Published:Updated:

கலியன் மதவு! - சமூக நாவல்

Representational Image

புதிது புதிதாக கற்பனை செய்து இட்டுக்கட்டியும் பாடுவாள் கிழவி. இறந்தவரின் சிறப்பை அவள் இட்டுக் கட்டிப் பாடுவதைக் கேட்டால் நாமும் ஒரு முறை செத்தால் தேவலை என்று தோன்றும் எவருக்கும்.

Published:Updated:

கலியன் மதவு! - சமூக நாவல்

புதிது புதிதாக கற்பனை செய்து இட்டுக்கட்டியும் பாடுவாள் கிழவி. இறந்தவரின் சிறப்பை அவள் இட்டுக் கட்டிப் பாடுவதைக் கேட்டால் நாமும் ஒரு முறை செத்தால் தேவலை என்று தோன்றும் எவருக்கும்.

Representational Image

‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு...

கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு...

சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு...

ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ.........

வைகரையின் ரம்யமான அமைதியை கீறிக் கிழித்துக்கொண்டு பிசிர் இல்லாமல் ஒலித்துப் பரவியது அகிலாண்டக் கிழவியின் ஒப்பாரி.

‘கிளவி ஒப்பாரி பாடுதே...!’

‘நோவு நொடீல படுத்தக் கிளங்கட்டைங்கக் கூட தெருவுல யாருமேயில்லையே...!’

‘பாம்பு கீம்பு கடிச்சி யாரும்... ...!’

‘திடீர்னு யாரு மண்டையப் போட்டிருப்பாக...!’

ஒப்பாரி ஓசையில் திடுக்கிட்டு விழித்த அக்கப்பக்க ஜனங்கள் ‘செத்தது யாராயிருக்கும்..!’ என்று ஊகித்தபடியே ஓடுவதும், நடப்பதும் ஓடி ஓடி நடப்பதுமாக ஒரே பரபரப்பு.

செத்தது யார் என்று இரண்டாவது ஒப்பாரியில் தெளிவாகப் பாடிவிட்டாள் கிழவி.

பாட்டி
பாட்டி
Representational Image | Pixabay

“சப்பாணியா செத்துட்டாரு...! நேத்துக் கூட நல்லா இருந்தாரே...!”

“அட...! நேத்து அந்தீல தெருவுல நின்னு மவனாண்ட ஏதோ சொல்லிக்கணு நின்னாருங்கிறேன்...!”

“என்ன ஆயிருக்கும் அவுருக்கு..?”

“வயசானாலும் சப்பாணி நல்லா ஆரோக்கயத்தோடக் கல்லுக்குண்டாட்டம் விகுவாத்தானே இருந்தாரு...!”

“நோவு நொடீனு ஒரு வேளை சுணங்கிப் படுத்தவர் இல்லியே அவுரு...அவருக்கு என்னவாயிருக்கும்..!”

தொப்ளானை அந்த வட்டாரத்தில் ‘சப்பாணி’ என்பார்கள். ஒரு கால் விந்தி விந்தித்தான் நடப்பார் அவர்.

பிலாக்கணக் கூட்டாளிகள் சுறுசுறுப்பாகத் தத்தம் குடிசைகளில் இருந்து புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக இழவு வீட்டுக்கு விரைந்தார்கள்.

யார் வீட்டில் தலை சாய்ந்தாலும் அகிலாண்டக் கிழவிக்குத் தான் முதலில் தெரிவிப்பார்கள். கிழவி வந்து சந்தேகத்துக்கு மீண்டுமொறு முறை நாடி பார்த்து சாவு தீர்மானித்துவிட்டு’ தரையில் துணி விரித்து பிரேதம் கிடத்தி, மூட வேண்டிய துவாரங்களை மூடவேண்டிய முறையில் மூடி, கை, கால்களைச் சேர்த்துக் கட்டியபின், விளக்கு, ஊதுபத்தி கொடுத்தி வாழைக்கட்டையில் நட்டு ஜோடனையெல்லாம் முடித்துவிட்டுத்தான் உரத்த குரலில் நடு வீதியில் நின்று முதல் ஒப்பாரியை உரத்துப் பாடுவாள்.

முதல் ஒப்பாரி எல்லோருக்கும் பொதுவானதுதான். செத்தது யார் என்று இரண்டாவது ஒப்பாரியில் பூடகமாகத் தெரியப்படுத்துவாள் கிழவி. காது கேட்கும் தூரத்தில் பிலாக்கணக் கூட்டாளிகள் இருந்துவிட்டால் வாங்கிப் போட்டு மாரடிக்க மூன்றாவது ஒப்பாரிக்குக் கூட்டாளிகள் வந்துவிடவேண்டும்.

இருந்துகொண்டே அலட்சியப்படுத்தினாலோ தொலைத்துக் கட்டிவிடுவாள் கிழவி. அகிலாண்டத்தின் கோபம் பொல்லாதது.

அப்படித்தான்... அம்மாவாசை கிழவன் சாவுக்கு, ‘சம்முடியக்கா’ அலட்சியமாக பிரேதம் எடுக்கும் நேரத்தில் மாரடித்துக்கொண்டு ஓடிவந்தாள்.

துஷ்டிக்கு வந்த உறவுக் கூட்டம், ஊர்க் கூட்டத்துக்கு மத்தீலயே, சம்முடியக்காளை விட்ட பாட்டு, கேட்ட நாராசமான கேள்விகள், அப்பிய அவமானங்கள்..... அப்பப்பா கிழவியின் கோபம் ரொம்பப் பொல்லாததுதான்.

சம்முடியக்கா நெடுஞ்சாண்கிடையாக பூமியில் விழுந்து மன்னிப்புக் கேட்டபின்தான் சமாதானமானாள் கிழவி.

கூட்டாளிகளான செவிலி, அன்னம்மா, குப்பாத்தா, பொன்னுத்தாயி, சரோசா, மாரியாயி, காத்தாயி எல்லோரும் வந்தாயிற்று.

அயிலாண்டக் கிழவிக்கு ஓங்குதாங்கான இரட்டை நாடி உடம்பு. தேங்காய்ச் சிரட்டை மாதிரி மொரப்பாக பம்மிப் பம்மி செம்பட்டையாய், எண்ணைப் பிசுக்குக் காணாத தலைமுடியை கொத்தாகப் பிடித்து ஒரு சுற்று சுற்றி கோடாலி முடிச்சாய் செருகியிருந்தாள். சதுர வடிவ முகம். புடலங்காய்க்குக் கல் கட்டி விட்டாற்போல் காதில் தொங்கும் தோடுகள். அறுந்துவிழத் தயாராக இருப்பதுபோல் தோடுக்கு மேல் நீளவசத்தில் தெரியும் காது ஓட்டை. நீளமான கரடு முரடான மூக்கில் கிடக்கும் பெரிய சைஸ் பேசரி. இந்த வயசிலும் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்ளாமல் பெரிய எழுத்து விக்கரமாதித்தன் கதை படிக்கும் பிரகாசமான சின்னக் கண்கள். கடும் கோடையில் வெடித்த வயல் வெடிப்புப் போலப் பரவிய முகச்சுருக்கங்கள்.

Representational Image
Representational Image
istock

நார்மடிச் சேலையை இழுத்துக் கட்டிய கம்பீரம். இழுத்துச் செருகாவிட்டாலும் அவள் உயரத்திற்குப் புடவை கணுக்காலோடு நின்றுவிடும். அந்தப் புடவைக்கு சற்றும் பொருத்தமில்லாத சாயம்போன வண்ணத்தில் தொளதொளவென ரவிக்கை. முகத்தில் நிரந்தரமாகத் தங்கிக்கிடக்கும் சிடுசிடுப்பு. வெற்றிலைக் காவி ஏறிய பல் வரிசை. அந்த முகத்துக்கும், கடுமைக்கும், பொருத்தமே இல்லாத கணீர் வெண்கலக் குரல். பிசிர் இல்லாமல் ஒலிக்கம் ஒப்பாரி. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக ஒப்பாரி பாடுகிற அனுபவத்தால் கிடைத்த ஆளுமை....

அகிலாண்டக்கிழவி ஒப்பாரி பாடுவதற்காகவே செத்துப்போக வேண்டும் என்று தோன்றும் அதை கேட்பவர்களுக்கு. அப்படி ஒரு அபாரத் திறமை அவளிடம்.

நவரச ஒப்பாரியா... நவரத்தின ஒப்பாரியா...எமலோக ஒப்பாரியா...வாழ்க்கை ஒப்பாரியா....காந்தாமணி ஒப்பாரியா...மோகனாங்கி ஒப்பாரியா....தெய்வலோக ஒப்பாரியா....எல்லா ஒப்பாரியிலும் தேர்ந்த புலமை அவளுக்கு.

தந்தை மகனுக்குப் பாடுவதா...மகன் தந்தைக்குப் பாடுவதா...தாய் மகனுக்கா....மகன் தாய்க்கா.....யார் யாருக்கு எதை எங்கு எப்போது எப்படி பாடவேண்டும் என்ற வரையறையும் ஏன் என்ற தெறிவும் அவளிடம் இருந்தது.

புதிது புதிதாக கற்பனை செய்து இட்டுக்கட்டியும் பாடுவாள் கிழவி. இறந்தவரின் சிறப்பை அவள் இட்டுக் கட்டிப் பாடுவதைக் கேட்டால் நாமும் ஒரு முறை செத்தால் தேவலை என்று தோன்றும் எவருக்கும்.

குரல் ஏற்ற இரக்கத்தோடு ஒப்பாரிக்கென இருக்கும் விதிகளை மீறாமல் இறந்தவரின் சிறப்புகளைப் பாடும்போது எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சமும் நெகிழ்ந்து கண்ணீர் பெறுக்கும்.

தினம் தினம் சாதகம் செய்யும் சங்கீத வித்வான்கூட சமையத்தில் எங்கேனும் சுருதி பிசகிவிடக்கூடும். ஆனால் எப்போதாவதுதான் பாடினாலும் ஒரு சின்னப் பிசிரோ, பிசகலோ இருந்ததில்லை. அப்படி ஒரு நறுவிசு. அப்படி ஒரு திட்டம்.

ஒப்பாரிக் கூட்டாளிகள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குந்தினர் குத்துக்காலிட்டு.

குப்பாத்தா பிரேதத்தின் தலைமாட்டில் உட்கார்ந்தாள்.

தனக்குப் பிறகு குப்பாத்தாவைத்தான் ஒப்பாரித் தலைவியாய் நியமித்திருக்கிறாள் அயிலாண்டக்கிழவி.

கூட்டாளிகளை ஒரு முறை தீர்க்கமாய்ப் பார்த்த கிழவி; அடுத்த ஒப்பாரிக்கு அச்சாரம் போட்டாள்.

Representational Image
Representational Image
iStock

குடிசைக்கு வெளியே இறந்த தொப்ளானின் ஒரே மகன் கலியன் சேருமோடையில் தலையில் கை வைத்தபடி குத்துக்காலிட்டுக் குந்தியிருந்தான்.

கட்டை குட்டையான உருவம். அப்பனைப் போலவே உடம்புக்குப் பொருத்தமில்லாத பெரிய தலை. சோகையால் உப்பலான முகம். உடம்பெல்லாம் சாம்பல் பூசினாற்போல சோகை வெளுப்பு. தாடையில் குத்திட்டு நிற்கும் முடி. வணங்காமுடியாய் துருத்தி நிற்கும் செம்பட்டை தலைமுடி.

இடுப்பில் கட்டிய நீர்க் காவி ஏறிய, ஏகப்பட்ட கறைகளைத் தாங்கிய நாலு முழ வேட்டி. அதற்குப் பொருத்தமாய் கழுத்தில் மாலையாய்த் தொங்கும் ஒரு காசித்துண்டு.

கலியனுக்கு அடுத்த மாதம்தான் முப்பது வயது முடியப்போகிறது, என்றாலும் நாற்பதைத் தாண்டி தெரியும் முதிர்ச்சி.

செய்தி கேள்விப்பட்டு வந்த தலையாரி தாளமுத்து தலை குனிந்தபடி குந்தியிருந்த கலியன் தலைமேல் ஆதரவாகக் கை வைத்து “ கலியா..” என்றதும் திரியில் தீ வைத்ததும் விர்...ரென் மேலெழும் ராக்கெட் வானம் போல கலியன் ‘விருட்’டென எழுந்தான். கேவிக் கேவி அழுதான்.

“கலியா... நேத்து கூட...” என்று தொடங்கிய தலையாரியின் கைகளை இறுகப் பற்றியபடி கதிறினான்.

அழுகைக்கு நடுவே, ‘ராத்திரிக்குப் படுக்கும்போது, “வெள்ளன எழுப்படா, காளவா பிரிக்கப் போவணும்னாரு... கருக்கல்ல யப்பா... யப்பான்னேன்..எழுவலையே...” மேலே பேச முடியாமல் அழுதான் கலியன்.

‘தலையாரி எப்போ கிளம்புவார். நாம எப்போ போவலாம்...’ என்று நினைத்தபடி எட்ட நின்றிருந்தவர்கள் தலையாரியையும், கலியனையும் மாறி மாறிப் பார்வையால் துளைத்தனர்.

எப்படி அகிலாண்டக்கழவி முதல் முதலில் ஒப்பாரி பாடி பிறகுதான் மற்றவர்கள் வரவேண்டும் என்று முறை இருக்கிறதோ, அதுபோலத்தான் இதுவும். முதலில் தலையாரி வந்து துக்கம் கேட்டுப் போன பிறகுதான் மற்றவர்கள் வந்து விசாரிக்கவேண்டும். இது எழுதப்படாத சட்டமாக இருந்தாலும், இதை இன்று வரை யாரும் மீறியதில்லை.

இதுபோல சாங்கியமாய் மதிக்கப்படுகிற எழுதப்படாத சட்டங்கள் கிராமங்களில் நிறைய உண்டு.

“அளுவாத கலியா... மனசு தேத்திக்க... அடுத்தாப்ல காரியங்களுக்கு... பணங்...காசு...எதுனா...” என்று சற்றே நீட்டி நிறுத்தினார் தலையாரி.

காசு பணத்துக்கு ஏதும் குறை வைக்கலை எங்கப்பன். பானை நிறைய பணம் கிடக்குது. ‘மொரை’யெல்லாம் கிளவி சொல்லும்..” கலியன் அரற்றினான்.

குனிந்து குடிசைக்குள் போனதும், கையாள் பாலித்தீன் பையிலிருந்து எடுத்துக் கொடுத்த சாட்டை மாலையை தலையாரி வாங்கியபோது அன்னம்மா ஒப்பாரி பாடினாள்.

தலையாரி சென்றதும், அக்கம் பக்க ஜனங்கள் கலியனை துக்கம் விசாரிப்பதும் உள்ளே சென்று திரும்புவதுமாய் இருந்தார்கள்.

பிரேதத்தின் தலைமாட்டில் எரிந்த அரிக்கேன் விளக்கு கபக்..கபக் என்று எகிறிக் குதிக்க, அதை வாயால் ஊதி அணைத்த கிழவி. “சீமெண்ணெண் புட்டி எங்கேடா கலியா..?”என்றாள்.

“அடுப்படீல கெடக்கு..எடுத்தாரட்டா..?”

“நீ வேணாம். ஏய் அமூஸு... கொண்டாந்து ஊத்துடீ..” என்று சொல்லிக்கொண்டே கையூன்றி எழுந்து, கைப்பிடித்துணியால் மூக்கைப் பிழிந்துகொண்டே குடிசைக்கு வெளியே வந்தாள் அயிலாண்டக் கிழவி.

“ஆம்பள ஆளுவ எல்லாம் பல்லு வௌக்கி, பசியாறி வந்துரலாம்... ‘பளார்...’னு விடிய பந்த போட்டாவணும். ஏகப்பட்ட வேலை கெடக்கு...”- ஆங்காங்கே நின்றுகொண்டும், சம்மணம் போட்டும், குத்துக்காலிட்டும் குந்தியும் இருந்தவர்களை நோக்க பொத்தாம் பொதுவில் சொன்னாள் கிழவி.

“எலே காத்தவராயா...! கைப்பாரை கொண்டாந்து பந்தலுக்கு ஊனு குளி நோண்டுடாலே..” என்றதும் “செரி ஆத்தா...!” என்று சொன்னபடியே கடப்பாரை எடுத்துவர ஓடினான்.

கண்ணுக்கு மேல் கை வைத்து மறைத்தபடி எட்டப் பார்த்தாள் கிழவி “ எவடீ அவ... பொன்னம்மாவா...! மருமவ எப்படி இருக்கு ?. நாளைக்கு அந்திக்குள்ற பிரசவமாயிரும். கவலைப்படாதே.. நீ என்னாத்துக்கு எளவு வீட்டாண்ட வந்து நிக்கிறியாம்..போடீ வூட்டப் பாக்க..போக்கத்தவளே..” என்று கடிந்து கொண்டாள்.

“எதனாச்சும் ஒதவி வேணும்னா கேளு ஆத்தா செய்யுறேன்.”

“வேணுந்தேன்... உனக்கே, புள்ளத்தாச்சி மருமவ இப்பவோ அப்பவோனு இருக்காளேன்னு யோசிக்கறேன்..”

Representational Image
Representational Image

“அதுக்கும் இதுக்கும் என்னாத்தா..எதுனா தேவைன்னா சொல்லு செய்யிறேன். சமயத்துக்கு செய்யத்தானே அக்கம்பக்கம்...”

“செரி..ஒண்ணு செய்யி. சுக்கு , மல்லி தட்டிப்போட்டு ஒரு கலயத்துல சூடாக் கொண்டா. மாரடிச்ச நெஞ்சுக்கு எதமா ஊத்திக்கிடறோம்.. ஏண்டீ பொன்னம்மா... ஒன் மவனைப் பத்தி, எங்க இருக்கான்...ஏது இருக்கான்னு சேதி எதுனா தெரிஞ்சிச்சாடீ...!”

“......................” பொன்னம்மா மொனமாய் இருந்தாள்.

“அது எங்கன குடிபோதைல வுளுந்து கிடக்குதோ.. எல்லாம் நீ வாங்கிக்கிட்டு வந்த வரம்.. கிரகச்சாரம்தான் போ...போ..”

“எலே கலியா...! நீ சின்னக் கொளந்தயில்லே... அவனவன் எரியற வூட்டுல என்னத்தை புடுங்கலாம்னு நிப்பானுவ. நான் குத்துக்கல்லாட்டம் நின்னு அததுக்கு உள்ளதைச் சொல்லுதேன். என்னைக் கலக்காம நீ ஏது செஞ்சிராதே...” என்று கிழவி சொல்லிக் கொண்டிருந்ததை காத்தவராயன் கவனமாகக் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தான்.

கிழவி காத்தவராயனை கண்ணோடு கண் பார்க்க, அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“வுளுந்தவன் சிரிச்சானாம் வெக்கத்துக்கு அஞ்சி...! ஒட்டுக் கேக்காம கவனமா வேலையப் பாருடா சோமாரி..” என்று காத்தவராயனை வசைபாடிக்கொண்டிருந்தபோதுதான் “ஆத்தா... சுக்குத்தண்ணி..” என்ற பொன்னம்மாவின் குரல் கேட்டது.

“எலே காத்தவராயா.. அந்த சுக்குத் தண்ணிய கொண்டுபோயி மாரடி வாயிக்குக் குடு.. நீ மொதல்ல ஒரு லோட்டா ஊத்திக்க...” என்றதும் கடப்பாறையை தரையில் ஊன்றிவிட்டு எழுந்துவந்தான்.

அந்த நேரத்துக்கு சூடான சுக்குத் தண்ணீர் இதமாக இருந்தது.

எட்டு மணிக்கெல்லாம் தெரு பரபரப்பாகிவிட்டது. தெருவில் ஒரு துஷ்டி என்றால் யாரும் வேலைக்குப் போவதில்லை என்பதால், தெருவாசிகள் எல்லாம் இழவு வீட்டைச் சுற்றிலும் ஆங்காங்கே உட்கார்ந்துகொண்டும், நின்று கொண்டும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

வெற்றிலை, சீவல், புகையிலை, சுண்ணாம்பு டப்பா, பொறி கடலை, அன்றைய நியூஸ் பேப்பர்கள், எல்லாம் வாங்கி வந்து முறையாக வைத்துவிட்டான் நாகராசு.

பாடைக்கு வேண்டிய மூங்கில், பச்சைமட்டை, வாழைக்கன்று, பந்தல்கயிறு எல்லாம் கொண்டு சேர்த்தான் சுடலை.

“எலே, வள்ளுவரக் காணலயேடா...தாரை தம்பட்டத்தக் காணலியேடா அளைக்கப் போனது யாரு..?” பொதுவாகத் தொடுத்தாள் கேள்வி.

“போ..வாரோம்னு சொன்னாம் ஆத்தா தப்பு தம்புசாமி...” என்றான் மாணிக்கம்.

“இருந்து கையோட அளைச்சி வராலாமில்ல.. நீ அவுசரமா இங்கே வந்து எந்த பாடைல போவப்போறே..” என்று கடிந்து கொண்டிருக்கும்போதே, தெரு முனையில், தாரை, தம்பட்டம், கொம்பு, உறுமிமேளம்..எல்லாம் வந்துகொண்டிருந்தன. அவர்களோடு போதை ரெங்கனும் வந்தான்.

அகிலாண்டக் கிழவிக்கு ரங்கனைக் கண்டதும் வயிறு பற்றியெரிந்தது. ‘இன்னிக்கோ.. நாளைக்கா பிரசவமாவுற நிலைமைல பொண்டாட்டி இருக்கா. இப்பிடிச் சீரழியறானே இந்த ரெங்கன்... பொன்னம்மாவுக்கு இப்படி ஒரு மவனா...!’ என்று நினைத்த கிழவியின் கண்கள் பனித்தன.

கலியன் வீட்டுக்கு முன் நடு வீதியில் புகைந்துகொண்டிருந்த நெருப்பில் கூளத்தைப் போட்டு எகிறவிட்டு தம்பட்டம் உறுமிமேளம் எல்லாம் காய்ச்சிப் பதப்படுத்தினார்கள்.

“ட்..ரான்..ட்..ரா..ன்.. ணக்கு... ணக்கு... ப்ரும்.. ப்ரும்..” என்று உரசியும் தட்டியும் பதம்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Representational Image
Representational Image

தாரையில் கதறல, சாவுச் சங்கில் கூவல், கொம்பின் பிளிரல், தப்பின் தட்டல், எல்லாம் கலந்த ஓசை.. அந்த ஓசைக்குத் தக்க போதை ரங்கன் விகாரமாக முகம்சுருக்கியபடி, ‘தய்யாத் தக்கடியென...’ விவாரமாக ஆட்டம்போட்டான்.

சின்னஞ்சிறுசுகளுக்கும், குஞ்சு குளுவான்களுக்கும் இது வேடிக்கையாக இருந்தது. ..’நற..நறவெனப் பல்லைக் கடித்தாள் அகிலாண்டக் கிழவி.

இந்த நேரத்தில்தான் பொன்னம்மாவின் புருஷன் “ஆத்தா.. ஆத்தா.” என்று எட்ட நின்று அழைத்தான். அவன் அழைப்பில் அவசரம் இருந்தது.

“மருமவளுக்கு பிரசவ வலி எடுத்துடுச்சு ஆத்தா...!” குரலில் பதற்றம்.

“பதட்டப்படாதே..அஞ்சு நிமிசத்துல தலைமுளுகிட்டு வந்துடறேன்..”

பிரசவம் பார்த்துவிட்டு வரும்போது கிழவிக்கு ஒரு யோசனை தோன்றியது. “நீ ஒரு ஆம்பளைப் பிள்ளைக்கு அப்பனாயிட்டே..” என்று சொன்னால் அவன் திருந்திவிடுவான் என்று நம்பினாள் கிழவி.

வாழ்வின் ஜீவநாடியே நம்பிக்கைதானே...!

மகன் பிறந்த சேதி கேட்டதும் ரெங்கன் இன்னும் அதிகமாக விகாரச் சிரிப்புடன் “ஏன் பிறந்தாய் மவனே..ஏன் பிறந்தாய்...” என்று இளித்துக்கொண்டே குத்தாட்டம் போட

‘இவனைத் திருத்தவே முடியாது..’ என்ற முடிவோடு கலியன் அருகில் சென்றாள் அகிலாண்டக் கிழவி.

தொடரும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.