
அந்த நெடுஞ்சாலையில்
அந்தச் சொல்லைக் கண்டறிதல்
ஏதேனும் இடிபாடுகளுக்கிடையில்
புதைந்திருக்கக்கூடும்
அதை வெளிக்கொணர்வதே
இப்போதைய பணி
வீரிய முளைத்தலுக்கென
யாரேனும் புதைத்திருக்கக்கூடும்
காற்றையும் ஈரப்பதத்தையும்
கையளித்திடுவதுமே
இப்போதைய பணியாகட்டும்
ஏதேனுமொரு மக்கள் திரளில்
செய்வதறியாது திகைத்து நின்றிருக்கக் கூடும்
பொருத்தமான வெளிச்சத்தில் அடையாளமாகட்டும்
மீட்டெடுக்கும் அச்சொல்லே
இந்த இருளின் தீபமாக இருக்கக்கூடும்
இக்களைகளை அகற்றும்
கூராயுதமாகவும் அமையக்கூடும்
வழியற்றவர்களின்
பாதையாகி
இருப்பிடம் சேர்க்கும்
வழித்துணையாக இருக்கக்கூடும்
அகவாசலில்
உங்கள் கண்ணசைவிற்காகக் காத்திருக்கும்
அச்சொல் இவ்வுலகிற்கான உங்கள் கொடையாக இருக்கக் கூடும்.
- க.அம்சப்ரியா
அந்த நெடுஞ்சாலையில்
அடிபட்டு
நசுங்கிக்கிடக்கும்
அணில்குஞ்சின் மரபணுவில்
நெடுஞ்சாலை என்ற
குறிப்பேதுமில்லை.
- சதீஷ் குமரன்

தூண்டில்
என்
தூண்டிலிலிருந்து
தப்பித்துக்கொண்டே இருந்தன
மீன்கள்...
நீண்ட நேரத்திற்குப்பிறகு
தூண்டிலில் ஒரு மீன்
சிக்கிக்கொள்ள
வந்தபோது
நான்
தூண்டிலை
நகர்த்திக்கொண்டேன்.
- கிருத்திகா தாஸ்
பிறழ்வு
இரவின் மழை சேர்த்தே
குளிப்பாட்டியிருந்தது
நெடுஞ்சாலையையும் அதனருகில்
வாழும் கந்தலாடைக்காரியையும்
நெடுஞ்சாலைக்கு நீண்டநாள்
தீராமலிருந்த தாகம் தீர்ந்திருந்தது
அவளுக்கோ அழுக்ககன்ற அவள்
வெள்ளைத்தோல் தரிசனமாகியிருந்தது
அவள் குத்திட்டு நிற்கும் விழிகளோடு
நெஞ்சிலேறிக்கடக்கும் கனரக வாகனங்களின் பாரம் தாங்கும்
நெடுஞ்சாலையை நோக்கியிருந்தாள்
அதுவோ அவளின் கிழிசல்களுக்கிடையில்
ததும்பும் இளமையின் மீதூறும்
டாஸ்மாக் பார்வைகளுக்கு விபத்தை
உண்டாக்கிக்கொண்டிருந்தது
முன்பொரு நாளின் இரவைப்போல்
இன்றிரவு அவள் மீண்டும்
மனம்பிறழக்கூடுமென்ற பயத்தில்..!
- திரு. வெங்கட்.