சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

விடாய்க்குக் கெடந்து கரைகிறது எச்சமும் கிட்டாத காகம்

இயல்பு தொலைத்த இயலாமைகள்

அடிக்காத அலாரம்

நேரத்தில் எடுக்கப்படாத பால் பாக்கெட்கள்

காணாமல்போன காலைநேரப் பரபரப்பு

மறந்தேபோன காலைவேளைக் குளியல்கள்

நெடுநேரத் தூக்கங்கள்

நேரந்தவறிய உணவுமுறை

அளவற்ற சிறுதீனி

உபயோகப்படுத்தாத சீருடைகள்

பயன்படுத்தாத சலவைப்பெட்டி

மடிப்பு கலையா உடைகள்

அளவற்ற சோம்பேறிதனம்

மழையோ வெயிலோ

இரவா பகலா என அறியத்

தேவையற்ற பொழுதுகள்

துக்கச் செய்தியிலும் நிர்ச்சலனமாய்

மரத்துப்போன மனம்

என நீண்டுகொண்டே போகின்றன

இயல்பு தொலைத்த நம் இயலாமைகள்!

- தனுஜா ஜெயராமன்

பைசாசப் பசி

விடாய்க்குக் கெடந்து கரைகிறது

எச்சமும் கிட்டாத காகம்

தாட்டியம் மெலிந்து

ஒரு சிற்றூரையெழுப்புகிறது

சோளப்பொரியும் காணாத யானை

கங்குலை வன்மையாகக்

குரைத்துக் குரைத்துக் கேவுகிறது

தொண்டை விம்மிய ஞமலி

ப்ரிட்ஜைத் திறக்கப்போராடி

ஊசிவிழுந்த இருளில் சந்திரியாய்

ஊளையிடுகிறது கர்ப்பிணிப்பூனை

அடுக்களையில் சாம்பார் ஊறிப்

பாவிய கறையை மீசையிழையால்

சொரண்டிப்பார்த்துக் கவிழ்ந்து

முதுகிலடித்துக்கொள்கிறது கரப்பான்பூச்சி

நானோ காமத்தை மல்லாக்கிட்டு

அதன்மேல் குப்புறப்படுத்துக்கொள்கிறேன்

திரட்சியான வனப்பில்

ஒரு பைசாசமாய் எங்களைப் பார்த்து

அசரீரியாகச் சிரிக்கிறது பசி

கரட்டொலியில் அதன் வயிறு ரொம்பும்வரை.

- ச. அர்ஜூன்ராச்

சொல்வனம்

கேட்காதீர்கள்...

ஏன் என்ற

கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்

இப்படித்தான் பலரைக்

கீழே தள்ளினேன்

இப்படித்தான் சிலரைக்

காயப்படுத்தினேன்

இப்படித்தான் சிலரை

உதாசீனப்படுத்தினேன்

இப்படித்தான் நான் மேலேறி

உச்சியில் நிற்கிறேன்

ஏன் என்று கேட்காதீர்கள்

என் காதுகள் நிராகரிப்புகளால்

நிரம்பி இருக்கின்றன

மீண்டும் சொல்கிறேன்

ஏன் என்ற கேள்வியைக்

கேட்காதீர்கள்...

நான் முதலில் தள்ளிவிட்டதே

முதல் படியில் குவிந்திருந்த

கேள்விகளைத்தான்.

- மணிவண்ணன் மா

முரண்

அரிசி மூட்டையின்

அருகில் எலி பேஸ்ட்டை

வைத்துவிட்டு

வெளியே

கரையும் காக்கைக்காக

சின்னத் தட்டில்

சோறு வைத்துவிட்டு வந்தேன்.

- பெ.பாலசுப்ரமணி