சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
1973 நவம்பர் 22-ம் தேதி என்று பிபிசி வானொலியில் ஒலிபரப்புக்காகப் பல நேயர்கள் தங்கள் வீட்டு வானொலியின் அருகில் ஆவலாகக் காத்திருந்தார்கள். இஸ்ரேலைச் சேர்ந்த யூரி கெல்லர் என்பவரின் பேட்டி அன்று ஒலிபரப்பாக இருந்தது. மனதின் சக்தி என்பது எவ்வளவு வலிமையானது என்பதை அவரது பேட்டியில் நிரூபிப்பார் என்று செய்தி கசிந்து விட்டிருந்தது. பேட்டியை மேற்கண்ட நிருபர் ஜிம்மி யங் மிகப் பிரபலமானவர். தொடக்கத்தில் எங்குப் பிறந்தீர்கள், எங்கே படித்தீர்கள் என்பது போன்ற சாதாரணமான கேள்விகளைக் கேட்டார். பிறகு யூரி கெல்லரை நோக்கி அந்தக் கேள்வியை வீசினர்.

"சாவி, ஆணிகள் போன்றவற்றை மிக மெதுவாக நீங்கள் தொட்டாலே அவை மறைந்து விடும் என்கிறீர்கள். ஓடாத கடிகாரத்தை உங்கள் பார்வையின் மூலம் இயங்க வைப்பேன் என்கிறீர்கள். இதுபோன்ற சக்தி உங்களுக்கு இருப்பதை எப்போது முதலில் உணர்ந்தீர்கள்?"
உடனடியாக பதில் வந்தது. "பள்ளியில் படிக்கத் தொடங்கிய நாள்களிலேயே இந்தச் சக்தியைக் கவனித்தேன்".
இதைத்தொடர்ந்து அவரது மன சக்தியை நிரூபித்துக் காட்டச் சொன்னார் ஜிம்மி யங். வானொலியைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மிக ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ஜிம்மி யங் தன் வீட்டுச் சாவி ஒன்றைத் தனது நீட்டிய உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். யூரி கெல்லர் மைக்கில், "அன்புள்ள வானொலி நேயர்களே உங்கள் வீட்டில் ஏதாவது உடைந்த அல்லது இயங்காத கடிகாரம் இருந்தால் அதை நீங்கள் இயக்க வைக்கலாம். இப்போது அந்த கடிகாரத்தை மட்டுமே உற்றுப் பார்த்தால் போதும்".
இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜிம்மி யங் பரவசத்துடன் பேசத் தொடங்கினார். "என் வீட்டுச் சாவி என் கண்முன்னாலேயே வளைந்துகொண்டிருக்கிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை".
"லண்டனிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் உள்ள பல வீடுகளில் கத்திகள், ஸ்பூன்கள் போன்றவை வளையத் தொடங்கின. கைக்கடிகாரம் தயாரிக்கும் ஒருவர் தான் வைத்திருந்த சிறு இடுக்கி போன்ற கருவி கன்னாபின்னாவென்று வளைந்ததோடு பல வருடங்களாக ஓடாது இருந்த ஒரு கடிகாரமும் அப்போது இயங்கத் தொடங்கியதாகக் கூறினார்".அந்த அனுபவத்தைப் பற்றி யூரி கெல்லர் இப்படிக் குறிப்பிட்டார்.

"லண்டனிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் உள்ள பல வீடுகளில் கத்திகள், ஸ்பூன்கள் போன்றவை வளையத் தொடங்கின. கைக்கடிகாரம் தயாரிக்கும் ஒருவர் தான் வைத்திருந்த சிறு இடுக்கி போன்ற கருவி கன்னாபின்னாவென்று வளைந்ததோடு பல வருடங்களாக ஓடாது இருந்த ஒரு கடிகாரமும் அப்போது இயங்கத் தொடங்கியதாகக் கூறினார்".
என்றாலும் பெரும்பாலான விஞ்ஞானிகள் இது ஏமாற்று வேலை அல்லது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை என்று ஒதுக்கினர். ஆனால் மனோதத்துவ நிபுணர்கள் சிலர் யூரி கெல்லரின் சக்தியை ஏற்கெனவே நேரில் பார்த்திருந்தனர். அவர்கள் இந்த அதீத சக்தி நிஜமானதுதான் என்று கூறியதுடன் அதற்கு சைகோ-கைனசிஸ் என்று பெயரிட்டனர். அதாவது உடலின் சக்தி இல்லாமல் மனதின் சக்தியின் மூலமாகவே பிற பொருள்களை நிலை மாறச் செய்யும் சக்தி இது.
இந்தச் சக்தியின் மூலம் அறையின் வெப்ப நிலையை மாற்ற முடியும். காந்த அலைகளை அதிகப்படுத்த முடியும். லாட்டரியில் பரிசுத்தொகை கூறிய எண் வரும்படி சுற்றிக்கொண்டிருக்கும் கருவியை நிற்க வைக்க முடியும்! டிஎஸ்பி என்று பலரால் பொதுவாக அறியப்படும் மனதின் சக்தி சைகோகைனசிஸ் என்று நாம் குறிப்பிட்டதோடு தொடர்புடைய ஒன்றுதான்.
யூரி கெல்லர் செய்வதெல்லாம் வெறும் மேஜிக் விஷயங்கள்தான், இதில் மனதின் சக்தி என்று எதுவுமில்லை என்று கூறினார் ஜேம்ஸ் ராண்டி என்ற ஒரு மேஜிக் நிபுணர். இதை நிரூபிப்பதற்காக ஆவணப்படம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பொதுவான பேட்டி மட்டுமே எடுக்கவிருப்பதாகக் கூறி யூரி கெல்லரை வரவழைத்தார்கள். அதாவது தன் ‘மனதின் சக்தியை’ நிரூபிக்க அவர் ஏதாவது முன்னேற்பாடாகத் தந்திர வேலைகளைச் செய்திருந்தால் அதற்கான வழி அடைக்கப்பட்டது.
அவர் வந்து சேர்ந்ததும் அவரது மனதின் சக்தியை நிரூபித்துக் காட்டும்படி கூற, அவர் நெளிந்தார். "என்னைப் பேட்டி எடுப்பதாகத்தானே கூறினார்கள்" என்று கேட்டார். மனதின் சக்தியை நிரூபிப்பதற்கான மனநிலை தனக்கு அப்போது இல்லை என்றார். சற்றுநேரம் படபடப்புடன் அமர்ந்திருந்து விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

இவை அனைத்தும் கேமிராவில் பதிவு செய்யப்பட்டன. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகும் இவரின் புகழ் குறையவில்லை. அவருக்கான ஷோக்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. அவரை மிக அதிகமாக நம்பிய மக்கள் மேற்படி நிகழ்ச்சியில் அவர் செயல்பட முடியாமல் போனதே அவருடையது மேஜிக் அல்ல மனதின் சக்தி என்பதை நிரூபிக்கிறது என்றார்கள். மேஜிக்காக இருந்தால் ஒவ்வொரு முறையும் அது நடைபெறும் என்றும் அன்று அவரது மனம் சரியில்லாமல் போனதால்தான் அவரால் அன்று அதன் சக்தியை நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறத் தொடங்கினார்கள்!
ஆனால், மேஜிக் நிபுணர்கள் தொடங்கி பல அறிவியாலாளர்கள்வரை இவருக்கு அப்படியான சக்திகள் எதுவும் இருப்பதாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை பாராநார்மல் எனப்படும் நிரூபிக்கப்படாத அமானுஷ்யங்களின் கீழாகவே இவர் வகைப்படுத்தப்படுகிறார்.
2005ல் ஒரு பெரிய ‘மாலி’ல்தான் மிகவும் பிரபலமடைந்த தன் ஸ்பூனை வளைக்கும் வித்தையை அவர் செய்து காண்பித்தார். 90ஸ் கிட்ஸ் கண்டிப்பாக இவரின் பெயரையும் சாகசங்களையும் ஒருமுறையேனும் கேள்விப்பட்டிருப்பார்கள்.