
கவிதை
தனிமை மழை
உன்
தனிமையின் பனித்துளிக்குள்
ஊடுருவுகிறேன்
எங்கும்
வானவில் வெளிச்சம்
வெட்கம் பூசிய சொற்கள்
ஆடை கலைக்கின்றன
கள்ளிப்பழ இதழ்கள்
புல்லாங்குழலாகி
இசைக்கத் தொடங்குகையில்
மனவெளியெங்கும்
பச்சை அலைகள்
முத்தத்தின் வாசங்களாகி
மிதக்கின்றன
அந்தி மேகங்கள்
மஞ்சள் விரல்களில்
பற்றிய தீ
வானின் நீலமாகி
எரிகிறது
ஊறிய வானத்தை
உன் தேகமெங்கும்
ஊற்றுகிறேன்
கடலாகித் ததும்புகிறது
அணைகள் உடைய
அணைத்துக்கொள்கின்றன
தாகங்கள்
கண்கள் மின்ன மின்ன
பெய்யும் மழை நனைகிறது
இப்போது
பனியுமில்லை
ஒளியுமில்லை.
- வேல்முருகன்
ஓடும் நீரில் அமைதியில்லை
புத்தன் பற்றிய கவிதைகள்
ஏராளமாய் இறைந்து கிடக்கும்
நூலகத்தின் அறை
பொறுக்கி எடுக்கும் முகங்களிலெல்லாம்
பதிந்திருக்கிறது கவலைகளின் ரேகை.
நன்றாகவே அறைந்திருக்கின்றன
ஆசைகளின் கைகள்.
***
புத்தனை வரையும் ஓவியன்
புத்தனை வடிக்கும் சிற்பி
புத்தனைச் செதுக்கும் தச்சன்
இவர்களில் யாரும் அவனை
நேரில் பார்த்ததில்லை
தத்ரூபமாக இருக்கும் புத்தர்கள்
யாருடைய வீட்டிலோ,
ஏதாவதொரு அலுவலகத்திலோ,
பௌத்த ஆலயத்திலோ
நிம்மதியாக அமர்ந்துவிடுகிறார்கள்
யசோதரைகள் தேடுவதென்னவோ
கௌதம சித்தார்த்தன்களை.
- வலங்கைமான் நூர்தீன்
பறத்தல்
ஊஞ்சலில் மேலேறும்
சிறுமி கால்களால் உதைக்கிறாள்
வானத்தை!
- தக்ஷன்
பாலை
விரல்களைக் கோத்தபடி
பொதுவெளியில் நடந்ததில்லை
சிறு மழையை என்னோடு
அமர்ந்து ரசித்ததில்லை
எனக்கே எனக்காய்
ஒரு தேநீர்கூட
போட்டுத் தந்ததில்லை
பிறந்தநாள்
திருமணநாள்
எந்த வாழ்த்தும் சொன்னதில்லை
வருகைப்பதிவேட்டு ஆசிரியராய்
முழுப்பெயரைத் தவிர
எந்தச் செல்லப்பெயரிலும்
இதுவரை அழைத்ததில்லை
ஒரு புடவையைக்கூட
எனக்காக நீ
தேர்ந்தெடுத்துத் தந்ததில்லை
எழுதிக் கொட்டுகிறாய்
அடுக்கடுக்காய்
ஆயிரத்தெட்டுக் காதல் கவிதைகளை
யார் மெச்சிக்கொள்ள?
- பிரபுசங்கர்

பொய்யுரைத்தல்
மனசிலிருந்து சொல்கிறேன்
என்றாய்
அதுவே பொய்...
பிரிந்துவிடு
மறந்துவிடமாட்டாய்தானே
என்றாய்
அதுவே முரண்
எனக்கு முன்னால்
உன் மணச் சேதி வந்தது
அதுவே இன்பம்
எங்கேனும் ஓரிடத்தில்
ஏதோவொரு செடியில்
மலர் பறித்து நுகரும்போது
பூவைத் தாண்டிய வாசம் இதிலென்று
மனைவிக்குச் சொல்லுகிற வெள்ளந்தியை
எனக்கு மட்டும் தந்திருக்கிறது
அதுவே
காதல்.
- இயற்கை