
தென்கிழக்குத் தென்றல்- தாவோ-சூஃபி-ஜென் - இறையன்பு
மரணப்படுக்கையில் இருக்கிற சாங் காங், தன் சீடன் லாவோவை அழைத்துத் தன் வாயைத் திறந்து காண்பிக்கிறார்.
‘`என் நாக்கை உன்னால் பார்க்கமுடிகிறதா?’’
‘`முடிகிறது.’’
‘`என் பற்களை?’’
‘`இல்லை... அவற்றில் ஒன்றுகூட இப்போது இல்லை.’’
‘`ஏன்?’’
‘`நாக்கு மென்மையாக இருப்பதால் தாக்குப்பிடிக்கிறது. கடினமாக இருப்பதால் பற்கள் விழுந்துவிடுகின்றன.’’
‘`இதுதான் உலகத்தின் ஒட்டுமொத்த ஞானம்... இதைத்தவிர நான் உனக்கு எதையும் போதிப்பதற்கில்லை.’’

சூஃபி, தாவோவைப் போன்ற இன்னுமொரு பாதைதான், ஜென். தத்துவமாக, கோட்பாடாக, மதமாக இல்லாத, வாழ்வின் போக்கில் அறிவை போதிக்கும் எளியதொரு வாழ்க்கைமுறை அது. அங்கு நிர்பந்தங்கள் இல்லை. சடங்குகள் இல்லை. விதிகள் இல்லை. தண்டனைகளில்லை. ஜென் கற்றுத்தருவது விழிப்புணர்வை ஒன்றைத்தான்.
தமிழில், தாவோ, ஜென், சூஃபியைப் பற்றி நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. இளைஞர்களைத் தன் நேர்மறை எழுத்தால் கணிசமாக ஈர்த்து வைத்திருக்கிற இறையன்பு, எளிய தமிழில், அவர்களுக்குப் புரியும் மொழியில் இந்தத் தத்துவ மரபுகளை அறிமுகம் செய்கிறார். கதைகள், ஒப்புமைகள், உரையாடல்கள் என இந்த நூலின் சுவாரஸ்யம் அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்ட வைக்கிறது.
வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கைகள், எதிர்காலம் குறித்த குழப்பங்கள், தாழ்வுணர்ச்சி, எதிர்மறைச் சிந்தனைகளைத் துடைத்துப் புத்துணர்வளிக்கும் சின்னச் சின்னக் குமிழ் மருந்துகள் இந்த நூலெங்கும் இருக்கின்றன. தேடல் உள்ளவர்கள் எந்தவொரு புள்ளியிலும் அவற்றைக் கண்டடையலாம்.
தென்கிழக்குத் தென்றல்
தாவோ-சூஃபி-ஜென்
இறையன்பு
வெளியீடூ: விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641001 vijayapathippagam2007@gmail.com
பக்கங்கள்: 480
விலை: ரூ.360