சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும், விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இதன் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
இங்கிலாந்தில் 1984-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற்ற சம்பவம் இது.

பெரும் பரப்பில் (Lindow Moss) அமைந்த தொழிற்சாலை அது. அதன் ஒரு பகுதியில் சற்றே சகதியான இடம் ஒன்றைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள் சில தொழிலாளிகள். அவர்களில் ஒருவனுக்குக் கொஞ்சம் விளையாட்டுப் புத்தி. வேலைக்கு நடுவே கொஞ்சம் ஓய்வு கிடைத்த போது, சற்றுத் தள்ளியிருந்த பகுதியில் சகதியோடு கூடிய நிறைய மரத்துண்டுகள் இருப்பதைப் பார்த்தான். அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து தன் நண்பன் மீது எறிந்தான். அவன் சட்டென்று நகர்ந்துவிட அந்தப் பெரிய மரத்துண்டு கீழே விழுந்தது.
விழுந்த வேகத்தில் அதன் மேல் பரப்பிலிருந்த கடினமான சேற்றுப் பகுதி விலகியது. அப்போது அதைப் பார்த்த இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி. காரணம் அவர்கள் நினைத்திருந்தது போல அது ஒரு மரத்துண்டு அல்ல, ஒரு மனிதனின் பாதம்.

தகவல் வேகமாகப் பரவியது. உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். எந்தப் பகுதியிலிருந்து அந்த மரத்துண்டு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொண்ட அவர்கள் அந்த பகுதியில் மேலும் தோண்டினார்கள். பாதத்துக்கு உரியவனின் மீதி உடலும் கிடைத்தது. ஆனால் அது சமீபத்தில் மறைந்த யாருடைய பிரேதமும் இல்லை.
பிரபல அகழ்வாராய்ச்சி நிபுணர் டர்னர் என்பவர் வரவழைக்கப்பட்டார். பலவித ஆராய்ச்சிகளுக்கு அந்த உடலை உட்படுத்திய அவருக்கு பெரும் வியப்பு. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் இறந்த ஒருவரது உடல் அது. அந்தப் பகுதி மண்ணில் அமில சத்து அதிகமாக இருந்ததோடு காற்று மிக மிகக் குறைவாகவே இருந்ததால் அந்த உடல் இவ்வளவு வருடங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தது!
இறந்தவனைப் பற்றிய பல விவரங்கள் அறிவியல் சோதனைகள் மூலம் தெரிய வந்தன. சுமார் 30 வயதில் இறந்தவன் அவன். அதிக உயரமும் அல்ல உள்ளமும் அல்ல. வலிமையானவன் என்பதும் தெரியவந்தது. எந்த தீவிரமான உழைப்பும் இல்லாததால் அவனது கைப் பகுதி மிகவும் மென்மையாக இருந்தது. எனவே பணக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

எல்லாவற்றையும் விட முக்கியமான கண்டுபிடிப்பு அவன் கொலை செய்யப்பட்டு இருக்கிறான் என்பது. தலையில் இரண்டு பலமான அடிகள், தொண்டையில் கத்தியினால் ஒரு கீறல். இதயப் பகுதிக்குச் செல்லும் ரத்தக் குழாயிலிருந்து தொண்டைப் பகுதியிலிருந்து ரத்தம் வெளியேறியதால் அவன் இறந்திருக்கிறான்.
ஆராய்ச்சியாளர்களின் மனதை அரித்த ஒரு கேள்வி இதுதான். இப்படி ஒரு பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டும் அவன் உடலில் இதற்கு எதிராகப் போராடியதற்கான எந்த அறிகுறியும் இல்லையே.
இது எப்படிச் சாத்தியம்?
பிறகுதான் அந்த விடை கிடைத்தது. அவன் டிரூயிட் (Druid) மதப் பிரிவைச் சேர்ந்தவன். தீய்ந்துபோன பார்லி கோக்கைத் தேர்ந்தெடுத்த துரதிர்ஷ்டசாலி.
டிரூயிட் என்ற ஒரு ரகசிய மதப் பிரிவு உண்டு. கி.மு எட்டாம் நூற்றாண்டு வரை இந்தப் பிரிவு பரவலாக இருந்திருக்கிறது. மனிதனை இறைவனுக்கு அருகே அழைத்துச் செல்வதாகக் கூறிய இந்த மதத்தில் நரபலி என்பது சகஜம்.

திடீரென்று ஒரு விழாவை ஏற்பாடு செய்வார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் நிறையப் பார்லி கேக்குகள் வைக்கப்பட்டிருக்கும். உறுப்பினர்கள் கண்களை மூடிக் கொண்டு ஆளுக்கு ஒரு கேக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். முழுவதும் தீய்ந்து போன கேக் ஒன்றும் இந்தப் பாத்திரத்தில் இருக்கும். அது யார் கையில் கிடைக்கிறதோ அவருக்கு அன்றுதான் இறுதி நாள்.
அதாவது அவரைக் கொலை செய்து அவரது ரத்தம் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள். இதில் முக்கியமான விதி என்னவென்றால் அந்த நரபலி சடங்கின் போது அவர் எந்த எதிர்ப்பையும் காட்டக் கூடாது.
அதனால்தான் கிடைத்த பிரேதத்தில் எதிர்ப்பு காட்டியதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை.
இவரது உடல் இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.