வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மாறிவரும் பருவ நிலை, வெகுவாக அதிகரித்துள்ள சூழ்நிலை மாசு இவற்றை மையமாகக் கொண்ட நெருக்கடிகள் தற்போது உலக நாடுகளை வெகுவாக கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நெருக்கடிகளை திறம்பட சமாளிப்பதற்கும் , பசுமையான எதிர்காலத்தையும், நிலையான வணிக வளர்ச்சியையும் உறுதிசெய்யவும், அதிகரித்து வரும் சூழ்நிலை மாசு மற்றும் அதற்கு காரணமாக இருக்கும் கழிவுகளைக் குறைப்பதிலும் அவற்றை மறுசுழற்சி செய்வதிலும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் திறமையான பயன்பாட்டை உறுதி செய்யவும் , அந்த பொருள்களினால் உருவாகும் கழிவுகளை குறைக்கவும் மற்றும் அந்த பொருள்களின் மறுசுழற்சி ஊக்குவிக்கப்படுவதையும் உறுதி செய்ய சர்குலர் எகானமி நமக்கு உதவுகிறது . சர்குலர் எகானமியை நடைமுறைப்படுத்துவது வருவாய் ஈட்டுதல், செலவு குறைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிக சந்தைகளை ஒரு நாட்டில் உருவாக்க உதவும்.

சர்குலர் எகானமி என்றால் என்ன ?
சர்குலர் எகானமி என்பது ஒரு புதுமையான பொருளாதார மாடலாகும், இது முடிந்தவரை நம்மிடம் உபயோகத்தில் இருக்கும் பொருட்களை பழுது பார்த்தல், புதுப்பித்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்துகிறது. தற்போது சர்குலர் எகானமியை நடைமுறைப்படுத்துவது வணிக நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நோக்கங்களின் (Corporate Social Responsibility) ஒரு பகுதியாக மாறி வருகிறது.
உலகை மிரட்டி வரும் மின்னணு கழிவுகள் எனப்படும் எலெக்ட்ரானிக் குப்பை
இன்று பல்வேறுபட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு அன்றாட வாழ்க்கை மற்றும் வணிக நடவடிக்கைகளின் பெரும்பகுதியாக இருந்து வருகிறது. இந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இல்லாமல் நம்மால் வாழ்வதும் சாத்தியமில்லை, தொழில் செய்வதும் சாத்தியமில்லை என்ற அளவுக்கு எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு இன்று மிகவும் அதிகரித்து இருக்கிறது. பெருமளவில் உபயோகிக்கப்படும் இந்த எலக்ட்ரானிக் பொருள்களால் மிக பெருமளவுக்கு மின்னணு கழிவுகள் எனப்படும் எலெக்ட்ரானிக் குப்பைகள் உருவாக்கப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டில், உலகளாவிய மின்னணு கழிவுகளின் மதிப்பு 62.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும், இது உலகின் ஒட்டுமொத்த வெள்ளி சுரங்கங்களில் இருந்து பெறப்படும் வருடாந்திர வெள்ளி உற்பத்தியின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் மற்றும் பெரும்பாலான உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய வணிக நிறுவனங்கள் தங்கள் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதிலும் புதுப்பிப்பதிலும் சர்குலர் எகானாமி நடைமுறைகளைப் பயிற்சி செய்யத் தொடங்குவது மிகவும் முக்கியமானது, இதனால் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான நெருக்கடிகளை குறைக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல சுற்றுச்சூழல் உள்ள உலகத்தை உருவாக்கவும் முடியும்.
இல்லையெனில் உலகளவில் வெளியேற்றப்படும் மின்னணு கழிவுகளின் தற்போதைய நிலை மிகவும் ஆபத்தான நிலைக்கு உயர்த்தப்படும், இது தீர்க்க முடியாத மிகவும் தீவிரமான சுற்று சூழல் பிரச்சினையாக மாறி போகும் அபாயம் உள்ளது. எனவே சர்குலர் எகானாமி நடைமுறைகளை செயல்படுத்துவதை பற்றி வணிக நிறுவனங்கள் தீவிரமாக சிந்திக்கத் தொடங்குவது மிகவும் அவசியமான ஒன்றாக மாறி போயிருக்கிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில், 57.4 மில்லியன் டன் அளவிலான (தோராயமாக 63.3 மில்லியன் அமெரிக்க டன்கள்) மின்னணுக் கழிவுகள் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு இருக்கின்றன. இந்த மின்னனு கழிவுகளின் மொத்த எடை இதுவரை உலகின் மிகப் பெரிய கட்டுமானமாக கருதப்படும் சீனப் பெருஞ்சுவரை கட்ட பயன்படுத்திய பொருள்களின் எடையை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

மின்னணு கழிவுகளின் வகைகள்
காலாவதியான மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், ஆடியோ பிளேயர்கள், ஸ்டீரியோக்கள், நகலெடுக்கும் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் பல மின்னணு சாதனங்கள் அன்றாட பயன்பாட்டிலிருந்து வெளியேறியவுடன் மின்னணு கழிவுகளாக மாறுகின்றன. 2104 மற்றும் 2019 க்கு இடையில் இப்படி உருவாகும் மின்னணு கழிவுகளின் உலகளாவிய அளவு 21% அதிகரித்துள்ளது.
மின்னணு கழிவுகளின் தவறான மேலாண்மை தீவிரமான பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அபாயங்களை விளைவிக்கும் அபாயங்கள் நிறைந்தது. மின்னணு கழிவுகள் பொதுவாக விலைமதிப்பற்ற உலோக கூறுகளை உள்ளடக்கியவை. எனவே அவை முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டால் அதிக பொருளாதார மதிப்பைக் கொடுக்கும்.
சர்குலர் எகானாமி நடைமுறைகளை செயல்படுத்துவது உலக நாடுகளில் குவிந்துள்ள மின் கழிவுகளை சுற்றுபுற சூழல் சீர்கேடு இன்றி நல்ல முறையில் நிர்வகிப்பதற்கு உலக நாடுகளுக்கு உதவும்.சர்குலர் எகானாமி நடைமுறைகளை செயல்படுத்துவது உலக நாடுகளில் பெருமளவில் குவிந்துள்ள மின் கழிவுகளை உபயோகமான முறையில் மறுசுழற்சி செய்யவும் உதவும். அப்படிப்பட்ட உலக நாடுகளால் பின்பற்றப்படும் உபயோகமான சில சர்குலர் எகானாமி நடைமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.
1) எலக்ட்ரானிக் பொருட்கள் பயனுள்ள மறுசுழற்சிக்காக ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். அத்தகைய கவனத்துடன் எலக்ட்ரானிக் பொருட்களை வடிவமைப்பது, அவற்றை மறுசுழற்சி மூலம் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உதவும்.

2) பயனுள்ள மறுசுழற்சி நடைமுறைகளை கொண்டுவருவதை மின்னணு பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக உலகப்புகழ் பெற்ற மின்னனு பொருள் தயாரிப்பு நிறுவனமான டெல் (Dell) நிறுவனம் தங்கள் மின்னனு பொருள்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் சர்குலர் எகானாமி கட்டமைப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
3) விற்பனையாளர்களால் ஆதரிக்கப்படாத (Not Supported ) மின்னணு உபகரணங்கள் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.
4) நகர்ப்புற சுரங்க நடைமுறைகள் (Urban Mining) உலகளாவிய அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்பட வேண்டும். நகர்ப்புற சுரங்கம் என்பது உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் குவிந்து கிடக்கும் மொத்த மின் கழிவுகளிலிருந்து மதிப்புமிக்க உலோகங்கள் பிரித்தெடுக்கப்படும் செயல்முறையாகும். ஆப்பிரிக்க நாடுகளில் நகர்ப்புற சுரங்க நடைமுறை மிகுந்த லாபத்தை கொடுப்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது
5) சிறந்த சுற்றுச்சூழல் செயல்திறனுடன் சந்தையில் விற்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அடையாளம் காணப்பட வேண்டும். மேலும் அத்தகைய தயாரிப்புகளை விற்கும் விற்பனையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், இதனால் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலக்ட்ரானிக் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய உந்துதல் பெறுவார்கள். மேலும் எலக்ட்ரானிக் பொருள்களை கணிசமான அளவு மறுசுழற்சி செய்யும், புதுப்பிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

6) உலக அளவில் மிக அதிக அளவில் வெளியற்றப்படும் மின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், புதுப்பிக்கவும் தேவையான திறன்களை சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு (NGOs) நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் உலக நாடுகளின் அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும்.
7) சர்குலர் எகானாமி கொள்கைகள் பொருள்களின் கொள்முதல் (Procurement) மற்றும் தயாரிப்பு மேலாண்மை (Production Management) நடைமுறையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்
உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) மின் கழிவு மேலாண்மையில் சர்குலர் எகானாமி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை வடிவமைத்துள்ளளது. இந்த புதிய பார்வை உலகளாவிய மின்னணு பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் சர்குலர் எகானாமி கொள்கைகளை ஒருங்கிணைக்க உதவும். இதனால் நாட்டின் இயற்கை வளங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு அவை வீணடிக்கப்படுவது குறைக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் , அவை மறுசுழற்சி மூலம் திறம்பட புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும் .

2030 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் வெளியேற்றப்படும் வருடாந்திர மின் கழிவுகளின் மொத்த எடை 74,000,000 மெட்ரிக் டன் என்ற அபாயகரமான அளவைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இது அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மொத்த எடையை போல போல 203 மடங்கு ஆகும் . எனவே, உலகளாவிய அரசாங்கங்களும் வணிக நிறுவனங்களும் மின் கழிவுவுகளின் மேலாண்மை, மின்னனு பொருள்களின் கொள்முதல், மறு சுழற்சி மேலாண்மை தொடர்பான தங்கள் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், அவற்றை சர்குலர் எகானாமி கொள்கைகளின் அடிப்படையில் மறுசீரமைப்பதற்குமான நேரம் இது. அதனால் அதை முழுமையாக உணர்ந்து சர்குலர் எகானாமி கொள்கைகளை தீவிரமாக முன்னெடுத்து செல்வது பொறுப்பான குடிமகன்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றின் கடமை ஆகும்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.