
நர்சிம்
அடடா, என் புகைப்படம் தாங்கிய ‘காணவில்லை’ விளம்பரம் வந்த செய்தித்தாள் மீண்டும் இன்று என் கண்ணில்பட்டுவிட்டது. எங்கிருந்து சொன்னால் உங்களுக்குப் புரியும் என்று தெரியவில்லையே. ஒருவேளை அந்த அதிகாலை நாய்த் துரத்திலிலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கலாம். `இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது’ என்று சொல்லலாம்தான். ஆனால் சிரிப்பல்லவா பொத்துக்கொண்டு வந்துதொலைக்கிறது. ‘என்னா ஓட்டம்.’ அதுவும், அந்த பூட்ஸ்கள். என் எடையைவிட நூறு கிராமாவது அதிகம் இருக்கும். அடிப்பகுதியில் ஆணிகள் அடிக்கப்பட்ட NCC பூட்ஸ்.
நாயின் உறக்கத்தைக் கெடுத்து நிமிர்ந்து பார்க்க வைத்தது அந்த பூட்ஸ் ஆணிகள் எழுப்பிய விநோத `கிறீச்...’ சத்தம் என்றாலும், அது சற்று சோம்பலாக நிமிர்ந்து பார்த்த மாத்திரத்தில் `லப்’பென்று என்னை நோக்கிப் பாய்ந்து கவ்வ எத்தனிக்கக் காரணமாக அமைந்தது என்னவோ, கஞ்சி போட்டு விரைப்பாக இஸ்திரி செய்து, என் உடலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்த அந்த உடுப்புதான். என் சொந்த ஊரில் அதுவரை நான் பார்த்தே இராத சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ராகுல் டிராவிட் அடிக்கும் சிக்ஸர்கள்போல்தான் ஓடிய இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்திருக்கிறேன் என்பது அரை நொடியில் என்னை நெருங்கி, கடந்து எனக்கு முன்னர் நின்ற நாயைப் பார்த்ததும் உணர்ந்தேன்.

ஓடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, சரணடைந்துவிடலாம் என்ற முடிவுக்கு நான் வந்தாலும், என் பூட்ஸ் விடுவதாயில்லை. லேசாக நடுங்கிக்கொண்டிருந்த கால்களின் நிமித்தம் லேசாக அசைக்க, அது `கிறீச்’ எனப் பட்டியக்கல்லைக் கிழிக்க, வந்ததே கோபம், நாய்க்கு. பின்னங்கால்களால் அமர்ந்து, கால்களால் நின்ற நிலையிலேயே அது என் உயரத்துக்கு இருப்பதுபோல் இருந்தது. அந்த நிலையிலேயே தலையை முன்னால் ஒரு முறை கொண்டு வந்து பின்னுக்கு இழுத்துக்கொண்டது. அது மட்டுமே செய்தால் பயமேதுமில்லை. அந்த இடைப்பட்ட நொடியில் ஒரு சவுண்டு விட்டது பாருங்கள்... இப்போது நினைத்தாலும் குலை நடுங்கத்தான் செய்கிறது.
விஷயம் அதுவல்ல. நான் அந்த அதிகாலையில் அப்படி நாயின் முன்னர் செய்வதறியாமல் நின்றுகொண்டிருக்க, கடித்தும் தொலையாமல், வழியும் விடாமல் சின்னஞ்சிறு `உர்ர்...’களுடனும் அவ்வப்போது ஒரு முறைப்புடனும் என் முன்னர் இருந்த நாயிடமிருந்து என்னைக் காப்பாற்றுவதற்காகவே பிறவியெடுத்து வந்ததுபோல் வந்தாள், முத்துக்காமாட்சி அக்கா. கையில் வைத்திருந்த காலிக்குடத்தை நாயைப் பார்த்து ஓங்கிக்கொண்டே, ``ஏய் ராஜா... ச்சூ... போ... விடிஞ்சும் விடியாம கத்திக்கிட்டு...” எனச் சொன்னதும், அதுவரை பேரரசன்போல் நின்றிருந்த ராஜா, என்னை ‘சரி... சரி... போய்த் தொலை’ என்பதுபோல் ஒரு துச்சப் பார்வை பார்த்து நகர, நான் `கிறீச்’க்கு பயந்து அடியெடுத்து வைக்காமல் நின்றிருந்தேன். அருகிலிருந்த குழாயடியில் குடத்தைவைத்துவிட்டு, தாவணியைச் சரிசெய்துகொண்டே, ``ஒண்ணும் பண்ணாது போடா... போலீஸ் டிரெஸ்ஸெல்லாம் போட்டுக்கிட்டு நாயைப் பார்த்து அரண்டு நிக்கிறே?” என்றாள்.

பேசுபவர்கள் ஆயிரம் பேசுவார்கள். நமக்கு அறிவு வேண்டும் அல்லவா... அதை அன்று உணரும் வயதில்லை என்பதையும் நீங்கள் அருள்கூர்ந்து உணர வேண்டும். அக்கா சொல்லிவிட்டாளே எனச் சரெட்டெனத் திரும்பி போலீஸ்போல் அடியெடுத்து வைத்தேன். மூன்றாவது அடியில் ஆணியின் சத்தம் செய்த மாயம், ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் தொடைப்பகுதியைக் கவ்வியது.
இதுவரையிலான என் வாழ்வின் உச்சபட்ச டெசிபலை நான் உபயோகித்துக் கத்தியது அந்த நொடியில்தான். முத்துக்காமாட்சியக்கா சடுதியில் செயல்பட்டு, நாயை விரட்டி, என்னைத் தன்பக்கமாக இழுத்து, குழாய் மேடையில் அமரவைத்தாள். என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நாய் கடித்த இடத்தைப் பார்க்க, நல்லவேளையாக அந்த NCC டிரவுசர் ரொம்பப் பெரியதாகவும் கஞ்சி போட்டு, தொடையிலிருந்து தகுந்த இடைவெளிவிட்டு, எதிரிகளை மன்னரிடம் நெருங்கவிடாத அகழிபோல் அரண் அமைத்த காரணத்தினால் தப்பித்தது என் அந்தரங்கம்.
அக்கா அடித்த அடியில் ராஜா எங்கோ ஓடிவிட்டது. ஆனால், அங்கிருந்து அது எழுப்பிய வெற்றிக்களிப்பு, கொக்கரிப்பு இங்குவரை சன்னமாகக் கேட்டது, என் பிரமையாகவும் இருக்கலாம்.
“பல்லு கில்லு படலயேடா...” என என் தொடைப்பகுதியில் கைவைத்துப் பார்க்க வந்தவளிடமிருந்து நாணம் தடுக்க, படக்கென விலகி, “இல்லைக்கா, டவுசர்லதான்” எனச் சமாளிக்க, “அட... இருடா பார்ப்போம்” என அவள் விடுவதாக இல்லை. அவள் நெருங்கினால், டிரவுசரை நான் லேசாக ஈரப்படுத்தியதையும் அறிந்துகொண்டுவிடுவாள். ஒரு நேரத்தில் எவ்வளவு அசிங்கங்களை எதிர்கொள்வது.

“இம்புட்டு வெள்ளன எங்கடா போற இப்பிடி லூஸு மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு.”
வீட்டிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, அதுவரை பார்த்திருந்த அத்தனை விஜயகாந்த் படங்களின் `கும்ஹே...’ சத்தங்கள் சூழ நடந்து போய்க்கொண்டிருந்த என்னை ‘லூஸுபோல்’ என்ற ஒற்றை வார்த்தையில் வீழ்த்தி, என் பதிலுக்கு வேறு காத்திருக்கிறாள். `ராஜாவே பரவாயில்லை’ என்று நினைத்துக்கொண்டேன்.
“NCCக்கா.”
“எது?”
யாரும் எதுவும் என்னிடம் கேட்டுவிடக் கூடாது என்று நான் நினைத்ததைவிட, வீட்டினரும் நண்பர்களும் வெகு கவனமாக இருந்தனர். எதுவும் கேட்கவில்லை.
இவளுக்குப் புரியாது. அதைவிட முக்கியம், இந்த அவமானத்திலிருந்து நகர வேண்டும். சர்வ நிச்சயமாக ராஜா போன பஸ் ஸ்டாண்டு திசைப் பக்கம் தலைவைக்க முடியாது. திரும்பிப் போனால் வீடு. நேற்றுக் காலையிலிருந்து வீட்டினரை நான் படுத்திய பாட்டுக்கு, இப்படித் திரும்பி வீட்டுக்குப் போனால் கொன்றேவிடுவார்கள். கஞ்சி காய்ச்சச் சொல்லிப் பெரியக்காவின் உயிரை வாங்கி, காய்ந்துவிட்டதா எனப் பார்க்கச் சொல்லி, பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அம்மாவின் உயிரை வாங்கி, காய்ந்தும் காயாத அந்தச் சாக்குத்துணி உடையை எடுத்துக்கொண்டு இஸ்திரிக்குப் போனால், மாதத்தின் முதல் செவ்வாயோ ஏதோ ஒன்று எனக் காரணம் சொல்லி இஸ்திரி வண்டிகளெல்லாம் காலியாகக் கிடக்க, `ஓ...’வெனத் திண்ணையில் அமர்ந்து அழ, பக்கத்துவீட்டு மூர்த்தி அண்ணன் அழைத்து, தன் புத்தம் புதிய அயர்ன்பாக்ஸைக் கொண்டு உதவ முன்வர, “ம்ஹூம், இது பாலியெஸ்டர் மட்டும்தாண்டா பண்ணும். உன்னோடது கஞ்சி போட்டதால முடியாது” என உதட்டைப் பிதுக்கி, மீண்டும் பதவிசாக உள்ளே வைத்துக்கொண்டார்.
மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வர, ரகு பெரிய மனது பண்ணி என்னை அவன் சைக்கிளில்வைத்து, இஸ்திரிக்காரரின் வீட்டுக்கே அழைத்துப்போய் ஒருவழியாகக் கெஞ்சிக் கூத்தாடி, தேய்த்துக்கொண்டு வந்து, ஒரு நீவு நீவிவிட்டு, தலைமாட்டில்வைத்து நிம்மதியாகப் படுத்தேன். பட்டென விழிப்பு வந்து, பெல்ட்டுக்குப் பாலிஷ் போடவில்லையென்றால், சீனியர் கையை நுழைத்து ஓர் இழு இழுப்பான். விலா எலும்பு கபாலம்வரை கனெக்ஷனாகி வலிக்கும் என நினைக்கும்போதே வலித்தது. எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க, ஒற்றைக்குரங்குபோல் திண்ணையில் அமர்ந்து பாலிஷ் வைபவத்தை அரங்கேற்றி, முதல் பஸ் அதிகாலை 4:15, அதில் போனால்தான் 5:20 பரேடுக்குப் போக முடியும் என்ற மகா உண்மையை உணர்ந்து, மீண்டும் அம்மாவைச் சுரண்டி, எழுப்பிவிடச் சொல்லி, திட்டு வாங்கிப் படுத்து, எழுந்து, “தொர சுடு தண்ணியிலதான் குளிப்பியே...” என அக்காவிடம் திட்டு வாங்கிக்கொண்டு, இப்படி நான் ஒருவன் NCC-க்குப் போக அனைவரையும் படுத்தி எடுத்துவிட்டு, என்ன காரணம் சொல்லி என் புறமுதுகுப்படலத்தை நியாயம் செய்ய முடியும்?
“டேய்... உன்னயத்தான்டா, போலீஸு, பயப்படாமப் போடா... மொத பஸ் இந்நேரம் போயிருக்கும்.”
இந்த ‘Better late than never' சங்கதி NCC-யைப் பொறுத்தவரை வேலைக்கு ஆகாது. அங்கு தாமதமாகப் போவதுதான் உலகமகா தவறு, வாத்துபோல் தாவவிடுவார்கள். மைதானத்தைச் சுற்றி ஓடவிடுவார்கள். எல்லாமும் கண்முன் வந்து போயின. நடுநடுவே காதுக்குள் ராஜாவின் குரைப்புச் சத்தமும்.
தெரிந்த சாத்தான்களே மேல் என்பதை அறியாமலேயே, வீட்டுக்குப் போய்விடுவது என முடிவெடுத்து, அக்காவிடம், “யக்கா, நாய் தொரத்துனதை யார்கிட்டயும் சொல்லாதக்கா... ப்ளீஸ்.. ரகுப்பயகிட்ட நானே சொல்லிருவேன். ஆனா, விஜிப் பிள்ளகிட்ட மட்டும் சொல்லிடாத’’ என்றேன்.
அக்கா சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, என் அருகே குனிந்து, என் `பாம் பாம்’ வைத்த தொப்பியைத் தட்டி, “இதெல்லாம் ஒண்ணுமே இல்லைடா... நீ போ... சொல்ல மாட்டேன்... நீயும் இங்கே பார்த்ததைச் சொல்லிடாதே...” என்றாள்.
அதுவரை பயத்திலும் அவமானத்திலும் உழன்றுகொண்டிருந்த என் மனமும் உடலும் பற்றுக்கம்பியைத் தேடும் பாகற்கொடிபோல் ஒரு சைக்கிளின் கேரியரை இறுகப் பற்றி இருந்ததை உணர்ந்தேன். அது, ஹேண்டில்பாரில் குஞ்சலங்கள் வைத்த, ஃபோக்ஸ் கம்பிகளில் மெல்லிய விளக்குகள் பதித்த வயர்கள் மின்னும் வித்தியாசமான சைக்கிள். செல்வகுமார் அண்ணனின் வாகனம். நான் உணரும்போதே குழாய் மேடையின் பின்புறமிருந்து வெளிப்பட்டார்.

முத்துக்காமாட்சி அக்கா வெகு இயல்பாக இருப்பதுபோல் “அது ஒண்ணுமில்லடா. அடுத்த வாரம் தீவாளி வருதுல்ல... அக்கா சீட்டு பிடிச்சேன்ல... உங்க அம்மாகூட ரெண்டு சீட்டு போட்டிருக்கு. சுவீட்டு, மிச்சரு, அதிரசம், வெடி பாக்கெட் எல்லாத்தையும் மதுரைக்குள்ள இருந்து எடுத்தாரணும்ல... அதான் பேசிக்கிட்டு இருந்தோம்” என்றாள்.
அவரோ இது எதைப் பற்றியும் கவலைப்படாதவர்போல் என் அருகில் வந்து, லேசாகத் தள்ளிவிட்டு, சைக்கிள் சீட்டை ஓர் அடி அடித்து, என்னை ஏற இறங்கப் பார்த்துச் சிரித்துவிட்டு, ஏறிப் போய்விட்டார். அவரையும் ராஜா துரத்த வேண்டும் எனத் தோன்றியது.
``சரிக்கா, சொல்லலை.”
சற்று ஆசுவாசமடைந்தவள், என்னையும் கலகலப்பான சூழலுக்கு மாற்றும்விதத்தில், “ஆமா... எட்டாப்பு படிக்கும்போதே, `விஜிகிட்ட சொல்லாதே, குஜிகிட்ட சொல்லாதே’ன்னு திரியுறயே... பெரிய ஹீரோ இவுரு, இந்தக் காலங்காத்தால கிளாஸுக்குப் போகுறதெல்லாம் எதுக்குடா?” என்றாள்.
‘வேலைக்குச் சேரும்போது என்.சி.சி-யில இருந்தா அஞ்சு மார்க்கு எக்ஸ்ட்ரா தருவாங்களாம்டா. பரேடு முடிஞ்சதும் பொங்கலு சும்மா கும்முனு இருக்கும்’ என்றெல்லாம் என்னைக் கட்டி இறக்கி, கடைசி நேரத்தில் அவன் மட்டும் சேராமல் தப்பித்துக்கொண்ட ரகுமீது அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் முத்துக்காமாட்சியக்காவின் வாசம், செல்வகுமார் அண்ணனின் சிகரெட் வாசம் கலந்து என்மீது படர்ந்தது பிடித்திருந்தது.
“நல்லாத்தாண்டா இருக்கு இந்த டிரெஸ்ஸு...”
என்னிடம் ஸ்நேகம் பாராட்டும் பொருட்டு நெருங்கி வந்தாள். “நீ ஏங்க்கா எப்பவும் கோவமாவே இருக்கே... நாள் ஃபுல்லா...”
என்னைத் தன்னருகே இழுத்து உச்சிமோந்தவள், “அப்பிடி இருந்தாத்தான்டா கெத்தா இருக்கும்” என்றாள்.
அதன் பிறகு வந்த நான்கு நாள்களும் நானும் அக்காவும் ஏதோ நெடுநாள் பழகிய ஒரே வயதுத் தோழமைபோல் சேர்ந்தே இருந்தது இன்றளவும் எனக்குக் குழப்பமான ஒன்று. குறிப்பாக, தீபாவளி அன்று படத்துக்கு அழைத்துப் போனாள்.
“உன்கூட போறேன்னு சொன்னதும் எங்கப்பா விட்டுட்டாருடா. பாரு நீ எவ்வளவு நல்ல பையன்னு” எனச் சிரித்தாள்.
`பாண்டியன்.’ ரஜினி படம். தீபாவளி அன்று படத்துக்குப் போவது என்பதே திருவிழாபோல். நானும் அக்காவும் பெரியார் பஸ் ஸ்டாண்டில் இறங்கும்போதே எங்கிருந்தோ செல்வகுமார் அண்ணன் வந்தார். நான் வீட்டில் அழுது, அடம்பிடித்து வாங்கியிருந்த பேகி பேன்ட்டில் உலகம் வென்ற மனதோடு நடந்துகொண்டிருந்தேன். என்னோடுதான் நடந்து வந்தாள் அக்கா. ஆனால் அவர்கள் இருவரும் தனியாக நடந்தார்கள்.
மதுரையின் மொத்தக் கூட்டமும் அன்று அந்தத் தியேட்டரில் கூடி இருந்ததுபோல் ஒரு தோற்றம். கையில் ஜிகினாப் பளபளப்பு ஒட்டி, எங்கு பார்த்தாலும் ரசிகர்கள். நெற்றியின் இருபுறமும் லேசாக ஷேவிங் செய்து, முடியை ரஜினிபோலவே அமைத்திருந்தார்கள் பெரும்பான்மை அண்ணன்கள்.
அப்படி இப்படி என ஏதோ செய்து செல்வகுமாரண்ணன் டிக்கெட் வாங்கி வந்தார். என்னை ஓர் இடத்தில் அமரச்செய்து, கையில் சோளக்கருதைக் கொடுத்துவிட்டு, படம் முடியும்வரை அங்கேயே இருக்கச் சொன்னார். அக்காவைப் பார்த்துத் தலையாட்டினேன். சிரித்தாள். அவள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள். படம் போட்டதும் தியேட்டர் குதூகலத்தில் கத்தத் தொடங்கியது. நான் சுற்றும் முற்றும் அக்காவைத் தேடினேன். ஜிகினா பறக்கப் பறக்க, முதல் முறை டவுனுக்குள் ரஜினி படம் அவ்வளவு கூட்டத்தினூடே எனும் மிதப்பு என்னை கெத்தாக உணர்த்தியது.
படம் முடிந்து எல்லோரும் போய்விட்ட பிறகும் அக்கா வரவில்லை. திரைக்குக் கீழே ‘தீ’ வாளிகள் ஆட, எனக்குள் பயம் சூழத் தொடங்கியது. தியேட்டரைக் கூட்டும் பெண்கள் அதட்ட, வெளியேறினேன்.
இருள் கவிழத் தொடங்கியிருந்தது. தியேட்டரில் அடுத்த காட்சிக்கான கூட்டமும் சண்டைகளும் வெடிச் சத்தமும் என தீபாவளி திமிலோகப்பட்டது.

எனக்கு இன்னதென்று தெளிவாக எதுவும் விளங்காமல், ஆனால் பயம் மட்டும் முற்றாகப் பீடிக்கத் தொடங்கியது.
அந்தத் தியேட்டரின் ஒவ்வொரு மூலையிலும் மீண்டும் மீண்டும் தேடினேன். நீண்டிருந்த சைக்கிள் ஸ்டாண்டில் ஒவ்வொரு சைக்கிளாகத் தேடினேன். எங்குமே அவர்கள் இல்லை.
ஆம். அவர்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். தெரிந்தோ, தெரியாமலோ நானும் உடந்தை. இதில் என் தவறு என்ன இருக்கிறது என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் என் மனம் இல்லை. மனநிலை முழுக்க என்னை நம்பித்தான் முத்துக்காமாட்சியக்காவின் அப்பா அனுப்பிவைத்தார் என்ற சுமை மட்டுமே அழுத்திக்கொண்டிருந்தது. சுமை என்பது இப்போதைய வார்த்தை. அப்போது, அன்று அது பயம். மரண பயம். அப்பாவின், ‘ஏன்டா இப்பிடிப் பண்ணினே?’ என்று பரிதாபமாகக் கேட்கும் கேள்வி கொண்டு வந்த பயம். முத்துக்காமாட்சியக்காவின் அப்பா அடிக்கக்கூடும் என்ற பயம். அவமானத்தின் மீதான பயம் என அத்தனையும் சேர்த்து என்னைப் பெரியார் பஸ் ஸ்டாண்டின் பக்கவாட்டிலிருந்து ஜங்ஷனுக்குள் இட்டுச் சென்றது.
பள்ளியில் மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு, காலார நடந்து இந்த ஜங்ஷனுக்குள் புகுந்தோம் என்றால், சண்ட்ரிங்தான். லேசாக நகரும் ரயிலில் ஏறி, இன்ஜின் பொருத்தப்பட்டுத் திரும்பும்வரை அதில் பயணிக்கும் விளையாட்டு எங்களுக்கு `சண்ட்ரிங்.’ அந்த ஜங்ஷன் இப்போது எனக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்திய இடமாகத் தோன்றியது. `தீபாவளி’ எனும் மகிழ்ச்சி மொத்தமாக வடிந்துவிட்டிருந்தது.
எனக்காகவே வந்ததுபோல் எங்கிருந்தோ வந்த ஏதோ ஒரு ரயிலில் ஏறியவன்தான் நான். `ஓடிப்போனவன்’ என்ற பட்டத்தோடு என் நாள்களை திருச்சி, சென்னை என நகர்த்தியிருக்கிறேன். அப்போது என் கையில் கிடைத்த இந்த, `காணவில்லை’ விளம்பரத்தையும் கத்தரித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்தப் புகைப்படம்கூட NCC உடையில் வாயைச் சற்றே கோணலாக்கிச் சிரித்த, எனக்கு மிகப் பிடித்த புகைப்படம்.
ஆறேழு மாதங்களுக்குப் பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டுக்குப் போய் நின்ற நிகழ்வு, `அன்றுதான் என் வீட்டினருக்கு தீபாவளி’ என்பதுபோல் என்னை உச்சிமோந்து, அள்ளி அணைத்துக் கொண்டாடியதையும் மறக்கவே முடியாது. அதுவொரு தனிக்கதை. பிறகு சொல்கிறேன். யாரும் எதுவும் என்னிடம் கேட்டுவிடக் கூடாது என்று நான் நினைத்ததைவிட, வீட்டினரும் நண்பர்களும் வெகு கவனமாக இருந்தனர். எதுவும் கேட்கவில்லை. என்னைக் குழந்தைக்கு நகம் வெட்டும் இளம் தந்தையின் கவனத்தோடு பார்த்துக்கொண்டனர் அனைவரும்.
வீடு மாற்றும் வைபவத்தில் பழையன கழிதலின் பொருட்டு எடுத்துவைத்துக்கொண்டிருந்த கழிவுகளிலிருந்து மீண்டு எழுந்திருக்கிறது இந்த விளம்பரம். ஓடிப்போன நான் கிடைத்துவிட்டேன் என்று விளம்பரம் எதுவும் அப்பா கொடுத்ததாக நினைவில்லை. இந்த விளம்பரம் வந்த நாளிலிருந்து மூன்று நாள்களுக்கு முன்னர்தான் செல்வகுமார் அண்ணனும் முத்துக்காமாட்சி அக்காவும் ஓடிப்போயிருந்தனர். அவர்கள் குறித்த எந்த விளம்பரமோ, செய்தியோ இந்த இருபது வருடங்களில் எங்குமே தட்டுப்படவில்லை என்றே அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமும் அதையே சொல்லிக்கொள்கிறேன். ஆமாம்... எனக்கும் அவர்களின் வாழ்வுக்கும் எந்தச் சம்பந்தமும் இப்போதும் இல்லை.
என் காலடியில் தொடங்கி, வீடு முழுக்க அட்டைப் பெட்டிகளில் நேர்த்தியாக என் அத்தனை அழுக்கு, புதிது எனப் பாரபட்சம் இல்லாமல், பெட்டி பெட்டியாகக் கட்டிவைத்திருக்கிறார்கள்.
`குஞ்சலம் எல்லாம் நைந்துபோய் மிக மிகப் பழையதாக இருக்கிறது’ என்று இந்த சைக்கிளை மட்டும் பேக் செய்ய மறுத்துவிட்டார்கள் `மூவர்ஸ் பேக்கர்ஸ்’ பணியாளர்கள்.