
கனமழை நாளை பகல் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை மனதிற்கோ இரவிலிருந்து.
மழை !
கனமழை
நாளை பகல் மட்டுமே
பள்ளிக்கு விடுமுறை
மனதிற்கோ இரவிலிருந்து.
மழையை ரசிக்க
கார் கண்ணாடியைப்
பாதி இறக்கினேன்
முகத்தில் அடித்தது சாரல்
முழுதாய் இறக்கிவிடச் சொல்லி.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
மீன்கள் மழையில் நனையட்டும்.
அம்மா ஒரு பெருமழையைத்
தன் முந்தானையால்
மறைத்துப் பள்ளி அழைத்துச் சென்றார்
உடைகள் மட்டும் நனைந்திருந்தன...
- வீ.ப.ஜெயசீலன்
குழந்தையும் யானையும்
ஒரு குழந்தை
யானை வரைந்தது.
முடித்த தருணம்
யானை கேட்டது
``செல்லக் குட்டி, இது யார் வீடு?''

``என் வீடுதான்...
ஆமாம் உன் வீடு?’’
குழந்தை கேட்டது.
``காடு!
அடர் மரங்கள் நிறைந்த வனம்’’
குழந்தையின் விரல்கள்
காடென ஒன்றை வரையத் தொடங்கிய தருணம்...
``சொன்னதை மட்டும் செய்.
தேவையில்லாம வரையாதே’’
அதிகாரத்தின் குரல் யானைக்கு மதிப்பெண் போட,
அத்துடன் முடிந்தது ஆர்ட் கிளாஸ்
குழந்தையின் தீராத பக்கங்களில் உயிர்பெற்றது காடு!
அடர் வனத்தின் பசுமையில்
யானைகள் சிரித்தபடி கையசைக்க...
துதிக்கை காட்டிச் சிரித்தது குழந்தை!
- புரட்சிக்கனல்
புலம் பெயர்தல்
மாநகரத்தில் புலம்பெயர்ந்தனர்
கிராமவாசிகள்.
உலக்கைகள், திருகைகள்
ஏர்பூட்டிய மாடுகள்
குதிரை வண்டிகளோடு
பாண்டியாட்டமும் பதனிப் பானையும்
புலம்பெயர்ந்தன
மாநகரில் சுவர்ச் சித்திரங்களாய்…
- வல்லம் தாஜுபால்

நதி பருகும் பறவை
பறவைகள்மீதான ஆசையிலேயே
மீன்களை அள்ளித்தருகிறது நதி
மாறாகப் பறவைகள் செய்யவேண்டியதெல்லாம்
நதியின் மேல் சற்று நேரம் பறக்க வேண்டும்
அப்போதுதான் அவற்றின்
நிழலைப் பருகி தாகம் தீர்த்துக்கொள்ளும் நதி.
- வலங்கைமான் நூர்தீன்
