திருப்பார். பாடலை கேட்கும் பொழுது (தே)விழிகளில் நீர் திரையிடும் என்றால் மிகையில்லை.
என்னை கிறங்க வைத்த அந்த பாடல்...
"உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா
அழகா".. .சைக்கோ பட பாடல்.
வரிகளும், இசையும் ஒன்றோடொன்று போட்டி போடும்.
இசையால் அழ வைக்க முடியும் என்பது இந்தப் பாடலைக் கேட்ட போதுதான் புரிந்தது. இந்த பாடலின் இசை இரைச்சல் இல்லா இசை.
ரத்தம், சதை, மூளை, உயிர்,ஆயுள்,ஆத்மா வரை ஊடுருவும் இசை.

கபிலனின் ஆழமான வரிகள்.. சித் ஸ்ரீராமின் காந்த குரல்.. ராஜாவின் உயிரை உருக்கும் இசையால் இன்னும் அழகாய் மெருகூட்டப்பட்டிருக்கும். மகிழ்ச்சியையும், வலியையும் ஒருசேர தருவார் இசை ஞானி இந்த பாடலில்.
"ஒரு காலத்துல ஒரு "ராஜா'' இருந்தாராம்.. இப்பவரைக்கும் அவர்தான்"ராஜாதி ராஜாவாம்'. இளையராஜா சாரின் இசையில் இசையமைத்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் மனம் மெல்லிய மழை சாரலாய் குளிரும்.
மனசு விசாலமாகி வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். இசையின் கடவுள் ராஜா ஸார். இசையின் பிரம்மன் ராஜா சார். காதல் ,கோபம் ,வருத்தம், சோகம்,சந்தோஷம் இப்படி எந்தவித/எல்லாவித உணர்வுகளுக்கும் ஏற்ப இசை அமைத்தாலும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆரம்பம் முதல் முடிவு வரை டெம்போ உயிரை பறித்து முகர்ந்து ரசித்து மீண்டும் உடலுக்குள் செலுத்தி ஆத்மாவை தாலாட்டும் என்றால் மிகையில்லை .
நம் கையைப் பிடித்து காட்டிலும், மேட்டிலும் ,நிலவிலும் மேகத்திலும் மழையிலும் , வானவீதியிலும் இன்னபிற நமக்குப் பிடித்தமான இடங்களிலும் உலவ விட ராஜா ஸாரால் மட்டுமே முடியும் .
கிராமப்புறங்களில் கரும்பு தின்னக்கூலியா என்று ஒரு சொல்வடை உண்டு. அதுபோல் பிடித்த இளையராஜா பாடல்களை குறிப்பிட வேண்டும் என்றால்... (நீங்களே பதிலையும் யூகித்துக்கொள்ளுங்கள்)
(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா) மனதிற்குள் ஒலிக்கிறது.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.