வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரி (WCC) மாணவர்களால் அண்மையில் நிகழ்த்தப்பட்ட "Fiddler on the Roof" என்கிற ஆங்கில நவீன நாடகம், நாடக ஆர்வலரான எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்நாடகத்தை கல்லூரி நிர்வாகமே தயாரிக்க ரெஜின் ரோஸ் என்பவர் இயக்கினார். சமூகத்தின் அவலங்களை, எளிய மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை, அதிகாரத்தின் அத்துமீறல்களை தட்டிக் கேட்பதில், குரல் கொடுப்பதில் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் முக்கியமானது நாடகம் எனும் கலை வடிவம். அந்த முக்கியமான, வலிமையான கலையை கையில் எடுத்து சமகால அரசியலை, சமூக சூழலை, ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை இசையும், நகைச்சுவையுமாக கலந்து ஒரு சிறந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் மகளிர் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள்.

"Fiddler on the Roof" 1905 காலக்கட்டங்களில் புரட்சிக்கு முந்தைய ரஷ்ய கிராமத்தில் நடக்கும் கதை. டெவியே என்கிற வறுமையான பால் வியாபாரியையும், அவரின் குடும்பத்தையும், அவர் தீவிரமாக இருக்கும் யூத மதத்தையும் மையமாக கொண்டுள்ளது கதை.
இவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் அவர்களுக்கு தங்கள் யூத மதத்தில் ஒருவரை திருமணம் செய்ய டெவியே திட்டமிட அந்த பெண்களுக்கு யூத மதம் அல்லாதவர்கள் மீது காதல் வருகிறது. டெவியேவிற்கு இது தெரிய வர தன்னுடைய மதமா அல்லது பெண்களின் விருப்பமா..? அவர் என்ன முடிவு எடுத்தார் என அரசியலும், சுவாரஸ்யமும், குடும்பத்தின் வறுமையையும் கலந்ததாக ஒருபுறம் கதை நகர்கிறது..! மறுபக்கம் எதிர்பாராத விதமாக ஆளும் வர்க்கத்தின் திடீர் உத்தரவால் இவர்கள் வசித்து வரும் கிராம மக்கள் குடியேற்றத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
எளிய மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் அத்துமீறல்கள் நடைபெறுகிறது. செய்வது அறியாமல் மக்கள் தவிக்கின்றனர். தங்கள் வசிப்பிடத்தை விட்டு, இருப்பிடத்தை விட்டு, சொந்த கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். கண்ணீரும் கவலையுமாக நடிகர்கள் மேடையை விட்டு வெளியேறும் போது ஒரு நிமிடம் இதயம் கனத்து போகிறது. இன்றைய சூழலோடு ஒன்றிப்போகிறது. இது நாடகம் தானே என்று எளிதில் கடந்து போக முடியவில்லை. எப்போதோ 1905ல் எழுத்தப்பட்ட நாடகம் தானே என்று விட்டுவிட முடியவில்லை இதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு விஷயங்களும் அரசியலும், ஆளும் வர்க்கத்தின் திமிரும் நாம் வாழும் இந்த விஞ்ஞான வளர்ச்சியடைந்த 21ம் நூற்றாண்டிலும் எளிய மக்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது என்று எண்ணும் போது "Fiddler on the roof" மிக முக்கியமான நாடகமாக தெரிகிறது.
மேடை, ஒலி & ஒளி, ஒப்பனை இதில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் என அத்தனையும் கச்சிதமாக செய்திருக்கின்றனர். இந்த நாடகத்தில் நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் யாரும் தொழில்முறை நடிகர்களோ கலைஞர்களோ அல்ல. இதே கல்லூரியில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவிகளே. மொத்தம் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் கால நேரம் கொண்டுள்ளது இந்நாடகம்.

இரண்டு மாத ஒத்திகையில் Casting, set and properties, Music, Lights, Sounds, Technicians என 150ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் உழைப்பில், ஒத்துழைப்பில் தயாரான இந்நாடகத்தை இயக்கியவர் திரு.ரெஜின் ரோஸ். இவர் டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் முறையாக நாடகம் பயின்றவர். நவீன நாடகத்தில் வெகுவாக அறியப்படும் நடிகராகவும், நாடக இயக்குநராகவும் தொடர்ந்து இயங்கி வருபவர். பேட்டை, கார்கி, நட்சத்திரம் நகர்கிறது போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னை தியேட்டர் அகாடெமி (CTA) என்னும் நடிப்பு பயிற்சி பள்ளியையும் சென்னையில் நடத்தி வருகிறார்.
சோஷியல் மீடியா உலகில், யூடியுப் சேனல் மோகத்தில் இளைஞர்கள் இருக்கும் காலகட்டத்தில் மேடை நாடகத்தின் மேல் ஆர்வத்தோடும் இத்தனை அர்ப்பணிப்போடும் நாடகத்தில் பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். மாணவர்களுக்கு படிக்கும் காலத்திலேயே இப்படியான வாய்ப்பையும் அதற்கான அனுமதியையும் வழங்கி நாடகத்தையும் தயாரித்த கல்லூரி நிர்வாகமும் பாராட்டுக்குரியவர்கள். ஆரம்ப காலகட்டங்களில் நாடகத்தில் பெண்கள் பங்கேற்க மறுக்கப்பட்டனர். ஆண்கள் தான் பெண் வேடமிட்டு நடித்தார்கள். ஆனால் இன்று முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்று மிக பிரண்டமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி முடித்துள்ளனர்..! இதுபோன்று கல்லூரிகளில் நடைபெறும் நாடக செயல்பாடுகள் மேடையை போலவே மாணவர்களின் கல்வியையும் அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை .
நிறைவான, தரமான ஒரு நாடகத்தை வழங்கிய திருப்தியில் அரங்கம் முழுக்க நடிகர்கள் (மாணவிகள்) நிற்க... அதற்குள்ள நாடகம் முடிந்துவிட்டதா என அரங்கத்தை விட்டு வெளியே வர மனமில்லாமல் மெதுவாக வெளியே வர... லேசாக மழை தூர... கல்லூரி வளாகம் எங்கும் தேங்கி இருந்தது நாடகத்தின் இசை..!
-கோ.ராஜசேகர், தருமபுரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.