சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

அன்பின் மொழி!

புடவையின் இசைக் குறிப்பு

வண்ண, வடிவங்களின் விரிந்த கலவை

திறந்து வைத்த ஆர்மோனியமாகச் சிரிக்கிறது

நீள, அகலங்களின் கச்சிதம்

வயலினின் ஸ்வர அளவுகளைக் காட்டுகிறது.

காற்றோடு படபடக்கும் மேலாக்கு

தவிலின் கனமான இசைப்பை ஞாபகப்படுத்துகிறது

வெயில், மழைக்கு கீரிடமாய் மாறி

தலை காக்கையில்

நாகஸ்வரத்தின் நாதம் நீள்கிறது.

கூட்ட நெரிசலிலும்

தனித்த பயணங்களிலும்

கழுத்தைச் சுற்றி ஊரும் கதகதப்பில்

துடிதுடிக்கிறது வீணையின் தந்தி

வியர்த்த பொழுதில் விசிறியாய் அசைந்து

ஆசுவாசப்படுத்துகிறது

புல்லாங்குழலின் குயில் குரல்.

யோசனைகளின் விரிவுகளில்

மோதிரமாய் விரலேறி

கசங்குகிறது தம்புராவின் ஒற்றை ஒலி.

ஆங்காங்கே சிதறிச் சிரிக்கும் பூக்கள்

உடலின் வாசனையை குரலிசையாய் மணக்கச்செய்கிறது

நடைக்கு பின்னணியாய்

உடலோடு சரசரக்கையில்

ஒரு வசீகரப் பாடலின் இசைக்குறிப்பை

உடுத்திய உடல் மீது எழுதிச் செல்கிறது

புடவை.

- ஸ்ரீநிவாஸ் பிரபு

சொல்வனம்

சிக்னல்

அவர்களுக்காக...

முன்பெல்லாம் இந்த சிக்னலில்

மழைக்காலத்தில் குடை விற்பார்கள்

கோடையில் தொப்பி

சின்னச் சின்ன சீனாப் பொருள்கள்

காருக்கான நாய் பொம்மை

ஐ.பி.எல் நேரத்தில் மட்டையும் பந்தும்

விநாயகர் சதுர்த்தி வந்தால்

கூடை நிறைய தொப்பை கணபதி

இப்படி வயிற்றுக்காக வாடி வதங்கியோரை

கொரோனா

காணாமற்போகச் செய்ததை

எண்ணிக்கொண்டிருக்கும்போதே பச்சை ஒளிர்ந்தது

சிந்தனை முழுதும் அப்பிக்கொண்டது சிவப்பு.

- ப்ரணா

சொல்வனம்

பாவனை

எப்ப வருவீங்க

என்ற உன் கேள்வியை

நானும்

நல்லா இருக்கியா

என்ற என் கேள்வியை

நீயும்

கவனிக்காத மாதிரி

கதைக்கப் பழகிவிட்டோம்.

காணொலிக்காக

ஒப்பனையிட்டு

சௌகரியமாக இருப்பதான

பாவனைகளில் பேசவும்

பழகிவிட்டோம்

கை உதறி

வந்து கலந்துவிட

எண்ணும் நேரங்களில்

வீட்டுக் கடனும்

எதிர்காலமும்

நினைவூட்டப்படுகையில்

கையாலாகாமல்

கலங்கும் கண்களை

கவனமாக மறைக்கவும்

முடிகிறது

அலைபேசியில் முகம்பதித்து

அப்பா எப்ப வருவ

என மழலையில்

மகள் கேட்கும்

அந்த நொடியில்தான்

பூமி ஒருகணம்

சுழலாமல் நின்றுவிடுகிறது.

- மதுரா

சொல்வனம்
சொல்வனம்

அன்பின் மொழி!

தினந்தோறும் வட்டிலில்

நீர் நிரப்பி வெளிச்சுவரில்

வைக்கிறேன்

பறவை விமானங்கள்

தரையிறங்கி

எரிபொருள் நிரப்பி

குரலெழுப்பி

வருகைப் பதிவேட்டில்

கையொப்பமிட்டு

மீண்டும் வான்வெளியில்

படபடக்கின்றன

எங்களுக்கான

சங்கேத மொழிபெயர்ப்பு

அன்பின் வழியில்

அனுதினமும் கடத்தப்படுகிறது

எச்சங்களில் கவனம்

செலுத்துவோருக்கு

அன்பின் மொழி

என்றும் புரிவதில்லை!

- பா.சிவகுமார்