வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
“அய்யா, கோயிலு கோபுரத்து மேல நின்னு என்னா செய்யுறீங்க...?”
கலியன் பதற்றத்தோடு கேட்டான்.

“அரசஞ் செடிங்க அங்கங்கே கிளம்பியிருந்துச்சா...! அதையெல்லாம் புடுக்கிப் போட்டேன்....!” சொல்லிக்கொண்டே கீழே கிடக்கும் செடிகளை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்.
“அய்யா...! அய்யா...! ஓரமா வராதீங்க...!”
பதறினான் கலியன்.
“.............................”
கலியன் பதற்றத்துக்கு மதிப்பளித்து, மாதய்யா கால்களை ஒரு அடி பின்னால் இழுத்துக்கொண்டு நின்றார்..
“ஆத்துக்குக் குளிக்கப்போன அய்யாவை இன்னும் காணோமே!’னு வீட்டுல அம்மா கவலைப்பட்டுக் குந்திக் கிடக்காங்க.”
“நீங்களோ, இப்படி கோபுரத்துல ஏறி உட்காந்துருக்கீங்களே...! இது ஒங்களுக்கே நல்லாருக்கா...! தப்பித் தவறி விழுந்துட்டா வருமா...!’
“.............................”
“அடிபட்டு முறிஞ்ச காலு...! சேருவனானு சேந்து இப்பத்தான் சரியா வந்துருக்கு... இப்பப் போயி...?”
“கலியா...! இதுபோல வேலைங்களைச் செய்யக் காலம் கடத்தக்கூடாதுடா...!
‘அன்று கிடந்தா ஆறு மாசம்’னு சொல்லுவாங்க...!”
“அப்பறம் ஆவட்டும், பாத்துக்கலாம்’னு விட்டுப்புட்டா, அது மறந்து போயி, ‘ஆஹா...!னு ஒரு நாளைக்கு ஞாபகம் வரும்போது, நல்லா வேர் விட்டு உறுதியா நின்னுரும்...!”
“.............................”
அய்யா சொல்வதைக் கவனமாகக் காதில் வாங்கினான் கலியன்.
“இப்போ இது போல ஒரே இழுப்புல நிமிஷமாப் புடுங்கிப் போட்டுறலாம்.
கொஞ்சம் வேர் ஊனிடுச்சோ, அவ்ளோதான், சித்துளியால உடைச்சி, திராவகம் ஊத்தி நாள் கணக்குல மெனக்கடணும் பாரு...”
“நீங்க சொல்றதெல்லாம் செரிதான்யா. இதுபோல ஏதாச்சும் வேலைன்னா வரும்போதே வீட்ல சொல்லிப்புட்டு வந்தா, அம்மா கவலையில்லாம இருப்பாங்கதானே...?”
“.............................”
கலியன் சொல்வதில் இருந்த கரிசனத்தையும், ஞாயத்தையும் அமைதியாக உணர்ந்தார் மாதய்யா.
“நீங்க எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யணும். கீளே உக்காந்து இதை எடு, அதை கவனி, இப்படிப் பண்ணு, அப்படிப் போடுன்னு நோக்கம் சொன்னீங்கன்னா, நான் ஏறி செஞ்சிட்டுப் போறேன்...!”
“.............................”
“எலும்பு முறிஞ்சி சேறுமானு சேந்த காலு...! பாத்து இறங்குங்கய்யா...!”
“நான் மெதுவா இறங்கிக்கறேன். நீ வீட்ல போய் சேதி சொல்லிட்டு, கடப்பாரை, அருவா, மம்முட்டி, கோடாலி எல்லாம் எடுத்துக்கிட்டு வா...போ...!”
“நான் போவுறது இருக்கட்டும். நீங்க இறங்குங்க மொத....”
பிடிவாதமாய் நின்றான் கலியன்.
*****************************
“இறங்கிட்டேன்... போதுமா...!”
“.............................”
“இப்ப போ, ஜாமான் எடுத்துக்கிட்டு வா...!”
“.............................”
அமைதியாக நின்றான் கலியன்.
“ஏன் தயங்கி நிக்கறே... என்னமா காடா மண்டிக்கிடக்கு பாரு...”
“களையெடுப்புங்கய்யா......! இன்னிக்கு நம்ம வயல்ல...”
“அது கெடக்கட்டும்டா, கோவில் காரியம். நெனச்சதும் செஞ்சிரணும்.”
“செஞ்சிருவோம்யா...!”
“களையெடுப்புக்கு வந்திருக்கற ஆளு படைங்களைக் கோவிலுக்கு வரச்சொல்லு... கோவில் சுத்தமாவட்டும்...”
“நான் சொல்றேன்னு நினைக்காதீங்கய்யா... காலத்துல செய்யவேண்டிய, களையெடுப்பு நிக்காம நடக்கட்டுங்கய்யா.”
“.............................”
“கோவில் வேலைக்குத் தனியா நாலு ஆம்பள ஆளுங்க ஏற்பாடு பண்ணி விடறேங்க...”
“கலியா...! நாலு ஆளுங்க செய்யறதை நாப்பது ஆளுங்க செஞ்சா சட்டுபுட்டுனு வேலை முடியுமில்ல... அம்மன் காரியம்டா... நெனைச்சதும் செஞ்சி முடிச்சிரணும்.”
“முடிச்சிருவோம்யா...”
“கை வெச்ச நேரம் சரசரன்னு கமிட்டிப் போட்டுத் திருப்பணி வேலைங்களைத் தொடங்கிரலாம்...”
“.............................”
“இந்த வருசம் காப்புக் கட்டிப்பிடணும்னு யோசிக்கறேன்...”
“.............................”
நான் ஒரு கணக்குப் போட்டா நீ ஒரு கணக்குப் போடுறியே...?”
“அய்யா... உங்களுக்குத் தெரியாததில்ல. நம்ம வயக்காட்டுல இருக்கறதும் தானிய லட்சுமிதானுங்களே...!”
“.............................”
“அந்த லட்சுமிக்கு எடைஞ்சலா இருக்கற களைங்களையும் நேரத்துல எடுத்துத்தானே ஆவணும்...”
“.............................”
“கமிட்டி எதுக்குங்க கமிட்டி... கோவில் வேலைக்கு கல்லு, சிமிட்டு, கொத்துக் கூலி, மேஞ்செலவுங்க இதுக்குத்தானே...!”
“ம்ம்...!”
“ஒரு தண்டோராப் போட்டா, ஊர்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு ஏத்துக்கிடுவாங்க. கட்டுமான வேலைங்களும் சிறப்பா முடிஞ்சிரும், ஆத்தா காப்புக்கட்டையும் தடபுடலாப் பண்ணிப்புடுவாங்களே...!”
“.............................”
“கமிட்டி போட்டாலும் போடலேன்னாலும் பொதுக்காரியம் நடந்தே தீரும். கோவிலுக்குக்கொடுக்கறவங்க கொடுப்பாங்க.”
“கமிட்டின்னு போட்டா கமிட்டிக்காரங்க வரட்டு கவுரவத்தால காரியம் கெட்டுத்தான் போவும். சரிதானுங்களே நான் சொல்றது...?”
“ம்...”
“சிமிண்டு நிறைய கிடைச்சா, கட்டு வேலையும் சிமிண்டுல போடுவோம். இல்லியோ சேத்துல கட்டுவேலை போட்ருவோம்.”
“சிமிண்டு பூசி மெழுகிடுவோம்...!”
“சர்தான்...!”
“இத்தினி வருசமா நின்ன இந்தச் செவுரு... களிமண் கட்டு வேலைதானுங்களே...!”
“அதுவும் சரிதான்...”
“இன்னிக்கு நாலு ஆளு வெச்சி வேலை தொடங்கிருவோம்...
எல்லையம்மன் வேலை. அதும்பாட்டுக்க சீரா சிறப்பா நடக்குமுங்க...”
கலியன் பேசியதில் ஒன்றைக் கூட மறுக்க முடியவில்லை.
‘தீர்மானமாக, தீர்கமாக, உறுதியாக, தெளிவாகப் பேசுகிறானே இவன்...’
வியந்தார்.
கலியன் கையில் குத்தகைச் சீட்டு எழுதிக் கொடுத்த பின் அவர் மனசின் ஒரு மூலையில் ‘இவன் சொன்னபடி செய்வானா...?’ என்று
மாதய்யாவின் மனதில் இருந்த துளிப்போல இருந்த சம்சயமும் இன்று முற்றிலும் நீங்கிவிட்டது.
‘சொத்து பூராவும் அவன் பெயருக்கே எழுதி வைத்தாலும்கூட கலியன் தனக்கென்று சுயநலமாய் எதுவும் செய்துகொள்ள மாட்டான்...’
தீர்மானமாக மனசில் பட்டது.
*****************************
“அய்யா...! போற வளீல ஒரு எட்டு களையெடுப்பை பாத்துட்டுப் போங்கய்யா.
“ம்... பாக்கறேன்...”
காவிரியாத்துல முளுவிட்டு, வீட்டுக்குப் போயி பசியாறி வந்துடுங்க...”
“நானும் போயி கோவில் வேலைக்கு ஆளு இட்டாரேன்...”
கலியனும் மாதய்யாவும் இரு வேறு திக்கில் நடந்தனர்.

*****************************
“களையெடுக்கும் பெண்டுங்களே....
கையிலெங்கே களையக் காணோம்...
கை வளையல் குலுக்கிவிட்டு
காசு வாங்கிப் போவியளோ...?”
பாட்டோசையுடன் தன் வருகையை அறிவித்தார் மாதய்யா.
அமைதியாய் போய்க் கொண்டிருந்த களையெடுப்பு கலகலப்பாய் மாறியது.
“பாலும் பழமும் எடுத்துப்பாக அய்யா
பழைய சோத்து நீர் குடிப்போம் நாம
இட்லி காபி எடுத்துப்பாக அய்யா
இருத்த நீச்சுத் தண்ணிக் குடிப்போம் நாம.
கணக்குப் பாக்காம காசு கொடுப்பார் அய்யா
கணக்குப் பாக்காம களை எடுப்போம் நாம...
என்று சின்னப்பொண்ணு பாட்டுக் கட்டினாள்.
எல்லோரும் குலவை போட்டுச் சிரித்து அய்யாவை மகிழ்வித்தனர்.
ரசித்து மகிழ்ந்த மாதய்யா, தோண்டியை எடுத்துக்கொண்டு அவசரமாய்க் காவிரிக்குப் போனார்.
*****************************

காவிரிப் படித்துறை லஸ்கர் கட்டடத்துக்கும் இடையே இருந்த சுமைதாங்கியில் கைப் பையை வைத்துவிட்டு பெட்டவாத்தலை பஸ்ஸுக்காகக் காத்திருந்த காசி வாத்தியாரைப் பார்த்ததும் குசலம் விசாரித்தார்.
“என்ன வாத்தியாரே...எப்படி இருக்கீங்க...?”
“நல்ல சௌக்யம்... நீங்க நல்லாருக்கங்களா...?”
“இருக்கேன் வாத்யாரே... உங்க தகப்பனார் போனதோட, எல்லையம்மா காப்புக் கட்டும் இப்படி நின்னுப் போயிருச்சே...!”
“.............................”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றார் காசி வாத்தியார்.
“இந்த வருசமாவது எல்லையம்மனுக்கு காப்பு கட்டிரணும் வாத்தியாரே...”
“கண்டிப்பாக் கட்டிருவோம்.”
ஊக்கப்படுத்தினார் காசி வாத்தியார்.
“அதுக்கு முன்னே கோவில் காம்பவுண்டு செவுரு கட்டிரணும்...னு பிரயாசைப்படுறேன்.”
“ஜமாய்ச்சிருவோம்...!”
*****************************
காவிரியில் குளித்துக் கரையேறியபின் வழக்கம்போல, காவிரிக்கரை ஆதித்ய வினாயகர் முன் நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டார் பரமசிவம்.
காசி வாத்தியாரும், மாதய்யாவும் பேசிய பேச்சைக் காதில் வாங்கிக்கொண்டே அவர்கள் அருகில் வந்தார் கொத்தனார் மேஸ்திரி பரமசிவம்,
“நீங்க பேசினதை காதுல வாங்கினேன். காம்பவுண்டு கட்டித் தர்றது என் பொறுப்பு.” என்று சொல்லிவிட்டுப் போனார்.
மாதய்யாவுக்கு மனசெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது.
உடலும் உள்ளமும் குளிரக் குளிர காவிரியில் நீராடிவிட்டு தோண்டியில் தண்ணீரோடு வீடு திரும்பினார் மாதய்யா.

கோவில் வேலைக்கு ஆட்கள் ஏற்பாடு செய்துவிட்டான் கலியன்.
கோவில் மதிலைச் சுத்தம் செய்யத் தொடங்கினர்.

“இப்படிச் செய்... அப்படிச் செய்... ஜாக்கரதை.... பார்த்துக் கால் வை, பாம்பு, தேளு, நட்டுவாக்களி கெடக்கும், ஜாக்கரதை... எச்சரிக்கையாச் செய்யி, தனியாத் தூக்காதே, அவசரப் படாதே, கை ஜாக்கரதே...”
எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தார் மாதய்யா
ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் ஓடி ஆடி ஆட்களுக்கத் தோது சொன்னார்.
நடு நடுவே சம்பாக் காணிக்குச் சென்றார்.
களையெடுப்பிலும் போய் பாட்டுக் கட்டினார்.
விவசாயக் கூலிகளை உற்சாகப்படுத்தினார்.
“கண்ணாடி வளையல் போட்டு...
களையெடுக்க வந்த பொண்ணே...
கண்ணாடீ மின்னுதடீ....
களையெடுப்புப் பிந்துதடீ....”

சின்னப்பொண்ணுவை கேலி செய்து பாட்டுக் கட்டினார்.
அவள் கட்டிய எதிர்ப்பாட்டை வரவேற்று மகிழ்ந்தார்.
அவர்களின் குலவையை ரசித்தார்.
சற்றைக்கெல்லாம், கோவிலில் ஆட்கள் வேலை செய்வதைப் பார்க்க ஓடினார்.
ஆட்களுக்கு நோக்கம் சொன்னார்.
பஸ் ஸ்டாண்டுக்கு, காவிரிக்கு, வயல்வெளிகளுக்கு... என சாலையில் போனவர்கள் எல்லோரும் சற்றே நின்று பார்த்தார்கள்.
‘கோவில்ல என்னவேலை நடக்குது...’
ஆர்வத்தில் அருகில் வந்து கவனித்தார்கள்.
ஆட்களிடமும், மாதய்யாவிடமும் கேட்டு விபரமறிந்தார்கள்.
அறிந்த விவரங்களை அங்கங்கே பரப்பினார்கள்.
அனைத்து தெருவாசிகளுக்கும், கோவில் காம்பவுண்டு புதுப்பிக்கும் வேலையைப் பற்றித் தெரிந்தது.
அம்மனுக்குக் காப்புக் கட்டும் மாதய்யாவின் எண்ணத்தை அறிந்தார்கள்.
பச்சைக்கொடி காட்டினார்கள்.
“என்னால ஆனது...!”
“என்னால முடிஞ்சது...!”
“நான் இதைச் செய்யவா...!”
“அதை நான் ஏத்துக்கறேன்...!”
“இதுக்கு நான் பொறுப்பு...!”
என்று எல்லையம்மனின் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டுக் கோரிக்கை வைத்தார்கள்.
*****************************
சம்பிரதாயத்துக்காகத் தண்டோரா போடப்பட்டது.
தர்மலிங்கம் ஒன்பது தெருவுக்கும் தண்டோரா போட்டு செய்தி பரப்பினான்.

ஊர்க்கூட்டம் நடைபெற்றது.
குறைந்தபட்சம், தெருவுக்குத் தலா 10 மூட்டை சிமெண்ட் தர ஒப்புக்கொண்டார்கள்.
மேலே தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்.
பாரவண்டி வைத்திருப்பவர்கள், தலைக்கு மூணு நாலு வண்டியாவது ஆற்று மணல் அடித்துத் தர ஒப்புக்கொண்டார்கள்.....
அந்தனூரைச் சேர்ந்த 40 கொத்தனார்களும், சம்பளம் இல்லாமல் கோவில் வேலை செய்வதாக வாக்களித்தார்கள்.
*****************************
திருச்சியில் பிரபலமான சிவில் இஞ்சினியர் திருநாவுக்கரசு. பவுர்ணமி தவறாமல் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் தீவிர சிவபக்தர்.
அவர் முகத்தில் வெளிப்படையாகவே அந்த தேஜஸ் தெரியும்.
தாத்தா காலத்திலேயே திருச்சியில் குஜிலித் தெருவில் பங்களா கட்டிக்கொண்டு செட்டில் ஆகிவிட்டாலும், தன் பூர்வீகமான அந்தனூர்எல்லையம்மனின் தீவிர பக்தர் திருநாவுக்கரசு.

மிகவும் பிஸியான இஞ்சினியர் அவர்.
அவருக்கு இருந்த பற்பல பணிச்சுமைகளுக்கு நடுவே எல்லையம்மன் கோவில் திருப்பணியை நாள் தவறாமல் வந்து மேற்பார்வைச் செய்தார்.
சரியாக ஒண்ணரை மாதத்தில் கோவில் சுற்றுச் சுவர் கட்டியாகிவிட்டது.
கணேசலிங்க ஸ்தபதி சுற்றுச் சுவரின் நான்கு ஓரங்களிலும் சுதைவேலை செய்து தந்தார்.
கட்டுமான வேலைகள் அனைத்தும் சிறப்பாகவும், தரமாகவும், திருப்தியாகவும் செய்து முடிக்கப்பட்டது.
கோவில் பிரகாரம் முழுவதும் தன் சொந்தச் செலவில் கருங்கல் தளவரிசைப் போட்டுத்தந்தார் இஞ்சினியர் திருநாவுக்கரசு.
சிமெண்ட்பூச்சு, சுதை வேலை, வண்ணப்பூச்சுகள், தளவரிசை... எல்லாம் முடிந்து பளிச் என்று காட்சி அளித்தது எல்லையம்மன் கோவில்.

*****************************
கும்பாபிஷேகம் குறித்து முக்கியஸ்தர்கள் கூடிப் பேசினார்கள்.
“பாலாலயம்தான் பண்ணலையே..!.” என்று இழுத்தார் விஸ்வம் குருக்கள்.
“.............................”
“ஆமாமா...! சந்நிதி உள்ளேயும், விமானத்துலயும், கும்பத்துலயும்தான் கை வைக்கலையே.” இது கிச்சாமி.
“.............................”
“காம்பவுண்டு சுவர், பிரகாரம் தளவரிசைன்னு, வெளி வேலைப்பாடுங்கமட்டும்தானே நடந்துருக்கு...” ராமப்பிரசாதய்யா எடுத்துச் சொன்னார்.
“.............................”
“ஒரு புண்யதானம் பண்ணித் தீர்த்தம் தெளிச்சாப் போறாது...?” கேள்வி எழுப்பினார் காசி வாத்தியார்.
“.............................”
“காப்புக் கட்டறப்போ ஒரு காவு கொடுத்து பூஜை போட்டுட்டாப் போதும்...”
முடிவாய்ச் சொல்லிவிட்டார் அந்தக் கோவிலின் பரப்பரை ட்ரஸ்டியும், கோவிலின் பூசாரியுமான செல்வமுத்துப் பண்டாரம்.
அவர் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்பட்டார்கள்.
அப்படியே செய்வோம் என்று முடிவெடுத்தும் விட்டார்கள்.
கணேசலிங்க ஸ்தபதியும் பூசாரி சொல்வதுதான் சரி என்றார்.
சந்தேகத்துக்கு, ஆகமபூஷணம் தாயுமானவ சிவாச்சாரியாரை அணுகிக் கேட்க மாதய்யாவும், காசி வாத்தியாரும் சென்றார்கள்.
எங்கோ கும்பாபிஷேக வேலையாகச் சென்றுவிட்டு கையில் மூட்டையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார் சிவாச்சாரியார்.
“வாங்க என்ன சேதி...”
“நீங்க ரெஸ்ட் எடுங்க. சாய ரஷை வந்து பாக்கறோம்...” என்றார் காசி வாத்தியார்.
அதெல்லாம் ஒண்ணும் சிரமமில்லை. நமக்குள்ள என்ன சம்ப்பிரதாயம், என்னைத் தேடி வந்த விஷயத்தைச் சொல்லுங்கோ...”
கோவில் வாசலிலேயே வைத்து விஷத்தைச் சொன்னார்கள்.
அவரும் யாக சாலை, கும்பாபிஷேகம்னு எதுவும் தேவையில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

*****************************
கையும் மெய்யுமாக, இரண்டு வருடங்களாக நடக்காமல் நின்றுபோன காப்புக் கட்டை, இந்த வருஷம் மாதய்யா பொறுப்பேற்றுக் கட்டுவதாகவும் தீர்மானமாம் செய்தார்கள்.
அனைத்துத் தெருத் தலையாரிகளும் அவரவர் தெரு மண்டகப்படியை குறிப்பிட்ட நாளில் வழக்கம் மாறாமல் செய்துவிடுவதாக உறுதியளித்துவிட்டார்கள்.
*****************************
நாளை விடிந்தால் காப்புக் கட்டுத் திருவிழா.
காப்பு கட்டும் நாளில் ஊர் எல்லைக்குள் இருந்தால், காப்பு அறுக்கும் நாளிலும் ஊர் எல்லைக்கள் இருந்தே ஆக வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த ஐதீகம் அறிதோர்...
‘காப்பு அறுக்கும் நாளில் வெளியூர்த் தங்கல் இருக்கலாமோ...?’ என்று சந்தேகப் படுவோர், காப்புக் கட்டுகிற நேரத்தில் ஊர் எல்லை தாண்டிச் சென்றுவிட்டார்கள்.
காப்புக் கட்டு முடிந்ததும் அவர்கள் ஊருக்குள் வருவார்கள்.
காப்பு அறுக்கும் நாளில் நிச்சயமாக இங்குதான் இருப்போம் என்று உறுதியாய் இருந்த வெளியூர் வாசிகளும் காப்புக்கட்டில் கலந்துகொள்வதற்காக ஊருக்குள்ளேயே இருந்தார்கள்.
காப்புக் கட்டு என்பதை ‘ரக்ஷா பந்தனம்’ வட மொழியில் சொல்வார்கள்.
ரஷை என்றால் காப்பு என்று பொருள். பந்தனம் என்றால் கட்டுதல்.
ஒரு காரியத்தை நாம் செய்யும் முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறு ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைசக்தியை வேண்டிக்கொண்டு கையில் கயிறு கட்டிக்கொள்வதற்கு ரக்ஷா பந்தனம் என்று பெயர்.
நாம் செய்வது ஒரு நாள் பூஜையாகவும் இருக்கலாம். பத்து நாள் பூஜையாகவும் இருக்கலாம்.
அது மாதிரிக் காரியங்களில் ரஷா பந்தனம் செய்து கொண்டால் ஊர் எல்லையைத் தாண்டிப் போகக்கூடாது. நியமத்துடன் இருக்க வேண்டும்.
இரண்டாண்டுகளாக நின்று போயிருந்த காப்புக் கட்டை இந்த ஆண்டு பக்திப் பரவசத்தோடும், முழு ஈடுபாட்டுடனும், காலங்காலமாக செய்து வந்த முறைகளை முறையாகக் கடைபிடித்தும், விமரிசையாக நடத்துவதாகத் தீர்மானித்துவிட்டார்கள் ஊர் மக்கள்.
*****************************
ஊர் வழக்கப்படி, எல்லையம்மனின் கையில் மஞ்சள் கயிறு கட்டினார் பூசாரி.
கொடிமரத்தில் மஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த துணியில் நவதானியங்கள் வைத்து சாங்கியமாய் முடிந்து வைத்த துணியைக் கொடிபோல் ஏற்றிக் கட்டினார் பூசாரி.
ஊர் கூடி அம்மனின் அருள் பெற்றார்கள்.

காப்புக் கட்டியாயிற்று.
காப்பு கட்டிய நாள் முதல் பத்து நாள் அந்தனூரில் விழாக் கோலம்தான்.
தினமும் எல்லையம்மன் வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள் தீமிதி.
பதினோராம் நாள் விடையாற்றி விழா.
எந்தத் தடையும் இன்றி எல்லையம்மன் நடத்திக்கொள்ள வேண்டும். நடத்திக்கொள்வாள்.
*****************************
மாதய்யாவின் கையில் வேப்பலைக் குடத்தை முதலில் கொடுத்தார் பூசாரி.
அதன் பின் விரலி மஞ்சள் கட்டிய காப்பை அவர் வலது கையில் கட்டினார்.

மாதய்யா கையில் காப்பு என்கிற மிகப் பெரிய பொறுப்பு ஏறிவிட்டது.
காப்புக் கட்டிக் கொண்டவர்களுக்கு புலால் உண்ணாமை, போகம் தவிர்த்தல், ஊர் எல்லை தாண்டிப் போகாது இருத்தல்...
இப்படிச் சில நெறி முறைகள் உண்டு.
காப்புக் அறுக்கிற வரை ஊரில் யாரும் இறந்து விடக்கூடாது.
இறந்துவிட்டாலோ அது அச்சானியம்.
தெய்வக் குத்தம் ஆகிவிடும்...
இதுவரை அப்படி யாரும் இறந்ததாக வரலாறில்லை..
‘எல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமே...!’
அல்லும் பகலும் எல்லையம்மனைப் பிரார்த்தித்தபடியே இருந்தார் மாதய்யா.
காசி வாத்தியாரின் அப்பா பக்கிரி அய்யா.
அவர் இருந்தவரை அவர்தான் பொறுப்பேற்றுக் கொண்டு காப்புக் கட்டுவார்.
எட்டுக் கண் விட்டெறிந்து நிர்வாகம் பண்ணும் திறமை அவருக்கு உண்டு.
மாதய்யா பொறுப்பில் காப்புக் கட்டுவது இதுவே முதல் முறை.
‘ஏதும் குத்தப்பாடு வந்துவிடாமல் நல்லபடியா முடியணும் தாயே...!’
அல்லும் பகலும் கவலைப்பட்டார் மாதய்யா.
*****************************
முதல் நாள் காருடையான் தெரு மண்டகப்படி.
காருடையான் தெரு சிலம்பாட்டத்துக்குப் பெயர் போனது.
முதல் நாள் மண்டகப்படியன்று சிலம்பாட்டம்தான் சிறப்பு.
அந்தனூர் சிலம்பாட்டம் பார்க்க வெளிநாட்டவர்களை திருச்சி ஸ்டார் ஓட்டல்களில் இருந்து அழைத்து வருவார்கள் டூரிஸ்ட் ஏஜண்டுகள்.
அவ்வளவு பிரசித்தம்.

முதல் நாள் மண்டகப்படியன்று அக்கிரகாரம் தெருவுக்கு வீதி உலா வரும்.
பெரிய தெரு பெயருக்கு ஏற்றபடி பெரிய தெரு.
அந்தத் தெருவுக்கு மட்டும் இரண்டு நாட்கள் மண்டகப்படிக் கட்டளை உண்டு.
வழக்கப்படி, இரண்டு நாட்களில் முதல் நாள் மட்டும் அக்கிரகாரம் தெருவுக்கு ஊர்வலம் வந்தது. மறுநாள் வரவில்லை.
மூன்றாம் நாள் முறை வாணியத்தெருவினது...
நான்காம் நாள் வேளாளர் தெரு..............
பறவைக் காவடிகள், சக்திக் காவடிகள், அலகுக் காவடிகள், பால்குடம் எடுத்தல்... இது போல,

எந்த நாளில் எந்த சாங்கியம்...
எந்தத் தெரு மண்டகப்படி...
எந்தத் தெருவில் தொடங்கும்...
எந்தத்தெருவிற்குச் செல்லாது...
என்றெல்லாம் எழுதப்படாத சட்டங்கள் பல உண்டு.
எந்த முறைகளையும் மாற்றாமல் ஊர்ச் சட்டதிட்டங்களை முழுமையாக மதித்து, விமரிசையாய் நடைபெற்றுக்கொண்டிருந்தது எல்லையம்மன் திருவிழா.
*****************************
காப்புக் கட்டிக் கொள்பவர்களைப் போலவே, தீ மிதிக்க நேர்ந்தவர்கள், காவடி எடுப்பவர்கள், பால்குடம் சுமப்பவர்கள் என எல்லோரும் காப்புக் கட்டு நாளன்று, பூசாரியின் கையால் மஞ்சள் வஸ்திரம் வாங்கிப் போனார்கள்.
இந்தப் பத்து நாளும் இவர்களும் கவிச்சை, போகம் இன்றி சுத்தபத்தமாக இருந்து விரதம் காத்தார்கள்.
விரதம்காக்காதவர்களை ‘தீ...மிதிக்காதே...’ என்று எச்சரித்துவிடுவாள் எல்லையம்மா.
அம்மன் உத்தரவை மீறினால் விசுவநாதக் கொத்தனுக்கு நேர்ந்த கதிதான்.
*****************************
விசுவநாதக் கொத்தன்.
தெய்வ நம்பிக்கையே இல்லாதவன்.
“வேண்டாம்... வேண்டாம்...”
பூசாரி எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.
காதில் வாங்கவே இல்லை விஸ்வநாதன்.
“நான் தீ மிதிக்கத்தான் மிதிப்பேன்...”
வீம்பு செய்தான்.
காப்புப் கட்டிக்கொண்டான்.
பூசாரியிடம் மஞ்சள் வஸ்திரம் வாங்கிக் கொண்டான்.
வாங்கிக்கொண்டானே தவிர அதை அணியவில்லை
எந்த விரதத்தையும் அனுசரிக்கவும் வில்லை.
அவன் முறை வந்தபோது தீக் குழிக்குப் போனான்.
அதுவரை யாரும் பார்க்காத ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை... அவனுக்கம் முன்னேவந்து நின்றது.
“நீ... தீ மிதிக்காதே...!”என்று சொல்லிற்று.
“சரி... மிதிக்கல...! நீ போ பாப்பா...!” என்று அலட்சியமாகச் சொல்லி அனுப்பிவிட்டான் அந்தச் சிறுமியை.
கேலியும் கிண்டலுமாகச் சிரித்தபடியே தீக்குழி நோக்கிச் சென்றான்.குழியில் கால் வைக்கும் நேரம் தன்னை யாரோ இழுப்பது போல் உணர்ந்தான் விசுவநாதன்.
ஆனாலும் முரண்டு பிடித்துக்கொண்டு கையை உதறித் தள்ளிவிட்டு இறங்கப் போனான்.
பொதேரென்று தீக்குழியில் விழுந்தான்.
இந்தக் கதையை தீமிதிக்குச் செல்பவர்களை நிறுத்தி கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் விவரமாகச் சொல்லுவான் விசுவநாதக் கொத்தன் உயிரோடு இருந்தவரை.
சொல்லும்போது அவன் உடம்பு பூராவும் நாகப்பழக்கலரில் நிற்கும் தழும்புகளை கைகளால் தடவியபடியே சொல்லுவான்.
அவன் சொல்வதைப் பார்க்கும்போது
Coleridge என்ற ஆங்கிலக் கவிஞன்
The Rime Of The Ancient Mariner என்ற கவிதையில்,
The Wedding-Guest sat on a stone:
He cannot choose but hear;
And thus spoke on that ancient man,
The bright-eyed Mariner.

திருமணத்துக்குச் செல்பவர்ளை நிறுத்தி. தன்னுடைய பயங்கரமான (Voyage experiences) கடற்பயண அனுபவத்தையும், இறைவனைப் பிரார்த்தனைச் செய்து அந்தப் பயங்கரத்திலிருந்து உயிர்த் தப்பித்த கதையையும் வலிந்துச் சொல்வாரல்லவா...
அது போலவே இருக்கும் விசுவநாதக் கொத்தன் சொல்வது.
விசுவநாத கொத்தனாரின் உடம்பு பூராவும் முட்டு முட்டாக நாகப்பழ நிறத்தில் இருக்கும் தீப்புண் வடுக்கள்.
இதைப் பார்ப்பவர்கள் நிச்சயம் தப்பு தண்டா செய்யவே மாட்டார்கள். விரதங்களை முறைப்படி அனுசரிப்பார்கள்.
காப்புக் கட்டிவிட்டால் ஊரில் விசுவநாதக் கொத்தன் முக்கியமானப் பேசுபொருள் ஆகிவிடுவான்.
தீமிதி நெருங்க நெருங்க அவன் பற்றிய பேச்சும் அதிகமாகும். அவ்வளவு பிரசித்தம்.
*****************************
“அப்பா பொறுப்பெடுத்துண்டு காப்பு கட்டியாறது. உனக்கு உத்யோகம், லீவு இதையெல்லாம் உத்தேசிச்சி, மோகனாவையும் ரஞ்சனியையும் கொண்டு விட்டுட்டுப் போ. பத்துநா இருந்து எல்லாத்தையும் பாக்கட்டும்...”
குந்தலாம்பாள் ஒரு போஸ்டு கார்டு எழுதிப் போட்டாள்.

அம்மாவின் தபாலுக்கு மதிப்பளித்து காப்புக் கட்டுக்கு முதல் நாள் அவர்களைக் கொண்டு வந்து விட்டுப் போனான் துரை.
யானை, மயில், கிளி, சிங்கம்... இப்படி நாளுக்கு ஒரு வாகனமாக, சுற்றுப் பத்துக் கோவில்களிலிருந்தெல்லாம் வாகனங்களை இரவல் வாங்கி, எப்போதும் இல்லாத திருநாளாய் ஒன்பது நாளும் விமரிசையாக நடந்தது கண்கொள்ளாக் காட்சியானது.

இரண்டாண்டுகளுக்குப் பின் காப்புக்கட்டியதால் ஊரில் தலைக்கட்டு வரி கொஞ்சம் அதிகமாகவே விதித்தார்கள்.
*****************************
ராஜாமணிக்குருக்கள்.
ஒவ்வொரு நாளும் ‘டாண்’ எனறு மதியம் மூணு மணிக்கே வந்து அலங்காரத்தைத் தொடங்கிவிடுவார்.
புஷ்ப அலங்காரம் தடபுடலாய் இருக்கும்.
சாட்டை மாலை, திண்டு மாலை, வெட்டிவேர் புஞ்சம், வெள்ளை மற்றும் செந்தாமரை, மரிக்கொழுந்து, மல்லிகை, முல்லை, தாழை, மகிழம்பூ, பாரிஜாதம், அரளி, கதிர்ப் பச்சை என்று பக்கதர்களால் அளிக்கப்பட்ட அனைத்தும் கலந்து ‘கம்’ மென்று அந்த வளாகம் பூராவும் மணம் பரப்பும்.
திண்டுத் துணிக்கட்டும், கறுப்புக் கயிறுகளும், வாழை நார்களும், சிம்புகளும், குச்சிகளும் ஒருபுறம் குவிந்திருக்கும்.
துணி சுற்றிய அபயஹஸ்தம், வரதஹஸ்தம், வில், அம்பு, திரிசூலம், கிரீடம், தண்டை, ஒட்டியானம்... எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் வில்வெட் துணிப் பரப்பி அதன்மேல் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்
தொட்டுத்தொட்டு, தடவித் தடவி, கட்டி-அவிழ்த்து, பொருத்தம்-பார்த்து, தலைப்பு மாற்றி, தளவாடங்கள் மாற்றி, அளவு வைத்துப்பார்த்து, எட்ட நின்று கண்டு களித்து , திருப்தி இல்லையெனில் மீண்டும் அவிழ்த்துக்-கட்டி, மனதுக்குச் சரியாகப் படாததை முற்றிலும் வேறு மாற்றி...பொறுமையாக பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து அலங்காரம் செய்வார்.
‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்ற சொலவடைக்கு இலக்கணமாக இருக்கும் அவர் அலங்காரம் செய்யும் நேர்த்தி.
கொஞ்சம் கூட அலுப்புப் படமாட்டார்.
பார்த்துப் பார்த்து அனுபவித்து அழகாய் அலங்காரம் செய்து முடிக்க மணி ஏழு ஆகிவிடும்.
கையெழுத்து மறையும் நேரம், ஆறு ஆறரைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் விளக்கு வந்துவிடும்.
அதன் வெளிச்சத்தில் எட்ட நின்று ஒரு முறை அலங்காரத்தைப் பார்ப்பார்.
எதிலாவது திருப்தி இல்லை எனில் அந்த இடத்தில் சின்னச் சின்ன நகாசு வேலைகளைச் செய்து, சாதாரணக் கண்களுக்குத் தப்பு தெரியாமல் மறைத்துவிடுவார்.
ஒன்று மட்டும் உறுதி.
ராஜாமணிக்குருக்கள், தனக்குத் திருப்திப் படும் வரை அலங்காரம் செய்தபிறகுதான் ஊர்வலத்திற்கு அம்பாளை எடுத்துச் செல்ல அனுமதிப்பார்.
ராஜாமணிக்குருக்கள், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தேவஸ்தானத்தில் பல வருஷங்கள் இருந்தவர்.
அலங்காரம் செய்வதில் நிபுணர் அவர்.

*****************************
ஒவ்வொரு நாளும் 7 மணிக்கெல்லாம் கோவில் வாசல் களை கட்டிவிடும்.
கூட்டம் கூடி விடும்.
அலங்கரித்த அம்பாளை சந்நிதியிலிருந்து கோவில் வாசலில் நிற்கும் சப்பரத்தட்டிக்குப் கொண்டு போய் சேர்த்தல்தான் அடுத்த எபிசோட்.
பொது இடம், பொதுக்காரியம் என்பதால், ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
எல்லாவற்றையும், காதில் வாங்கியும் வாங்காமலும் தீபாராதனை முடித்து, மாதய்யா தலையில் பரிவட்டம் கட்டினார் பூசாரி.
கைத்தலத்தில் வைத்துக் கட்டிய அம்பாளை நான்கு பேர் தூக்கி எடுத்து வந்து சப்பரத்தில் வைத்தார்கள்.
சப்பரத்தட்டியின் கொக்கிகளோடும் வளையங்களோடும் சேர்த்து நூல் கயிற்றால் உறுதியாகக் கட்டுவான் அதைக் கட்டச் தெரிந்த, வழக்கமாய்க் கட்டும் முருகானந்தம்.
“சீக்கரம் ஆவட்டும்...” என்று யாராவது சொல்லிவிட்டால் அவ்வளவுதான்.
“எனக்குத் தெரிஞ்சது இவ்ளோதான்.. வா நீ வந்து கட்டு...” என்பான்
கோபித்துக்கொண்டு பாதியில் இறங்கிப் போய்விடுவான்.
ஆளாளுக்குப் போய் அவனைக் கூப்பிடுவார்கள். அவனோ முறுக்கிக் கொள்வான்...
“நீ கட்டு கெடக்கு... அவன்தான் ஏதோ சிறு பிள்ளைத்தனமா பேசிட்டான்...” என்பது போல எதையாவது சொல்லித்தான் அவன் வயதொத்தவர்கள், அவனைச் சமாதானப் படுத்தி அழைத்து வருவார்கள்.
இப்படியெல்லாம் எதிர்பாராத பிரச்சனைகளும், சிக்கல்களும், சிணுங்கல்களும், வருத்தங்களும், வார்த்தைத் தடிப்புகளும், கோபதாபங்களும், முறுக்கல்களும், முனகல்களும், கிறுக்கல்களும், வைராக்கியங்களுமாக...ஒரு சவாலாகத்தான் இருக்கும், இருந்தது ஒவ்வொரு நாளும்
‘தேருக்கு உள்ள சிங்காரம் அதுக்கேத்த அலங்காரம்’ னு சும்மாவா சொல்லி வெச்சாங்க.
எல்லாம் முடிந்து புறப்பட ரெண்டு பங்கு நேரம் கூட ஆகிவிடும் சில நாட்களில்.

வெண்கொற்றக் குடைகளும், ஆயக்கோல்களும்...
ஒத்தைக் கால், மூன்று கால், ஐந்து கால், சந்த்ரவளையக்கால், சக்கரக்கால் என தினுசு தினுசாக எறியும் தீவட்டிகளின் ஆடி அசையும் வெளிச்சமும்
தலையில் சுமந்து வரும் பெட்ரோமாக்ஸ்களின் பளீர் என்ற ஒளியும்….
ஆங்காங்கே விடும் வாணவேடிக்கைகளின் வண்ணங்களும்...
வீதி உலாவின்போது உருவாக்கும் ஒளிநிழற் காட்சிகள் கண்களைக் கொள்ளை கொள்ளும்.
தவில், நாயனம், செண்டை, பம்பை, எக்காளம், உடுக்கை, கொம்பு... எனப் பல்வேறு வாத்தியங்களின் இசை காதுகளுக்கு விருந்தாகும்.

*****************************
ஒவ்வொரு நாள் மண்டகப்படிக்கும் எந்தத் தெருக் கட்டளையோ அதன் தலையாரியைப்போய் அழைக்கவேண்டும்.
அவர் சரியான நேரத்தில் வரவில்லையென்றால் அவர் வரும் வரை அபிஷேகம் செய்யாமல் காத்திருக்க வேண்டும்.
மாதய்யா ரொம்பவே தவித்துப் போய்விட்டார்.
காலம் நேரத்தில் மிகவும் கண்ணும் கருத்தாகவும், கணக்காவும் கரெக்டாகவும் இருக்கும் மாதய்யாவுக்கு இது ஒரு சோதனையாகத்தான் இருந்தது.
“இதோ பின்னாடியே வரேன் போங்க..!” என்பான். வரமாட்டான்.
பின்னாலேயே ஆள் விட்டுப் பார்த்து வரச் சொன்னால், “அவரு வீட்ல இல்லீங்க... அப்பவே.... புறப்பட்டுட்டாருங்க...”
சேதி வரும்.
தலையாரி, கோவிலுக்கும் வராமல், வீட்டிலும் இல்லாமல் எங்காவது நின்று மாட்டுத் தரகு பேசிக்கொண்டிருப்பான்.
‘நமக்காகச் சாமி காத்திருக்கலாமா...?’ என்கிற அச்சமோ, லஜ்ஜையோ சிறிதும் இல்லாமல், தாமதமாக வந்து இயல்பாக நிற்பான்.
அவனை முறித்துக் கொள்ளவும் முடியாது. கொஞ்சம் அப்படி இப்படிப் பேசிவிட்டால், “மண்டகப்படியை வேணா நிறுத்திக்கிடுங்க...” என்பான்
“ஒக்காந்த எடத்துல காசு சம்பாரிக்கறவன் இல்ல நான் ... நாலு எடத்துல தரகுப் பேசிப் பொளைக்கறவன்.”
“ரெண்டு நிமிசம் தாமசமா வந்ததுக்கு இப்பிடி அவமானப் படுத்துறது மொறையா...? ”
விதண்டாவாதம் பேசுவான். ஊர் கூட்டுவான்...
சில தெருத் தலையாரிகள் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள்.
“தீபாராதனை காட்டலாமுங்களா...?”
பூசாரி மாதய்யாவைக் கேட்பார்.
மாதய்யா தலையாரி கோஷ்டியைக் கேட்பார்.
அவர்கள் பட்டும் படாமலும் தலையாட்டுவார்கள்.

“எல்லாரும் வந்தாச்சா?” சம்பிரதாயமாய்க் கேட்பார்.
“இன்னாரு வரலைங்க...!” குறிப்பிடுவான் ஒருத்தன்.
“அவரு வந்துரட்டுமே...! தெருவுல முக்கியமான தலை அவரு... வரட்டுமே...” என்று சிக்கவைப்பார்.
ஆமோதிப்பும் எதிர்ப்புமாய் ஒரு நாடகம் நடக்கும்.
இந்த மாதிரி நேரங்களில் பக்கிரி அய்யாவாக இருந்தால்
“நீங்க கற்பூரம் காட்டுங்க பண்டாரம்...” என்று உத்தரவு கொடுப்பார்.
எது வந்தாலும் சமாளிப்பார். அதெல்லாம் ஒரு காலம்.
*****************************
ஏழு மணிக்கு ஊர்வலம் புறப்பட்டால் ஒன்பது தெருவும் சுற்றி வருவதற்கு விடிகாலை மூணு மணி ஆகிவிடும்.
அப்புறம் அலங்காரம் கலைத்து விக்கிரகத்தை கொண்டு போய் மூலஸ்தானத்தில் வைக்கவேண்டும்.
மூன்று கதவுகளையும் சாத்தித் தாழ்ப்போடவேண்டும்.
ஒன்பது பூட்டுக்களால் மூன்று கதவுளைப் பூட்டும் வரை இருக்கவேண்டும்.
அதன் பிறகு வீட்டுக்கு வந்தால் ஒரு இரண்டு மணி நேரம் தூங்கலாம்.
ஏழு மணிக்குப் புறப்பாடு தொடங்கினால்தான் இதெல்லாம்...!
ஒரு நாள் கூட ஏழு மணிக்குப் புறப்பட்டதாக சரித்திரம் இல்லை.
யாராலாவது, எதனாலாவது, தவிர்க்கமுடியாமல் தாமதமாகிவிடும்.
ஒரு நாளைப் பார்த்தாற்போல் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் புறப்பட்டது.
கோவிலைப் போய் அடையும்போது மறுநாள் பகல் எட்டு மணி ஆகிவிடுகிறது.
கதவு பூட்டும்போது காலை ஒன்பது ஆகிவிடுகிறது.
ஒன்பதரை மணிக்கு அன்றைய மண்டகப்படிக்கான அபிஷேகம் நடக்க வேண்டும்.
மாதய்யா கோவிலில் இருந்து நேரே காவிரிக்குப் போய்த் திரும்பி, வீட்டில் குந்தலாம்பாள் தரும் அவல் கஞ்சியைக் குடிப்பார்.
தூக்கம் வந்து கண்கள் செருகும்.
தூங்கிவிட முடியுமா...?
ஒரு பத்து நிமிஷம் தாமசமாய்த்தான் கோவிலுக்குப் போய்விடமுடியுமா...?
எவனாவது ஒன்றுக்கும் உதவாத, நயா பைசாவுக்குப் புண்ணியமில்லாத, திண்ணைத் தூங்கிச் சோம்பேரிப் பயல்... முகம் காட்டுவான்.
“காலத்துல வரமுடியாதவங்க ஏன் பொறுப்புக் கட்டிக்கணும்...”
சுருக் என்று பேசிவிடுவான்.
அவனை எதிர்த்துப் பேசிவிட்டாலோ... அவ்வளவுதான்.
அந்தத் தெருவே கூடி ‘எச்சில்கலைக்கு இச்சகம் பேசுவது (உயர்வாய்ப் பேசுவது) போல்’ சோப்ளாங்கிப் பயலுக்கப் பரிந்து பேசும்.
தூக்கமில்லாமல், சரியான நேரத்துக்குச் சாப்பாடு இல்லாமல், ஓடி, ஆடி, அலைந்து ஒன்பது நாள் திருவிழாவைப் முடித்துவிட்டார் மாதய்யா...
ஒன்பதாம் நாள் தடபுடலாக காளியாட்டம் நடைபெற்றது. பச்சைக் காளி, பவளக்காளி இரண்டும் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல வாக்கு சொன்னது.

*****************************
ஒன்பதாம் நாள்.
தீமிதிக் குழிக்கு எரிபொருள்கள் வரும் நாள்.
இரண்டு வருடங்களாக தீமிதி நடக்காததால், தேவைக்கு அதிகமாகவே வந்து குவிந்துவிட்டன.
வீட்டில் தலைமுறை தலைமுறையாக உபயோகித்து உடைந்துவிட்ட நடைவண்டி, உரல், உலக்கை, ஊத்துப் பட்டை, பூரிக்கட்டை, மாட்டுத் தீவனத் தொட்டி, மத்து, கொட்டாப்புளி, தூளிக்கட்டை, வண்டிப் பார், நுகத்தடி, பரம்புப் பலகை, கலப்பைக் கட்டை...மர மரக்கால், மரப்படி போன்ற மரச்சாமான்களை வீட்டில் எரிப்பதில்லை.
தீமிதிக் குழிக்குத்தான் ஆகுதியாக்குவார்கள்.
இது மட்டுமில்லை, பழைய வீடு இடித்து புது வீடு கட்டியவர்கள், வாசல் அருகாலை தீக்குழிக்குத்தான் தருவார்கள்.
வேறு வழியின்றி கிணற்றை தூர்க்க வேண்டி வரும்போது, மூடுவதற்கு முன் அதிலிருந்து வெளியே எடுத்தப் போட்ட ‘சூராவளிக் கட்டை’.
வீட்டில் அரசு, வில்வமரம் இருந்து சாய்ந்துவிட்டால் அதையும் வீட்டில் அடுப்பெரிப்பதில்லை.
அதை வெட்டிப் பத்திரப்படுத்தி தீமிதி வரும்போது தீக்குழிக்கு அர்ப்பணிப்பார்கள்.
இரண்டு ஆண்டுகள் தீமிதி நின்று போயிருந்தததால் வழக்கத்தை விட ஒரு பங்கு அதிகமாகவே குவிந்துவிட்டது எரிபொருட்கள்.
இரண்டு மூன்று ஆசாரிகள் உட்கார்ந்து பொழுதுக்கும் வேலை பார்த்தார்கள்.
வந்திருக்கிற கட்டைகளில் ஆணி, ஸ்க்ரூ, கீல்பட்டை, பூண், வளையம், கொக்கி, என இரும்பு சம்பந்தம் இருக்கிறதா என்பதைப் பார்த்து அதைக் உளியால் கொத்திப் பிரித்து எடுத்தார்கள்.
வழக்கம்போல் எரி பொருட்களை கவனமாகக் கை பார்த்தப் பிறகு தீமிதிக் குழிக்கு எரியூட்ட அனுப்பினார்கள்.
*****************************
பத்தாம் நாள்.
தீமிதி.
உச்சிகாலம் 12 மணிக்கெல்லாம், மூலஸ்தானத்தில் தீபாராதனை செய்த கற்பூரத்தைக் கொண்டு வந்து தீமிதிக்குழி பற்றவைத்தார் பண்டாரம்.

எரிய எரிய விறகுகள் போட்டார்கள் ஒரு கோஷ்டியினர்..
அருகில் அண்டாவில் நிரம்பியிருந்த தண்ணீரைக் குவளையால் எடுத்துத் தலையில் கொட்டிக் கொண்டார்கள்.
தீக்குழி அருகில் சென்று எரி பொருட்களைப் புரட்டி விட்டார்கள்.
எரிந்த கட்டைகளை முரட்டுப் பச்சைக் கழி கொண்டு அடித்து நெருப்புப் பூக்களாக்கினார்கள்.
*****************************
மூன்று மணிக்கு வீதி உலா கிளம்பிய எல்லையம்மன் ஆறு மணிக்கு வருவதற்குள் தீக்குழி பூக்குழியாகத் தயாராக வேண்டும்.
வெள்ளைவெளேர் என்ற நந்தி வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட எல்லையம்மா ஒட்டமாய் ஓடி அந்தனூர் பூராவும் அருள்பாலித்தாள்.
படைப்பவர்களும், தீபாராதனை காட்டுபவர்களும், சிதர் தேங்காய் உடைப்பவர்களும், மாவிளக்கு போடுபவர்களும்.... பத்து பதினைந்து வீடுகளுக்கு முன் அம்மன் வரும்போது அவரவர்களே படைத்தார்கள்.
தலைவாழை இலையில் படைத்து வைத்த மாவிளக்கு மாவை நான், நீ... என்று போட்டி போட்டுக்கொண்டு இழுத்தார்கள்.
இலை கிழிந்து மாவெல்லாம் சிதறிவிட, அப்படியே போட்டுவிட்டு ஓடினார்கள்.
அடுத்தடுத்த வீடுகளில் வைக்கும் மாவையும் சிதறடிக்க அவசரமாய் ஓடினார்கள்...
இப்படி ஓட்டமாக ஓடி வரும்போது வாரையில் ஆள் மாற்றம் செய்து கொண்டார்கள்.
எக்குத் தப்பாய் ஒரு வாரையில் நோஞ்சான் தோள்களாகச் சேர்ந்துவிட்டது.
ஓட்டத்துக்கும் பாரத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் நோஞ்சான்கள் தடுமாறியதில் அந்த வாரைப் பக்கமாகச் சாய்ந்துவிட்டது.
எப்படியோ சாமர்த்தியமாக அருகில் இருந்த லாந்தர் கம்பத்தில் சாய்த்து சமாளித்துவிட்டார்கள்.
ஆயக்கோல் நிறுத்தி, லாந்தர் கம்பத்தில் மோதி உடைந்த ரிஷபத்தின் காலைச் சிம்பு வைத்து கட்டி ஒப்பேற்றினார்கள்.
ரிஷபத்தின் கால் உடைந்ததால் ‘தெய்வ குத்தம்’ இருக்கு” என்று பேசிக்கொண்டார்கள் ஒரு சாரார்.
சிம்பு வைத்துக் கட்டி ஒப்பேற்றியதால், ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு...” என்ற பேச்சுக்கும் குறைவில்லை...
சாபமும் சமாதானமுமாகப் பேசியது ஊர்.
*****************************
ஆறு ஆறரைக்குள் தீமிதி தொடங்கிவிடவேண்டும்..
ஐந்தரை மணிக்கெல்லாம் எரிந்துகொண்டிருக்கும் கட்டைகளைத் தட்டித் தட்டிக் கரையேற்றினார்கள்.
அதைத் தண்ணீர் கொட்டி அவித்தார்கள்.
கொள்ளிக் கட்டைகளை கோணிச் சாக்கில் போட்டுத் தூக்கிப்போய் ஜனங்கள் கால் வைக்காத இடத்தில் அப்புறப்படுத்தினர்.
மூங்கில் கழியின் முனையில் பொருத்தப்பட்ட விரல்களை மடித்தாற்போல் வளைந்த இரும்புக் அருவலால் செவ்வகத் தீக்குழியில் இருந்த நெருப்புக் கட்டிகளை சீர் செய்தார்கள்.
ஜ்வலிக்கும் செம்மலர்களைக் குழியில் பரத்தியது போல ரம்யமான காட்சியாக இருந்தது தீக்குழி.
செவ்வகத் தீக்குழியும் அதை அடுத்த சதுரப் பால் குழியும் பார்க்க, சிவப்புக் கோட்டுக்குக் கீழ் வெள்ளைப் புள்ளியிட்ட ஆச்சரியக் குறிபோல அமைந்திருந்தது.
அவ்வப்போது அடிக்கும் காற்றின் திசையில் அனல் வீசியது.
முது மணம்பெண் (blushing) முகத்தில் கை வைத்து மறைத்து நாணுதல் போல அவ்வப்போது அங்கங்கே நெருப்பூக்கள் (நீறு பூத்து) சாம்பல் போர்த்தியபடி நாணின.
தீக்குழியின் இரண்டு பக்கமும் ஏறும் தரைச் சூட்டைத் தணிக்க பச்சை மட்டைகள் பரத்தப்பட்டன.
தீ மிதித்து வந்தவர்களின் பாதங்களை நனைக்க பால்குழியில் பால் நிறைந்திருந்தது.
அவ்வப்போது ஊற்ற பெரிய அண்டாவில் பால் நிறைந்திருந்தன.
ஊர் முழுதும் சென்று தரிசனம் தந்துவிட்டு எல்லையம்மன் நிலைக்குத் திரும்பியபின் தீபாராதனை காட்டினார் பூசாரி.
*****************************
வேட்டுச் சத்தம் வானைப் பிளந்தது.
தீ மிதி துவங்கியது.
பட்டு ரோஜா, பன்னீர் ரோஜா, செம்பருத்தி இதழ்கள் கல்யாண முருங்கைப்பூ இதழ்கள் என சிவந்த நிறப் பூக்களால் விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தில் நடப்பதைப்போல முதலில் நடந்து வந்தார் கரகம் ஏந்திய கனகசுந்தரம்.
தொடர்ந்து முன்பே தயார் செய்துள்ள வரிசைப்படி தீ மிதித்தனர் பக்தர்கள்.

பதினோராவது நாள்.
விடையாற்றி
பூசாரி சூலத்தைத் தாங்கியபடி சென்றார்.
குருத்தோலையில் முடைந்த கிளிகள், பூக்கள், மாவிலைக் கொத்து, கிழிந்துவிட்ட குறுத்தோலை, பாக்குக் குலை, தேங்காய்க் குலை, இளநீர் குலை, பலவகை வாழை மரங்கள் குலைகளுடன், எனச் வெறு சிறப்பாக, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட காவிரிக்கரை சூலப்பந்தலில் சூலத்தை ஆவாஹனம் செய்தனர்.
சூலத்தோடு கூடவே வந்த ஒன்பது தெரு நாட்டாமைகளும் சுமந்து வந்த முளைகட்டிய நவதானியங்களும் காவிரி நீரில் இறைக்கப்பட்ட பின், மாதய்யா, தலை முழுகிவிட்டு மடியாக எடுத்து வந்த நீரை சூலத்துக்கு அபிஷேகம் செய்தார் பூசாரி.
மீண்டும் சூலத்தோடு கோவிலுக்குச் சென்றதும், காப்பு அறுத்துவிட்டார் பூசாரி.
கோவில் மண்டபத்திலேயே தலையாரிகளை உட்காரச் சொல்லி, தயாராக வைத்திருந்த கணக்கு வழக்குகளை விவரமாகச் சொல்லி ஊர் பொதுவில் ஒப்படைத்தார் மாதய்யா.
“நல்லபடியா நடத்திக்கிட்டே தாயே...” என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
*******************************

வீட்டுக்கு வந்து படுத்தவர்தான்.
உடம்பு அனலாய்க் கொதித்தது.
ஜீவபுரத்திலிருந்து டாக்டர் அருணகிரி வந்து தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்தார்.
ஜூரம் தணியவே இல்லை.
மூடிய கண் திறக்கவே இல்லை.
ஆகாரம் எதுவும் செல்லவில்லை.
பட்டகசாலையின் நடு அங்கணத்தில் அஸ்மானகிரி மஞ்சத்தில் அசைவற்றுக் கிடந்தார் மாதய்யா.
குந்தலாம்பாள், மோகனா, ரஞ்சனி மூவரும் டாக்டர் என்ன சொல்லப்போகிறாரோ எனக் கவலையோடு நின்றனர்
“மனுஷ யத்தனத்துல எதுவும் இல்லே...” கைவிரித்தார்.
“.............................”
‘எல்லாம் பகவான் செயல்’ என்பது போல விரித்த கையை உயரே தூக்கினார் டாக்டர் அருணகிரி.
-தொடரும்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.