
News
கவிதை

மனிதர்களைப் போல்
திடீரென
மரணிப்பதில்லை
போன்சாய் மரங்கள்.
மரணத்தை ஒரு கலையாகப் பயில்கின்றன அவை.
சிவப்பு சாராயத்தை
மெல்ல மெல்லப் பருகுவதுபோல
மரணத்தை
மிருதுவாய்ப் பருகுகின்றன.
குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் போன்ற
தங்களின் மிருதுவான கிளைகள்
கடினப்படத் தொடங்கும்போதே
மரணத்தின் ரயில்
பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டதை
யூகித்துவிடுகின்றன அவை.
போரினாலும் பஞ்சத்தாலும்
மனிதர்கள்
தாய் மண்ணை விட்டு ஓடிப்போவதுபோல்
வரவேற்பறையின் பூந்தொட்டியை விட்டு
ஓடிப்போவதில்லை
போன்சாய் மரங்கள்.
மரணத்தின் முகத்துக்கு நேரே
ஐம்பூதங்களையும் சுவாசித்துக்கொண்டு
ஜீவ சமாதியில்
ஆழ்ந்துவிடுகின்றன அவை.
- கவிதை: இந்திரன்